பாலியல் கொடுமைக்கு விடிவு, இஸ்லாமிய சட்டமே முடிவு…..
10 அக்டோபர் 2025 மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் ஒடிசாவை சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இச்சம்பவம் குறித்து பேசுகையில், இச்சம்பவத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களை, குறிப்பாக பெண்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” எனக் கூறினார்.பெண்கள் இம்மண்ணில் பாலியல் கொடுமைக்கு பலியாவது இது முதல் முறையன்று. இதோடு முடியப்போவதுமன்று என்று நாட்டின் சூழ்நிலை நமக்கு அறிவிக்கின்றது2024 ஆகஸ்ட், இதே கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர்அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார்.
பிரேத பரிசோதனை முடிவில், அப்பெண்ணின் கால்கள் 90 டிகிரி அளவில் வளைத்து உடைக்கப்பட்டுள்ளதாகவும் உதட்டிலும் கழுத்திலும் காதுகளிலும் கொடூரமாய் கடிக்கப்பட்டதாகவும் தெரிய வந்தது.அதே ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி உத்தரப் பிரேதேசத்தில் செவிலிப் பெண் ஒருவர் பணி முடித்து வீடு திரும்புகையில் கற்பழித்துக் கொலைசெய்யப்பட்டார். 8 நாள் கழித்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.இதுபோன்றே1973-ஆம்ஆண்டு மும்பையில் மருத்துவமனையின் செவிலி அருணா சென்பாகு பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி ரணக் கொடூரமாய் கொல்லப்பட்டார். 2012 டிசம்பர் 16 இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பெண் ஒருவர் பேருந்தில் வைத்துக் கூட்டுப் பாலியல் செய்து கொல்லப்பட்டார். நிர்பயா என அவ்வழக்கு வரலாற்றுச் சுவடுகளில் பதிவாகியுள்ளது.2010 ஜனவரி 10 அன்று ஜம்மு காஷ்மீரில் பால்குடி மறவாத வயது சிறுமி ஆசிஃபா கோவில் கருவறையில் பல நாட்கள் சிறைவைக்கப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டாள்.
இது போன்ற கோர சம்பவங்களுக்கும் கொடூர சாவுகளுக்கும் அளிக்கப்பட்ட தண்டனைகள் நம் தேசத்தில் இம்மியளவிலும் இன்னுயிரைக் காத்திடவில்லை; பெண்ணுயிரை பேணிடவில்லை! மாறாக, குற்றங்களையும் குற்றவாளிகளையும் மிகுதிப்படுத்தியுள்ளது.2012 நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்குகளை ஆவணப்படுத்தத் துவங்கியது. அந்தஆவணப்படி 2012-ல் 24,900 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பத்து ஆண்டுக்குப் பிறகு 2022- ல் 31,516- ஆக 25% முன்னேறியுள்ளது(?).
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்கள் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024-ல் 52.3% அதிகரித்துள்ளன.இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. பதிவாகும் எண்ணிக்கையே இவ்வளவு என்றால் பதிவாகாத குற்றங்களின் விகிதாச்சாரம் விண்ணைத் தொடும் போலும்!NCRB-தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் 2017 முதல் பாலியல் தொடர்பான கொலைகளை ஆவணப்படுத்த ஆரம்பித்தது. அவ்வறிக்கைப்படி, ஆண்டுதோறும் 220 பாலியல் தொடர்பான கொலைகள் நடக்கின்றன என்பதை பதிவுகள் தெரிவிக்கின்றன.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 2023-ல்அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 2022- ல் பெண்கள் மீதான வன்முறை 4% அதிகரித்திருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. 2012-ல் டெல்லி நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, பாலியல்குற்றங்களைத் தண்டிப்பதற்கான சட்டங்கள் கடுமையாகின. பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.ஆனால் அந்தச் சட்ட சாசனங்கள் யாவும் குற்றப் பாசனத்தைக் குறைத்தப்பாடில்லை.பெண்கள் மீதான குற்றச் சம்பவங்களின் பட்டியலில், பெண்கடத்தல் (19.2%), பெண்கள் மீதான தாக்குதல் (18.7%), பாலியல் வல்லுறவு (7.1%) போன்ற குற்ற நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளை நீதிமன்றங்கள் எடுத்துக் கொள்கின்றன.
மேல்முறையீட்டுக்கு வழக்குகள் கொண்டு செல்லப்பட்டால், அது முடிவடைய 10-15 வருடங்கள் ஆகக்கூடும். 2022 நிலவரப்படி, இந்தியாவில் 801 மாவட்டங்களில் 4.4 லட்சம் பாலியல் துன்புறுத்தல் சார்ந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.இப்படி நித்தம் நித்தம் பாலியல் அவலங்களும் மரண ஓலங்களும் நம் செவிப்பறைகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. அந்த ஓலங்களும் ஒப்பாரிகளும் நம் நாட்டுச் சாசனத்தைச் சரிசெய்திடவில்லை.
