கஹ்ஃப் விளக்கவுரை – 4

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை
9-26 வது வசனம்

“அந்தக் குகை’ எனும் பெயர் பெற்ற இந்த அத்தியாயத்தின் எட்டு வசனங்களுக்கான விளக்கத்தை இதுவரை நாம் பார்த்தோம்.
ஒன்பதாம் வசனம் முதல் 26வது வசனம் வரை கடந்த காலத்தில் நடந்த ஒரு வரலாறு மிகவும் சுருக்கமாகக் கூறப்படுகிறது. இந்த வரலாறு ஒரு குகையுடன் தொடர்புடையதாக இருப்பதால் தான் இந்த அத்தியாயத்திற்கு “அந்தக் குகை’ – அல் கஹ்ஃப் என்ற பெயர் வந்தது.

முதலில் அந்த வசனங்களின் தமிழாக்கத்தைத் தொடராகப் பார்த்து விட்டு அதன் விளக்கத்தைப் பின்னர் பார்ப்போம்.
9. குகை மற்றும் ரகீம் வாசிகள் நமது அத்தாட்சிகளில் மிகவும் அதிசயமானவர்கள் என எண்ணிக் கொள்கிறீரா?
10. அந்த இளைஞர்கள் குகையின் பால் ஒதுங்கியதை நினைவு கூர்வீராக! எங்கள் இறைவா! உன்புறத்திலிருந்து அருளை எங்களுக்கு வழங்குவாயாக! மேலும் எங்கள் காரியங்களில் நேர்வழியை எங்களுக்காகக் காட்டுவாயாக என்று அவர்கள் கூறினார்கள்.
11. அக்குகையில் குறிப்பிட்ட ஆண்டுகள் அவர்களின் காதுகளை நாம் அடைத்தோம். (உறங்கச் செய்தோம் என்பதை காதுகளை அடைத்தோம் என்று கூறப்படுவது அரபு மொழியில் வழக்கமாக இருந்தது.)
12. இரு கூட்டத்தினரில் அவர்கள் தங்கிய காலம் பற்றி நன்கறிந்தவர்கள் யார் என்பதை நாம் அறிவதற்காக பின்னர் அவர்களை நாம் எழுப்பினோம்.
13. அவர்களது வரலாற்றை உண்மையுடன் நாம் உமக்குக் கூறுகிறோம். நிச்சயமாக அவர்கள் இளைஞர்களாவர். அவர்கள் தம் இறைவனை நம்பினார்கள். மேலும் அவர்களுக்கு நேர்வழியை நாம் அதிகப் படுத்தினோம்.
14. எங்கள் இறைவன், வானங்கள் மற்றும் பூமியின் இறைவனாவான். அவனையன்றி (யாரையும்) கடவுளாக நாம் பிரார்த்திக்கவே மாட்டோம். அவ்வாறு செய்தால் நாங்கள் வரம்பு மீறிய சொல்லைக் கூறியவர்களாவோம் என்று அவர்கள் (துணிவுடன்) நின்ற போது அவர்களின் உள்ளங்களை நாம் மேலும் பலப்படுத்தினோம்.
15. நமது சமுதாயத்தினராகிய இவர்கள் அவனை விடுத்து பல கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தங்களுக்காக தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அதிக அநியாயக் காரன் யார்? (எனவும் அவர்கள் கூறினார்கள்.)
16. இவர்களை விட்டும், அல்லாஹ்வைத் தவிர எவற்றை வணங்குகிறார்களோ அவற்றை விட்டும், நீங்கள் விலகும் போது அந்தக் குகையில் தஞ்சமடையுங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை வாரி வழங்குவான். மேலும் உங்கள் காரியத்தில் எளிமையான போக்கிடத்தை உங்களுக்கு அவன் ஏற்படுத்துவான் (என்று தமக்குள் கூறிக் கொண்டனர்)
17. சூரியன் உதிக்கும் போது அவர்களது குகையின் வலப்புறத்தில் காய்வதையும் அது மறையும் போது அவர்களின் இடப்புறமாக அது அவர்களைக் கடந்து செல்வதையும் நீர் காண்பீர். அவர்கள் அக்குகையின் விசாலமான இடத்தில் உள்ளனர். இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றாகும். அல்லாஹ் யாருக்கு வழி காட்டினானோ அவன் தான் நேர்வழி பெற்றவன். யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழிகாட்டும் பொறுப்பாளரைப் பெற்றுக் கொள்ள மாட்டீர்.
18. அவர்கள் விழித்துக் கொண்டிருப்பவர்களாக் காண்பீர். அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்களை வலப்புறமும் இடப்புறமும் நாம் புரட்டுவோம். குகையின் வாசலில் அவர்களின் நாய் முன்னங்கால்களை விரித்து வைத்துள்ளது. அவர்களை நீர் பார்த்திருந்தால் அவர்களை விட்டு வெருண்டோடியிருப்பீர். அவர்களைக் குறித்து பயத்தால் நிரப்பப் படுவீர்.
