தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

பயான் குறிப்புகள்: கொள்கை உறுதி
அறிந்து கொள்வதன் அவசியம்

இன்றைக்கு இஸ்லாமியர்கள் பல அமைப்பினராகவும், பல்வேறு கொள்கையினராகவும் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும், கொள்கையினரும் தாங்கள் செல்லும் வழியே மேலானது எனவும் போதிக்கின்றனர்.

ஆனால் குர்ஆனும், நபி வழியும் எதனை மேலானது என்றும், எது இம்மையிலும், மறுமையிலும் நமக்குப் பலன் தரக்கூடியது என்றும் வலியுறுத்துகிறதோ அதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் எதனை முதன் முதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் மூலம் நாம் காண்போம். இதோ அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!

(அல்குர்ஆன்: 47:19)

ஒவ்வொருவரும் ஓரிறைக் கொள்கையைத் தான் முதன் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் வலியுறுத்துகிறது. ஆனால் பெரும் பாலான முஸ்லிம்கள் இந்த விஷயத்தில் கவனமற்றவர்களாகவே உள்ளனர். இவ்வாறு நாம் கூறும் போது, நாங்கள் ஓர் இறைவனைத் தானே வணங்குகிறோம் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கூறுகின்றனர். அல்லாஹ்வை இறைவன் என்று கூறுவதால் மட்டுமே ஒருவன் ஏகத்துவக் கொள்கையை ஏற்றவனாகக் கருதப்பட மாட்டான்.

மாறாக இறைவனுக்குரிய ஒரு பண்பை அவனல்லாதவர்களுக்கு இருப்பதாகக் கருதினாலோ அல்லது அல்லாஹ் அல்லாத ஒரு பொருளுக்கு இறைத் தன்மை இருப்பதாக நம்பினாலோ அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவான். மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் சொந்தக்காரனாகி விடுவான். இதன் காரணமாகத் தான் இறைவன் இந்தக் கொள்கையைக் கற்றுக் கொள்ளுமாறு மேற்கண்ட வசனத்தில் கட்டளையிடுகிறான்.

அல்லாஹ் நம்மைப் படைத்ததன் நோக்கம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

நூல்: புகாரீ-2856

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனைச் சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரீ-1238

இஸ்லாத்தின் முதல் தூண் ஏகத்துவக் கொள்கை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து (தூண்கள்) மீது நிறுவப்பட்டுள் ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

(முஸ்லிம்: 20)

இறை நம்பிக்கையின் முதல் நிலை ஏகத்துவக் கொள்கை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கையானது எழுபதுக்கும் அதிகமான அல்லது அறுபதுக்கும் அதிகமான கிளைகள் கொண்ட தாகும். அவற்றில் உயர்ந்தது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளை தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 58)

ஓரிறைக் கொள்கைக்கு நேர் எதிரானது இணை வைப்புக் காரியங்களாகும். இந்த இணை வைப்புக் காரியங்களின் பேராபத்தை ஒருவன் உணர்ந்து கொண்டால், மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக இதைக் கற்றுக் கொள்வதற்குத் தான் முக்கியத்துவம் தருவான்.

இதை அறியாதவர்களாக இருப்பதால் தான் இதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். இவை ஒரு மனிதனுக்கு எவ்வளவு பேராபத்தானவை என்பதைப் பின்வரும் சான்றுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

ஓரிறைக் கொள்கையின் மகிமை

இறைவனுக்கு இணை கற்பிக்காத வர்கள் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் சுவர்க்கம் சென்று விடுவார்கள். இதிலிருந்தே நாம் ஓரிறைக் கொள்கையின் மகிமையை விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் திருப் தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று எவரேனும் சொன்னால் அல்லாஹ் நரகத்தை அவர் மீது தடை செய்துவிடுகிறான் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இத்பான் பின் மாலிக்(ரலி)

(புகாரி: 4250)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (மிஃராஜ் பயணத்தின் போது) மூன்று (கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன: 1. ஐவேளைத் தொழுகைகள் வழங்கப் பட்டன. 2. அல்பகரா அத்தியா யத்தின் இறுதி (மூன்று) வசனங்கள் அருளப்பெற்றன. 3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர் களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப் (படுவதாக அறிவிக்கப்)பட்டது.

(முஸ்லிம்: 279)

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்த போது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொண்ட போது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன்.

அப்போது, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்-, பிறகு அதே நம்பிக்கையில் இறந்து விடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நான், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்) என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந் தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்) என்று சொன்னார்கள்.

நான் (மூன்றாவது முறையாக) அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே) என்று கூறினார்கள்.

(புகாரி: 5827)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும் ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும், அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (ஆகு எனும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்) என்றும்,

அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர் என்றும், சொர்க்கம் உண்மை தான் என்றும், நரகம் உண்மை தான் என்றும், எவர் (உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவரது செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்.

அறிவிப்பவர்: உபாதா (ரலி)

(புகாரி: 3435)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நான் சொர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,  நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமளானில் நோன்பு நோற்க வேண்டும் என்றார்கள்.

அதற்கவர், என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதை விட அதிகமாக வேறெதைதையும் செய்ய மாட்டேன் என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், சொர்க்க வாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்! என்றார்கள்.

(புகாரி: 1396)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

எவர் தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் சொன் னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் லாயிலாஹ இல்லல்லாஹ் சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 44)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு பயணத்தில் வாகனம் ஒன்றில்) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் முஆத் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, நபி (ஸல்) அவர்கள், “முஆத் பின் ஜபலே!‘ என்று அழைத்தார்கள். “அல்லாஹ் வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)‘ என்று முஆத் (ரலி) அவர்கள் பதிலளித் தார்கள்.

முஆதே! என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)‘ என மீண்டும் முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இவ்வாறு மூன்று முறை (அழைப்பும் பதிலும்) நடந்தது.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உளப்பூர்வமாக உறுதி கூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்து விட்டான்‘ என்று கூறினார்கள். உடனே முஆத் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா? (இதை கேட்டு) அவர்கள் மகிழ்ச்சி அடைவார்களே!‘ என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(இல்லை; வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் (அதைக் கேட்டுவிட்டு) அவர்கள் (இது மட்டும் போதுமே என்று நல்லறங்களில் ஈடுபடாமல்) அசட்டையாக இருந்து விடுவார்கள்‘ என்று கூறினார்கள்.

(கல்வியை மறைத்த) குற்றத் திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தறுவாயில் இந்த ஹதீஸை முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு) அறிவித்தார்கள்.

(புகாரி: 99)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். எங்களுடன் அமர்ந்திருந்த சிலரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போது எங்களிடையேயிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நெடு நேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பி) வரவில்லை.

அவர்களுக்கு (எதிரிகளால்) ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; நாங்கள் பீதி அடைந்தவர்களாக (அங்கிருந்து) எழுந்தோம். பீதியுற்றவர்களில் நானே முதல் ஆளாக இருந்தேன். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடிக்கொண்டு புறப்பட்டேன்.

பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். அத்தோட்டத்தின் வாசல் எங்கே என்று (தேடியவனாக) அதைச் சுற்றி வந்தேன். ஆனால் (அதன் வாசலைக்) காணவில்லை. அத்தோட்டத்திற்கு வெளியே இன்னொரு தோட்டத்திலிருந்து வாய்க்கால் ஒன்று அதனுள் சென்று கொண்டிருந்தது.

உடனே நான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று (என் உடலைக்) குறுக்கிக் கொண்டு (அந்த வாய்க்கால் வழியே தோட்டத்திற்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “அபூ ஹுரைராவா?’ என்று கேட்டார்கள். நான், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!‘ என்றேன். “என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள்.

“நீங்கள் எங்களிடையே இருந்து கொண்டிருந்தீர்கள். (திடீரென) எழுந்து சென்றீர்கள். நெடு நேரமாகியும் நீங்கள் எங்களிடம் திரும்பவில்லை. எனவே, (எதிரிகளால்) ஏதேனும் உங்களுக்கு ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்;  பீதியுற்றோம். நான் தான் பீதியுற்றவர்களில் முதல் ஆளாவேன். எனவே தான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று உடலைக் குறுக்கிக் கொண்டு இந்தத் தோட்டத்திற்கு வந்தேன். இதோ மக்கள் என் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள்‘ என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஹுரைரா! (என்று என்னை அழைத்து) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, “இவ்விரு காலணி களையும் கொண்டு செல்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற் செய்தி சொல்!” என்று கூறினார்கள்.

