இறைவா! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!!
அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக என்று பிரார்தித்தவனாக ஆரம்பம்செய்கிறேன்..
ஆனால் இஸ்லாமியர்கள் என்று சொன்ன மாத்திரத்திலே விஷக் கிருமிகளிடமிருந்தும், கருவறுக்கத் துடிக்கும் கயவர்களிடமிருந்தும் முஸ்லிம்கள் ஏராளமான துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் உள்ளாக்கப்படுவதை சமகால வாழ்க்கையில் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது.
குறிப்பாக, சமகால சூழல் என்பது முஸ்லிம்களைக் காவு வாங்குவதற்கும், கருவறுப்பதற்கும் ஒரு அக்கிரமக் கூட்டம் துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் காலம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள், அக்கிரமங்கள் ஏராளம்! ஏராளம்!
உலகளாவிய அளவில் முஸ்லிம்கள் கடும் நெருக்கடியையும், இன்னல்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் சமீப காலமாகக் கடுமையான வேதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
இதுபோன்ற அசாதாரணமான சூழலில் இஸ்லாமியர்கள் தங்களின் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது? சோதனைகளைக் கண்டு மனம் தளராமல் இருப்பதற்கான வழிகள் என்ன? இஸ்லாமியர்களின் பாதங்கள் உறுதியாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற செய்திகளை இஸ்லாமியர்களாகிய நாம் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க கடமைப்பட்டுள்ளோம்.
பொதுவாகவே சந்தோஷமான கால கட்டங்களில், மகிழ்ச்சியான காலகட்டங்களில் மன உறுதியோடும், மன வலிமையோடும் இருப்பதை விட, சோதனையான காலகட்டங்களிலும், சோகமான காலகட்டங்களிலும் மன உறுதியோடு தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வது தான் உண்மையான வலிமையாகும். அத்தகைய உறுதிப் பயணத்தைத் தான் அல்லாஹ்வும் விரும்புகின்றான்.
மேலும், நெருக்கடியான சூழலில் ஒரு முஸ்லிம் தங்களின் உள்ளங்களை உறுதிப்படுத்துவதற்கும், உள்ளங்களில் பொறுமையை மேற்கொள்வதற்கும், பாதங்களை உறுதிப்படுத்துவதற்கும் இறைவனும், இறைத்தூதரும் ஏராளமான வழிகாட்டுதல்களை கற்றுத் தருகின்றார்கள்.
இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகள் எவ்வளவுதான் கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தாலும், அயோக்கியத்தனங்களைக் கட்டவிழ்த்து விட்டாலும், அக்கிரமமான செயல்பாடுகளை செயல்படுத்தினாலும் இறைவனின் உதவியும், அருளும் இருக்கும் போது இஸ்லாமியர்களை எவ்வளவு பெரிய தீய சக்திகளாலும் ஒன்றும் செய்து விட முடியாது என்று இறைவன் பாடம் நடத்துகின்றான்.
மேலும் இது போன்ற சமயங்களில் நம்முடைய ஈமானை நாம் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று குர்ஆன் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளில் சிலவற்றை இந்த உரையில் அறிந்துக் கொள்வோம்.
“எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் செயல்களில் நாங்கள் வரம்பு மீறியவற்றையும் எங்களுக்கு மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!” என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் அவர்களின் கூற்றாக இருக்கவில்லை.
யாரெல்லாம் இறைவனை மறுக்கின்றார்களோ, அத்தகைய நிராகரிக்கும் கூட்டத்திற்கு எதிராக இறைவா! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! உன்னை மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! என்று இஸ்லாமியர்கள் இறைவனிடத்திலே இறைஞ்சுவார்கள் என்று இறைவன் உபதேசிக்கின்றான்.
ஒரு முஸ்லிம் இறைவனிடத்தில் வைக்கின்ற கோரிக்கைகளில், வேண்டுதல்களில் மிக முக்கியமானதும், அத்தியாவசியமானதும் குறித்து இறைவன் அற்புதமான வார்த்தைகளின் மூலம் தெளிவுபடுத்துகின்றான்.
“எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இறை மறுப்பாளர்களான இக்கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!”
