நபிகளாரின் நற்குணங்க பணிவு
அலாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் எளிமையாகவும், பணிவாகவும் ஒரு போதும் கடுஞ்சொற்களை பேசாது எதிரிகளிடத்திலும் அன்பான வார்த்தைகளாலும் பேசி வந்துள்ளார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி இருக்கின்றது.
மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். அந்த அளவிற்கு மிக எளிமையானவர்களாகவும், சமூக சேவை புரிபவர்களாகவும் நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 6072) ➚
மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் கூட அவர்களின் உணர்வுகளை மதித்து கொஞ்சமும் கர்வம் கொள்ளாமல் அன்புடன் நடந்துள்ளார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் (நபி (ஸல்) அவர்களிடம்), ”அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தங்களிடம் ஒரு தேவை உள்ளது. (ஒரு விஷயம் பற்றி கேட்க வேண்டும்)” என்று கூறினாள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இன்ன மனிதரின் தாயே! எந்தத் தெருவுக்கு நான் வர வேண்டும் என நீ விரும்புகிறாய்; சொல். உனது தேவையை நான் நிறைவேற்றிவைக்கிறேன்” என்று கூறிவிட்டு, அவள் தமது தேவையை முடித்துக் கொள்ளும்வரை (மக்கள் நடமாட்டமுள்ள ஒரு தெருவில்) அவளுடன் தனியாக(ப் பேசிக்கொண்டு) நின்றிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(முஸ்லிம்: 4648) ➚
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசினார். அப்போது அவரின் தோள் புஜங்கள் நடுங்கின. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் சாதரணமாக இரு. நான் மன்னன் அல்லன். உப்புக்கண்டத்தை சாப்பிடும் பெண்ணின் பிள்ளைதான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி),(இப்னு மாஜா: 3303) ➚
பெரிய மனிதர்களாக திகழ்பவர்கள் அவர்களுக்கு பெரிய அளவில் விருந்து கொடுத்தால் மட்டுமே கலந்து கொள்வார்கள். மேலும் பெரிய அளவில் விழாக்களும், ஆடம்பர விளம்பரங்களும் இருந்தால் மட்டுமே கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு மத்தியில் பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் அன்பாக கொடுக்கும் அனைத்தையும் ஏற்றுக் கொள்பவர்களாக நபிகளார் திகழ்ந்துள்ளார்கள்.
ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் சரி, நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 2568) ➚
வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களிடம் அன்புடன் பழகுபவர்களாகவும், அச்சிறுவர்களுக்கு இவர்களே முந்திக் கொண்டு ஸலாம் கூறுபவர்களாகவும் இருந்துள்ளார்கள்.
(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், ”நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் அல் புனானீ,(புகாரி: 6247) ➚
மேலும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி அவர்களை மகிழ்விப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு ‘அபூ உமைர்’ என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார். அப்போது அவர் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகிறேன். நபி (ஸல்) அவர்கள் (எம் வீட்டிற்கு வந்தால்), ”அபூ உமைரே! பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கிறது?” என்று கேட்பார்கள்.
அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சில வேளை நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது தொழுகைக்குத் தயாராகி விடுவார்கள். தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டிச் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அப்போது அவர்கள் எங்களுக்குத் தொழுவிப்பார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 6203) ➚
தமக்கு வேலை செய்பவர்களிடமும் பணிவுடன் நடந்துள்ளார்கள். அவர்களிடம் தாம் மிகப்பெரியத் தலைவர் என்று ஆணவத்துடன் நடந்து கொண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, ”அல்லாஹ் வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்” என்று கூறினார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும், ஊரிலிருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும், ‘இதை ஏன் இப்படிச் செய்தாய்?” என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ”ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை?” என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 2768) ➚
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் ”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போகமாட்டேன்” என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது.
நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ”அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?” என்று கேட்டார்கள். நான், ”ஆம்; செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(முஸ்லிம்: 4626) ➚
தன்னிடம் கோபப்பட்டவர்களிடம் கூட ஆணவத்துடன் பதிலளிக்காமல் பணிவுடன் எந்த பதிலும் சொல்லாமல் தன் மவுனத்தாலே அவர்களை சிந்திக்கச் செய்தார்கள். ஓர் அடக்கவிடம் (கப்று) அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, ”அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு!” என்றார்கள். அதற்கு அப்பெண், ‘என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல் கூறினாள்.
அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கே நபியவர்களுக்கு காவலாளிகள் எவரும் இருக்கவில்லை நான் உங்களை (யாரென) அறியவில்லை” ‘ என நபி (ஸல்) அவர்களிடம் கூறினாள். ”பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 1283) ➚
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி(யின் வளாகத்தி)ல் ஒட்டகத்தைப் படுக்கவைத்து அத(ன் முன்னங்காரி)னை மடக்கிக்கட்டினார். பிறகு மக்களிடம் ‘உங்களில் முஹம்மது அவர்கள் யார்?’ என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். ‘இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளை நிற மனிதர்தாம்’ என்று நாங்கள் சொன்னோம்.
உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை ‘அப்துல் முத்தலிபின் (மகனின்) புதல்வரே!’ என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் ”என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர் களிடம் ”நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டு விடக்கூடாது” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”உம் மனதில் பட்டதைக் கேளும்!” என்றார்கள்.
உடனே அம்மனிதர் ‘உம்முடைய, உம் முன்னோருடைய இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா?’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”ஆம், அல்லாஹ் சாட்சியாக!” என்றார்கள். அடுத்து அவர் ”அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைளைத் தொழுது வரவேண்டுமென்று உமக்கு(ம் மக்களுக்கும்) கட்டளையிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார்.
அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ”ஆம், அல்லாஹ் சாட்சியாக” என்றார்கள். அவர் ”அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட) இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”ஆம், அல்லாஹ் சாட்சியாக!’ என்றார்கள். அவர், ”அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ்தான் எங்கள் செல்வர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியவர்களுக்கு விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஆம், அல்லாஹ் சாட்சியாக!’ என்றார்கள்.
(இவற்றைக் கேட்டுவிட்டு) அம்மனிதர் ”நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டுவந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன்” என்று கூறிவிட்டு ”நான், எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன்; நான் தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் என்றும் கூறினார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 63) ➚
நபி (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு பற்றித் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல் தலையணையை எடுத்துப் போட்டேன். அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. ”ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ”அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்!)” என்றேன்; அவர்கள் ”ஐந்த நாட்கள்!” என்றார்கள். ”அல்லாஹ்வின் தூதரே!” என்றேன்; ”ஒன்பது நாட்கள்!” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்றேன்; ”பதினொரு நாட்கள்!” என்றார்கள். பிறகு, ”தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை; அது வருடத்தின் பாதி நாட்களாகும்! எனவே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக!” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),(புகாரி: 1980) ➚
”இந்த உமர் பின் கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்!” என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்து விட்டார்கள். (நான் உள்ளே சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களுடைய துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு சலமாவின் பேச்சு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள்.
அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம் பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ”ஏன் அழுகிறீர்கள்?” என்றார்கள். அதற்கு நான், ”அல்லாஹ்வின் தூதரே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),(புகாரி: 4913) ➚
வீட்டு வேலைகளைச் செய்வதைக்கூட சில கவுரவக் குறைச்சல் என்று எண்ணுவதுண்டு. வீட்டில் கால்மேல் கால்போட்டு வேலை செய்யாமல் இருப்பதே மரியாதை, மனைவி செய்யும் வேலைகளில் உதவி செய்வது மரியாதைக் குறைவு என்று நினைப்பவர்கள், அகில உலகின் இறுதித் தூதுவர் நபி (ஸல்) அவர்களின் பணிவையும் அடக்கமான செயல்களையும் பார்க்கட்டும்.
”நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்துவந்தார்கள்?” என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ”தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டுவிட்டு) தொழுகைக்குப் புறப்பட்டுவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ,(புகாரி: 676) ➚
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் அல்லாஹ்வுடைய தூதர் என்று ஒரு போது மக்களிடம் காட்டி கொண்டதே இல்லை. மாறாக, மக்களோடு மக்களாக மிக எளிமையாக தன வாழ்வை கழித்துள்ளார். பணியாளர்களிடம் பணிவுடனும், எதிரிகளிடம் நேர்த்தியாகவும், சகத் தோழர்களிடம் அன்பாகவும், வீட்டு வேலைகள் செய்து மனைவிமார்களை திருப்தி படுத்தும் நல்ல கணவராகவும் திகழ்ந்துள்ளார்கள்.