நான் உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவை என்ன காலணிகள், அபூஹுரைரா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் “இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி, இக்காலணிகளை (ஆதாரமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்” என்று சொன்னேன்.

உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். “திரும்பிச் செல்லுங்கள், அபூஹுரைரா!‘ என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள்.

“நான், உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித் தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்து விட்டேன். பிறகு, திரும்பிச் செல்லுங் கள் என்று கூறினார்” என்றேன்.

அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?’ என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பி வைத்தீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் (நற்)செயல் புரிய விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள் (அவர்கள் நற்செயல் புரியட்டும்)” என்று சொன்னார்கள்.

(முஸ்லிம்: 52)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத் திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும்.

பிறகு அல்லாஹ் அவனிடம் “இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா?” என்று கேட்பான். “என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள்தான்)” என்று அவன் கூறுவான். “(நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் என் இரட்சகனே ஏதுமில்லை என்று கூறுவான்.

அப்போது அல்லாஹ் கூறுவான். “அவ்வாறில்லை உனக்கு நம்மிடத் தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது‘ என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும் அதில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு (வணக் கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்று சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும்.

“நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார்‘ என்று அல்லாஹ் கூறுவான். “என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?)’ என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் “நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்‘ என்று கூறுவான். அந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்தச் சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடி விடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.

அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ் (ரலி)

நூல்: திர்மிதி-2563

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) “ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவ மன்னிப்பை வழங்குகின்றேன்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூதர்(ரலி)

(அஹ்மத்: 20349)

நம்மை மறுமையில் காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவம் மட்டும் தான். நாம் அதில் தவறிழைத்து விட்டோம் என்றால் அதை விடப் பேரிழப்பு வேறோன்றுமில்லை. நாம் மக்களுக்குச் செய்கின்ற சேவை களிலேயே மிகச் சிறந்த சேவை அவர்களுக்குச் சத்தியத்தை எடுத்துரைப்பது தான்.

இன்றைக்கு இதைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் பெரும் கூட்டம் இருக்கிறார்கள். இந்த சத்தியப் பிரச்சாரத்தை எடுத்துரைப்பதற்குத் தான் அனைவரும் தயங்குகிறார்கள். ஏனென்றால் இதனை எடுத் துரைக்கும் போது பலவிதமான சோதனைகள் பலவிதங்களிலும் வந்து கொண்டிருக்கும். அப்படி சோதனை கள் வரவில்லையென்றால் நாம் சத்தியத்தைக் கூறவில்லை என்று தான் பொருள்.

சமுதாயம் எவ்வளவு எதிர்த்தாலும், அனைவருமே இந்த சத்தியப் பிரச்சாரத்திற்கு எதிராகக் களமிறங் கினாலும், எவ்வளவு பின்னடைவு களைச் சந்தித்தாலும் இந்த சத்தியப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டோம் என்பதில் உண்மையான தவ்ஹீத்வாதி கள் உறுதியாக இருக்க வேண்டும்.

ஓரிறைக் கொள்கையின் அவசியத்தை இதுவரை கண்டோம். இணை வைத்தலின் தீமைகளைப் பற்றி காண்போம்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!

(அல்குர்ஆன்: 4:36)

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக் கிறான். அவன் உணவளிக்கப் படுவதில்லை என்று கூறுவீராக! கட்டுப்பட்டு நடப்போரில் முதலாம வனாக இருக்குமாறு கட்டளையிடப் பட்டுள்ளேன் எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!

(அல்குர்ஆன்: 6:14)

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, நீங்கள் அல்லாஹ் வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்பதே.

(அல்குர்ஆன்: 6:151)

மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால் (எனக்குக் கவலையில்லை.) அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவோரை நான் வணங்க மாட்டேன். மாறாக உங்களைக் கைப்பற்றவுள்ள அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கை கொண்ட வனாக இருக்கக் கட்டளையிடப் பட்டுள்ளேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

உண்மை வழியில் நின்று இம்மார்க்கத்தை நோக்கி உமது கவனத்தைத் திருப்புவீராக! இணை கற்பிப்பவராக ஆகி விடாதீர்!

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

(அல்குர்ஆன்: 10:104-106)

அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்கக்கூடாது என்று கட்டளை யிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். மீளுதலும் அவனி டமே உள்ளது என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 13:36)

அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்ட பின்னர் அதை விட்டும் உம்மை (எதுவும்) தடுத்திட வேண்டாம்! உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்!

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 28:87), 88)

நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 72:20)

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவம்

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(அல்குர்ஆன்: 4:48)

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.

(அல்குர்ஆன்: 4:116)

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 31:13)

இணை வைத்தல் என்பது இவ்வுலகில் மனிதன் செய்யும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாகும். கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு ஆகிய எந்தப் பாவத்தை எடுத்துக் கொண்டாலும் அவற்றை விட மிகக் கடுமையான பாவமாக இணை வைத்தலைத் தான் நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்தே இந்த இணை வைத்தலுக்கு எதிரான ஏகத்துவக் கொள்கையை, அதாவது ஓரிறைக் கொள்கையை நாம் கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம்.

பின்வரும் ஹதீஸ்கள் இணை வைத்தல் எவ்வளவு கடுமையான குற்றம் என்பதற்குத் தெளிவான சான்றுகளாகும்.

நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்” என்று சொல்லிவிட்டு பிறகு எது? என்று கேட்டேன்.

“உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். நான், பிறகு எது? என்று கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவி யுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரீ-4477

நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ-2653

அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறை நம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ-2766

 

இணை கற்பித்தால் நல்லறங்கள்

அனைத்தும் அழிந்து விடும்

 

இணை கற்பித்தல் என்பது மனிதனின் உடலில் புகுந்த விஷத்திற்குச் சமமாகும். ஒருவன் உளூ இல்லாமல் ஆயிரம் ரக்அத்துகள் தொழுதாலும், ஆயிரம் வருடங்கள் தொழுதாலும் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

அதுபோல் ஒருவன் இணை வைத்துக் கொண்டு எவ்வளவு தொழுதாலும், நோன்பு வைத்தாலும், ஹஜ் செய்தாலும், தான தர்மங்கள் செய்தாலும் அவனுடைய எந்த நல்லறமும் நன்மையாக மாறாது. அவையனைத்தும் அழிந்து போய் விடும். நாம் செய்யும் நல்லறங்கள் நன்மையாக மாறுவதற்காவது நாம் ஓரிறைக் கொள்கையையும், அதற்கு எதிரான இணை கற்பிக்கும் காரியங்களையும் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

(அல்குர்ஆன்: 6:88)

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

(அல்குர்ஆன்: 39:65), 66)

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 9:17)

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

(அல்குர்ஆன்: 98:6)

இணை கற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது

தனக்கு இணை கற்பிக்கப்படு வதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோ ருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(அல்குர்ஆன்: 4:48)

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனு மாகிய அல்லாஹ்வை வணங்குங் கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்றே மஸீஹ் கூறினார்.

(அல்குர்ஆன்: 5:72)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அமல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப் படுகின்றன. அப்போது அந்நாளில் கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாஹ் தனக்கு இணை வைக்காத ஒவ்வொருவரையும் மன்னிக்கிறான்.

ஆனால் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கும் மத்தியில் பகைமை யாரிடம் இருக்குமோ அவரை மன்னிப்பதில்லை. இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்! இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்! என்று சொல்லப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 4654)

இறைவனுக்கு இணை வைத்து விட்ட ஒருவன் மறுமையில் இவ்வுலக அளவிற்குத் தங்கத்தைக் கொடுத் தாலும் நரக வேதனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதைப் பின்வரக்கூடிய ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு காஃபிர் (அல்லாஹ்வின் முன்னிலையில்) கொண்டு வரப்படுவான். “உனக்கு பூமி நிறைய தங்கம் இருந்தால் நீ (நரக வேதனையிலிருந்து தப்பிப்ப தற்காக) அதனை ஈடாகக் கொடுத்து விடுவாயா? நீ என்ன கருதுகின்றாய்?” என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ஆம் என்று கூறுவான்.

