யாஸீன் விளக்கவுரை-2

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை
யாஸீன் தொடர்பான தவறான நம்பிக்கைகள்

சிலர் முழுக் குர்ஆனைவிட அல்லது குர்ஆனிலேயே யாஸீன் சூராவை மிகச்சிறந்ததாக நினைக்கின்றனர். அதனால்தான் யாஸீன் சூராவை மட்டும் தனியாக அச்சடித்து வைத்தல். தனி ஃப்ரேமாக செய்து கடைகளில் மாட்டுதல். இவைகளை வியாபாரம் செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு சில பலவீனமான ஹதீஸ்களும் காரணமாகும். அது பற்றி சற்று விரிவாக அறிந்து கொள்வோம்.

குர்ஆனுடைய இதயம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உள்ளது. குர்ஆனின் இதயம் யாஸீன் அத்தியாயமாகும்.

இதை அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ: 2812)

இச்செய்தி யாஸீன் சுராவின் சிறப்பை கூறுவது போன்றிருந்தாலும் இது அறிவிப்பாளர் தொடர் ரீதியாக பலவீனமான செய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர்களின் ஒருவரான “ஹாரூன் அபூ முகம்மத்” என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இமாம் திர்மிதீ மற்றும் தஹபீ ஆகியோர் கூறியுள்ளனர்.

மேலும் இச்செய்தியின் அடிக்குறிப்பிலேயே இச்செய்தி பலவீனமானது என்று இமாம் திர்மிதீ கூறுகிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் கவனிக்காமல் இந்த பலவீனமான செய்தியின் அடிப்படையில் யாஸீன் சூரா தான் குர்ஆனின் இதயம் என்று இன்றும் சிலர் நம்புகின்றனர். நபியவர்களின் பெயரால் ஒரு செய்தி வந்தால் அதை ஆராயாமல் உடனடியாக நம்புகின்றனர்.

இது தவறான போக்காகும்.

ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் யாஸீன்

“என் சமுதாயத்தின் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் யாஸீன் அத்தியாயம் (மனனமாக) இருக்கவேண்டும்” என நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இச்செய்தி கஷ்புல் அஸ்தார் (ஹதீஸ் என் 2303) உள்ளிட்ட வேறு சில நூல்களில் பதிவாகியுள்ளது. எனினும் அனைத்து அறிவிப்புகளிலும் இப்றாஹீம் பின் அல்ஹகம் என்பவர் இடம்பெற்றுள்ளார. இவரை பல அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர். எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.

பத்து முறை குர்ஆன் ஓதியதற்கு சமம்

“யாஸீன் அத்தியாயத்தை ஒருமுறை ஓதியவர் பத்து முறை குர்ஆனை (முழுமையாக) ஓதியவரை போலாவார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி)

(திர்மிதீ: 2812)

‌மேற்கண்ட செய்தியும் யாஸீன் சூராவின் சிறப்பை கூறுகிறது. எனினும் இதில் ஹாரூன் அபூ முகம்மத் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். மற்ற நூற்களில் இடம் பெற்றுள்ள செய்திகளில் ஹஸ்ஸான் பின் அதிய்யா என்பவர்தான் இச்செய்தியை நபி(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்.

ஆனால் இவர் நபித்தோழரல்ல. நபியவர்களின் மரணத்திற்கு பிறகு பிறந்த தாபியாவார். எனவே இவர் நபிகளாரிடமிருந்து கேட்பதை போன்று அறிவிக்கக்கூடிய செய்தியையும் ஏற்கமுடியாது. இதே செய்தி ஷீ அபுல் ஈமான் என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது. அதில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் எனும் பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். ஆதலால் மேற்கண்ட செய்தியும் ஆதாரமற்றதாகும்.

மரணிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு…

மரணிக்கும் தருவாயில் இருப்பவருக்கு அருகில் யாஸீன் ஓதும் நடைமுறை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் காணப்படுகிறது. இதற்கு ஆதாரமாகப் பின் வரும் ஹதீஸ்களைச் சில அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : மஅகில் பின் யஸார் (ரலி)

நூல்கள் :(அபூதாவூத்: 2814), இப்னுமாஜா-1438

யாஸீன் (அத்தியாயம்) குர் ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி அதை ஓதுபவருக்கு மன்னிப்பு வழங்கப்படாமல் இருப்பதில்லை உங்களில் மரண வேளை நெருங்குபவர்களிடம் அதை ஓதுங்கள்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : மஅகில் பின் யஸார் (ரலி)

(அஹ்மத்: 19415)

இச்செய்தி இப்னுமாஜா 1438, நஸாயீ அவர்களின் ஸுனனுல் குப்ரா 10847 உள்ளிட்ட பல நூற்களில் இடம் பெற்றுள்ளது. இந்த அனைத்து ஹதீஸ்களிலும் மஅகில் பின் யஸார் (ரலி) கூறியதாக அபூ உஸ்மான் என்பாரின் தந்தை இந்த ஹதீஸை அறிவிக்கிறார். அவரிடமிருந்து அபூ உஸ்மான் அறிவிக்கிறார்.

அபூ உஸ்மான் என்பவரும், அவரது தந்தையும் யாரென்று அறியப்படாதவர்கள் என்று ஹதீஸ் துறை அறிஞர்கள் கூறிகின்றனர். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.

மரணமடையும் எவரது முன்னிலையில் யாஸீன் ஓதப்பட்டாலும் அல்லாஹ் அவருக்கு வேதனையை இலேசாக்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி), அபூதர் (ரலி)

நூல் : முஸ்னத் பிர்தவ்ஸ்-6099

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றிருக்கும் சாலிம் பின் மர்வான் பலவீனமானவராவார். ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனுமளவு இவரை அறிஞர் ஸாஜி விமர்சித்துள்ளார் ஹதீஸ்துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் புகாரி, முஸ்லிம், ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

பார்க்க தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 10 பக்கம் 84

எனவே மரண வேளை நெருங்கியவர் முன்னிலையில் யாஸீன் ஓத வேண்டும். என்று வருகின்ற எந்த ஹதீஸுமே சரியான ஹதீஸ் கிடையாது என்பதை நாம் கவனத்தில் கொண்டு இது போன்ற காரியங்களைத் தவிர்க்க வேண்டும்.

எனவே யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு பற்றி வருகின்ற அனைத்து செய்திகளும் பலவீனமானதாகும். எனினும் குர்ஆனை ஓதினால் ஒர் எழுத்திற்கு பத்து நன்மைகள் உண்டு என்பது நபிமொழி.

‘அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி)

நூல் : திர்மிதி-291

இந்நபிமொழியின் படி யாஸீன் அத்தியாயத்தை ஓதும் போது ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகள் எனும் பொதுவான நன்மைகள் நிச்சயம் கிடைக்கும். மேற்கண்ட பலவீனமான செய்திகளில் உள்ளது போன்ற நன்மை. கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

யாஸீன் என்பது நபி (ஸல்) அவர்களின் பெயரா?

யாஸீன் என்பது நபி (ஸல்) அவர்களின் பெயர் என்று சில முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

இதற்கு ஆதாரமாக இஸ்லாமிய பாடகர் என்று சொல்லப்படும் நாகூர் ஹனிஃபா அவர்களுடைய பாடலில் வருகின்ற “தாஹா நபி, யாசீன் நபி” என்ற வார்த்தைகளைத்தான் குறிப்பிடுகின்றனர். உண்மையில்
நாகூர் ஹனிஃபா பாடுவது போன்று நபிகள் நாயகத்திற்கு யாஸீன் என்ற பெயருண்டு என எந்த ஹதீசிலும் இடம் பெறவில்லை.

