லுக்மான் அவர்கள் நபியா?
இறைவனின் கட்டளைகளை அல்லாஹ்விடமிருந்து வஹீயின் மூலம் பெற்று மக்களிடம் சொல்பவர்தான் நபி (இறைத்தூதர்) என்று சொல்லப்படும்.
அல்லாஹ்விடமிருந்து வஹீ செய்தியை பெற்றவர், மக்களிடம் ஓரிறைக் கொள்கை பிரச்சாரம் செய்தவர் என்பதற்கு திருக்குர்ஆன் அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் ஆதாரம் இருக்க வேண்டும்.
உதாரணமாக:
“என்னைத் தவிர வேறெந்தக் கடவுளும் இல்லை! எனவே, என்னையே வணங்குங்கள்!” என்று நாம் (வஹீ) அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை.
ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் (அவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கேட்டார்.
ஒரு நபி இறைச் செய்தியை பெற்றவர்,மக்களிடம் பிரச்சாரம் செய்தவர் என்ற நேரடிய சான்றுகள் இல்லாவிட்டாலும் அவர் நபி என்று அல்லாஹ்வோ அவன் தூதரோ சொல்லியிருந்தாலும் அவரை நபி என்று சொல்லலாம்.
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِدْرِيسَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَبِيًّا (56) وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا (57)
இத்ரீஸையும் இவ்வேதத்தில் நினைவுகூர்வீராக! அவர் சிறந்த உண்மையாளராகவும் நபியாகவும் இருந்தார். அவரை உயர்ந்த நிலைக்கு உயர்த்தினோம்.
ஒருவரை நபி என்று சொல்லவேண்டுமானால் அவர் இறைத்தூதர் என்று நேரடியாக திருக்குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ நேரடியாக சொல்லியிருக்க வேண்டும்.
… பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு நான்காம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். “உம்முடன் (இருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர் ‘முஹம்மத்’ என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “(ஆம் அவரை அழைத்து வரும்படி என்னை) அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது” என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக(க் கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள். – (இத்ரீஸ் நபி தொடர்பாக) அல்லாஹ், “அவரை உயர்ந்த நிலைக்கு உயர்த்தினோம்” (19:57➚) என்று கூறுகின்றான். அறிவிப்பவர்:அனஸ் (ரலி)
இத்ரீஸ் (அலை) அவர்கள் தொடர்பான திருகுர்ஆனில் இரண்டு வசனங்களில் கூறப்பட்டுள்ளது. இரண்டிலும் அவர்களுக்கு வஹீ செய்தி கொடுக்கப்பட்டதாக அல்லது மக்களிடம் ஓரிறைக் கொள்கை பிரச்சாரம் செய்ததாக நேரடியாக சொல்லப்படவில்லை.
எனினும் அவர்கள் நபியாக இருந்தார்கள் என்று (19:56➚)ல் தெளிவாக சொல்லப்பட்டுள்ளதால் அவர்கள் நபி என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
லுக்மானுக்கு நாம் ஞானத்தை வழங்கினோம்.
இந்த வசனத்தில் லுக்மான் (அலை) அவர்களுக்கு ஞானத்தை வழங்கினோம் என்று கூறியுள்ளானே தவிர நபித்துவத்தை வழங்கியதாக அல்லாஹ் கூறவில்லை. மற்ற இடங்களிலும் இவர்கள் நபி என்றோ அல்லது ரசூல் என்றோ கூறவில்லை. மேலும் ஹிக்மத் என்ற வார்த்தை நபித்துவத்தை குறிப்பதற்கு மட்டும் பயன்படுத்தும் வார்த்தையும் அல்ல. எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு அவர்களை நபி என்று வாதிடமுடியாது.
திருக்குர்ஆனில் வேறு எங்கும் இவர்களை நபி என்றோ ரசூல் என்றே குறிப்பிடவில்லை. மக்களையிடம் இறைச் செய்தியை பெற்று ஓரிறைக் கொள்கை பிரச்சாரம் செய்தார் என்றும் குறிப்பிடவில்லை. எனவே இவர்களை நபி என்று கூறுவதற்கு சான்றுகள் இல்லை.