19. அவர்கள் தமக்கிடையே விசாரித்துக் கொள்வதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். எவ்வளவு நாட்கள் தங்கியிருப்பீர்கள் என்று அவர்களில் ஒருவர் கேட்டார். ஒருநாள் அல்லது ஒருநாளில் ஒரு பகுதி தங்கியிருப்போம் என்று அவர்கள் கூறினார்கள். நீங்கள் தங்கியது குறித்து உங்கள் இறைவனே நன்கறிந்தவன் என்றும் கூறினார்கள். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் அந்த நகருக்கு அனுப்புங்கள். தூய்மையான உணவு எது என்பதைக் கவனித்து அதிலிருந்து உங்களுக்கு உணவை அவர் கொண்டு வரட்டும். மேலும் அவர் கவனத்துடன் இருக்கட்டும். அவர் உங்களைப் பற்றி எவருக்கும் அறிவித்து விடக் கூடாது (எனவும் கூறினார்கள்.)
20. அவர்கள் உங்களை அறிந்து கொண்டால் உங்களைக் கல்லால் அடித்தே கொன்று விடுவார்கள். அல்லது அவர்களது மார்க்கத்தில் உங்களை மாற்றி விடுவார்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் ஒருக்காலும் வெற்றி பெறவே மாட்டீர்கள் (எனவும் கூறிக் கொண்டார்கள்.)
21. அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும் கியாமத் நாளில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும் அவர்கள் அறிந்து கொள்வதற்காக (இவர்களைப் பற்றி) அவர்களுக்கு (அவ்வூராருக்கு) நாம் வெளிப்படுத்தினோம். அவர்கள் தமது காரியத்தில் தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொண்டதை நினைவு கூர்வீராக! இவர்கள் மீது ஒரு கட்டடத்தை எழுப்புங்கள் என்று கூறினார்கள். அவர்களைப் பற்றி அவர்களின் இறைவன் நன்கறிந்தவன். இவர்கள் மீது நாம் ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்துவோம் என்று காரியத்தில் மிகைத்தவர்கள் கூறினார்கள்.
22. மூன்று பேர். அவர்களில் நான்காவது அவர்களது நாய் என்று கூறுவார்கள். ஐந்து பேர். அவர்களில் ஆறாவது அவர்களின் நாய் என்றும் மறைவானதை யூகம் செய்து கூறுகின்றனர். ஏழு பேர். அவர்களில் எட்டாவது அவர்களின் நாய் என்றும் கூறுகின்றனர். அவர்களின் எண்ணிக்கை குறித்து என் இறைவனே நன்கு அறிந்தவன் என்று கூறுவீராக! குறைவானவர்களைத் தவிர அவர்களை யாரும் அறிய மாட்டார்கள். எனவே அவர்கள் விஷயத்தில் வெளிப்படையாகத் தெரிந்தவை தவிர வேறு விவாதம் செய்ய வேண்டாம். மேலும் அவர்கள் குறித்து இவர்களில் எவரிடமும் விளக்கம் கேட்காதீர்!
23. இதை நாளைக்கு நிச்சயமாக நான் செய்பவன் என்று எந்த விஷயம் குறித்தும் நீர் கூற வேண்டாம்.
24. அல்லாஹ் நாடினால் தவிர! மறந்து விட்டால் உமது இறைவனை நினைவு கூர்வீராக! இதை விட நெருக்கமான காலத்தில் என் இறைவன் எனக்கு வழி காட்டக் கூடும் என்றும் கூறுவீராக!
25. அவர்கள் தங்கள் குகைகளில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள். மேலும் ஒன்பதை
26. அவர்கள் தங்கியது குறித்து அல்லாஹ் நன்கறிந்தவன் என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் மறைவானது அவனுக்கே உரியது. என்னே அவனது பார்வை! என்னே அவனது கேள்வி! அவனைத் தவிர அவர்களுக்கு எந்தப் பொறுப்பானும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டு சேர்க்க மாட்டான்.
குகைவாசிகள் குறித்து குர்ஆன் கூறும் வரலாறு இதுதான். திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்திருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் குகைவாசிகளின் வரலாறு குறித்து இவ்வசனங்களில் கூறப்பட்டதைத் தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையும் கூறவில்லை. இவ்வசனங்களில் கூறப்பட்டதை விட மேலதிகமாக யார் எதைக் கூறினாலும் அவை வெறும் கற்பனையே தவிர வேறில்லை. மேற்கண்ட வசனங்களுக்கிடையே இது குறித்து அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று கூறப்படுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலதிகமாக எந்த விளக்கமும் கூறாமல் இருந்தது ஆச்சரியப் படக்கூடிய விஷயம் அன்று.
எனவே இவ்வசனங்களில் கூறப்பட்டவைகளை மட்டும் அடிப்படையாக வைத்துத் தான் அவர்களின் வரலாறை நாம் அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.