கயவர்களால் பாதிக்கப்படுகின்ற முஸ்லிம்கள் இறைவனிடத்திலே கேட்கும் போது, இறைவா! எங்கள் மீது பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! நிராகரிக்கின்ற அராஜகக் கூட்டத்திற்கு எதிராக உதவுவாயாக! என்று இறைவனிடத்தில் முறையிடுகின்ற வார்த்தைகளை அல்லாஹ் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றான்.
முஸ்லிம்களுக்கு இறைவனின் புறத்திலிருந்து வெளிப்படும் உதவி குறித்து இறைவன் கூறும் போது,
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.
இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலும், வணக்க வழிபாடுகளிலும், இஸ்லாமிய மார்க்கத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வதையும் இலக்காகக் கொண்டு பயணித்தால், அத்தகைய முஸ்லிம்களுக்கு அல்லாஹ் உதவி செய்வான். எதிரிகளுக்கு எதிராக இஸ்லாமியர்களின் பாதங்களை உறுதிப்படுத்துவதாகவும் இறைவன் உத்தரவாதம் வழங்குகின்றான்.
மேலும் இறைவன் தன்னுடைய திருமறையில், அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாரும் இல்லை என்பதை பறைசாற்றும் விதமாக ஒரு சவாலைப் பதிய வைக்கின்றான்.
(நபியே!) பின்னர் இம்மார்க்கத்தில் உம்மை ஒரு வழிமுறையில் அமைத்தோம். எனவே அதைப் பின்பற்றுவீராக! அறியாதோரின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்!
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் சிறிதும் உம்மைக் காப்பாற்ற மாட்டார்கள். அநியாயக்காரர்கள் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள். இறையச்சமுடையோருக்கு அல்லாஹ் பொறுப்பாளன்.
(அல்குர்ஆன்: 45:18)➚,19)
யார் அல்லாஹ்வை அஞ்சுகின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் போதுமானவன் என்றும், அறியாதோரின் விருப்பங்களைப் பின்பற்றக் கூடாது என்றும் இறைவன் அறிவுரை கூறுகின்றான்.
மேலும், மூஸா (அலை) அவர்கள், தன்னுடைய சமுதாய மக்களுக்காகச் சொன்ன அறிவுரைகளையும், அதற்கு அவர்கள் பதிலளித்ததையும் ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் இறைவன் எடுத்துரைக்கும் போது,
“என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தால், நீங்கள் முஸ்லிம்களாகவும் இருந்தால் அவன் மீதே முழு நம்பிக்கை வையுங்கள்” என்று மூஸா கூறினார்.
“நாங்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் இறைவா! அநியாயக்காரக் கூட்டத்தின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! இறைமறுப்பாளர்களின் கூட்டத்திடமிருந்து உன் அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாக” என்று அவர்கள் பிரார்த்தித்தனர்.
(அல்குர்ஆன்: 10:84)➚,85,86)
அல்லாஹ்வை நம்பி உண்மையான முஸ்லிமாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்திருந்தால் அநீதி இழைக்கின்ற அக்கிரமக்காரர்களின் கொடுமையிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பான்.
மேலும் இறைவனை மறுக்கின்ற எத்தனை பெரிய அராஜகக் கூட்டமாக இருந்தாலும், அத்தகைய கூட்டத்திலிருந்தும் அல்லாஹ் முஸ்லிம்களைப் பாதுகாப்பான்.
இறையச்சமுடையோரை வெற்றி பெறச் செய்து அல்லாஹ் காப்பாற்றுவான். அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
இறைவனை அஞ்சினால் கண்டிப்பாக அல்லாஹ் வெற்றி பெறச் செய்வான் என்றும், விஷம சக்திகளிடமிருந்து எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும், ஒருபோதும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்றும் இறைவன் ஆணித்தரமாகப் பதிய வைக்கின்றான்.