இதை விட மிக இலேசான ஒன்றை (எனக்கு இணை கற்பிக்காதே என்று) தானே நீ உலகத்தில் கேட்கப்பட்டாய். (ஆனால் இணை வைத்து நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விட்டாய்) என்று அவனுக்கு கூறப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 6538)

ஏகத்துவாதிக்கே நபிகள் நாயகத்தின் பரிந்துரை

இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தினர், இறைநேசர்களாகக் கருதப்படக் கூடிய இறந்தவர்கள் மறுமையில் நமக்காகப் பரிந்துரை செய்வார்கள் என்ற எண்ணத்தில் தர்ஹாக்களில் சென்று அவர்களிடம் பரிந்துரையைக் கேட்கின்றனர்.

இன்னும் பல்வேறு விதமான இணை வைப்புக் காரியங்களையும் செய்து வருகின்றனர். ஆனால் இணை வைப்புக் காரியங்களைத் தவிர்ந்து ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்குத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பரிந்துரை செய்ய இயலும் என்பதை நபியவர்கள் பின்வரும் ஹதீஸில் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்கு பாக்கியம் பெறும் மனிதர் யார்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது, “அபூ ஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் எண்ணினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு,

“மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர் தாம்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 99)

இன்றைக்கு நம்மைச் சுற்றிப் பெரும்பாலும் கள்ளம் கபடமில்லாமல் அண்ணன் தம்பிகளைப் போன்று பழகிக் கொண்டிருக்கும் பிறமதச் சகோதரர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். கொடியவர்களுக்கு இஸ்லாத்தைச் சொல்வது நம்மீது கடமையென்றால் இந்த அப்பாவி மக்களுக்கு ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்வது நம்மீது கடமையில்லையா?

மேற்கண்ட ஹதீஸ்கள் இணை வைப்புக்கு எதிராக நம்முடைய உயிரையும் நாம் கொடுக்கத் தயாராக வேண்டும் என்பதைத் தெளிவு படுத்துகின்றன. இதன் மூலம் ஓரிறைக் கொள்கையை கற்றுக் கொள்வதன் அவசியத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

இணை வைப்பவர்களுக்கு மார்க்கத்தின் மதிப்பு

இணை வைப்பதின் பேராபத் தையும், தவ்ஹீதின் சிறப்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இணை வைப்பவர்களை மார்க்கம் எவ்வாறு மதிக்கிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலம் உணர்ந்து கொள்ள இயலும். பின்வரும் வசனத்தில் இணை கற்பிப்பவர்கள் அசுத்தமானவர்கள் என்று இறைவன் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்த மானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ் வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது. நீங்கள் வறுமையைப் பயந்தால் அல்லாஹ் நாடினால் தனது அருளால் உங்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான்.அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 9:28)

அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் எல்லாற்றிற்கும் வழி காட்டுவது போன்று, இணை வைப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வழி காட்டுகின்றது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளி யேற்றாதோருக்கும் நன்மை செய்வ தையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங் களிலிருந்து உங்களை வெளியேற்றி யோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன்: 60:8), 9)

இணை கற்பிப்பவர்களுடன் கொடுக்கல் வாங்கல், வியாபாரம் போன்ற உலக விஷயங்களில் உறவு கொள்வதை இந்த வசனங்கள் அனுமதிக்கின்றன.

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப் படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப் படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

(அல்குர்ஆன்: 31:15)

நமது பெற்றோர்கள் இணை வைப்பில் இருந்தாலும் அவர்களிடம் உலக விஷயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள இந்த வசனம் சொல்கிறது. அத்துடன் இந்த வசனம் தான் ஃபித்துன்யா – இவ்வுலகில் என்று குறிப்பிட்டு, முஷ்ரிக்குகளுடன் நாம் கொள்ள வேண்டிய தொடர்பை இம்மை, மறுமை என்று பிரித்துக் காட்டுகின்றது.

இணை கற்பிப்பவர்களிடம் மறுமை, மார்க்க விஷயத்தில் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது என்று ஒரு பட்டியலையே போடுகின்றது.

  1. திருமணம்
  2. பள்ளிவாசல் நிர்வாகம்
  3. பாவ மன்னிப்புத் தேடுதல்
  4. ஜனாஸா தொழுகை

போன்ற மார்க்க விஷயங்களில் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மார்க்கம் வலியுறுத்துகின்றது. இதற்கான ஆதாரங்களை இப்போது பார்ப்போம்.

திருமணம்

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யா தீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந் தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப் பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன்.

அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப் பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 2:221)

ஒரு முஸ்லிமான ஆண், இணை வைக்கும் பெண்ணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஒரு முஸ்லிமான பெண், இணை வைக்கும் ஆணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று இந்த வசனம் தெளிவாகக் கட்டளையிடுகின்றது.

பள்ளிவாசல் நிர்வாகம்

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்குத் தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். அல்லாஹ் வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடு வோரைப் போல் ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரைக் கருது கிறீர்களா? அவர்கள் அல்லாஹ் விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 9:17), 18, 19)

பாவ மன்னிப்புத் தேடுதல்

இணை கற்பிப்பவர்கள் இறந்து விட்டால் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவதற்கும் அல்லாஹ் தடை விதித்து விட்டான்.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண் டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

(அல்குர்ஆன்: 9:113)

இந்த வசனத்தின் மொழி பெயர்ப்பை நாம் இங்கு இடம் பெறச் செய்துள்ளோம். இந்த வசனம் இறங்கிய காரணங்கள், பின்னணிகள் ஆகியவற்றைப் பார்ப்போம். அந்தக் காரணமும், பின்னணியும் இதன் கருத்தை நம் உள்ளத்தில் பதிய வைக்கத் துணையாக அமையும்.

(நபியவர்களுடைய பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா பின் முஃகீராவையும் கண்டார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதி மொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்” என்று சொன்னார்கள்.

அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் “அபூ தாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூ தாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, “நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்” என்பதாகவே இருந்தது. லா இலாஹ இல்லல்லாஹ் எனும் உறுதி மொழியைச் சொல்ல அவர் மறுத்து விட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும் வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்” என்று சொன்னார்கள்.

அப்போது தான், இணை வைப்போருக்காகப் பாவ மன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை எனும் (9:113வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்திய போது) அல்லாஹ், நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான் எனும் (28:56வது) வசனத்தை அருளினான்.

(புகாரி: 4772)

இணை வைப்பில் இறந்தவர் களுக்கு முஸ்லிம்கள் பாவ மன்னிப்புத் தேடக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் ஐயத்திற்கிடமின்றி மிகத் தெளிவாக விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தமது தாயாரின் கப்ரைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள் தாமும் அழுது, தம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அழ வைத்து விட்டார்கள். என்னுடைய தாய்க்குப் பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி தரப் படவில்லை. எனது தாயின் கப்ரைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஏனெனில் அது மரணத்தை நினைவூட்டுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 1622)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கே, அவர்களது தாயாருக் காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு அனுமதி கிடையாது எனும் போது ஷிர்க் (இணை) வைத்து விட்டு இறந்த மற்றவர்களுக்கு எந்த ஒரு முஸ்லிமும் பாவ மன்னிப்புக் கேட்க அனுமதியில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஜனாஸா தொழுகை

இணை வைப்பில் இறந்து போனவர்களுக்கு நாம் பாவ மன்னிப்புத் தேட முடியாது என்றாகி விடுகின்றது. ஒரு முஸ்லிம் இறந்தவுடன் நாம் தொழுகின்ற ஜனாஸா தொழுகை தான் நாம் அவருக்காகச் செய்யக் கூடிய தலையாய பாவ மன்னிப்புத் தேடுதலாகும். எனவே ஜனாஸா தொழுகை என்ற இந்தப் பாவ மன்னிப்புப் பிரார்த்தனையை, முஷ்ரிக்குக்காக அதாவது இணை வைத்த நிலையில் இறந்தவருக்காக நாம் செய்ய முடியாது. இதற்குப் பின்வரும் வசனங்களும் வலுவூட்டுபவையாக அமைந்துள்ளன.

(முஹம்மதே!) அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 9:80)

அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ் வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.

(அல்குர்ஆன்: 9:84)

நாம் மேலே பட்டியலிட்ட விஷயங்களில் பள்ளிவாசல் நிர்வாகம் என்பது ஏகத்துவ வாதிகளை நேரடியாகப் பாதித்து விடுவதில்லை. ஆனால் திருமணம், மரணம் போன்ற விஷயங்கள் ஒவ்வொரு ஏகத்துவ வாதியையும் நேரடியாகப் பாதிக்க வைப்பவையாகும்.