நபி (ஸல்) அவர்களின் பெயர்கள்

நபி (ஸல்) அவர்களுக்கு என்னென்ன பெயர்கள் இருக்கின்றன என்பது ஹதீஸ்களில் காணப்படுகிறது. அந்த பட்டியலில் யாஸீன் எனும் பெயர் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.

நான் முஹம்மது புகழப்பட்டவர் ஆவேன்.
நான் அஹ்மத் இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.
நான் மாஹீ அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான்.
நான் ஹாஷிர் ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.
நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.
அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம் (ரலி) அவர்கள்

ஸஹீஹ்(புகாரி: 3532).

மேற்கண்ட ஹதீஸில் உள்ள 5 பெயர்கள் போன்று ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள பெயர்கள் மட்டுமே நபி (ஸல்) அவர்களுக்குரியதாகும்.

யாஸீன், தாஹா என்ற பெயர் நபிகளார்க்கு உண்டு என்று இப்னு அதீ அவர்களின் அல்காமில் என்ற நூலில் இடம்பெறுகிறது. இந்த செய்தியில் வரும் ஸைஃப் பின் வஹப் என்பவர் பலவீனமானவர் என்று இதை பதிவு செய்த இப்னு அதீ அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

நாகூர் ஹனிபா கவிதைக்காகத்தான் இவ்வாறு பாடுகிறாரே தவிர குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பாடவில்லை. எனவே யாஸீன் என்பது நபி (ஸல்) அவர்களின் பெயரல்ல. இஸ்லாமிய சமூகம் ஆதாரமற்ற போன்றவற்றை நம்பக்கூடாது.

யாஸீன் என்ற வார்த்தையின் பொருள் என்ன ?

நம் சமுதாயத்தில் சிலர் யாஸீன் என்பது ஒரு பெயர் என்றும் அதற்கு பொருள் உண்டு என்றும் கருதுகின்றனர். அதனாலேயே சிலருக்கு இதை பெயராகவும் சூட்டுகின்றனர். எனவே இதைப்பற்றி அறிந்துகொள்வது அவசியமாகும்.

பொதுவாக எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் தனித்தனி எழுத்துக்களுக்கு அர்த்தம் கிடையாது. பல எழுத்துக்கள் சேர்ந்தது தான் அர்த்தம் தருகின்ற ஒரு வார்த்தையாக மாறும்.

உதாரணமாக ஆங்கில மொழியில் c a t ( சீ ஏ டீ ) என்ற மூன்று எழுத்துக்களை தனித்தனியாக உச்சரித்தால் இதற்கு பொருள் கிடைக்காது . மாறாக cat ( கேட் ) என்று சேர்த்து உச்சரித்தால் பூனை என்று பொருள் வரும். இவ்வுதாரணம் போன்றே யாசீன் يس என்பதும் அரபு எழுத்தில் உள்ள யா மற்றும் சீன் ஆகிய இரண்டு தனித்தனி எழுத்துக்களாகும். சேர்த்து சொல்லப்பட்ட ஒரு வார்த்தையல்ல.

இதுபோன்றே 10 வது அத்தியாயத்தில் الر ( அலிப் லாம் ரா ) என்றும் , 19 வது அத்தியாயத்தில் كهيعص ( காஃப் ஹா யா அய்ன் சாத் ) என்றும் , 20 அத்தியாயத்தில் طه ( தா ஹா ) என்றும் , 42 வது அத்தியாயத்தில் عسق ( அய்ன் சீன் காஃப் ) என்றும் , 50 வது அத்தியாயத்தில் ق ( காஃப் ) என்றும் , 68 வது அத்தியாயத்தில் ن ( நூன் ) என்றும் , இவைமட்டுமின்றி குர்ஆனில் மொத்தம் 29 அத்தியாயங்களின் துவக்கம் இது போன்றே தனித்தனி எழுத்துக்களை கொண்டு அமைந்துள்ளது . இவைகளுக்கு என்று தனித்த அர்த்தம் கிடையாது.