இதுபோன்ற ஏராளமான திருமறை வசனங்கள் இஸ்லாமியர்களுக்குச் சொல்கின்ற அற்புதமான செய்தி! இறைவனைச் சரியான முறையில் பின்பற்றி நடந்தால், தங்களின் வாழ்க்கைப் பயணத்தைச் சீர்திருத்தி அமைத்துக் கொண்டால் கண்டிப்பாக எதிரிகளின் துரோகத்திலிருந்தும், கயவர்களின் கயமைத்தனத்திலிருந்தும் அல்லாஹ் காப்பாற்றுவான். நம்முடைய பாதங்களை உறுதிப்படுத்துவான்.
இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளை எதிர்த்து நிற்கின்ற அளவுக்கு உள்ளத்தில் மன உறுதியும், மன வலிமையையும் ஒரு முஸ்லிம் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதுபோன்ற மன வலிமைகளையும், திடகாத்திரமான உள்ளங்களையும் கொண்டிருந்தால் மட்டுமே எதிரிகளை ஓடஓட விரட்டி அடிக்க முடியும். இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் எதிரிகளிடமிருந்து இறையுதவியால் காப்பாற்ற முடியும். கடந்த காலங்களில் மன உறுதியோடு இருந்த எத்தனையோ நபர்களின் பாதங்களை அல்லாஹ் உறுதிப்படுத்தியிருக்கின்றான் என்பதற்கு ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் சான்றாக அமைந்திருக்கின்றன.
இறைவனின் உதவியும், அருளும் இருந்தால் இஸ்லாத்திற்கு எதிரான எவ்வளவு பெரிய கயவர்களையும் வேரறுத்து விடலாம். மேலும், இறைவனின் உதவியால் நம்முடைய பாதங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அயோக்கியர்களின் கூடாரங்களை இல்லாமல் ஆக்கி விட முடியும்.
அஸ்மா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணாக இருந்து, இஸ்லாத்தின் எதிரிகளைக் கலங்கடித்த வரலாறு மிகப்பெரிய உத்வேகத்தை நமக்குப் பாடம் நடத்துகின்றது. ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளங்களையும் தட்டி எழுப்புகின்ற மிகச் சிறந்த வரலாறு இதோ!
மிகப்பெரிய பொய்யன், நாசக்காரன், ஸகீஃப் குலத்தாரிடமிருந்து வருவான் என்று முன்னரே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகப் பயங்கரமான எச்சரிக்கையை விடுத்திருந்தார்கள். அந்த ஸகீஃப் குலத்தாரிடமிருந்து வந்தவன் தான் ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்ற நாசக்காரன்.
(ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் படையால் கொல்லப்பட்டு, பேரீச்ச மரத்தில் சிலுவையிலேற்றித் தலைகீழாகத் தொங்க விடப்பட்டிருந்த) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது உடலை நான் மதீனா(விலிருந்து மக்கா வரும் வழியிலுள்ள) ‘அகபா’ பள்ளத்தாக்கில் கண்டேன்.
அப்போது குறைஷியரும் மற்ற மக்களும் அவரது உடலை(ப் பார்த்துவிட்டு)க் கடந்து செல்லலானார்கள். இறுதியில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வந்து அவர்களுக்கு அருகில் நின்று, “அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்; அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்; அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் (ஆட்சி யாளருக்கெதிரான போராட்டத்தில்) ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்து வந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்து வந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்துவந்தேனே!
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்த வரை நீர் அதிகமாக நோன்பு நோற்பவராகவும் அதிகமாக நின்று வழிபடக்கூடியவராகவும் உறவுகளை அரவணைக்கக் கூடியவராகவும் இருந்தீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! சமுதாயத்தில் நீர் மிகவும் தீயவர் என்றால், (இன்றைய) மக்களில் வேறு யார் நல்லவர்கள்?’’ என்று கூறிவிட்டுப் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (இப்னுஸ் ஸுபைருக்கு அருகில்) நின்றதைப் பற்றியும் அவர்கள் பேசியதைப் பற்றியும் ஹஜ்ஜாஜுக்குச் செய்தி எட்டியபோது, உடனே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரின் உடலை நோக்கி ஆளனுப்பினார். அவரது உடல் மரத்திலிருந்து இறக்கப்பட்டு, யூதர்களின் மையவாடியில் போடப்பட்டது.
