தவறான மொழிபெயர்ப்பு

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால், ஸுலைமான் ஒரு போதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்னும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் பின்பற்றினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் நிச்சயமாக நாங்கள் சோதமையாக இருக்கிறோம். (இதைக்கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்களாகி விடாதீர்கள் என்று சொல்லி எச்சரிக்காத வரையில் எவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. அப்படி இருந்தும் கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி, அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும் எந்தவித நன்மையும் தராததையுமே அவர்கள் கற்றுக் கொண்டார்கள். சூனியத்தை விலைக்கு வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளனர். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

(அல்குர்ஆன்:)

திருக்குர்ஆனின் 2:102வது வசனத்திற்கு மேற்கண்டவாறு தான் பெரும்பாலான விளக்கவுரைகளிலும் மொழிபெயர்ப்புகளிலும் பொருள் காணப்படுகின்றது. வார்த்தைகளில் வித்தியாசம் இருந்தாலும் இந்தக் கருத்தைத் தான் பெரும்பாலான மொழி பெயர்ப்புக்கள் தருகின்றன. அரபு இலக்கண அடிப்படையில் மேற்கண்டவாறு பொருள் கொள்ள இடமிருந்தாலும் வேறு பல காரணங்களால் இந்த மொழி பெயர்ப்பை ஏற்க முடியவில்லை. அதே அரபு இலக்கண அடிப்படையில் மற்றொரு விதமாகப் பொருள் கொள்ளவும் இடமிருக்கின்றது. அந்தப் பொருளே சரியானதாகவும் தோன்றுகின்றது.