யாசீன் என்ற தனித்தனி எழுத்துக்களுக்கும் எவ்வித பொருளுமில்லை. எனவே யாசீன் என்று பெயர் வைப்பது தவறல்ல என்றாலும் அதற்கென்று தனித்த பொருளில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

யாசீன் என்ற சொல்லைச் சேர்த்து படித்தாலும் அதற்கும் அரபிமொழியில் பொருள் கிடையாது.

பொருளற்ற வாரத்தையை அல்லாஹ் பயன்படுத்துவானா?

” மிகுந்த பொருளுள்ளவார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தும் அல்லாஹ் பொருளற்ற வார்த்தைகளை பயன்படுத்தமாட்டான் எனும் போது யா , சீன் என்பது போன்ற பொருளற்ற தனித்தனி வார்த்தைகளை ஏன் பயன்படுத்தவேண்டும்? ” என்ற கேள்வி நமக்கு எழலாம். ஆனால் இவற்றை எவ்வித பயனுமில்லாமல் வீணாக அல்லாஹ் கூறவில்லை.

அரபுகளின் வழக்கம்.

பொதுவாக ஏதேனும் கருத்துக்களை கூறுவதற்கு முன்பாக யா, சீன் , போன்ற தனித்தனி வார்த்தைகளை பயன்படுத்துவது அரபுகளின் அன்றைய வழக்கமாக இருந்தது பிறகு சொல்லப்படும் கருத்தின் முக்கியத்தை உணர்த்த அரபியர்கள் இதை நடைமுறைப்படுத்தியுள்ளதாக புரியலாம். அதைப்போன்றே ஒரு அத்தியாத்தின் துவக்கத்தில் தனித்தனி வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

நபித்தோழர்கள் எந்த சந்தேகம் கேட்கவில்லை

பொருளற்ற தனித்தனி வார்த்தைகளை பயன்படுத்துவது வழக்கத்திற்கு மாற்றமானது என்றிருந்தால் நபித்தோழர்கள் உடனடியாக அதைப்பற்றி கேள்வியெழுப்பியிருப்பார்கள். ஏனெனில் தங்களுக்கு புதிதான ஏதேனும் ஒன்றை நபி ( ஸல் ) அவர்கள் கூறினால் நபித்தோழர்கள் உடனடியாக அதற்கு விளக்கம் கேட்டுவிடுவார்கள். இதை பின்வரும் செய்திகளின் மூலம் அறியலாம்.

” ஹர்ஜ் ” என்பதை பற்றி விளக்கம் கேட்டல்

அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறியதாவது:

நபி ( ஸல் ) அவர்கள், ” ( உலக முடிவு நாளின்போது) கல்வி கைப்பற்றப்பட்டுவிடும். அறியாமையும் குழப்பங்களும் வெளிப்பட்டு ( பரவி ) விடும். கொந்தளிப்பு ( ஹர்ஜ் ) மிகுந்துவிடும்” என்று கூறினார்கள். அப்போது” கொந்தளிப்பு என்றால் என்ன, அல்லாஹ்வின் தூதரே? ‘என்று கேட்கப் பட்டது. நபியவர்கள் தமது கையால் “இப்படி’ என்று கொலை செய்வதைப் போன்று பாவனை செய்துகாட்டினார்கள்.

(புகாரி: 85)

ஹர்ஜ் அதிகரித்து விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது அதை சாதரணமாக கடந்து விடாமல் ஹர்ஜ் என்றால் என்னவென்று கேட்டு விளக்கம் அடைந்து கொள்கிறார்கள்.

“கீராத்” என்பதை பற்றி விளக்கம் கேட்டல்

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“”யார் ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இரண்டு கீராத்கள் என்றால் என்ன?” என வினவப் பட்டது. அதற்கவர்கள், “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 1325)

மேற்கண்ட இரண்டு செய்திகளிலும் “ஹர்ஜ்” மற்றும் “கீராத்” என்ற புதிதான வார்த்தைகளை நபி (ஸல்) அவர்கள் கூறும்போது அதைப்பற்றி உடனடியாக நபித்தோழர்கள் கேள்வி கேட்டு அதற்குறிய விளக்கத்தை பெறுகிறார்கள்.