இணை வைப்போரைப் புறக்கணித்தல்

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பெற்றோரும், உங்களின் உடன் பிறந்தோரும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும் புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்கு வோரே அநீதி இழைத்தவர்கள். உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத் தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 9:23), 24)

(முஹம்மதே!) உமது இறைவனிட மிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

(அல்குர்ஆன்: 6:106)

உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப் போரைப் புறக்கணிப்பீராக!

(அல்குர்ஆன்: 15:94)

இன்றைய முஸ்லிம்கள் மறுமையை, வேதத்தை, இறைத் தூதர்களை நம்புகிறார்கள். ஐந்து வேளை தொழுகின்றார்கள்; நோன்பு நோற்கிறார்கள்; ஹஜ் செய்கிறார்கள்; ஜகாத் கொடுக்கிறார்கள். எனவே இவர்களை எப்படி முஷ்ரிக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? என்று நினைக்கிறார்கள். அதனால் தான் இவர்களைப் பின்பற்றித் தொழலாம் என்ற வாதத்தை வைக்கின்றார்கள். இப்படிச் சொல்பவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை வசதியாக மறந்து விடுகின்றார்கள்.

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

(அல்குர்ஆன்: 12:106)

அல்லாஹ்வை நம்பிய ஒருவன் இணை கற்பித்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதைத் தான் இந்த வசனம் காட்டுகின்றது.

இணை கற்பித்தல் என்றால் ஏன்ன?

நாம் ஓரிறைக் கொள்கையைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதன் எதிர் மறையான இணை வைத்தல் என்றால் என்ன என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இன்றைக்கு அதிகமான இஸ்லாமிய அமைப்புகள், ஜமாஅத்துகள், இயக்கங்கள் அனைத்துமே இஸ்லாம் எதனை நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று எச்சரிக்கிறதோ அப்படிப்பட்ட இணை கற்பித்தல் என்ற பாவத்தைப் பற்றி மிகப் பெரும் அறியாமையிலேயே வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

அவர்கள் இவ்வுலக வாழ்வின் இன்பத்திற்காக, முன்னேற்றத்திற்காகச் செய்கின்ற முயற்சிகளில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட இந்த மாபெரும் அநியாயத்தை அகற்றுவதற்காகவோ அல்லது அவர்கள் அதனை அறிந்து தவிர்ந்து வாழ்வதற்காகவோ செய்வது கிடையாது.

இன்னும் சொல்லப் போனால் தீனை நிலைநாட்டப் போகிறோம் என்று போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் கூட தீனின் அடிப்படையைத் தகர்க்கக் கூடிய இந்த இணைவைத்தல் எனும் பாவத்தை அறியாதவர்களாகத் தான் உள்ளனர்.

திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எவையெல்லாம் இணை கற்பிக்கின்ற காரியங்கள் என்று நமக்கு எச்சரிக்கை செய்தார்களோ அவற்றை நாம் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. அல்லாஹ் எந்த ஆற்றலையும் ஏற்படுத்தாத பொருட்களில், காரியங்களில், இடங்களில் நமக்குப் பலன் இருப்பதாக நம்புதல். அதாவது நமக்கு ஏற்படும் கஷ்டங்களை அவற்றால் நீக்கிவிட இயலும், நமக்கு நன்மைகளை அவை தந்து விடும் என்று நம்பிக்கை வைப்பது. இவ்வாறு ஒருவன் நம்பிக்கை வைத்தால் நிச்சயமாக அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டான்.
  2. அல்லாஹ்வை மறுப்பது அல்லது அல்லாஹ்வின் பண்புகள், பெயர்கள் மற்றும் ஆற்றல்களில் ஏதாவது ஒன்றை மறுப்பது. அல்லது அல்லாஹ்வுடைய ஆற்றல்கள் பண்புகள் அவனுக்கு இருப்பதைப் போல் அல்லாஹ் அல்லாத பொருட்களுக்கோ, மற்றவர்களுக்கோ இருப்பதாக நம்புதல். மேலும் அல்லாஹ்வைப் பற்றி அவனும், அவனுடைய தூதரும் எத்தகைய விளக்கங்களை வழங்கியுள்ளார்களோ அதில் குர்ஆன், ஹதீஸ் துணையின்றி எவ்வித சுய விளக்கங்களையும் நாம் கூறுவது கூடாது. இவ்வாறு ஒருவன் செய்தால் நிச்சயமாக அவனும் அல்லாஹ்வை மறுத்தவனாவான்.
  3. இறைவனுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளில் ஏதாவது ஒன்றை இறைவனல்லாதவர்களுக்குச் செய்தால், அல்லது இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஏதாவது ஒன்றை அவனுக்காகச் செய்வதற்கு மறுத்தால் அவனும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாவான்.
  4. இறைவன் வஹீயாக இறக்கி வைத்த இறைச் சட்டங்களைத் தான் பின்பற்ற வேண்டும். ஒருவன் இறைவனுடைய வஹீயான இறைச் சட்டங்களை மறுத்தாலோ, அல்லது இறைவனல்லாத மற்றவர்களின் கருத்தையோ அல்லது மற்றவர்களால் உருவாக்கப்பட்டவற்றையோ, அல்லது தன்னுடைய மனோ இச்சையையோ மார்க்கமாகக் கருதினால் அவன் இறைவனுக்கு இணை கற்பித்த வனாவான். இறைவனல்லாதவர்களைக் கடவுளர்களாக வணங்கியவனாவான்.

நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் நடைபெறுகின்ற சில இணை கற்பிக்கின்ற காரியங்களில் மேற்கண்ட நான்கு வகையுமோ அல்லது அதிகமானவையோ நிறைந்து காணப்படும்.

உதாரணமாக சமாதி வழிபாட்டை எடுத்துக் கொள்வோம். அதில் சமாதி எனும் மண்சுவர் நமக்கு ஏற்படும் கஷ்டங்களைத் தடுத்துவிடும்; நமக்கு நன்மைகளைக் கொண்டு வந்து விடும் என்று சமாதி வழிபாடு செய்பவர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதன் காரணமாகத் தான் சமாதிகளைச் சுற்றி வலம் வருகின்றனர்.

சமாதிகளையும், தர்ஹாவின் நிலைப்படிகளையும், மூலைகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். சமாதியில் வழங்கப்படும் சந்தனத்தைக் கழுத்திலும் தலையிலும் பூசிக் கொள்கின்றனர். கொடிமரங்களைத் தொட்டு முத்தமிடுகின்றனர். சாம்பலும் சர்க்கரையும் கலந்து வழங்கப்படும் பொருளைப் புனிதமாகக் கருது கின்றனர். இது நாம் வகைப் படுத்தியதில் முதலாவது வகையான இணை வைத்தலாகும்.

மறைவானவற்றை அறிதல், உள்ளத்தில் உள்ளவற்றை அறிதல், ஒரே நேரத்தில் பலர் பேசுவதை அறிதல் போன்ற இறைவனுக்கே மட்டும் உரித்தான பண்புகள் சமாதிகளில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்களுக்கும் இருப்பதாக, சமாதி வழிபாடு செய்வோர் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இதன் காரணமாகத் தான், “யா முஹ்யித்தீன் கவ்சுல் அஃலம் (முஹ்யித்தீனே! மகதத்தான இரட்சகரே!)’ என்றெல்லாம் அழைக்கின்றனர். இது நாம் வகைப்படுத்தியதில் இரண்டாவது வகையான இணை கற்பித்தலாகும். அதாவது இறைத் தன்மைகள் இறைவன் அல்லாதவர்களுக்கு இருப்பதாக நம்புதல்.

இறைவனுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளான பிரார்த்தனை செய்தல், அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல், ஸஜ்தாச் செய்தல் போன்ற பல வணக்கங்களைச் சமாதிகளுக்குச் செய்கின்றனர். இது நாம் வகைப்படுத்தியதில் மூன்றாவது வகையான இணை கற்பித்தல் ஆகும்.

மேலும் ஊர்வலம், சந்தனக்கூடு, கந்தூரி, உரூஸ் போன்றவற்றை உருவாக்கி அவற்றை மார்க்கமாகப் பின்பற்றுகின்றனர். இறைவனால் இறக்கப்பட்ட இறைச் சட்டமாகிய வஹீயில் இது போன்ற கட்டளைகள் கிடையாது. மொத்தத்தில் சமாதி வழிபாடு என்ற ஒன்றே இறைக் கட்டளைகளில் கிடையாது. இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. இது நாம் வகைப்படுத்தியதில் நான்காவது வகையான இணை கற்பித்தல் ஆகும்.