இப்னு கஸீர்
كان جمهور السلف على أنه لم يكن نبيا
முன்னோர்களில் பெரும்பான்மையினர் அவர் நபியல்ல என்றே கூறியுள்ளனர்.
தப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 6, பக்கம் 334
تفسير القرطبي
وَقَالَ بِنُبُوَّتِهِ عِكْرِمَةُ وَالشَّعْبِيُّ، وَعَلَى هَذَا تَكُونُ الْحِكْمَةُ النُّبُوَّةَ. وَالصَّوَابُ أَنَّهُ كَانَ رَجُلًا حَكِيمًا بِحِكْمَةِ اللَّهِ تَعَالَى- وَهِيَ الصَّوَابُ فِي الْمُعْتَقَدَاتِ وَالْفِقْهُ فِي الدِّينِ وَالْعَقْلِ
இக்ரிமா, ஷஅபி ஆகியோர் (மட்டும்) லுக்மான் அவர்கள் நபி என்று சொல்லியுள்ளார்கள். இங்கு (அல்லாஹ் ஹிக்மத் வழங்கியுள்ளான் என்பது இவர்களின் கருத்துப்படி) நபித்துவம் என்றாகிறது. ஆனால் சரியான கருத்து : அல்லாஹ் வழங்கிய ஞானத்தினால் ஞானமிக்கவராக இருந்தார் என்பதே.
நம்பிக்கைகளில் சரியான பார்வை, மார்க்க சட்டங்களில் சரியாக புரிதல், மற்றும் அறிவு ஆகியவற்றால் ஞானமிக்கவராக இருந்தார் என்பதே (அந்த வசனத்தின்) சரியான கருத்தாகும்.
நூல் : தப்ஸீர் குர்துபீ, பாகம்: 14,பக்கம்:59
பெரும்பான்மையான திருக்குர்ஆன் விரிவுரை நூல்களிலும் லுக்மான் அவர்கள் நபியல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முந்தைய காலத்தில் (சிலரின் கருத்துப்படி தாவூத் (அலை) அவர்கள் காலத்தில்) லுக்மான் அவர்கள் வாழ்ந்தவர்கள். அவர்கள் தொடர்பாக செய்திகள் வந்தால் அது திருக்குர்ஆனில் இருக்க வேண்டும். அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் இருக்க வேண்டும். இவை இரண்டல்லாத மற்றவைகளின் செய்திகள் உள்ளவை நம்பகமானவை என்று சொல்ல முடியாது.
லுக்மான் அவர்கள் தொடர்பான திருக்குஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் உள்ளவை பின்வருபவை மட்டுமே!
தன் பிள்ளைக்கு வழங்கிய அழகிய அறிவுரை செய்தி திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது.
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَابُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ (13) … (15) يَابُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ (16) يَابُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ (17) وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (18) وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ (19)
லுக்மான், தனது மகனுக்கு நற்போதனை செய்யும்போது, “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! இணைவைத்தல் மாபெரும் அநியாயமாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!என் அருமை மகனே! ஒரு பொருள் கடுகின் விதையளவே இருந்து, அது பாறையிலோ அல்லது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்தாலும் அல்லாஹ் அதைக் கொண்டு வந்து விடுவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.என் அருமை மகனே! நீ தொழுகையை நிலைநிறுத்து! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்! இதுவே உறுதியான காரியங்களில் உள்ளதாகும்.மக்களை விட்டும் உன் முகத்தை அகந்தையுடன் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! அகந்தையும், கர்வமும் கொண்ட எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.“உனது நடையில் நடுத்தரத்தைக் கடைப்பிடிப்பாயாக! உனது சப்தத்தைத் தாழ்த்திக் கொள்வாயாக! சப்தங்களில் மிகவும் வெறுக்கத்தக்கது கழுதையின் சப்தமாகும்” (என்றும் போதித்தார்.)