இத்தகைய நிகழ்வுகள் நபிமொழிகளில் அதிகம் இடம் பெற்றுள்ளன. எனவே பொருளற்ற தனித்தனி வார்த்தைகளான அலிப் லாம் மீம், யா ஸீன் போன்ற தனித்தனி வார்த்தைகளை கூறுவது வழக்கத்திற்கு மாறான புதிதான செயல் என்றிருந்தால் உடனடியாக நபித்தோழர்கள் விளக்கம் கேட்டிருப்பார்கள். அவ்வாறு கேட்காததின் மூலம் இது அரபுகளின் வழக்கத்தில் உள்ள, அன்றைய மக்களிடம் நன்கு அறியப்பட்ட செயல்
முறை தான் என்பதை அறியலாம்.

நபித்தோழர்கள் கேள்வி கேட்டு அதற்குறிய விளக்கத்தை பெறுகிறார்கள். இத்தகைய நிகழ்வுகள் நபிமொழிகளில் அதிகம் இடம் பெற்றுள்ளன. எனவே பொருளற்ற தனித்தனி வார்த்தைகளான

அலிப் லாம் மீம், யா ஸீன் போன்ற தனித்தனி வார்த்தைகளை கூறுவது வழக்கத்திற்கு மாறான புதிதான செயல் என்றிருந்தால் உடனடியாக நபித்தோழர்கள் விளக்கம் கேட்டிருப்பார்கள். அவ்வாறு கேட்காததின் மூலம் இது அரபுகளின் வழக்கத்தில் உள்ள, அன்றைய மக்களிடம் நன்கு அறியப்பட்ட செயல் முறை தான் என்பதை அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் தானாக விளக்கமளித்தல்

நபிகளாரின் பண்பு

நபித்தோழர்கள் கேட்காவிட்டாலும் சில நபி (ஸல்) அவர்களே தானாக முன்வந்து விளக்கமளிக்க வேண்டியவற்றுக்கு விளக்கமளிப்பார்கள். இதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளது.

“கவ்ஸர்” என்பது பற்றி விளக்குதல்

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், சற்று முன் (குர்ஆனின் 108ஆவது அத்தியாயமான அல்கவ்ஸர் எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இன்னா அஃத்தைனாகல் கவ்ஸர். ஃபஸல்லி லி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்.

(பொருள்: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

(பொருள்:1. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.
2. எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக!
3. நிச்சயமாக உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்.)

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்கவ்ஸர் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று பதிலளித்தோம்.

அவர்கள்,அது ஒரு (சொர்க்க)நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை(த்தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர் தடாகம்; மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தார் (தண்ணீர் அருந்துவதற்காக) அதை நோக்கி வருவார்கள். அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும்.

அப்போது அவர்களில் ஓர் அடியார் (தண்ணீர் அருந்தவிடாமல்) தடுக்கப்படுவார். உடனே நான், இறைவா! அவர் என் சமுதாயத்தாரில் ஒருவர். (அவர் ஏன் தடுக்கப்படுகிறார்?) என்று கேட்பேன். அதற்கு இறைவன், “உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறுவான்.

(முஸ்லிம்: 670)

பொருளற்ற தனித்தனி வார்த்தைகளை பயன்படுத்துவது மக்களுக்கு புரியாது என்றிருந்தால் மேற்கண்ட ஹதீஸ் போன்று நபி (ஸல்) அவர்கள் தாமே முன்வந்து மக்களுக்கு அதை விளக்கியிருப்பார்கள். ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை. இதிலிருந்தும் இது அரபுகளின் நடைமுறை என்பதை அறியலாம்.