நாம் வகைப்படுத்திய நான்கு வகைகளையும் நாம் மிக விரிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பல வழிகெட்ட கொள்கைகள் ஒரு மனிதனிடம் புகுந்து விடும் போது ஓரிறைக் கொள்கையை அவன் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு கற்றுக் கொள்வதன் மூலமாகத் தான் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்ள முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் இவ்வாறு தான் உத்தரவிடுகிறான்.

வணக்கத்திற்குரிய கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதைக் கற்றுக் கொள்வீராக.

(அல்குர்ஆன்: 47:19)

பின்வரும் வசனத்தில் இறைக் கட்டளைகளைக் கற்றுக் கொள்வதன் மூலமாகவும் படிப்பதன் மூலமாகவுமே உண்மையான இறையடியார்களாக, அதாவது ஏகத்துவவாதிகளாக ஆக முடியும் என்பதைத் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள் என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப் பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்! (என்றே கூறினர்)

(அல்குர்ஆன்: 3:79)

நம்முடைய ஜமாஅத் சகோதரர்கள் இவற்றைத் தாமும் கற்றுக் கொள்வதோடு தர்பியா போன்ற பயிற்சி வகுப்புகளை நடத்தி பெரியவர் களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் இவற்றைக் கற்றுக் கொடுப்பதற்கு நாம் முயற்சி, தியாகம் செய்ய வேண்டும்.

வழிகெட்ட இயக்கத்தினர்கள் தங்களுடைய வழிகேட்டைப் பல வழிகளிலும் புகுத்தி மறுமையில் நிரந்தர நரகத்திற்கு அழைத்துச் செல்லும் காலகட்டத்தில், மக்களை இதிலிருந்து பாதுகாப்பது, எச்சரிக்கை செய்வது நம்முடைய தலையாய கடமையாகும். நிச்சயமாக இந்தக் கொள்கையை அறிந்தவர்களைத் தவிர வேறு யாரும் இதற்காகத் தியாகம் செய்ய மாட்டார்கள். இனி நாம் இணைவைத்தலின் முதல் வகையை விரிவாகக் காண்போம்.

இறைவன் பலன் ஏற்படுத்தாத பொருட்கள், இடங்கள், செயல்கள் ஆகியவற்றில் பலன் இருப்பதாக நம்புதல்

அல்லாஹ் இவ்வுலகில் பல்வேறு பொருட்களைப் படைத்துள்ளான். ஒவ்வொன்றுக்கும் பல்வேறு தன்மைகளை வழங்கியுள்ளான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் என்ன தன்மையை வழங்கியுள்ளானோ அதை மீறிய சக்தி ஒரு பொருளுக்கு இருப்பதாக நம்பினால் நிச்சயமாக அது இணை கற்பிக்கின்ற காரியமாகும்.

உதாரணமாக எலுமிச்சையை எடுத்துக் கொள்வோம். இதன் மூலம் சர்பத் தயாரிக்கலாம்; எலுமிச்சையை ஊற வைத்து ஊறுகாய் தயாரிக்கலாம்; சமையலுக்குப் பயன்படுத்தலாம். இது போன்ற காரியங்களுக்காக ஒருவன் எலுமிச்சையைப் பயன்படுத்தினால் அது இணை கற்பித்தலாகாது. மாறாக ஒரு எலுமிச்சையை வாகனத்தின் முன்னால் கட்டித் தொங்க விட்டால் அது வாகனத்தையே காப்பாற்றும் என நம்புவது அதில் அல்லாஹ் என்ன பலனை ஏற்படுத்தவில்லையோ அதை இருப்பதாக நம்புவதாகும். இது இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயலாகும்.

இஸ்லாமிய ஓரிறைக் கொள்கைக்கு எதிரானது என உலக மக்கள் அனைவரும் விளங்கி வைத்துள்ள சிலை வழிபாடும் இவ்வகையான இணை வைத்தலைச் சார்ந்தது தான்.

சிலை வழிபாட்டில் நாம் வகைப்படுத்திய நான்கு வகையான இணை வைப்பும் நிறைந்துள்ளன என்றாலும் அதற்கு அடிப்படையான காரணம் இந்த முதல் வகையான இணைவைப்பு தான். அதாவது கற்களில் இல்லாத பலனை இருப்பதாக நம்புவது.

சிலை வழிபாட்டைத் தகர்த்த இஸ்லாம்

திருமறைக் குர்ஆன் சிலை வழிபாட்டை மிகக் கடுமையாக எதிர்க்கின்றது. பின்வரும் திருமறை வசனங்கள் இதைத் தெளிவாக விளக்குகிறது.

சிலைகள் எனும் அசுத்தத் திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 22:30)

இறைவா! இவ்வூரை அபய மளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக! என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!. இறைவா! இவை மனிதர்களில் அதிகமானோரை வழி கெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறு செய்தால் நீ மன்னிப் பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 14:35), 36)

சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழி கேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 6:90)

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக! என்று கேட்டனர். நீங்கள் அறிவு கெட்ட கூட்டமாகவே இருக்கின் றீர்கள் என்று அவர் கூறினார். அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியக் கூடியது. அவர்கள் செய்து வந்தவையும் வீணானது. அல்லாஹ் அல்லாதோரையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்? அவனே உங்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருக் கிறான் என்று (மூஸா) கூறினார்.

(அல்குர்ஆன்: 7:138-140)

நபியவர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கமே சிலை வழிபாடுகளை ஒழிப்பதற்குத் தான்.

“அல்லாஹ் என்னை (தனது செய்தியுடன்) அனுப்பி உள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், “என்னென்ன செய்திகளுடன் அனுப்பியுள்ளான்?” என்று கேட்டேன். அதற்கு, “இரத்த உறவுகளைப் பேணி வாழ வேண்டும்; சிலை (வழிபாடு)களை ஒழிக்க வேண்டும்; இறைவன் ஒருவனே; அவனுக்கு இணையாக எதுவு மில்லை எனும் செய்திகளுடன் என்னை அனுப்பினான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அபசா அஸ்ஸுலமீ (ரலி)

(முஸ்லிம்: 1512)

சிலைகள் ஏன் தடுக்கப்பட்டன?

கற்களை உருவங்களாகச் செதுக்கிய ஒரே காரணத்திற்காக மட்டும் சிலைகளை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஏனென்றால் சுலைமான் நபிக்கு சிலைகள் வடிப்பதை அல்லாஹ் ஆகுமாக்கி யிருந்தான். அது கலையழகிற்காகத் தானே தவிர வழிபாட்டிற்காக அல்ல.

அவர் விரும்பிய போர்க் கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரை களையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன.

(அல்குர்ஆன்: 34:13)

ஆனால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய உம்மத்திற்கு எந்த ஒரு நோக்கத்திற்காகவும் சிலை வடிப்பதைத் தடை செய்து விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உருவம் வரைபவனைச் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி),

(புகாரி: 2086)

உருவம் வரைதல் என்பது சிலை வடிப்பதையும், படங்கள் வரை வதையும் குறிக்கக் கூடிய வார்த்தையாகும்.

(பள்ளிக் கூட மாணவர்கள் படம் வரைவது, சிறிய அளவிலான உருவங்கள், ஆதாரங்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றுக்காக போட்டோ எடுப்பது இவற்றைப் பற்றி முந்தைய ஏகத்துவ இதழ்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக என்னை அனுப்பி னார்களோ அந்தப் பணிக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ

(முஸ்லிம்: 1764)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது மக்காவில் வைத்து, “மது பானம், செத்தவை, பன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின்  அப்தில்லாஹ் (ரலி)

(முஸ்லிம்: 3223)

சிலைகள் அறவே கூடாது என்று இறைவன் கட்டளையிட்டதற்குக் காரணம் கற்களில் இல்லாத சக்தியை இருப்பதாக நம்பிக்கை கொள்வது தான். இந்த நம்பிக்கை தான் அச்சிலைகளை வணக்கத்திற்குரியதாக மாற்றி விட்டது.

ஒரு கற்பாறையை வீட்டின் வாசற்படியாக்கினாலும் அதற்குக் கல்லின் தன்மை தான் இருக்கும். அதையே கற்சிலையாக்கினாலும் அதற்குக் கல்லின் தன்மை தான் இருக்கும். அதற்கு எத்தனை அபிஷேகங்கள் செய்தாலும் அதன் தன்மை மாறாது. ஆனால் சிலை வணங்கிகள் உருவமாகச் செதுக்கப்பட்ட கற்களில் இல்லாத தன்மையைக் கற்பனை செய்து இறைவனுடைய ஆற்றல்களெல்லாம் அதற்கு இருப்பதாக இட்டுக் கட்டுகின்றனர்.

