எழந்து நிற்பது

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

மனிதன் இவ்வுலகின் வாழும் போது ஒவ்வொருவரையும் சார்ந்து வாழ்கின்றான். அவ்வாறு வாழும் போது தனது வசதிக்கேற்றாற்போல் ஒருவருக்கொருவர் எழுந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பணம் இருந்தால் ஒரு மரியாதை! பணம் இல்லையென்றால் அவமரியாதை! நபி (ஸல்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்காக எக்காலமும் எழுந்து நிற்பதை தடை செய்துள்ளார்கள் என்ற செய்திகள் பின் வருமாறு.

மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே

மார்க்க அறிஞர்களை கண்ணியப்படுத்துவதற்காக பொது மக்களும் அவர்களுக்காக எழுந்து நிற்கின்றார்கள். இதை ஒரு வணக்கம் என்று உணராமல் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வணக்கங்கள் யாவுமே அல்லாஹ் ஒருவனுக்கே!

தொழுகையை குறிப்பதற்குக் கூட திருமறைக் குர்ஆனிலும் ஹதீஸிலும் ”கியாம்” நிற்றல் என்ற பொருள் தரக்கூடிய அரபிச் சொல் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டு நில்லுங்கள்
(அல்குர்ஆன்: 2:238)➚

மேலும், இரவில் நின்று தொழும் தொழுகையைக் குறிப்பதற்கு கியாமுல் லைல் (இரவில் நிற்றல்) என்ற வார்த்தை தான் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதையும் பினவரும் வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இரவில் குறைவான நேரம் தவிர நிற்பீராக! (அல்குர்ஆன்: 73:2)➚

யார் ரமலானில் ஈமானோடும், நன்மையை எதிர்பார்த்தும் நிற்கிறாரோ அவருடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.
(புகாரி: 38)

ஸஜ்தாவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாதோ, எப்படி ருகூவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாதோ அதே போன்று மரியாதையின் நிமித்தம் எழுந்து நிற்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாது.

தனக்காக நிற்பதைக் கூட விரும்பாத நபி

நபி (ஸல்) அவர்கள் எழுந்து நிற்பதை விரும்பக் கூடியவர்களையும் எழுந்து நின்ற மக்களையும் அவ்வாறு செய்யக் கூடாது என்று தடுத்திருக்கின்றார்கள். தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே! அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள். அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்; அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),(முஸ்லிம்: 701)

நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக(புகாரி: 689, 732, 733, 805, 1114, 688) ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம்.

முன்னால் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்களின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் எழுந்து நிற்பது போல் இது தோற்றம் அளிக்கிறது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் ஆணை இடுகிறார்கள்.

மரியாதைக்காகவும் எழக் கூடாது

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை என்றாலும், அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(அஹ்மத்: 12068, 11895) (திர்மிதீ: 2678)

அது மட்டுமல்ல. எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் வகையில் எழுந்து நிற்கக் கடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.
மன்னராக இருந்தாலும் மரியாதைக்காக எழவேண்டாம்

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் சுபைர் அவர்களும் இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் அமருங்கள் என்றார். தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனறு யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள் ளேன் என்று முஆவியா (ரலி) சொன்னார்கள்.
(அபூதாவூத்: 4552)

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.
(அல்குர்ஆன்: 33:6)➚

உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராக மாட்டார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 15)

நபி (ஸல்) அவர்கள் மீது (முஹப்பத்) நேசம் வைக்க வேண்டும் என்றும் அனைத்திலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் மேற்கண்ட வசனம் மற்றும் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உயிரை விட நாம் நேசிக்க வேண்டிய நபி (ஸல்) அவர்களே தனக்காக பிறர் எழுந்து நிற்க வேண்டும் என்று விரும்பவில்லை. மாறாக, தனக்காக எழுந்து நிற்பதைத் தடை செய்துள்ளார்கள். அப்படியானால் மற்றவர்கள் எங்கனம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வரவேற்பதற்காக எழுந்து செல்லுதல்