காஃபிர்கள் விமர்சனம் செய்யவில்லை

இறைமறுப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களை அனுதினமும் பைத்தியம் என்றெல்லாம் விமர்சித்து கொண்டிருந்தார்கள். யா ஸீன், அலிப் லாம் மீம் போன்று தனித்தனி எழுத்துக்களை கூறும் நடைமுறை தவறு என்றிருந்தால் அன்றைய இறைமறுப்பாளர்கள் உடனடியாக “முஹம்மத் பொருளற்ற வார்த்தைகளை கூறுகிறார்.

வீணான வார்த்தைகளை கூறி, உளறுகிறார் என்றெல்லாம் விமர்சித்திருப்பார்கள். இது போன்ற எவ்வித நிகழ்வும் நடக்காமலிருப்பதும் இது அரபுகளின் வழக்கம் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே யாஸீன் என்பது இரண்டு தனித்தனி அரபி எழுத்துக்கள் ஆகும். இதற்கென்று தனித்து பொருள் கிடையாது.

இரண்டாவது வசனத்தின் விளக்கம்

2. ஞானமிக்க குர் ஆன் மீது ஆணையாக!

யாசீன் சூராவின் இரண்டாவது வசனத்தில் குர்ஆன் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான். இதேபோன்று இறைவன் தனது படைப்புகளில் பலவற்றின் மீது சத்தியம் செய்வதை திருக்குர்ஆனில் பல இடங்களில் காண்கிறோம்.

1. நூன். எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக

(திருக்குர்ஆன்: 68:1) ➚.)

1. காலத்தின் மீது சத்தியமாக!
2. மனிதன் நட்டத்தில் இருக்கிறான்.

(திருக்குர்ஆன்: 103:1),2) ➚.)

1. சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக!
2. அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக!
3. அதை (சூரியனை) வெளிப்படுத்தும் பகலின் மீது சத்தியமாக!
4. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!
5. வானத்தின் மீதும், அதன் அமைப்பின் மீதும் சத்தியமாக!
6. பூமியின் மீதும், அது விரிக்கப்பட்டதன் மீதும் சத்தியமாக!
7. உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!
8. அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.

(திருக்குர்ஆன்: 91:1) ➚முதல் 8.)

அல்லாஹ்வைத்தவிர மற்றவற்றின் மீது சத்தியம் செய்யலாமா?

அல்லாஹ்வைத் தவிர மற்ற எதன் மீதும் எதற்காகவும் சத்தியம் செய்யக்கூடாது என்பது இஸ்லாத்தில் உள்ள விதியாகும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் ‘சத்தியம் செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி (மௌனமாக) இருக்கட்டும்’

இதை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 2679)

மக்காவில் உள்ள குறைஷிகள் தங்கள் தந்தையின் மீது சத்தியம் செய்து வந்தனர். இஸ்லாம் அதை தடை செய்தது.

இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறியதவாது:

“எவர் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்’ என்று சொன்னார்கள்.

(புகாரி: 3836)

இதேபோன்று நம் காலத்தில் உள்ளவர்களும் குர்ஆன் மீது சத்தியம், தாய் தந்தையின் மீது சத்தியம் என்றும் கூறுகின்றனர். இதுவும் தவறாகும்.

அல்லாஹ்வைத்தவிர வேறு பொருட்களின் மீது சத்தியம் செய்வது தவறு என்றிருக்கும் போது குர்ஆனின் மீது அல்லாஹ் சத்தியம் செய்வது சரியானதா? என்ற கேள்வி எழலாம்.

ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது.

நாம் பிறபொருட்களின் மீது சத்தியம் செய்யக்கூடாது என்பது அல்லாஹ் நமக்கு விதித்த கட்டளையாகும். உதாரணமாக அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் செல்லக்கூடாது என்று ஓர் அரசாங்கம் மக்களுக்கு கட்டளையிட்டால் மக்கள் அதை பின்பற்ற வேண்டும். ஆனால் பாதுகாப்பு போன்ற ஏதேனும் தேவைகளுக்காக அரசாங்க அதிகாரிகள் காட்டுக்குள் சென்றால் அதை கட்டளையை மீறியதாக கருதமாட்டோம்.