அஸ்மா (ரலி) அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்கள் நாசக்கார மன்னராக இருக்கின்ற ஹஜ்ஜாஜுக்கு எதிராக களத்திலே நிற்கின்றார்கள். ஒரு கட்டத்தில் அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களை எதிர்ப்பதற்காக ஹஜ்ஜாஜ் படையை அனுப்புகின்றான். சுமார் எண்பதுக்கும் மேற்ப்பட்ட நபர்களை ஹஜ்ஜாஜ் தன்னந்தனியாக நின்று வேரறுக்கின்றார்.
மேலும், அப்துல்லாஹ் பின் ஸுபைரின் கடுமையான வீரியத்தையும், ஆக்ரோஷத்தையும் கண்டு ஹஜ்ஜாஜ் கதிகலங்கி நிற்கின்றான். அப்துல்லாஹ் பின் ஸுபைரை கொடூரமாகக் கொலை செய்து, பிறருக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கழு மரத்திலே ஏற்றி சிலுவையில் அறைந்து தொங்க விடுகின்றான்.
மக்களெல்லாம் அப்துல்லாஹ் பின் ஸுபைரின் உடலைப் பார்த்து விட்டுக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது, அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மாத்திரம் தன்னுடைய ஆற்றாமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களின் உடலைப் பார்த்துக் கதற ஆரம்பித்து விட்டார்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட ஹஜ்ஜாஜ், அவரது உடலை யூதர்களின் அடக்கத்தலத்தில், அடக்கம் செய்யுமாறு கட்டளையிடுகின்றான். இதன் பிறகு நடைபெற்ற, உள்ளங்களைத் தட்டி எழுப்புகின்ற சம்பவங்களை தொடர்ச்சியாகப் படித்துப் பாருங்கள்!
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் தாயார் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களைத் தம்மிடம் வரும்படி ஹஜ்ஜாஜ் ஆளனுப்பினார். ஆனால், ஹஜ்ஜாஜிடம் வர அஸ்மா (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள். மீண்டும் தம் தூதரை அனுப்பி, “ஒன்று நீயாக வருகிறாயா, அல்லது உமது சடையைப் பிடித்து இழுத்துவரக் கூடியவரை உன்னிடம் நான் அனுப்பட்டுமா?’’ என்று ஹஜ்ஜாஜ் கேட்டார்.
அப்போதும் அஸ்மா (ரலி) அவர்கள் வர மறுத்ததோடல்லாமல், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனது சடையைப் பிடித்து என்னை இழுத்துக் கொண்டுவரக்கூடியவரை நீர் அனுப்பாத வரையில் நான் உம்மிடம் வரப்போவதில்லை’’ என்று கூறிவிட்டார்கள். உடனே ஹஜ்ஜாஜ், “என் செருப்புகள் எங்கே?’’ என்று கூறி அதைப் பெற்று (அணிந்து) கொண்டு, பிறகு (இறுமாப்போடு) விரைவாக நடந்து அஸ்மா (ரலி) அவர்களிடம் வந்தார். பிறகு “அல்லாஹ்வின் விரோதியை (உமது மகனை) என்ன செய்தேன் பார்த்தாயா?’’ என்று கேட்டார்.
அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீ (என் மகன்) அப்துல்லாஹ்வின் இம்மையைச் சீரழித்து விட்டாய்; அவரோ உன் மறுமையைச் சீரழித்து விட்டார் என்றே நான் கருதுகிறேன். நீ அவரை ‘இரு கச்சுடையாளின் புதல்வரே!’ என (நகைப்போடு) அழைப்பாய் என்று எனக்குத் தகவல் கிடைத்தது.
அல்லாஹ்வின் மீதாணையாக! இரு கச்சுடையாள் நான்தான். (மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உணவையும், (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் உணவையும் அவ்விரு கச்சுகளில் ஒன்றால் கட்டி எடுத்துச்சென்றேன். மற்றொன்று ஒரு பெண்ணிடம் அவசியம் இருக்க வேண்டிய கச்சாகும்.