தனக்காக யாரும் எழுந்து நிற்கக் கூடாது என்று தடைசெய்த நபியவர்கள் தன்னுடைய பாசமிக்க மகளார் தன்னைச் சந்திக்க வரும்போது அவரை நோக்கி பாசத்தோடு எழுந்து சென்று வரவேற்றிருக்கின்றார்கள் என்பதை பின்வரும் செய்தியிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்
அப்துர் ரஹ்மான் பின் யஸீது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் அமைப்பிலும், போக்கிலும், நடத்தையிலும் ஒத்தவராக ஃபாத்திமா (ரலி) அவர்களை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்திலே வரும்போது நபியவர்கள் ஃபாத்திமாவை நோக்கி எழுந்து சென்று அவர்களுடைய கையிலே முத்தமிட்டு அவர்களைத் தன்னுடைய இடத்திலேயே அமர வைப்பார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் தன்னிடத்திலே வரும்போது அவர்களை நோக்கி எழுந்து சென்று அவர்களுடைய கையிலே முத்தமிட்டு அவர்களைத் தன்னுடைய இடத்தில் உட்கார வைப்பார்கள்.
(திர்மிதீ: 3807)

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நான் தபூக் போரில் பங்கேற்காமல் இருந்த விவகாரத்தில் எனக்கு மன்னிப்பளித்து இறைவசனம் அருளப்பட்ட பின்) நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்பொழுது தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் விரைந்தோடி வந்து என் கரத்தைப் பற்றி எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: கஅப் இப்னு மாலிக் (ரலி),(புகாரி: 4418)

உதவி செய்வதற்காக எழுந்து செல்லுதல்

ஒருவருக்கு உதவி செய்யும் நோக்கில் அவரை நோக்கி எழுந்து செல்வது கூடும். இதனைப் பின்வரும் செய்தியிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ஸஃது பின் முஆது (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தபோது நபி (ஸல்) அன்சாரிகளிடம், உங்கள் தலைவரை நோக்கி எழுந்து செல்லுங்கள் என்று கூறினார்கள்
(புகாரி: 6262, 4121)

இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு சிலர் மற்றவர்களுக்காக எழுந்து நிற்கலாம் என வாதிடுகின்றனர். ஆனால் இது தவறானதாகும். நபி (ஸல்) இவ்வாறு கூறியதன் காரணம் ஸஃது (ரலி) அவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தான் நபியவர்களைச் சந்திக்க வருகிறார்கள். எனவே தான் அவர்களுக்கு உதவி செய்வதற்காக அவரை நோக்கிச் செல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

(அஹ்மத்: 23945) அறிவிப்பில் உங்களுடைய தலைவரை நோக்கி எழுந்து சென்று அவரை (வாகனத்திலிருந்து) இறக்கி விடுங்கள் என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. அவர்கள் பலஹீனமான நிலையில் இருந்ததால் தான் அவரை இறக்கி விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே இதனை ஆதாரமாகக் கொண்டு ஒருவருக்கு எழுந்து நிற்கலாம் எனக் கூறுவது தவறானதாகும்.

ஜனாஸாவிற்காக எழுந்து நிற்றல்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு ஜனாஸா எங்களை கடந்து சென்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! இது ஒரு யூதனின் ஜனாஸா என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி),(புகாரி: 1311)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒரு ஜனாஸா நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் எழுந்து நின்றார்கள். இது யூதனுடைய ஜனாஸாவாயிற்றே என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாம் நின்றதெல்லாம் மலக்குமார்களுக்காகத் தான் என்று கூறினார்கள்.
(நஸாயீ: 1903)

நபி (ஸல்) அவர்கள் கூற்றிலிருந்து ஒரு மனிதர் உயிருடன் இருக்கும் போது அவனுக்காக எக்காரணம் கொண்டும் எழுந்து நிற்பது கூடாது, அவன் பெரும் மன்னராக இருந்தாலும் சரியே! மாறாக, ஒரு மனிதர் இறந்து ஜனாஸாவாக இருக்கும் போது அந்த ஜனாஸாவிற்காக எழுந்து நிற்க வேண்டும், அது ஒரு யூத & மாற்று மத இணை கற்பிப்பாளரின் ஜனாஸாவாக இருந்தாலும்.