ஏனெனில் மக்களுக்கு விதிக்கப்பட்ட சட்டம் மக்களுக்கு மட்டும்தான். அரசாங்கத்திற்கு பொருந்தாது. அதேபோன்று தான் அல்லாஹ் மனிதர்களுக்கு விதித்த சட்டம் மனிதர்களை மட்டும்தான் கட்டுப்படுத்துமே தவிர சட்டம் விதித்த அல்லாஹ்வை கட்டுப்படுத்தாது.

பொருளின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக!

மனிதர்களுக்கு மத்தியில் ஏதேனும் பிரச்சினை எனும்போது தன் தரப்பு வாதத்தை உண்மையென நிரூபிப்பதற்காக இறைவன் மீது சத்தியம் செய்வார்கள் . இப்பிரச்சனையின் உண்மைத்தன்மையை அல்லாஹ் அறிவான் என்பது இதன் பொருள் . இத்தகைய நிலை அல்லாஹ்வுக்கு இல்லை.

சந்திரன் , சூரியன் போன்ற குறிப்பிட்ட பொருட்களின் மீது அல்லாஹ் சத்தியம் செய்வதற்கு காரணம் அப்பொருட்களின் முக்கியத்துவத்தை விளக்குவதாகும் . சூரியனின் மீது இறைவன் சத்தியம் செய்தால் அதைப்பற்றி மனிதர்களை சிந்திக்கத்தூண்டுவதாக புரிந்து கொள்ளலாம் . எனவே இதை முரணாக விளங்கத் தேவையில்லை.

ஞானம் நிறைந்த குர்ஆன்

மேலும் இரண்டாவது வசனத்தில் குர்ஆனை ஞானம் நிறைந்த குர்ஆன் என்று இறைவன் சிறப்பித்து கூறுகிறான் இதே கருத்தை பிற வசனங்களிலும் இறைவன் கூறியுள்ளான்.

பார்க்க அல்குர்ஆன் 3 58 , 10 1, 31 2.

குர்ஆனை ஞானம் நிறைந்தது என்று குறிப்பிடுவதற்கு பல காரணங்கள் உண்டு.

குர்ஆனில் எவ்வித குறையும் இல்லை
அல்லாஹ்வுக்கு ஞானமிக்கவன் என்று சொல்லப்படுவது போன்று அவன் அளித்த குர்ஆனுக்கு ஞானமிக்க குர்ஆன் என்று சொல்லப்படுகிறது. எவ்வித குறையுமின்றி அறிவு ஞானம் நிரம்பியதாக திருக்குர்ஆன் அமைந்திருப்பதால் இதற்கு இவ்வாறு கூறப்படுகிறது.

ஞானம் நிறைந்த சட்டங்கள்

திருக்குர்ஆன் மனித குலத்திற்கு வகுத்தளித்த சட்டதிட்டங்கள் வாயிலாகவும் ஞானம் நிறைந்ததாக திருக்குர்ஆன் மிளிர்கிறது.

நம் இந்திய நாட்டில் கூட சிலர் குர் ஆன் கூறும் சட்டங்களை தவறானது, காட்டுமிராண்டித்தனமானது என விமர்சிப்பார்கள். ஆனால் இதற்கு மாற்றாக ( அவர்களின் கருத்துப்படியே ) வேறு சிறந்த சட்டத்தை கூறுவார்களா ? என்றால் இல்லை.