مسند أحمد بن حنبل
حدثنا عبد الله حدثني أبي حدثنا عبد الرحمن ثنا سفيان عن نهشل بن مجمع عن قزعة عن بن عمر عن
النبي صلى الله عليه و سلم قال : إن لقمان الحكيم كان يقول إن الله عز و جل إذا استودع شيئا حفظه وقال مرة نهشل عن قزعة أو عن أبي غالب
“அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்ட எந்தப் பொருளையும் அவன் பாதுகாப்பான்” என்று லுக்மானுல் ஹகீம் (ஞானம் நிறைந்த லுக்மான்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: (அஹ்மத்: 5605) ➚, (நஸாயீ: 10273) ➚
லுக்மான் அவர்கள் தொடர்பாக மேற்கூறப்பட்ட செய்திகளை தவிர ஆதாரப்பூர்வமான செய்திகள் எதுவும் இல்லை.
இது பற்றி அறிஞர் ஷவ்கானீ அவர்கள் தனது ஃபத்ஹுல் கதீர் என்ற திருக்குர்ஆன் விரிவுரை நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
“ஹதீஸ்கலை அறிஞர்களின் ஒரு குழுவினர், நபித்தோழர்கள் மற்றும் தாபிஈன்களிடமிருந்து லுக்மானின் அறிவுரைகள் மற்றும் ஞான மொழிகளை உள்ளடக்கிய பல்வேறு வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவற்றில் எதுவும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமானதாக வரவில்லை. மேலும் இவற்றில் எதுவும் ஏற்றுக் கொள்ளும் வகையில் லுக்மான் வரை சரியான அறிவிப்பாளர் வரிசையுடன் உறுதியாகவில்லை.
நூல்: தஃப்ஸீருல் ஃபத்துல் கதீர் (5/ 491)
லுக்மான் அவர்கள் தொடர்பாக பலவீனமான ஆதாரமில்லாமல் கூறப்படும் சில செய்திகள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டேன் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் :
‘உண்மையாக லுக்மான் நபியாக இருக்கவில்லை! ஆனால் அவர் கடினமான, அதிகம் சிந்திக்கும், நல்ல நம்பிக்கை கொண்ட அடியாராக இருந்தார். அவர் அல்லாஹ்வை நேசித்தார், எனவே அல்லாஹ்வும் அவரை நேசித்தான், மேலும் அவருக்கு ஞானத்தை உறுதியளித்தான்.
அவர் மதிய வேளையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் அழைப்பு வந்தது: ” லுக்மானே! அல்லாஹ் உன்னை பூமியில் கலீஃபாவாக ஆக்கி, மக்களிடையே நீதியுடன் தீர்ப்பளிக்க விரும்புகிறாயா?” என்ற அந்த குரலுக்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்:
“என் இறைவன் எனக்கு தேர்வுரிமை அளித்தால், நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அவன் என்னுடன் அவ்வாறு செய்தால், எனக்கு உதவுவான், கற்றுத்தருவான், பாதுகாப்பான் என்று நான் அறிவேன். என் இறைவன் எனக்கு தேர்வுரிமை அளித்ததால், நான் நல்வாழ்வை ஏற்றுக்கொள்கிறேன், சோதனையை ஏற்கமாட்டேன்.”
வானவர்கள்: “ஏன் (இவ்வாறு சொல்கிறீர்) லுக்மானே?” என்று கேட்டனர் அதற்கு அவர் கூறினார்: “ஏனெனில் தீர்ப்பாளர் மிகக் கடினமான மற்றும் மிகவும் வேதனையான நிலையில் இருப்பார். அவரை எல்லா திசைகளிலிருந்தும் அநீதி சூழும். அவர் தப்பிக்கலாம் அல்லது உதவி பெறலாம், தப்பிக்க வாய்ப்புண்டு. ஆனால் தவறு செய்தால், சொர்க்கத்தின் பாதையை இழந்துவிடுவார். உலகில் தாழ்ந்தவனாக இருப்பது, மேன்மையானவனாக இருப்பதை விட சிறந்தது. யார் மறுமையை விட்டு இவ்வுலகை தேர்ந்தெடுக்கிறாரோ, உலகம் அவரை சோதனையில் ஆழ்த்தும், மறுமையின் அரசை அவர் பெற மாட்டார்.”