திருக்குர்ஆன் சிலைகளைப் பற்றி பேசும் அதிகமான இடங்களில் இரண்டு வாதங்களை முன் வைக்கின்றது.

  • ஒன்று, அந்தச் சிலைகள் எந்தப் பயனையும் தராது.
  • இரண்டாவது, அவற்றால் எந்த இடையூறையும் செய்ய முடியாது.

பயனையும், இடையூறையும் செய்கின்ற ஆற்றல் சிலைகளுக்கு இருக்கிறது என்று நம்பிய காரணத்தினால் தான் அவர்கள் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள். இணை வைப்பாளர்களாக ஆனார்கள்.

இதோ இறை வசனங்களைப் பாருங்கள்:

இப்ராஹீமே! எங்கள் கடவுள் களை நீர் தான் இவ்வாறு செய்தீரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந் தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்! என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள் என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, இவை பேசாது என்பதை நீர் அறிவீரே! என்றனர்.

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராத வற்றையும் வணங்குகின்றீர்களா? என்று கேட்டார்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா? (என்றும் கேட்டார்.)

(அல்குர்ஆன்: 21:62-67)

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

(அல்குர்ஆன்: 29:16), 17)

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 5:76)

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏக இறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 25:55)

நன்மையோ, தீங்கோ செய்ய இயலாத கற்களிடம் அந்தச் சக்தி இருப்பதாக நம்பிய காரணத்தினால் சிலைகளை உடைக்குமாறும் அவ்வாறு நம்பிக்கை வைத்தவர்களை இறை மறுப்பாளர்கள் என்றும் திருமறை பேசுகின்றது.

கலையழகிற்காக ஒருவன் சிற்பங்களை வடித்தாலும் அறியாத சமுதாயத்தினர் அதை வணங்கப்படும் பொருளாக ஆக்கி விடலாம் என்பதால் தான் நபியவர்கள் உருவப் படங்களை வரைவதற்குக் கூடத் தடை விதித்தார்கள்.

விபச்சாரத்தைத் தடுக்கின்ற இஸ்லாம் விபச்சாரத்தைத் தூண்டும் சிறிய, பெரிய வாயில்கள் அனைத்தையும் அடைக்கின்றது. அதுபோல் நபியவர்கள் உருவ வழிபாட்டைத் தோற்றுவிக்கும் அனைத்து வாயில்களையும் அடைப்பதற்கு வழிகாட்டியுள்ளார்கள்.

சிலை வழிபாடு என்பதன் பொருள், உருவமாகச் செதுக்கப்பட்டவற்றிற்கு ஆற்றல் இருக்கிறது என்று நம்புவது மட்டுமல்ல. மாறாக எந்த ஒரு பொருளுக்கு இது போன்ற ஆற்றல் இருப்பதாக நம்பினாலும் அது சிலை வழிபாடு தான். இதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

சமாதி வழிபாடும் சிலை வழிபாடே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வே! என்னுடைய கப்ரை வணங்கப்படும் சிலையாக்கி விடாதே! தங்களுடைய நபிமார்களின் சமாதிகளை வணக்கத்தலங்களாக எடுத்துக் கொண்ட சமுதாயத்தை அல்லாஹ் சபித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

(அஹ்மத்: 7054)

நபியவர்கள் தன்னுடைய கப்ர், சிலையாக ஆகி விடக் கூடாது என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். கப்ர் என்பது சிலை அல்ல. பிறகு ஏன் நபியவர்கள் கப்ரை சிலையாகக் குறிப்பிட்டார்கள் என்பதை நாம் நன்றாகச் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

உருவமாகச் செதுக்கப்பட்ட கற்சிலை நன்மையோ, தீங்கோ செய்ய முடியுமென்று நம்பிக்கை வைத்த வர்கள் இணை வைப்பாளர்கள் என்றால் கப்ர் என்ற மண்சுவர் நன்மையோ, தீங்கோ செய்ய முடியும் என்று நம்பிக்கை வைப்பவர்களும் இணை வைப்பாளர்களே!

இதன் காரணமாகத் தான் நபியவர்கள் உயர்த்தப்பட்ட கப்ருகளையும் இணைத்து அதனைத் தரைமட்டமாக்குமாறு கட்டளை இட்டுள்ளார்கள்.

அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 1764)

ஏதாவது ஒரு பொருளில் இறைவன் ஏற்படுத்தாத தன்மைகள் இருப்பதாகக் கருதி அதனால் நமக்கு நன்மைகளைக் கொண்டு வரவோ, தீமைகளைத் தடுக்கவோ இயலும் என்று ஒருவன் நம்பினால் அதுவும் சிலையாகத் தான் கருதப்படும். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

சிலை வணக்கமும் கொடி மரமும் சமமே!

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். தாத்து அன்வாத் என்று அதற்குச் சொல்லப்படும்.

நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில், “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு தாத்து அன்வாத்து என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்” என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள்.

(அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாக்கிதுல்லைசி (ரலீ)

(திர்மிதீ: 2106),(அஹ்மத்: 20892)

இலந்தை மரத்தின் கீழ் ஒருவன் நிழலுக்காகப் படுத்தால் அது இணை வைத்தலாகாது. ஏனென்றால் மரத்தின் மூலம் நிழல் பெறும் பாக்கியத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். ஆனால் அதே மரத்தின் கீழ் தங்கினால் நமக்கு நல்லது நடக்கும் என்று இல்லாத ஒன்றை நம்பி அதன் கீழ் தங்குவதை, அதைப் புனிதப்படுத்துவதை நபியவர்கள் சிலை வணக்கத்திற்கு நிகராகக் குறிப்பிடுகிறார்கள்.

சிலுவையை உடைத்தெறிந்த இஸ்லாம்

சிலுவை என்பது கூட்டல் குறியீட்டைப் போன்று மரத்தாலோ அல்லது ஏதாவது ஒரு உலோகப் பொருளாலோ ஆன ஒன்று தான். ஆனால் கிறிஸ்தவர்கள் சிலுவையின் மூலம் நன்மை தீமை உண்டாக முடியும் என நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாகத் தான் நபியவர்கள் உருவச் சிலைகளை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியது போல் சிலுவைகளையும் அப்புறப்படுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டு வைத்ததில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

(புகாரி: 5952)

சிலுவையை வணங்கியவர்கள் மறுமையில் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதை நபியவர்கள் குறிப்பிடும் போது, சிலை வணக்கம் செய்தவர்களோடு இணைத்துத் தான் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நால்) அழைப்பாளர் ஒருவர், ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும் என்று அழைப்பு விடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தமது கடவுள்களுடனும் செல்வார்கள்.

(புகாரி: 7439)

சிலுவையை நபியவர்கள் சிலை யோடு இணைத்துக் கூறுதவற்குக் காரணம் சிலைகளுக்கு எப்படி இல்லாத ஆற்றலை இருப்பதாக நம்புகிறார்களோ அதுபோல் சிலுவைகளில் இல்லாத ஆற்றலை இருப்பதாக நம்புவதால் தான்.

தாயத்து, தகடுகள்

எல்லா சமுதாயங்களிலும் காணப்படுகின்ற ஓர் இணைவைப்புக் காரியம் தான் தாயத்து, தகடுகளை அணிதல். கரைத்துக் குடித்தல். வீட்டிலோ கடையிலோ கட்டித் தொங்க விடுதல். கல்லாப் பட்டறையில் இவற்றை வைத்தால் வியாபாரம் பெருகும், இலாபம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை வைத்தல் ஆகியவையாகும். இதில் இஸ்லாமிய சமுதாயமும் விதிவிலக்கல்ல.

நாம் உடலில் தொங்க விடும் ஒரு பொருளை தாயத்து என்கிறோம். ஆனால் அது மட்டும் தாயத்து அல்ல! மாறாக நமக்கு நன்மையைக் கொண்டு வரும், தீமையைத் தடுக்கும் என்ற நம்பிக்கையில் எந்த ஒரு பொருளைத் தொங்க விட்டாலும், மாட்டி வைத்தாலும், கட்டி வைத்தாலும் அது தாயத்தே ஆகும்.

இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் இது போன்ற இணை கற்பிக்கும் காரி யங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

திருமணப் பந்தலில் குலையுடன் கூடிய வாழை மரங்களைக் கட்டி வைத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர். மஞ்சள் நிறமும், மஞ்சள் பைகளும் மங்களகரமானது என்று நம்பிக்கை வைத்துள்ளனர். ஆரத்தி எடுத்தால் அது கண் திருஷ்டியைப் போக்கி விடும். தாலி என்பதைக் கழுத்தில் தொங்க விடுவதால் பல்வேறு பலன்கள் ஏற்படும்.

மணமகன் மாலை மாட்டுவதால் பல நன்மைகள் ஏற்படும் என்ற நம்பிக்கை, மணமகன் அணிந்த மாலையில் கால்பட்டு விட்டால் கணவன் மனைவிக்கு ஆகாது; எனவே திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து அந்த மாலையை கால் படாதவாறு எங்காவது கிணற்றிலோ ஆற்றிலோ, குளத்திலோ போட்டு விடுவார்கள்.

வீடு கட்டும் போது பூசணிக் காயையோ, சோளக்கொல்லை பொம்மையையோ தொங்கவிட்டால் அது வீட்டிற்கு வரும் ஆபத்துகளைத் தடுக்கும். வீட்டிற்கு மேல் கருப்பு வெள்ளைப் புள்ளிகள் போடப்பட்ட பானைகளை வைத்தால் அது கண் திருஷ்டியைத் தடுக்கும்.

வீட்டு வாசலில் சங்கு, சீனாக்காரம், சிப்பி போன்றவற்றைத் தொங்க விட்டால் அவை வீட்டிற்கு ஏற்படும் முஸீபத்துகளைத் தடுக்கும். புது வீடு கட்டுவதற்கு முன்னால் சேவலை அறுத்து அதன் இரத்தத்தைத் தெளித்தால் அது அந்த இடத்திலுள்ள பேய் பிசாசுகளை விரட்டி விடும். வீட்டிற்கு நிலை விடும்போது அதன் குழியில் காசு அல்லது பாலை ஊற்றினால் வீட்டிற்கு நல்லது என்ற நம்பிக்கை. வீட்டின் அடுப்பங்கரை கிழக்குப் பகுதியில் இருந்தால் தான் வீட்டிற்கு நல்லது.

காசு வாங்கும் கல்லாப் பட்டறை மேற்கு அல்லது தெற்குத் திசையில் இருந்தால் தான் கடைக்கு நல்லது. வீட்டிற்கு வாசற்படிகள் அமைக்கும் போது தெருவிலுள்ள முதல்படி இலாபம், இரண்டாவது படி நஷ்டம், மூன்றாவது படி லாபம், நான்காது படி நஷ்டம் என்ற வரிசைப் பிரகாரம் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் படி இலாபமாகத் தான் இருக்க வேண்டும். அது தான் வீட்டிற்கு நல்லது என நம்பிக்கை வைத்துள்ளனர்.

குழந்தையின் கன்னத்தில் வைக்கும் கருப்புப் பொட்டு குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டியைத் தடுத்து விடும். ரூபாய், வெற்றிலை அல்லது ஏதாவது ஒரு பொருளை நோய் ஏற்பட்டவரின் மீது நன்றாகச் சுற்றி வீதியில் போட்டு விடுவார்கள். இதற்குக் கழித்து வைத்தல் என்பார்கள். யார் அதைத் தாண்டுகிறார்களோ அவர்களுக்கு இந்த முஸீபத் சென்று விடும்.

தர்ஹாவிலுள்ள சந்தனம், கொடிமரம், எண்ணை, நெருப்பு, சர்க்கரை, யானை என அனைத்தும் நமக்கு நன்மையைத் தரும். இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமாகப் பல்வேறு நம்பிக் கைகள் நிறைந்து காணப்படுகின்றன.

இவ்வாறு நமக்கு நன்மையையோ, தீமையையோ கொண்டு வருகின்ற ஆற்றல் ஒரு பொருளுக்கு இருப்பதாக நம்பினால் அது இணை கற்பிக்கின்ற காரியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த நம்பிக்கை தாயத்தில் இருக்கின்ற காரணத்தினால் தான் நபியவர்கள் தாயத்து அணிவதை இறைவனுக்கு இணைகற்பித்தல் என்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தாயத்தைத் தொங்க விடுகின் றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

(அஹ்மத்: 16781)

“நிச்சயமாக (இணைவைக்கும் வரிகளால்) ஓதிப்பார்ப்பதும், தாயத்துகள் அணிவதும், திவ்லாக்கள் அணிவதும் இணைவைத்தலாகும் என்பது நபி (ஸல்) அவர்களிட மிருந்து நாங்கள் மனனமிட்ட செய்திகளில் உள்ளதாகும்” என்று இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள். அப்போது இப்னு மஸ்வூது அவர்களின் மனைவி “திவ்லா” என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூது அவர்கள் “தூண்டிவிடக் கூடியது” என்று கூறினார்கள். (அதாவது அது கணவன் மனைவிக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அணிவது)

நூல்: அல் முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானீ (1442)

சமாதி வழிபாடு சாபத்திற்குரிய செயல்

இறைவன் பலன் ஏற்படுத்தாத பொருட்கள், இடங்கள், செயல்கள் ஆகியவற்றில் பலன் இருப்பதாக நம்புதல் இணை கற்பிக்கின்ற காரியமாகும் என்பதையும் அதற்குரிய சான்றுகளையும் பார்த்து வருகின்றோம்.

சிலை வழிபாட்டைத் தடுத்த இஸ்லாம், சிலை வழிபாட்டின் பக்கம் கொண்டு சேர்க்கும் காரியங்களான சிலை வடித்தல், உருவப்படங்களை வரைதல், உருவப்படங்களை மாட்டி வைத்தல், சிலைகளை விற்பனை செய்தல் போன்ற அனைத்து வாயில்களையும் அடைத்து வைத்துள்ளது என்பதைப் பற்றியும் விரிவாகப் பார்த்தோம்.

நபியவர்கள், “இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி விடாதே”என்று கூறிய ஹதீஸிலிருந்து உருவமாக இருந்தால் மட்டும் சிலை வழிபாடு என்று கூறப்படாது; மாறாக எந்த ஒரு பொருள் நமக்கு நன்மையை ஏற்படுத்தும், தீமையைத் தடுக்கும் என்று எண்ணி அதற்கு எந்த வழிபாட்டைச் செய்தாலும் அதுவும் சிலையாகத் தான் கருதப்படும் என்பதற்குரிய சான்றுகளையும் பார்த்தோம்.

சமாதி வழிபாட்டின் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாசல்களையும் இஸ்லாம் அடைத்திருக்கின்றது. அதில் மிக முக்கியமானது சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்குவதாகும்.

 

அல்லாஹ்வின் சாபம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திருந்து விலக்கி விடுவார்கள்.

அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, “யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! தம் இறைத் தூதர்கன் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்” என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 436)

நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், “அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்.

எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்” என்று கூறுவதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி)

(முஸ்லிம்: 925)

நபியவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்ததன் காரணமாகத் தான் நபியவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள், நபியவர்களைப் பொது மையவாடியில் அடக்கம் செய்யாமல் நபியவர்களின் கப்ர் மக்களின் பார்வைக்கு வெளியே தெரியாத வண்ணம் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிலேயே அடக்கம் செய்தார்கள். இதனை ஆயிஷா (ரலி) அவர்களே தெளிவுபடுத்துகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (தமது கடைசிக் காலத்தில்) நோயுற்றிருந்த போது, “யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தங்களின் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டார்கள்” எனக் கூறினார்கள்.

இந்த அச்சம் மட்டும் இல்லா திருந்தால் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடமும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் அடக்கவிடமும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 1390)

நபியவர்களின் கப்ர் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்தால் அந்தக் கப்ரை மையமாக வைத்து அதற்குப் பணிதல், அந்தச் சமாதியைச் சுற்றியுள்ள இடங்களைப் புனிதமாகக் கருதுதல், சமாதியில் பிரார்த்தனை செய்தல் போன்ற காரியங்கள் அதில் நடத்தப்பட்டு அதனை வணக்கத் தலமாக ஆக்கி விடுவார்கள் என்ற பயத்தில் தான் நபியவர்களின் கப்ர் மக்கள் சென்று வரும் வகையில் திறந்த வெளியில் அமைக்கப் படவில்லை.

இன்றளவும் நபியவர் களின் கப்ரை அது வணக்கத்தலமாக மாறிவிடாமல் அல்லாஹ் பாதுகாத்து வருகின்றான். நபியவர்களின் சமாதியை நோக்கி மார்க்கத்தை அறியாத ஒருவன் கையேந்தி விட்டால் காவலர்களின் கைத்தடிகள் அவனைப் பதம் பார்த்து விடும்.

“இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி விடாதே! என்னுடைய கப்ரை திருவிழா கொண்டாடும் இடமாக மாற்றி விடாதீர்கள்” என்ற நபியவர்களின் பிரார்த்தனையையும், ஆசையையும் அல்லாஹ் நிறைவேற்றி வருகிறான் என்பதற்கு இது நிதர்சனமான சான்றாகும்.

மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்

உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையோர் எனில்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத் தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்து விடுவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(முஸ்லிம்: 918)

கப்ரை வணக்கத்தலமாக்குவது என்பதன் தெளிவான விளக்கத்தை மேற்கண்ட ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. நல்லடியார்கள் மற்றும் நபிமார்கள் மரணித்த பின் அவர்களின் கப்ரை மகத்துவப்படுத்தி அதனைச் சுற்றிலும் கட்டடம் எழுப்பி அங்கு இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களைச் சமாதிகளுக்குச் செய்வது தான் கப்ரை வணக்கதலமாக்குவதாகும்.

இன்றைக்கு முஸ்லிம்களிடம் காணப்படும் தர்ஹா வழிபாடு யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறை தான் என்பதை மேற்கண்ட ஹதீஸ் நூறு சதவிகிதம் மெய்ப்படுத்துகின்றது. நீங்கள் உங்களுக்கு முன் வாழ்ந்த யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை முழத்துக் முழம், ஜானுக்கு ஜான் பின்பற்றுவீர்கள் என்ற நபியவர்களின் முன்னறிவிப்பையும் இது மெய்ப் படுத்துகிறது.

கப்ரைக் கட்டுவதும் பூசுவதும் கூடாது

இறைவனைப் பயந்து, பணிந்து வழிபடக் கூடிய காரியங்களைச் செய்வதற்காகவும், இறைவனுடைய பெயர்களை எல்லா நேரங்களிலும் திக்ர் செய்வதற்காகவும், பிரார்த்தனை செய்வதற்காவும் ஏற்படுத்தப்படும் ஆலயமே பள்ளிவாசலாகும். இது போன்ற நோக்கத்தில் அல்லாஹ் விற்காக மட்டுமே ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் இது போன்ற ஆலயங்கள் எழுப்பப்படுவது கூடாது.

அப்படியென்றால் இது போன்ற நோக்கமில்லாமல் சாதாரணமாக ஒரு கப்ரின் மீது கட்டடத்தைக் கட்டலாமா? என்ற கேள்வி நம்மிடம் எழலாம்.

இது போன்ற நோக்கமில்லாமல் ஒரு கட்டடத்தைக் கட்டினாலும் அது பிற்காலங்களில் கப்ரைப் பள்ளி வாசலாக எடுத்துக் கொள்ளக்கூடிய நிலைமைக்குக் கொண்டு சென்று விடலாம். இதன் காரணமாகத் தான் நபியவர்கள் எந்த நிலையிலும் சாதாரணமாகக் கூட கப்ரைப் பூசுவதையோ அதன் மீது கட்டடம் கட்டுவதையோ தடை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(முஸ்லிம்: 1610)

சாதாரணமாக கப்ருகள் எவ்வாறு இருக்க வேண்டுமோ அதற்கு மாற்றமாக மிக உயரமாக இருந்தால் கூட அதை நபியவர்கள் உடைத்து எறியுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பி னார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ

(முஸ்லிம்: 1764)

நபியவர்களின் பார்வையில் சமாதிகள்

கப்ருகள் ஒரு போதும் வணக்கத்தலமாக மாறிவிடக் கூடாது என்பதை நபியவர்கள் தன்னுடைய உம்மத்திற்குப் பலவிதங்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

இறைவனுக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களை அருள் நிறைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்வதற்குரிய இடமாகவும் வழிகாட்டிய நபியவர்கள் சமாதிகளைப் பாழடைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்யக்கூடாத இடமாகவுமே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்களிலிருந்து இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(புகாரி: 432), முஸ்லிம் (1427)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை,ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள். “அல்பகரா‘ எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப் படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 1430)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அடக்கத் தலங்கள் (கப்று) மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.

அறிவிப்பவர்: அபூமர்ஸத் கன்னாஸ் பின் அல் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி)

(முஸ்லிம்: 1768, 1769)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகம் முழுவதும் தொழுமிடமும் தூய்மையானதுமாகும். மண்ணறை யையும் குளியலறையையும் தவிர

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)

(அஹ்மத்: 11801)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். என்னுடைய கப்ரை கந்தூரி கொண்டாடுமிடமாக ஆக்கி விடாதீர்கள். என் மீது ஸலவாத்து கூறுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய ஸலவாத் என்னை வந்தடையும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: அபூ தாவூத்-1746

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நபியவர்கள் தொழுதல், ஓதுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்குத் தகாத இடமாகவே சமாதிகளை நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

 

சபிக்கப்பட்ட பெண்கள்

கப்ருகளை அதிகம் ஜியாரத் செய்யக்கூடிய பெண்களை நபியவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி-976

பெண்கள் என்றாவது ஒருநாள் மறுமை சிந்தனைக்காகப் பொது மையவாடிக்குச் சென்று விட்டு வந்தால் அது தவறு கிடையாது. ஆனால் கப்ருகளுக்கு அதிகமாகச் செல்லும் பெண்களை நபியவர்கள் சபித்திருக்கின்றார்கள்.

சமாதிகள் வணங்குமிடங்களாக மாற்றப்படுவதில் பெண்கள் பெரும் பங்கு வகித்து விடுவார்கள் என்ற காரணத்தினால் தான் நபியவர்கள் இவ்வாறு சபித்திருக்கின்றார்களோ என்று நாம் எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இன்று தர்ஹாக்கள் கொடிகட்டிப் பறப்பதற்கு 90 சதவிகிதம் பெண்களே காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.

கோமாளிக் கூத்து

தமிழகத்தைச் சார்ந்த மவ்லவிகள் சிலர், கப்ருகளைப் பள்ளிவாசல்களாக ஆக்குதல் என்றால் ஒரு மய்யித்தை அடக்கி அந்தக் கப்ருக்கு மேல் பள்ளிவாசலைக் கட்டுவது தான் இதன் பொருள் எனக் கூறி வருகின்றனர். இவர்களின் கருத்து கோமாளித் தனமானது என்பதை நபியவர்களின் வார்த்தைகளிலிருந்தே தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங் களிலும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய இல்லங்களை கப்ரு (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(புகாரி: 432), முஸ்லிம் (1427)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள். அல்பகரா‘ எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப் படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 1430)

வீடுகளில் மய்யித்துகளை அடக்கம் செய்தால் மட்டும் தான் வீடுகளை கப்ருகளாக மாற்றிவிட்டோம் என்பதல்ல. மாறாக, வீடுகளில் குர்ஆன் ஓதுதல், தொழுதல் போன்ற காரியங்களைச் செய்யாமலிருப்பதும் வீடுகளைக் கப்ருகளாக மாற்றுவது தான்.

ஏனென்றால் கப்ருகளில் தான் இது போன்ற காரியங்கள் நடைபெறாது. அவ்வாறு ஒரு வீடு இருக்குமென்றால் அது மண்ணறைக்குச் சமம் என்பதையே நபியவர்கள் விளக்குகிறார்கள்.

அது போன்று தான் “யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தங்களின் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டார்கள்” என்று நபியவர்கள் கூறியிருப்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பள்ளிவாசலில் தான் பிரார்த்தனை செய்தல், குர்ஆன் ஓதுதல், ஸஜ்தா செய்தல், நன்மையை நாடி தங்கியிருத்தல் இதுபோன்ற இன்னும் பிற வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும். இவைகளைச் செய்வதற்குரிய இடம் கப்ருஸ்தான் அல்ல. ஒருவன் கப்ருஸ்தானில் இது  போன்ற காரியங்களைச் செய்வான் என்றால் அவன் சமாதியை வணகத்தலமாக, மஸ்ஜிதாக எடுத்துக் கொண்டான் என்பது தான்.

எனவே மேற்கூறப்பட்ட இணை வைத்தலின் வகைகளை நாம் விளங்கி, அவற்றிலிருந்து விலகி, நிரந்தர நரகத்தை விட்டும் பாதுகாப்புப் பெறுவோமாக!