இந்திய தேசம் விடுதலைப் பெற்று 8 தசாப்தங்கள்ஆகியும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஓர் அரசாங்கத்தால் அமைக்க முடியாதாயின் அதன் பெயர் விடுதலை அல்ல, தறுதலை!ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் பெண்ணே, இரவில் பெண்கள் வெளிவருவது அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்கிறாரெனில் இதைவிடக் கொடுமை வேறென்ன இருக்க முடியும்! தன் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு இல்லை என்று அவரே வாக்கு மூலம் அளிக்கின்றார் என்பது தான் அதன் பொருள்.
எப்போது ஒரு நாட்டின் அரசாங்கமும் ஒவ்வொரு தனிமனிதனும் இஸ்லாமிய சாசனங்களை வாழ்வியல் நெறியாக வருடிக் கொள்கிறார்களோ அப்போதுதான் கட்டுக்கோப்பான சமூகத்தைக் கட்டமைக்க முடியும்! ஏனெனில் அச்சட்டங்கள் மனிதக் கரம் கரை படிந்திராத புனித மறை வார்த்தது; இறை வாக்களித்தது!கசையடியும் கல்லடியும் காட்டு மிராண்டித்தனம் என விமர்சிப்போர் உண்டு.பாதிக்கப்பட்டவனின் இடத்தில் நின்றுப் பார்க்கையில் அதில் அலாதியான நியாயங்கள் உண்டு! பால்குடி மறவா பச்சிளம் குழந்தையை கற்பழிப்பவனை அக்குழந்தையின் தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து தண்டனையளிக்கிறது இஸ்லாம்.
திருடியவன் கரத்தைத் துண்டிப்பது பார்ப்பவர்களுக்கு பதற்றமளித்தாலும் அப்பணத்தை ஓடி உழைத்து களைத்து சிறுகச் சிறுக சேர்த்து திரட்டியவனுக்கு நீதமாகத் தெரியும்!சகாப்தமாய் வாழ்ந்த சக்கரவர்த்தியாம் மாவீரர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கர்ஜித்தார்கள், ஒரு பெண் கஃபாவை வலம் வர தன்னந்தனியே ஹீராவிலிருந்து புறப்படுவாள். அவள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்ச மாட்டாள்!”.இத்தகைய சாம்ராஜ்யத்தை இஸ்லாமியச் சன்மார்க்கத்தால் மட்டுமே கட்டியாள முடிந்தது! ஆதலால் தான் காந்தியடிகள், “கலீஃபா உமரின் நீதமான ராஜ்யத்தைப் போன்றது உலக வரலாற்றில் அரிது!” என சூளுரைத்தார்கள்! அன்று தொட்டு இன்று வரை இஸ்லாமியச் சட்டங்களை அமுல்படுத்தும் நாடுகளில் குற்றங்களின் விகிதாச்சாரம் குறைந்து காணப்படுகிறது.குற்றவியலில் மாத்திரம் இஸ்லாத்தின் வாக்குகளை கடைப்பிடிக்காமல் ஒழுக்கவியலிலும் கடைபிடித்தால் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம்.
ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு தங்களின் பார்வைகளைத் தாழ்த்துவது. தனது மனைவியைத் தவிர மற்றவர்களை தாயின் ஸ்தானத்திலும் சகோதரிகளின் இடத்திலும் வைத்துப் பார்ப்பது.நபியிடம் விபச்சாரம் செய்ய அனுமதிக் கேட்ட ஒரு மனிதருக்கு நபியவர்கள் கூறியதாவது, “உன் தாயோ சகோதரியோ விபச்சாரம் செய்யப்படுவதை விரும்புவாயா?”. நபியவர்கள் தொடுத்த இக்கேள்வி அவரின் மனதை துளைத்தது! அவரை விபச்சாரத்திலிருந்து காத்தது! நபியின் கேள்வி உணர்த்துவதாவது, நாம் யாரை தவறாகப் பார்க்கிறோமோ; தகாத முறையில் அடைய நினைக்கின்றோமோ அந்தப் பெண் யாரோ ஒருவனுக்கு தாயாகவோ சகோதரியாகவோ இருப்பாள்.
அவர்களின் இடத்தில் நின்று யோசிக்கச் சொல்கிறது இஸ்லாம். பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு, அவர்களின் மானத்தை மறைத்தல்! ஆண்களும் பெண்களும் சுபாவத்தால் வேறுபட்டவர்கள். பெண்ணின்அமைப்பு ஆண்களை பார்க்கவும் ஈர்க்கவும் வைக்கும்.ஆனால் ஆணின் அமைப்பு பெண்ணைக் கவராது! இதை கூறியவுடன் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பர்.
உண்மையில் இஸ்லாம் பெண்மைக்கு நன்மை சேர்க்கிறது! ஆண்களை விட பெண்கள் உடலைக் கூடுதலாக மறைப்பது அடிமைத்தனம் என்றால் மிருகங்கள் மட்டுமே வையகத்தில் சுதந்திரமானது!ஏனெனில்அவைகள் தான் எதையும் மறைப்பதில்லை!பெண்கள் தங்களின் மானத்தை காப்பது தங்களின் கற்பைக் காப்பதற்கு சமன்! சினிமாக்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெண்கள் தங்களின் உடலை உலகிற்கு காட்டுவதே ஆண்களைச் சபலப்பட வைக்கிறது!இஸ்லாம் உரைக்கும் இவ்விரு ஒழுக்கவியலை இரு பாலினத்தவர்களும் கடைப்பிடித்தால் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கலாம்