வானவர்கள் அவரது அழகான பேச்சைக் கண்டு வியந்தார்கள். பின்னர் அவர் தூங்கினார், ஞானத்தால் மூடப்பட்டார். அவர் விழித்து ஞானத்துடன் பேசினார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: கன்ஸுல் உம்மால் 37865-(14/ 34)
லுக்மான் அவர்கள் நபியல்ல என்று நேரடியாகவே நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இடம் பெறும் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல. இச்யெ்தியில் இடம்பெறும் நவ்ஃபல் பின் சுலைமான் அல்ஹுனாயீ என்பவர் பலவீனமானவராவார்.
نوفل بن سليمان الهنائى.عن ابن جريج.وعنه محمد أمية القرشى
ضعفه الدارقطني.
وقال ابن عدى حدث عنه ابن أمية، بأحاديث غير محفوظة، ويشبه أن يكون ضعيفا.
قال ابن أبى حاتم في العلل: سألت أبى عن حديث محمد بن أمية الساوى عن نوفل بن سليمان، عن عبيدالله بن عمر، عن نافع، عن ابن عمر
، قال: وقف رسول الله صلى الله عليه وسلم بعسفان، فقال: لقد مر بهذه القرية سبعون نبيا ثيابهم العباء ونعالهم الخوص، فقال أبى: هذا موضوع بهذا الاسناد.
نوفل ضعيف الحديث.
நவ்ஃபல் பின் சுலைமான் என்பவரை தாரகுத்னி பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இவரிடமிருந்து இப்னு உமைய்யா பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவை பாதுகாப்பானவை அல்ல. அவர் பலவீனமானவருக்கு ஒப்பானவர்.
உஸ்ஃபான் என்னும் இடத்தில் நபி (ஸல்) அவர்கள் நின்றவாறு கூறினார்கள்: ‘இந்த ஊரில் எழுபது நபிமார்கள் கடந்து சென்றிருக்கிறார்கள். அவர்களின் ஆடைகள் கம்பளி உடைகளாகவும், அவர்களின் செருப்புகள் பேரீச்சம்பட்டையால் செய்யப்பட்டவையாகவும் இருந்தன என்ற செய்தியை நவ்ஃபல் பின் சுலைமான் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாளர் வரிசை தொடர் இட்டுக்கட்டப்பட்டதாகும் என்று இப்னு அபீஹாத்திம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: மீஸானுல் இஃதிதால் 9147-(4/ 281)
، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:اتَّخِذُوا السُّودَانَ فَإِنَّ ثَلاثَةً مِنْهُمْ مِنْ ساداتِ أَهْلِ الْجَنَّةِ لُقْمَانُ الْحَكِيمُ وَالنَّجَاشِيُّ وَبِلالٌ الْمُؤَذِّنُ. قَالَ أَبُو الْقَاسِمِ: أَرَادَ الْحَبَشَ.
اتَّخِذُوا السُّودَانَ فَإِنَّ ثَلاثَةً مِنْهُمْ مِنْ ساداتِ أَهْلِ الْجَنَّةِ لُقْمَانُ الْحَكِيمُ وَالنَّجَاشِيُّ وَبِلالٌ الْمُؤَذِّنُ.