ஆனால் கவலைப் பட வேண்டிய அம்சம் என்னவென்றால் எது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட எதையும் மேலதிகமாகக் கூறவில்லையோ அது பற்றி விரிவுரை என்ற பெயரில் கட்டுக்கதைகளைப் புனைந்து எழுதியுள்ளனர்.
இவ்வாசகங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் வரலாறு என்ன? விரிவுரை என்ற பெயரில் இட்டுக்கட்டப் பட்டவை யாவை? என்பதை இனி காண்போம்.

குகைவாசிகள் அத்தாட்சிகள்

குகைவாசிகளின் வரலாற்றைக் கூறும் ஒன்பது முதல் இருபத்தாறு வரையுள்ள வசனங்களின் தமிழாக்கத்தை இதுவரை நாம் கண்டோம். இனி ஒவ்வொரு வசனத்திற்குரிய விளக்கத்தை விரிவாகப் பார்ப்போம்.
குகை மற்றும் ரகீம் உடையவர்கள் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்கள் என்று நீர் கருதுகின்றீரா?
(ஒன்பதாம் வசனம்)
என்று இவ்வரலாற்றை இறைவன் கூறத் துவங்குகின்றான்.

எந்த மனிதனும் வருடக் கணக்கில் உறங்கிட முடியாது. பலநூறு வருடங்கள் உறங்கி விட்டு மீண்டும் விழித்தெழ முடியாது என்பதை மனிதன் சந்தேகமற அறிந்திருக்கிறான். பத்து நாட்கள் ஒருவர் உறக்கத்திலேயே இருக்கிறார் என்று கூறப்பட்டால் கூட அதை மனிதன் நம்ப மாட்டான். பலநூறு நாட்கள் அல்ல. பலநூறு வருடங்கள் சில பேர் தூக்கத்தில் கழித்து விட்டு ஏதும் அறியாதவர்கள் போல் விழித்தெழுந்தார்கள் என்று கூறினால் எந்த மனிதனாலும் அதை நம்ப முடியாது.
இத்தகைய ஒரு நிகழ்ச்சி நிச்சயம் நடந்திருக்க முடியாது என்றே மனிதன் நினைப்பான். எனவே தான் இந்த அற்புத வரலாற்றைக் கூறுவதற்கு முன்னால் மனிதர்கள் அதை நம்புவதற்குரிய காரணங்களை இங்கே முதலில் குறிப்பிடுகிறான்.
மனிதர்களே! இதை உங்களது நிலையிலிருந்து நோக்காதீர்கள். இதைக் குகைவாசிகளின் சாதனை எனவும் கருதாதீர்கள். இதை நிகழ்த்திக் காட்டியவன் யார் என்ற கோணத்தில் இதைச் செவிமடுங்கள்.

