முன்பேர வணிகம் கூடுமா ?

கேள்வி-பதில்: வியாபாரம்

முன்பேர வணிகம் கூடுமா?

எந்தப் பொருளையும் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி விற்பதும் வாங்குவதும் தான் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வியாபாரமாகும். நாளைக்கு நமக்கு வரக்கூடிய பொருளுக்கு இன்று விலை நிர்ணயித்துக் கொண்டால் அதில் விற்பவர் அல்லது வாங்குபவர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய வியாபாரம் தான் முன்பேர வணிகம் என்று கூறப்படுகிறது.

ஒரு விவசாயி தனது வயலில் விளையும் நெல்லை ஒரு மூட்டை 500 ரூபாய்க்குத் தருவதாக வியாபாரியிடம் ஒப்பந்தம் செய்கிறார். அறுவடை நாளில் நெல் விலை 600 ஆகி விட்டால் விவசாயிக்கு அநியாயமாக 100 நூறு ரூபாய்ப் நட்டம். அவரது வயிறு எரிய இது காரணமாக ஆகி விடும். நாம் இப்படி ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால் நமக்கு நூறு நூறு ரூபாய் அதிகம் கிடைத்திருக்குமே என்று என்று ஏக்கம் கொள்வார்.

அது போல் ஒரு மூட்டை நெல் 400 ஆக குறைந்து விட்டால் விவசாயிக்கு நூறு ரூபாய் அதிகம் கிடைத்தாலும் வியாபாரிக்கு தண்டமாக நூறு ரூபாய் வீணாகிறது.

இது தங்கம் டாலர் இன்னும் அனைத்துப் பொருட்களிலும் நடைமுறைபடுத்தப்படுகிறது.

இது போன்ற வியாபாரம் சிறந்ததல்ல என்றாலும் அன்றைக்கு நபித்தோழர்களுக்கு இருந்த வறுமை காரணமாக செல்வந்தர்களிடம் முன் கூட்டியே பணம் பெற்றுக் கொண்டு இது போல் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார்கள்.

பின்வரும் புகாரி ஹதீஸ்களைப் பார்க்க:

ஸலம் (முன்பணம் பெறுதல்)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்களில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். நபி (ஸல்) அவர்கள், ஒருவர், (குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்தால் குறிப்பிட்ட எடைக்காகவும் குறிப்பிட்ட அளவுக்காகவும் கொடுக்கட்டும்! என்று கூறினார்கள்.

ஒரு வருடம், இரண்டு வருடங்களில் என்றோ, இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்களில் என்றோ தமக்கு அறிவிக்கப்பட்டதாக அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) (ஐயப்பாட்டுடன்) அவிக்கிறார்கள்.(புகாரி: 2239)

ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் கூற வேண்டும்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மக்கள் இரண்டு, மூன்று வருடங்களில் பேரீச்சம் பழத்தைப் பெற்றுக்கொள்வதாக (ஒப்புக் கொண்டு, அதற்காக) முன்பணம் கொடுத்துவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ஒருவர் ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுத்தால், அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளுக்காக (மட்டுமே) கொடுக்கட்டும்! என்றார்கள்.(புகாரி: 2240)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்த போது, (ஸலம் பற்றி குறிப்பிடுகையில்), அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளில் தான் அது அனுமதிக்கப்படும்! என்றார்கள்.(புகாரி: 2241)

இப்னு அபில் முஜாலித் (ரலி) கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரலி) அவர்களும் அபூபுர்தா (ரலி) அவர்களும் ஸலம் வியத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அப்போது, என்னை இப்னு அபீஅஃவ்பா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். அவர்களிடம் சென்று நான் இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர்(ரலி) ஆகியோரின் காலத்திலும் கோதுமை, வாற்கோதுமை, உலர்ந்த திராட்சை, உலர்ந்த பேரீச்சம்பழம் ஆகியவற்றிற்காக முன்பணம் கொடுத்து வந்தோம்! என்றார்கள். பிறகு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன்; அவர்களும் இவ்வாறே கூறினார்கள்.(புகாரி: 2242, 2243)

தோட்டம் துரவு மற்றும் விவசாய நிலம் இல்லாதவர்களிடம் விளைபொருட்களுக்காக முன்பணம் கொடுத்தல்

முஹம்மத் பின் அபில் முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரலி) அவர்களும், அபூபுர்தா(ரலி) அவர்களும் என்னை அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம் அனுப்பி, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித் தோழர்கள் கோதுமைக்காக முன்பணம் கொடுத்திருக்கிறார்களா? என்று கேள்! என்றனர். (அவ்வாறே நான் கேட்ட போது) அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள், கோதுமை, வாற்கோதுமை, ஸைத்தூன் (ஆலிவ்) எண்ணெய் ஆகியவற்றிற்காக அளவும் தவணையும் குறிப்பிட்டு, ஷாம் வாசிகளான நபீத் எனும் குலத்தாரிடம் நாங்கள் முன்பணம் கொடுத்து வந்தோம்! என்றார். தோட்டம் துரவும் விவசாய நிலமும் யாரிடம் இருக்கிறதோ! அவரிடமா? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் நாங்கள் அது பற்றி விசாரிக்க மாட்டோம்! என்றார்கள். பிறகு, அவ்விருவரும் என்னை அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடம் அனுப்ப, அவர்களிடம் சென்று நான் கேட்ட போது, நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபித் தோழர்கள் பொருட்களுக்கு முன்பணம் கொடுத்து வந்தனர்; (முன்பணம் பெறுபவர்களிடம்) அவர்களுக்குத் தோட்டம் துரவு அல்லது விவசாய நிலம் இருக்கின்றதா என்று நாங்கள் கேட்க மாட்டோம்! என்று கூறினார்கள்.(புகாரி: 2244, 2245)

அபுல் புக்தரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுப்பது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்ணும் பக்குவத்தை அடையும் முன்பும் அதை எடை போடுவதற்கு முன்பும் அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்! என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், (மரத்திலுள்ளதை) எவ்வாறு எடைபோடுவது? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார். அவர்களுக்கு அருகிலிருந்த மற்றொரு மனிதர் எடை போடுவதன் கருத்து (அதன் எடை இவ்வளவு இருக்கும் என்று) மதிப்பிடுவதாகும்! என்றார்.(புகாரி: 2246)