கறுப்பினரை (நண்பர்களாக) ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் அவர்களில் மூவர் சொர்க்கவாசிகளின் தலைவர்களில் உள்ளனர்: லுக்மான் அல்-ஹக்கீம் (ஞானி லுக்மான்), நஜாஷி (அபிசீனிய மன்னர்), மற்றும் முஅத்தின் பிலால் (பின் ரபாஹ் (ரலி)).”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: தப்ரானீ-கபீர் (11320),(9/ 399)
இச்செய்தியில் இடம்பெறும் அப்யன் பின் சுஃப்யான் என்பவர் பலவீனமானவராவார். மேலும் உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் அத்தராயிஃபீ என்பவரும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
عن التابعين.ضعيف، كأنه غير أبان ابن سفيان، ذاك تأخر، أوهما واحد.
فالله أعلم.وقد سقناه في أبان بن سفيان.
قال أبو جعفر النفيلى: كتبت عن أبين بن سفيان ثم حرقت ما كتبت عنه، كان مرجئا.
அப்யன் பின் சுஃப்யான் என்பவர் பலவீனமானவராவார்.
அப்யன் பின் சுஃப்யான் என்பவரிடமிருந்து (செய்திகளை) எழுதியிருந்தேன். பின்னர் (அவர் பலவீனமானவர் என்று தெரிந்து) அதை எறித்துவிட்டேன் என்று அபூஜஅஃபர் குறிப்பிடுகிறார்.
இவர் பலவீனமானவர், இவரிடம் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் இருக்கின்றன என்று தாரகுத்னீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நூல்: மீஸானுல் இஃதிதால் 272-(1/ 78)
திருக்குர்ஆன் விரிவுரை நூல்களில் இடம்பெற்றவை
பின்வரும் செய்திகள் திருக்குர்ஆன் விரிவுரை நூல்களில் இடம்பெற்றுள்ளதே தவிர சரியான அறிவிப்பாளர் வரிசைகள் இதற்கு கிடையாது.
قرأت في حكم لقمان أكثر من عشرة آلاف. والْحِكْمَةَ : المنطق الذي يتعظ به ويتنبه به ، ويتناقله الناس لذلك. أَنِ اشْكُرْ
லுக்மானின் ஞானமொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேல் படித்திருக்கிறேன். ஞானம் என்பது: மக்கள் அதிலிருந்து போதனை பெற்று விழிப்புணர்வு அடைந்து, அதை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கடத்திச் செல்லும் வார்த்தைகள் ஆகும். நன்றியுடன் இரு…” (என்பது அவர்களின் ஞான மொழிகளில் உள்ளது) என்று வஹப் பின் முனப்பிஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல் :பஹ்ருல் முஹீத் (8/ 412)
லுக்மான் அவர்கள் தந்தை பெயர் பாவூர். அய்யூப் (அலை) அவர்களின் சகோதரின் மகனாவார் என்று வஹப் குறிப்பிடுகிறார். அய்யூப் (அலை) அவர்களின் சின்னம்மாவின் மகனாவார் என்று முகாத்தில் குறிப்பிடுகிறார்.
நூல்: அல்கஷ்ஃப் வல்பயான் (7/ 313)
லுக்மான் அவர்களுக்கு நபித்துவம் மற்றும் ஹிக்மத் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டது.
லுக்மான் மதிய வேளையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் ‘ லுக்மானே! அல்லாஹ் உன்னை பூமியில் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கி, மக்களிடையே நீதியுடன் நீர் தீர்ப்பளிக்க விரும்புகிறாயா?’ என்று அழைத்து கேட்டப்பட்டது. அந்த குரலுக்கு பதிலளித்து அவர் கூறினார்: ‘என் இறைவன் எனக்கு விருப்பத்தில் உரிமை அளித்தால், நான் நல்வாழ்வை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவன் உறுதியாக முடிவு செய்திருந்தால், கேட்டு கீழ்ப்படிகிறேன். ஏனெனில் அவன் அவ்வாறு செய்தால் எனக்கு உதவி செய்வான், என்னைப் பாதுகாப்பான் என்று நான் அறிவேன்.’ என பதிலளித்தார்.