இது உங்களையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும் சர்வ சக்தனாகிய நான் நிகழ்த்திக் காட்டிய அற்புதமாகும். நான் இவ்வுலகில் எண்ணிலடங்கா அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளேன். அந்த அற்புதங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது மிகவும் சாதாரணமான நிகழ்ச்சி தான் என்று விளக்குவதற்காகவே “நமது அத்தாட்சிகளில் இது அதிசயமானது என நினைக்கிறீரா?” என்று கேட்கிறான்.

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது, எண்ணற்ற கோள்களைப் படைத்து அந்தரத்தில் மிதக்க விட்டிருப்பது, கோடானு கோடி உயிரினங்களைப் படைத்து அவற்றுக்குள் அதிசயங்களை நிகழ்த்தி வருவது, இவை யாவும் திட்டமிட்டபடி சீராக இயங்குவது போன்ற பேராச்சரியங்களைப் பார்க்கும் மனிதன் – இந்த அதிசயங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்று சொல்லத் தக்க குகைவாசிகள் பற்றிய நிகழ்ச்சியை எவ்வாறு நம்ப மறுக்க முடியும்?
இறைவனால் எதுவும் இயலும் என்பதை நம்புகின்ற மக்களுக்கு இதை நம்புவதற்கு எந்தத் தயக்கமும் இருக்காது. இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் துவக்கத்திலேயே தனது எண்ணற்ற அற்புதங்களை நினைவு படுத்திக் காட்டுகிறான்.
இறைவனை நம்புகின்ற மக்களைப் பொறுத்த வரை அவர்கள் இந்நிகழ்ச்சியை நம்பிட இவ்வசனத்தில் இறைவன் எழுப்பியுள்ள கேள்வியே போதுமானதாகும்.

ஆனால் இறைவனையும் இறைவனது ஆற்றலையும் நம்பாதவர்கள் இதை எப்படி நம்புவார்கள்? இது போன்ற அற்புதங்கள் உங்கள் மார்க்கத்தில் இருப்பதை விட அதிகமாகவும் பிரம்மாண்டமாகவும் ஏனைய மதங்களில் இருக்கின்றனவே! என்றெல்லாம் கேள்வி கேட்பவர்கள் இதை நம்ப வேண்டுமானால் இதற்கான தடயங்களைக் காட்ட வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். நம்பிக்கை கொள்ளாவிட்டாலும் ஆட்சேபனை செய்யாமலாவது இருப்பார்கள்.
இவர்களது வாதத்தையும் திருக்குர்ஆன் கவனத்தில் கொள்கிறது. திருக்குர்ஆனில் கூறப்படும் அற்புதமான நிகழ்ச்சிகளுக்குரிய தடயங்கள் இன்றளவும் கிடைத்துக் கொண்டிருப்பது தான் இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.