உதாரணமாக திருடினால் கையை வெட்டவேண்டும் என்று குர் ஆன் சொல்லும் சட்டங்களை கடுமையானது என விமர்சிப்பவர்கள் கூறும் சட்டங்கள் திருட்டை வளர்க்கத்தான் செய்கிறது. ஒருவன் திருடினால் அவனை சிறையில் அடைக்கிறார்கள். பிறகு மக்கள் வரிப்பணத்தில் வாரம் ஒரு சினிமா, நேரம் தவறாமல் வேளைக்கு சோறு என்று மிகவும் ராஜ (?) மரியாதையுடன் வைத்துள்ளார்கள். இதனால் சிறைச்சாலைக்கு மாமியார் வீடு ( ? ) என்று ஏளனமாக பெயர் வைக்கும் அளவுக்குத்தான் சிறை தண்டனையின் நிலையுள்ளது.

மேலும் திருட்டை தடுப்பதற்காக பேருந்து நிலையங்களில் திருடர்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில் சில திருடர்களுடைய புகைப்படங்களை ஒட்டுகிறார்கள். முன்பின் அறியாத புகைப்படங்களை அனைவராலும் ஞாபகத்தில் வைக்கமுடியுமா? இதன் மூலம் திருட்டை ஒழிப்பதில் நன்மை உண்டா? என்று கூட யோசிக்காமல் இவ்வாறு செய்கின்றனர். இதுபோன்று இவர்கள் கூறும் சட்டங்கள் மூலம் திருட்டு அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர ஒழியாது என்பதற்கு நாளுக்கு நாள் திருட்டு அதிகரிப்பதே மறுக்கவியலாத சான்றாகும்.

பெண்கள் கற்பழிக்கப்படுவதிலிருந்து காப்பாற்ற குறிப்பிட்ட அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள்.

ஆபத்தான சூழ்நிலையில் மொபைலை அவர்கள் லேசாக அசைத்தால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று அப்பெண் இருக்கும் இடத்துக்கு காவலர்கள் விரைந்துவந்து அப்பெண்ணை காப்பாற்றுவார்கள் என்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும்.

அனைத்து பெண்களிடமும் மொபைல் உள்ளதா? மொபைல் இல்லாத பெண்களின் கதி என்ன? கற்பழிப்பவன் காவல்துறையினர் வரும்வரை காத்திருப்பானா? என்பதைக்கூட யோசிக்காமல் இது போன்ற நுனிப்புல் மேயும் செயல்களை முன்னெடுக்கிறார்கள்.

இத்தகைய அரைவேக்காடுத்தனங்களை அரங்கேற்றாமல் திருடினால் திருடியவனின் கை வெட்டப்பட வேண்டும், விபச்சாரம் செய்பவர்களுக்கு திருமணம் ஆகாமலிருந்தால் கசையடி, திருமணமாகியிருந்தால் மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது.

( பார்க்க அல்குர்ஆன் 5 38, 24 2,(முஸ்லிம்: 3493)

இவ்வாறு செய்தால் குற்றவாளிகள் தங்கள் உயிர் மீது பயம் கொள்வார்கள். குற்றங்கள் வெகுவாக குறையும். இதற்கு சவூதி அரேபியா கண்முன் உதாரணம்.

மற்றவர்களெல்லாம் சட்டங்களை கேலிக்குரியதாக ஆக்கும் போது குர் ஆன் இத்தகைய மிகச்சிறந்த சட்டங்களை கூறுவதன் மூலமும் ஞானம் நிறைந்த வேதமாக விளங்குகிறது. அதனால் தான் குர்ஆனின் சட்டத்தை குறைகூறுபவர்கள் கூட சில நேரங்களில் தங்களை அறியாமலேயே அரபு நாட்டு சட்டம் அதாவது குர்ஆன் கூறும் சட்டம் தான் குற்றங்களுக்கு தீர்வு என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு திருக்குர்ஆன் தனக்குள் ஞானம் நிறைந்த சட்டங்களை, கருத்துக்களை உள்ளடக்கியதால் இறைவன் ஞானம் நிறைந்த வேதம் என்று வர்ணிக்கின்றான்.