வானவர்கள் (அவர்களை காணமுடியாத) குரலில் கேட்டார்கள்: ‘ஏன் லுக்மானே?’ என்று, அதற்கு அவர் கூறினார்: ‘ஏனெனில் தீர்ப்பளிப்பது மிகக் கடினமான மற்றும் மிகவும் கலக்கமான நிலைமைகளில் ஒன்று. அதை எல்லா திசைகளிலிருந்தும் அநீதி சூழ்ந்து கொள்கிறது. லுக்மான் சரியாக செய்தால், அவர் தப்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால் தவறு செய்தால், சொர்க்கத்தின் பாதையை இழந்துவிடுவார். உலகில் தாழ்ந்தவனாக இருப்பது, மேன்மையானவனாக இருப்பதை விட சிறந்தது. யார் மறுமையை விட்டு இவ்வுலகை தேர்ந்தெடுக்கிறாரோ, உலகம் அவரை ஏமாற்றும், மறுமையையும் அவர் பெற மாட்டார்.’என்று பதிலளித்தார்.
வானவர்கள் அவரது அழகான பேச்சைக் கண்டு வியந்தார்கள். பின்னர் அவர் தூங்கினார், அவருக்கு ஞானம் வழங்கப்பட்டது. அவர் விழித்தபோது ஞானத்துடன் பேசிக் கொண்டிருந்தார். என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று பகவீ குறிப்பிடுகிறார்.
நூல் : தஃப்ஸீர் மழ்ஹரீ
فِيهَا أَرْبَعُ مَسَائِلَ : الْمَسْأَلَةُ الْأُولَى : فِي ذِكْرِ لُقْمَانَ : وَفِيهِ سَبْعَةُ أَقْوَالٍ :
الْأَوَّلُ : قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ : كَانَ لُقْمَانُ أَسْوَدَ مِنْ سُودَانِ مِصْرَ ، حَكِيمًا ، ذَا مَشَافِرَ ، وَلَمْ يَكُنْ نَبِيًّا .
الثَّانِي : قَالَ قَتَادَةُ : خَيَّرَهُ اللَّهُ بَيْنَ النُّبُوَّةِ وَالْحِكْمَةِ ، فَاخْتَارَ الْحِكْمَةَ ، فَأَتَاهُ جِبْرِيلُ وَهُوَ نَائِمٌ ، فَقَذَفَ عَلَيْهِ الْحِكْمَةَ ، فَأَصْبَحَ يَنْطِقُ بِهَا ، فَسُئِلَ عَنْ ذَلِكَ ، فَقَالَ : إنَّهُ لَوْ أَرْسَلَ إلَيَّ النُّبُوَّةَ عَزْمَةً لَرَجَوْت الْفَوْزَ بِهَا ، وَلَكِنَّهُ خَيَّرَنِي ؛ فَخِفْت أَنْ أَضْعُفَ عَنْ النُّبُوَّةِ .
الثَّالِثُ : أَنَّهُ كَانَ مِنْ النُّوبَةِ قَصِيرًا أَفْطَسَ .
الرَّابِعُ : أَنَّهُ كَانَ حَبَشِيًّا .
الْخَامِسُ : أَنَّهُ كَانَ خَيَّاطًا .
السَّادِسُ : أَنَّهُ كَانَ رَاعِيًا ، فَرَآهُ رَجُلٌ كَانَ يَعْرِفُهُ قَبْلَ ذَلِكَ قَالَ : أَلَسْت عَبْدَ بَنِي فُلَانٍ الَّذِي كُنْت تَرْعَى بِالْأَمْسِ ؟ قَالَ : بَلَى .قَالَ : فَمَا بَلَغَ بِك مَا أَرَى ؟ قَالَ : قَدَرُ اللَّهِ ، وَأَدَاءُ الْأَمَانَةِ ، وَصِدْقُ الْحَدِيثِ ، وَتَرْكُ مَا لَا يَعْنِينِي .
السَّابِعُ : أَنَّهُ كَانَ عَبْدًا نَجَّارًا قَالَ لَهُ سَيِّدُهُ : اذْبَحْ شَاةً ، وَأْتِنِي بِأَطْيَبِهَا بِضْعَتَيْنِ فَأَتَاهُ بِالْقَلْبِ وَاللِّسَانِ .