நினைவிற்கொள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “ஸகீஃப் குலத்தாரில் மகா பொய்யன் ஒருவனும் நாசக்காரன் ஒருவனும் இருப்பார்கள்’’ என்று கூறினார்கள். மகா பொய்யனை (முக்தார் பின் அபீஉபைத்) நாங்கள் பார்த்துவிட்டோம். அந்த நாசக்காரன் நீதான் என்றே நான் கருதுகிறேன்’’ என்று கூறினார். உடனே ஹஜ்ஜாஜ் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்; அஸ்மா (ரலி) அவர்களுக்குப் பதிலேதும் சொல்லவில்லை.
மேலே உள்ள சம்பவத்தை ஆழமாகப் படித்துப் பாருங்கள்! இஸ்லாத்திற்காகத் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் பாதங்களை அல்லாஹ் எவ்வாறு உறுதிப்படுத்தியிருக்கின்றான் என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
மகனைக் கொன்று விட்டு, தாயார் அஸ்மாவை ஹஜ்ஜாஜ் என்ற கொடூரன் அழைத்து வரச் சொல்கின்றான். அந்த வீரத்தாய் வர மறுக்கிறாள். மீண்டும் கொடூரன் ஹஜ்ஜாஜ் கேட்கின்றான்; நீயாக வருகின்றாயா? தலைமுடி சடையைப் பிடித்து இழுத்து வர ஆள் அனுப்பவா? என்று கேட்கும்போது, தைரியம் இருந்தால் ஆள் அனுப்புடா? என்று பதிலளிக்கிறார் அஸ்மா (ரலி). செருப்பெடுத்து அணிந்து கொண்டு ஹஜ்ஜாஜே ஓடோடி சந்திக்க வருகின்றான்.
ஹஜ்ஜாஜ் என்ற கொடூரன் அஸ்மா அவர்களைச் சந்தித்து சில பசப்பு வார்த்தைகளைப் பேசுகின்றான். அதற்கு முத்தாய்ப்பாக அஸ்மா (ரலி) அவர்கள் சொன்ன பதில் இதோ!
“ஹஜ்ஜாஜே! நீ (என் மகன்) அப்துல்லாஹ்வின் இம்மையைச் சீரழித்து விட்டாய்; அவரோ உன் மறுமையைச் சீரழித்து விட்டார் என்றே நான் கருதுகிறேன்” வீரப்பெண்மணி வாயிலிருந்து உதிர்ந்த முத்தான வார்த்தைகள்! ஹஜ்ஜாஜ் என்ற கொடூர நாசக்கார மன்னனுக்கு மரண அடி கொடுக்கின்ற பதிலடியாக மாறியது. அஸ்மா பேசியதற்குப் பதிலேதுமின்றி திணறிப் போய் ஓடோடி விடுகின்றான்.
இதற்குப் பிறகு அஸ்மா (ரலி) அவர்கள் தன்னுடைய மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து ஜனாஸாவைத் தோண்டி எடுத்து, தன்னுடைய கைகளாலேயே தன்னுடைய மகனின் ஜனாஸாவைச் சுமந்து வந்து மதீனாவில் இருக்கின்ற மண்ணறைகளில் அடக்கம் செய்தார்கள் என்ற வரலாற்றுத் தகவல்களும் படிப்போரின் உள்ளங்களை உலுக்குகின்ற செய்திகளாக இருக்கின்றன.
யார் இந்த அப்துல்லாஹ் பின் ஸுபைர்? ஆரம்ப காலகட்டத்தில் ஹிஜ்ரத்திற்காக மக்காவிலிருந்து மதீனாவிற்கு நாடு துறந்து செல்லும் போது, இந்த வீரப்பெண்மணி அஸ்மா (ரலி) அவர்கள் இதே அப்துல்லாஹ் பின் ஸுபைர் என்ற தன்னுடைய மகனை வயிற்றிலே சுமந்தவாறு நிறைமாதக் கர்ப்பிணியாகச் சென்றார்.
ஆனால் அதே மகனை இறந்த ஜனாஸாவாக பிற்காலத்தில் நாம் தூக்கி செல்வோம் என்று அவர் ஒருக்காலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
மதீனாவில் அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்கள் பிறந்த போது, அந்தக் குழந்தை நபி (ஸல்) அவர்களிடத்தில் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீத்தம் பழத்தை தன்னுடைய நாவினால் நசுக்கி அந்தக் குழந்தையின் வாயிலே இட்டார்கள்.