நூஹ் நபி வெள்ளம்

நூஹ் நபியவர்கள் காலத்தில் மாபெரும் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டது. நூஹ் நபியவர்களும் அவர்களை ஏற்றவர்களும் கப்பல் தயாரித்து அதில் ஏறிக் கொள்ள, மற்றவர்கள் அடியோடு அழிக்கப் பட்டார்கள் என்ற அற்புத வரலாற்றை திருக்குர்ஆன் கூறுகிறது. அப்போது ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தினால் மலை உயரத்துக்கு தண்ணீர் உயர்ந்தது எனவும் திருக்குர்ஆன் கூறுகிறது. மலை உயரத்துக்கு மேல் தண்ணீர் மட்டம் உயர்வதை யாராலும் நம்ப முடியாது.
இந்த அற்புத நிகழ்ச்சியை நிகழ்த்திய இறைவன், “வெள்ளம் வடியத் துவங்கிய போது நூஹ் நபியின் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது” (அல்குர்ஆன்:) என்று கூறுகிறான்.

மலையின் மீது அமர்ந்த கப்பல் பனிப்பொழிவுகளால் மறைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. பின்னர் இம்மலை மீது உள்ள கப்பலை மனிதர்கள் கண்டு பிடித்தனர். இவ்வளவு உயரமான மலை மீது கப்பலைக் கொண்டு போய் யாரும் வைத்திருக்க முடியாது. மலை மட்டத்திற்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே கப்பல் மலை உச்சிக்கு வர முடியும் என்ற முடிவுக்கு வந்து அந்த அதிசய நிகழ்ச்சியை உண்மைப் படுத்தினார்கள்.

கடல் பிளத்தல்

கடலை இரு கூறாகக் கிழித்து மூஸா நபி காப்பாற்றப் பட்டதும், பிர்அவ்ன் என்ற கொடுங்கோலன் அழிக்கப் பட்டதும் நாம் அறிந்த வரலாறு. திருக்குர்ஆன் கூறும் இவ்வரலாற்றை இறை நம்பிக்கை அற்றவர்களால் நம்ப முடியாது.
கடல் எப்படிப் பிளந்து வழிவிடும் என்று அவர்கள் வியப்படைவார்கள். இதன் காரணமாகத் தான் கடல் பிளந்த வரலாற்றைக் கூறிய இறைவன் பிர்அவ்னின் உடலை நாம் பாதுகாத்து எதிர் காலத்துக்கு படிப்பினையாக்குவோம் (அல்குர்ஆன்: 10:92) என்று கூறுகிறான். இறைவன் பாதுகாத்த அந்தத் தடயம் – பிர்அவ்னின் உடல் கண்டு பிடிக்கப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப் பட்டு வருகின்றது.

அந்த அற்புத நிகழ்ச்சிக்குரிய வரலாற்றுத் தடயமாக அவனது உடல் அமைந்துள்ளது.
இதே போல் குகை வாசிகள் குறித்த நிகழ்ச்சியிலும் இறை நம்பிக்கையற்றவர்கள் சந்தேகம் கொள்வார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ள இறைவன் அந்த நிகழ்ச்சிக்கும் அற்புதமான தடயத்தை விட்டு வைத்துள்ளான்.
அந்தத் தடயத்தைக் காணும் உலகம் அதிசயித்து பிரமிக்கிறது.
அந்தத் தடயம் குறித்தும் இதே வசனத்திலேயே வல்ல இறைவன் குறிப்பிடுகிறான்.

குகைவாசிகள் தடயம்

குகை மற்றும் ரகீம் உடையவர்கள் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்கள் என்று நீர் நினைக்கின்றீரா?
(ஒன்பதாம் வசனம்)
இறை நம்பிக்கையாளர்கள் இந்நிகழ்ச்சியில் எந்தச் சந்தேகமும் கொள்ள மாட்டார்கள் என்று கூறிய இறைவன் இந்நிகழ்ச்சி நடந்ததற்கான தடயத்தையும் விட்டு வைத்திருக்கிறான் என்று கடந்த இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
அந்தத் தடயம் எது என்பதை இப்போது பார்ப்போம்.

அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு குகையில் தூங்கிய காரணத்தால் குகை வாசிகள் என்று குறிப்பிடப் படுகின்றனர். ஆனால் குகைவாசிகள் என்பதுடன் “ரகீம்” வாசிகள் – ரகீம் உடையவர்கள் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்.