ثُمَّ أَمَرَهُ بِذَبْحِ شَاةٍ ، وَقَالَ لَهُ : أَلْقِ أَخْبَثَهَا بِضْعَتَيْنِ ، فَأَلْقَى اللِّسَانَ وَالْقَلْبَ ، فَقَالَ : أَمَرْتُك أَنْ تَأْتِيَنِي بِأَطْيَبِهَا بِضْعَتَيْنِ فَأَتَيْتنِي بِاللِّسَانِ وَالْقَلْبِ ، وَأَمَرْتُك أَنْ تُلْقِي أَخْبَثَهَا بِضْعَتَيْنِ ، فَأَلْقَيْت اللِّسَانَ وَالْقَلْبَ ، فَقَالَ : لَيْسَ شَيْءٌ أَطْيَبَ مِنْهُمَا إذَا طَابَا ، وَلَا شَيْءَ أَخْبَثُ مِنْهَا إذَا خَبُثَا .
லுக்மானின் அவர்கள் தொடர்பாக ஏழு கூற்றுகள் உள்ளன:
முதல் கூற்று: “லுக்மான் எகிப்தின் கறுப்பர்களில் ஒரு கறுப்பினராக இருந்தார், ஞானி, பெரிய உதடுகள் கொண்டவர், ஆனால் நபி அல்ல.” என்று சயீத் பின் முஸய்யிப் அவர்கள் கூறினார்கள்.
இரண்டாம் கூற்று: கதாதா அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹ் அவருக்கு நபித்துவத்திற்கும் ஞானத்திற்கும் இடையே தேர்வு செய்யும் உரிமை அளித்தான், அவர் ஞானத்தை தேர்ந்தெடுத்தார். ஜிப்ரீல் (அலை) அவர்கள், அவர் உறங்கும்போது வந்து, அவர் (உள்ளத்தின்) மீது ஞானத்தை போட்டார்கள். அவர் விடியற்காலையில் அதைக் கொண்டு பேசத் தொடங்கினார். இதைப் பற்றி கேட்கப்பட்டபோது அவர் கூறினார்: ‘அவன் எனக்கு நபித்துவத்தை உறுதியுடன் அனுப்பியிருந்தால், நான் அதில் வெற்றிபெற நம்பிக்கை கொண்டிருப்பேன். ஆனால் அவன் எனக்கு தேர்வு அளித்தான், எனவே நபித்துவத்தில் நான் பலவீனமாக இருப்பேனோ என்று பயந்தேன்.’”
மூன்றாம் கூற்று: அவர் நூபா இனத்தைச் சேர்ந்தவர், குள்ளமானவர், தட்டையான மூக்கு கொண்டவர்.
நான்காம் கூற்று: அவர் அபிசீனியராக (எத்தியோப்பியர்) இருந்தார்.
ஐந்தாம் கூற்று: அவர் தையல்காரராக இருந்தார்.
ஆறாம் கூற்று: அவர் மேய்ப்பராக இருந்தார். இதற்கு முன்பு அவரை அறிந்த ஒருவர் அவரைப் பார்த்து கூறினார்: “நீ தான் இன்னாரின் பிள்ளையின் அடிமையா? நேற்று மாடு மேய்த்துக் கொண்டிருந்தாய் அல்லவா?” அவர் கூறினார்: “ஆம்.” அவர் கேட்டார்: “நான் இப்போது காணும் இந்த நிலையை நீர் எப்படி அடைந்தாய்?” அவர் கூறினார்: “அல்லாஹ்வின் விதி, அமானிதத்தை நிறைவேற்றுதல், உண்மை பேசுதல், எனக்குச் சம்பந்தமில்லாதவற்றை விட்டுவிடுதல்.” இதன் காரணத்தால் கிடைத்தது என்று பதிலளித்தார்.