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்! எந்தத் தாய்க்காவது தன்னுடைய மகனை, அதுவும் இறந்த ஜனாஸாவை, தன்னுடைய கரத்தாலேயே சுமந்து வருகின்றார் என்றால், இதை விட உச்சகட்ட மன வருத்தமும், வேதனையும் இருக்க முடியுமா? என்றாலும் இஸ்லாத்திற்காக உயிரை அர்ப்பணித்த தன்னுடைய மகனுக்காக அனைத்தையும் சகித்துக் கொண்டு இறைவனிடத்திலே ஒப்படைத்து விடுகின்றார்.
இந்த அற்புதமான செய்தியிலிருந்து…
அராஜக ஆட்சியாளனை எதிர்த்து, கடும் வீரியத்தோடு அப்துல்லாஹ் பின் ஸுபைர் களம் காண்கின்றார்.
அப்துல்லாஹ்வின் வீரியத்தை ஒடுக்க, கொடூரமான முறையில் கொலை செய்து கழு மரத்திலே ஏற்றி விடுகின்றான் கொடூரன் ஹஜ்ஜாஜ்.
பிறகு யூத மண்ணறையில் அடக்கம் செய்கின்றான்.
அப்துல்லாஹ்வின் தாயார் அஸ்மாவை அழைத்து வர சொல்கின்றான்.
வர மறுத்து கண்டித்து எச்சரித்து அனுப்புகின்றார் அஸ்மா (ரலி) அவர்கள்.
ஹஜ்ஜாஜே வந்து அஸ்மாவிடம் பேசுகின்றான்.
தான் ஒரு வீரப் பெண்மணி, இறைவன் தனது பாதங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றான் என்பதை அஸ்மா (ரலி) தன்னுடைய கண்டன வார்த்தைகளின் மூலமாக பதிய வைக்கின்றார்.
இறந்த, தன்னுடைய மகனை மதீனாவிற்குத் தூக்கி கொண்டு வந்து அடக்கம் செய்தார் அஸ்மா (ரலி) அவர்கள்.
நீ (என் மகன்) அப்துல்லாஹ்வின் இம்மையைச் சீரழித்துவிட்டாய்; அவரோ உன் மறுமையைச் சீரழித்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன் என்று அந்தக் கொடுங்கோலன் ஹஜ்ஜாஜிடம் நேரடியாகவே அஸ்மா (ரலி) கூறுகின்றார்கள்.
உண்மையாகவே இந்தச் செய்தி நம்முடைய உள்ளங்களுக்கு வலுவூட்டுகின்ற செய்தி! உண்மையான இறை நம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளை இந்தச் செய்தி பறைசாற்றுகின்றது. மன உறுதியையும், மன வலிமையும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இறை மார்க்கத்தில் உள்ளவர்களின் பாதங்களை அல்லாஹ் எவ்வாறு உறுதிப்படுத்துவான் என்பதற்கு இந்தச் செய்தி அற்புதமான சான்று!
இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் வரலாறு நெடுகிலும் கொட்டிக் கிடக்கின்றன. இதுபோன்ற வரலாறுகள், சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்ற செய்தி, எத்தனை பெரிய அயோக்கியத்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டாலும் ஒருக்காலும் இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் போதனைகளையும் இழந்து விடக் கூடாது.
எங்களின் உயிரே போனாலும் இஸ்லாத்தை இழக்க மாட்டோம் என்பதை முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய உள்ளங்களில் ஆழப்பதிய வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
எவ்வளவு பெரிய தீய சக்திகள், எத்தனை பெரிய துன்பங்களைக் கொடுத்தாலும், சிரமங்களுக்கு ஆட்படுத்தினாலும் நம் உடற்கூட்டிலிருந்து உயிரைப் பிரிக்கலாமே ஒழிய ஒருக்காலும் ஈமானை பிரிக்க முடியாது.
அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால் அவர்கள் தளர்ந்துவிடவில்லை; பலவீனப்படவில்லை; பணிந்துவிடவும் இல்லை. அல்லாஹ் பொறுமையாளர்களை நேசிக்கிறான்.
“இறைவா! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!’’