ரகீம் என்றால் ஏடு, எழுதப்பட்டது என்று பொருள். “அர் ரகீம்” என்றால் அந்த ஏடு என்று பொருள்.
குகையில் தங்கியவர்களைப் பற்றி கூறுவதென்றால் குகைவாசிகள் என்று மட்டும் கூறினால் போதுமானது. “அந்த ஏட்டுக்குரியவர்கள்” என்று கூறுவது ஏன்?
ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. “அந்த ஏடு’ என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.

அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப் பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே “அந்த ஏட்டுக்குரியவர்கள்” என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் “அந்த ஏடு” என்று முக்கியத்துவப் படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.
அந்த ஏடுதான் இந்நிகழ்ச்சிக்குரிய முக்கியமான தடயம் என்று நாம் கூறுகிறோம்.

அந்த ஏடு – அந்த மாபெரும் வரலாற்றுத் தடயம் கிடைத்து விட்ட செய்தியை சவூதியில் பணியாற்றிய பேராசிரியர் அமீருத்தீன் அவர்கள் 1998ஆம் ஆண்டு நமக்குத் தெரிவித்தார்கள். பி.பி.சி. தொலைக்காட்சியில் அந்தத் தடயம் கிடைத்தது குறித்து ஒளிபரப்பப் பட்டதை வீடியோவில் பதிவு செய்து நமக்கு அனுப்பி வைத்தார்கள்.
அல்லாஹ்வின் அற்புதத்தை எண்ணி நாங்கள் வியப்புற்றோம். அந்த ஒளிப்பதிவை ஆதாரமாகக் கொண்டு தனியாக ஆய்வு நூல் ஒன்றை வெளியிடவும் நாம் நினைத்திருந்தோம்.

இந்த நிலையில் தான் கோவை குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி நமது அலுவலகத்தைச் சோதனையிட்ட காவல்துறையினர் எல்லா வீடியோ கேஸட்டுகளையும் அள்ளிச் சென்று விட்டனர்
(இந்த நிகழ்ச்சியை பி.பி.சி. தொலைக்காட்சியிலிருந்து பதிவு செய்தவர்கள் யாராவது நமக்கு அனுப்பி வைத்தால் நாம் மிகவும் நன்றி செலுத்துவோம்.)

அந்த ஒளிப்பதிவில் உள்ள விபரங்களை நினைவு படுத்தி எழுதித் தருமாறு பேராசிரியர் அமீருத்தீன் அவர்களிடம் கேட்டோம். அவர்கள் இயன்ற வரை நினைவு படுத்தி பி.பி.சி. யில் ஒளிபரப்பப் பட்டதை எழுதித் தந்தார்கள். அதை அவரது நடையிலேயே கீழே தருகின்றோம்.
சாவுக்கடல் சாசனச் சுருள்கள் (உங்ஹக் நங்ஹ நஸ்ரீழ்ர்ப்ப்ள்)
மேற்கண்ட தலைப்பில் 1998ம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி. யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப் பட்டதாகவும் சொல்லப்பட்டது. அதன் விபரங்கள் :
1947-ம் ஆண்டு ஒருநாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை (உங்ஹக் நங்ஹ) ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப்பகுதி கும்ரான் மலைப்பகுதி என்று அழைக்கப் படுகிறது.

ஆட்டுக்குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த பொழுது, மண் சாடிகளில் சுருட்டி நிரப்பி வைக்கப் பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும் மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்து சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

அந்தப் பழைய தோல்களை தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருசலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.
ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனைச் சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார். கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப் பட்ட விஷயம் வெளிப்பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும் முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர். அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், அந்த சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப் பட்டு அவைகள் ஆராயப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்துவிட்டனர். கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவைகளைப் படிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப் படவில்லை. இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருசலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப்பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர். 1952-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய் சேர்ந்து விட்டன. பதினைந்தாயிரம் ஙஹய்ன்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ள் இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.
கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து விட்டது. பல கிறித்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டது.

சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப் பட்டு வந்தது. இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப் பட்டு வந்தது. இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.
தோலில் பதிந்த அந்தப் பழங்கால சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை ஙண்ஸ்ரீழ்ர்ச்ண்ப்ம் எடுத்தார்கள். அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு ரகசிய பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டது.

1990-ம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப் பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப் பட்டவர். இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களை பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவைகளைப் படித்தார். அவற்றைப் படித்தபோது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்குமூலம் அளிக்கின்றார். இத்தனை காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.

மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 ஙஹய்ன்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ள்-களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடுகின்றார். அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும் குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.
மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும் ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார். அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது.
கிறித்தவப் பாதிரியார்கள் இவ்வளவு காலமும் “சாவுக்கடல் சாசனச் சுருள்களை” ரகசியமாக வைத்திருந்ததன் காரணத்தை அந்த இரு அறிஞர்களும் விளக்குகின்றார்கள்.

இந்த சாசனங்கள் கும்ரான் மலைப்பகுதிகளில் அக்கால ரோமர்களின் ஆட்சியை எதிர்த்து ரகசியமாகக் குடியேறியவர்களால் எழுதப் பட்டிருக்கின்றது. அவர்கள் “எஸ்ஸீன்ஸ்” என்ற பெயரால் அழைக்கப் படுகின்றனர். அவர்கள் இல்லற வாழ்வைத் துறந்தவர்கள். தமது பணியின் கடுமை கருதி அவர்கள் துறவறம் மேற்கொண்டவர்கள். ஏசு பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே யூதர்கள் மத்தியில் இந்த இறைப் பணியாளர்கள் இருந்தார்கள். அவர்களின் தலைவர்கள் பலர் “மெஸய்யா” (மஸீஹ்) என்று அழைக்கப் படுகின்றார்கள். எனவே மெஸய்யா என்பது ஏசுவுக்கு மட்டும் உள்ள பிரத்தியேகப் பெயர் அல்ல. ஒரு தலைவர் ரோமர்களால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டால் மற்றொருவர் அந்தப் பொறுப்புக்கு வருகிறார். அதைத் தான் “மஸீஹ் – உயிர்த்தெழுந்தார்’ (தங்ள்ன்ழ்ழ்ங்ஸ்ரீற்ங்க்) என்று அவர்கள் கூறி வந்தார்கள். மஸீஹை சிலுவை மூலம் கொலை செய்வது யூதர்கள் காலத்தில் இருந்த வழக்கம். இப்படி பலர் ரோமர்களால் கொல்லப் பட்டிருக்கிறார்கள். உதாரணமாக ஜேம்ஸ் என்ற நல்ல தலைவர் இருந்தார். அவரும் “மெஸய்யா” என்றே சாசனத்தில் அழைக்கப் படுகிறார். அவரை சிலுவையில் அறைந்தே ரோமர்கள் கொலை செய்கின்றார்கள்.

அந்த “எஸ்ஸீன்ஸ்’களில் இருந்து வந்தவர் தான் ஏசு. ஆகவே தான் அவரும் “மெஸய்யா’ என்று குறிப்பிடப் படுகின்றார். ஏசு ஒன்றும் சாந்த சொரூபி அல்ல. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டவேண்டும் என்பதெல்லாம் அவர் கொள்கை அல்ல. இப்போது ஏசுவைப் பற்றி சொல்லப் படுவதற்கு சாசனச்சுருள்களில் எந்த ஆதாரமும் இல்லை. ஏசு ரோமர்களை எதிர்க்க ரகசியமாக ஒரு படையைத் தயாரித்துக் கொண்டிருந்தார் என்பதற்கே ஆதாரங்கள் இருக்கின்றன.
கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப் படும் மதச் சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன. இந்தச் சடங்குகளுக்கும் ஏசுவின் பிரச்சாரத்திற்கும், கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் “பவுல்’ என்பவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டவை. மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப்படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானது. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலைமுறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.