ஏழாம் கூற்று: அவர் தச்சராகவும் அடிமையாகவும் இருந்தார். அவரது எஜமானர் அவரிடம் கூறினார்: “ஒரு ஆட்டை அறுத்து, அதில் மிகச் சுவையான இரண்டு பாகங்களைக் கொண்டு வா.” அவர் இதயத்தையும் நாவையும் கொண்டு வந்தார்.
பின்னர் அவரிடம் மற்றொரு ஆட்டை அறுக்கச் சொல்லி, “அதில் மிக மோசமான இரண்டு பாகங்களை எறிந்துவிடு” என்றார். அவர் நாவையும் இதயத்தையும் எறிந்தார். எஜமானர் கூறினார்: “நான் உன்னிடம் மிகச் சுவையான இரண்டு பாகங்களைக் கொண்டு வரச் சொன்னேன், நீ நாவையும் இதயத்தையும் கொண்டு வந்தாய். பின்னர் மிக மோசமான இரண்டு பாகங்களை எறியச் சொன்னேன், நீ நாவையும் இதயத்தையும் எறிந்தாய்.”
லுக்மான் கூறினார்: “அவை (நாவும் இதயமும்) நல்லவையாக இருக்கும்போது அவற்றை விட சுவையானது எதுவும் கிடையாது, அவை கெட்டவையாக இருக்கும்போது அவற்றை விட மோசமானதும் எதுவும் கிடையாது.”
நூல்: அஹ்காமுல் குர்ஆன் (6/ 286)
تفسير روح البيان ـ موافق للمطبوع وفي بعض الكتب قال لقمان : خدمت أربعة آلاف نبي واخترت من كلامهم ثماني كلمات : إن كنت في الصلاة فاحفظ قلبك ، وإن كنت في الطعام فاحفظ حلقك ، وإن كنت في بيت الغير فاحفظ عينيك ، وإن كنت بين الناس فاحفظ لسانك ، واذكر اثنين ، وانسى اثنين أما اللذان تذكرهما فالله والموت وأما اللذان تنساهما إحسانك في حق الغير وإساءة الغير في حقك.
“சில நூல்களில் லுக்மான் கூறியதாக வருகிறது: ‘நான் நான்காயிரம் நபிமார்களுக்கு பணிவிடை செய்தேன், அவர்களின் வார்த்தைகளிலிருந்து எட்டு வார்த்தைகளை தேர்ந்தெடுத்தேன்:
நீ தொழுகையில் இருந்தால், உன் இதயத்தைப் பாதுகாப்பாயாக!
நீ உணவில் இருந்தால், உன் தொண்டையைப் பாதுகாப்பாயாக (அதாவது, அளவுடன் உண்ணு)
நீ பிறருடைய வீட்டில் இருந்தால், உன் கண்களைப் பாதுகாப்பாயாக!
நீ மக்களிடையே இருந்தால், உன் நாவைப் பாதுகாப்பாயாக!
மேலும் இரண்டு விஷயங்களை நினைவில் வைத்துக்கொள், இரண்டு விஷயங்களை மறந்துவிடு:
நினைவில் வைக்க வேண்டிய இரண்டு:
- அல்லாஹ்வை
மரணத்தை
மறந்துவிட வேண்டிய இரண்டு:
- பிறருக்கு நீ செய்த நன்மையை
பிறர் உனக்கு செய்த தீமையை’
நூல்: தஃப்ஸீர் ரூஹுல் பயான் (7/ 55)
லுக்மான் அவர்கள் நல்லடியார் என்பதற்கு ஆதாரம் உள்ளது. அவர்கள் தம் மகனுக்கு கூறிய அறிவுரைகள் திருக்குர்ஆனில் உள்ளது. சில ஆதாரப்பூர்வமான செய்திகள் லுக்மான் அவர்கள் தொடர்பாக வந்துள்ளது. பெரும்பாலான செய்திகள் ஆதாரமற்றவை என்பதை நினைவில் கொள்வோம். ஆகையால் லுக்மான் அவர்கள் நல்லடியார் மட்டும் தான் நபியல்ல.