உடலுக்கு பாதிப்பு என்றால் குளிக்காமல் தயம்மும் செய்யலாமா?
அடிக்கடி குளிப்பு கடமையாகி விடுவதால் அதிகாலையில் குளிக்கும் போது உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இதற்கு மார்க்கத்தில் ஏதும் சலுகை உள்ளதா?
பதில்:
தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்ய அனுமதியுள்ளது போல் நோயின் காரணமாக தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டாலும் தயம்மும் செய்யலாம். தண்ணீரைப் பெற்றிருந்தாலும் உளூச் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தயம்மும் செய்தால் போதுமானது என்று குர்ஆன் கூறுகின்றது.
நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
திரு(அல்குர்ஆன்: 4:43)➚
நோயாளியாக இருந்தால் குளிக்க வேண்டியதில்லை. தயம்மம் செய்து கொண்டால் போதும் என்று இவ்வசனம் கூறுகின்றது. குளித்தால் நோய் ஏற்படும் என்ற அச்சம் இருந்தாலும் குளிக்காமல் தயம்மம் செய்து கொள்ள அனுமதியுள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸும் தெளிவுபடுத்துகின்றது.
தாதுஸ் ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த போரில் குளிராக இருந்த ஒரு இரவில் எனக்குத் தூக்கத்தில் விந்து வெளியானது. நான் குளித்தால் நாசமாகி விடுவேன் என்று அஞ்சினேன். எனவே தயம்மும் செய்து என் சகாக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தேன். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் தெரிவித்தனர். அம்ரே! உமக்குக் குளிப்பு கடமையாக இருந்த போது உமது சகாக்களுக்குத் தொழுவித்தீரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டனர். குளிப்பதற்குத் தடையாக இருந்த காரணத்தை அவர்களிடம் கூறினேன். உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவனாக இருக்கிறான் என்று அல்லாஹ் கூறுவதை நான் செவியுற்றுள்ளேன் என்று விளக்கினேன். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். வேறு எதையும் கூறவில்லை.
அறிவிப்பவர் : அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)
நூல்கள் : அபூதாவூத், அஹ்மத்
அம்ர் (ரலி) அவர்கள் நோயாளியாக இருக்கவில்லை. குளித்தால் உடலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் குளிப்பை விடுகிறார்கள். இதற்குப் பதிலாக தயம்மும் செய்து கொள்கிறார்கள். இதை நபியவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக ஆமோதிக்கிறார்கள்.
தீங்கு தரும் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என இஸ்லாம் கூறுகின்றது. எனவே அதிகாலையில் கடமையான குளிப்பை நிறைவேற்றினால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அந்தக் குளிப்புக்கு பதிலாக நீங்கள் தயம்மம் செய்து கொள்ளலாம்.