மேற்கண்டவாறு அறிஞர் ஐஸ்மேன் கூறி வரும்போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ணன்ழ்ஹய் – அது குர்ஆனை உறுதிப் படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறு காட்சி காட்டப் படுகின்றது.
இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞரும் பேசும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ஒள்ப்ஹம் – அது இஸ்லாத்தை உறுதிப் படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப் படுகின்றது. ஆகவே இந்த சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும் இஸ்லாத்தையும் உண்மைப் படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதை பார்வையாளர்கள் அறியமுடியவில்லை. அதன் பிறகு தான் அந்த டாக்குமெண்டரியை நான் பதிவு செய்தேன். பலமுறை பார்த்தேன். ஓரளவு தெளிவான பின் அந்த அறிஞர்களின் கருத்துக்கு ஆதாரத்தைத் தேடி ஆராய்ச்சியில் இறங்கினேன்.

அந்த ஆராய்ச்சியின் போது திருக்குர்ஆனின் 18-ம் அத்தியாயம் “குகை’ என்ற தலைப்பில் இருப்பது என் கவனத்தைக் கவர்ந்தது. அங்கு குகை வாழ் தோழர்களின் ஆச்சரியமான வாழ்க்கையின் செய்திகள் சொல்லப் படுகின்றன. அந்தத் தோழர்கள் ஆரம்ப காலத்தில் ஏசுவின் வழியை மேற்கொண்ட கிறித்தவர்கள் என்று பல அறிஞர்கள் தங்கள் உரைகளில் கூறுகின்றார்கள்.

“தஜ்ஜாலின் பாதிப்பிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புபவர்கள் குகை அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை நினைவு படுத்திக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் உள்ளது என்று ஓர் அறிஞர் கூறுகின்றார். தஜ்ஜால் என்பதற்கு ஏசு எதிர்ப்பாளர் என்றும் குழப்பவாதி என்றும் பொருள் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ஆகவே இதிலிருந்து தஜ்ஜால் யாராக இருக்க முடியும் என்பதையும் நாம் அறிய முடியும் என்பது அவரின் வாதம்.
பேராசிரியர் அமீருத்தீன் அவர்கள் நினைவு படுத்தி எழுதித் தந்த செய்தி இதுதான்.
அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.

ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்சீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது.
ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் இருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை எனலாம்.
ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.

பைபிளின் பல இடங்களில் இயேசு, ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தைப் பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் என்பதை மறைத்துவிட்டு ஈஸா நபியைப் பற்றி உண்மையையும் பொய்யையும் கலந்து எழுதியதே பைபிள். (அதிக விபரங்களுக்கு இதுதான் பைபிள் என்ற நமது நூலைப் பார்வையிடுக)
எந்த இறைவேதத்தை அவர்கள் மறைத்தார்களோ அதைத் தான் இயேசுவின் வழிவந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.
“குர்ஆனை ஒத்திருக்கின்றது” என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.
இஞ்சீல் எனும் வேதத்தை குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.

அடுத்ததாக அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் அந்தக் கருத்தை உறுதிப் படுத்துகின்றது. இதுதான் இயேசுவின் வேதமாக இருக்க முடியும், இது அம்பலமானால் காலா காலமாக தாங்கள் போதித்த கொள்கைக்கு சாவுமணி அடிக்கப்படும் என்று இவர்கள் அஞ்சியதே இதை மேலும் உறுதிப் படுத்துகின்றது.
மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப் படுத்துகின்றது.
குகைவாசிகளும் (இவர்கள் திட்டமிட்டு மறைத்த) அந்த ஏட்டுக்குரியவர்களும் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்கள் என்று எண்ணுகிறீர்களா? என்ற வசனத்தை வாசிக்கும் போது நம்மையும் அறியாமலே நாம் ஆச்சரியத்தின் விளிம்புக்குச் சென்று விடுகின்றோம்.