இரண்டாம் குத்பா கிடைத்தால் தான் ஜும்ஆ நன்மை கிடைக்குமா?
இரண்டாம் குத்பா கிடைத்தால் தான் ஜும்ஆ நன்மை கிடைக்குமா
பதில்:
இமாம் உரையாற்றுவதற்கு முன் ஜும்ஆத் தொழுகைக்கு வருபவர்களுக்கு குர்பானி கொடுத்த நன்மை கிடைப்பதாகப் பின்வரும் செய்தி கூறுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருந்துடக்கிற்காகக் குளிப்பது போன்று ஜுமுஆவுடைய நாளில் குளித்துவிட்டுப் பள்ளிக்குச் செல்பவர் ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து உபதேசத்தைச் செவியேற்கிறார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் உரையாற்றுவதற்கு முன்பு வந்தவர்களுக்கு குர்பானி கொடுத்த நன்மை கிடைக்கும் என இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இமாம் உரையாற்றிய பின் வருபவருக்கு இந்தச் சிறப்பு கிடைக்காது. ஆனால் அவர் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொண்டதால் ஜும்ஆத் தொழுபவருக்கு ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள மற்ற சிறப்புகள் அவருக்குக் கிடைக்கும்.
அதே நேரத்தில் ஒருவர் இமாம் உரையாற்றுவதற்கு முன்பாகவே வர வேண்டும் என நாடுகிறார். ஆனால் சூழ்நிலையின் காரணமாக இது அவருக்குத் தவறிப் போனால் அவர் நல்லதை நாடியதற்காக அதற்குரிய நன்மையை இறைவன் அப்படியே அவருக்குக் கொடுப்பான்.
நாங்கள் ஓரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், “மதீனாவில் சிலர் இருக்கின்றனர். நீங்கள் ஒரு பாதையில் நடக்கும் போதும், ஒரு பள்ளத்தாக்கைக் கடக்கும் போதும் உங்களுடனேயே அவர்களும் இருக்கின்றனர். நோய் தான் அவர்களை (போருக்கு வர விடாமல்) தடுத்து விட்டது” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)