ஆட்சியை முன்னிலைப்படுத்தும் இயக்கங்கள் ஒர் பார்வை

பயான் குறிப்புகள்: பிற கொள்கைகள்

ஆட்சியை முன்னிலைப்படுத்தும் இயக்கங்கள் ஒர் பார்வை

ஜமாஅதே இஸ்லாமி பற்றி தங்கள் கருத்து என்ன? தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு இயக்கத்தினரும் தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாகத் தான் சொல்வார்கள். அப்படிச் சொல்லாவிட்டால் அந்த இயக்கம் செத்து விடும்.

ஆனால் நேர்வழியில் இருப்பதாக ஒரு இயக்கம் சொல்லிக் கொள்வதால் மட்டும் அது நேர்வழியில் இருப்பதாக ஆகாது. குர்ஆனுக்கும் நபிவழிக்கும் உட்பட்டும் குர்ஆன் ஹதீஸுடன் மோதாமலும் அதன் கொள்கை கோட்பாடுகள் அமைந்திருந்தால் மட்டுமே அது நேர்வழியில் இருப்பதாக ஆகும்.

அபுல் அஃலா மவ்தூதி என்பவர் ஜமாஅத்தே இஸ்லாமீ இயக்கத்தை நிறுவினார். இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதே இந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு இந்தக் கொள்கை இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களால் பரப்பப்படால் கைவிடப்பட்டுள்ளது. தற்போது எந்தக் கொள்கையும் இல்லாமல் குருட்டுப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.

குர்ஆனையும், நபிவழியையும் கடைப்பிடிக்குமாறு நாம் கூறி வருகிறோம். ஆனால் இவர்கள் பல இடங்களில் இந்த விஷயத்தில் வளைந்து கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் நபிமொழிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யத் துணிந்துள்ளார்கள்.

குர்ஆன் ஹதீஸ் கூறும் நல்ல விஷயங்களை எடுத்துரைப்பது இவர்களின் நோக்கமல்ல. மக்களிடம் உள்ள எந்தப் பாவங்களை குர்ஆனும் ஹதீஸ்களும் கண்டிக்கின்றனவோ அந்த பாவங்களைப் பற்றி இவர்கள் பேசமாட்டார்கள். அவற்றின் அபாயங்களை விளக்கி மக்களை எச்சரிக்க மாட்டார்கள். ஆனால் நம்மைப் போல் எச்சரிப்பவர்களை விமர்சனம் செய்யச் ச ளைக்க மாட்டார்கள்.

உதாரணமாக தர்ஹா வழிபாடுகள், பித்அத்கள், மத்ஹப், அனாச்சாரங்கள் ஆகியவை தவறு என்று தெரிந்தும் இவற்றைப் பற்றி மக்களிடம் பேச மாட்டார்கள். மத்ஹப்களில் ஏதாவது  ஒரு மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்று இவர்களுடைய அமைப்பினர் நிறுவனர் மௌதூதி கூறியுள்ளார்.

சுருங்கச் சொல்வதென்றால் மக்கள் எந்தக் கொள்கையில் இருக்கிறார்களோ அதுவே இவர்களின் கொள்கை. மக்கள் எதை வெறுக்கின்றார்களோ அதை இவர்களும் வெறுப்பார்கள். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை இவர்களும் விரும்புவார்கள்.

மார்க்கத்தை நிலைநாட்டுங்கள் என்று கூறும் திருக்குர்ஆன் வசனத்தைக் சொல்லி மக்களை மாநாட்டிற்கு அழைப்பார்கள். ஆனால் மார்க்கத்தைப் புறக்கணிப்பவர்களில்  இவர்களே முன்னோடியாகத் திகழ்வார்கள்.

இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வருவதற்காக இறைத் தூதர்கள் அனுப்பப்படவில்லை. இது இறைவனின் நோக்கமும் அல்ல. ஏகத்துவக் கொள்கையைப் போதிப்பதற்காகவும் அல்லாஹ் கூறிய அடிப்படையில் மக்களை வாழ வைப்பதற்காகவுமே இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர்.

“அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.

(அல்குர்ஆன்: 16:36)

அல்லாஹ் மனிதர்களாகிய நம்மைப் படைத்ததே அவனுக்குக் கட்டுப்பட்டு அவன் கூறியவாறு  வாழ வேண்டும் என்பதற்காகத் தான்.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

(அல்குர்ஆன்: 51:56)

இவ்வாறு இஸ்லாத்தை ஏகத்துவக் கொள்கையை உறுதியாகப் பிரச்சாரம் செய்யும் போது அது அதிகமான மக்களை ஈர்த்து பெரும்பான்மையாக மாறினால் அப்போது ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்படலாம். மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இஸ்லாமிய ஆட்சி அமையாது.

நபிமார்களீல் மிகச் சிலர் தான் உலகில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். பல    நபிமார்கள் உலகில் வெற்றி பெறவில்லை. ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் என்ற கணக்கில் கூட நபிமார்களை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது. சில நபிமார்கள் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். எனவே இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது இஸ்லாத்தின் கொள்கையாக ஒரு காலத்திலும் இருந்ததில்லை.

இந்த நச்சுக்கருத்து காரிஜிய்யாகளின் கொள்கையாக இருந்த்து. அதனால் முஸ்லிம்களே முஸ்லிம்களை வெட்டிக் கொலை செய்யும் நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நச்சுக் கருத்து தலை எடுக்காததால் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் தம்மைத் தாமே வெட்டிக் கொலை செய்யும் நிலை ஏற்படவில்லை.

செத்துப் போன இந்தக் கொள்கையை இக்வானுல் முஸ்லிமீன் இயக்கமும் மவ்தூதியும் மறுஉயிர் கொடுத்த பிறகு தான் இஸ்லாமிய ஆட்சி அமைப்பதாகச் சொல்லிக் கொண்டு முஸ்லிம்களே முஸ்லிம்களைக் கொலை செய்யும் முஸீபத் மீண்டும் தலை எடுத்தது.

இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தப் புறப்பட்டுள்ள இவர்கள் சொல்வது சரியான கருத்து என்றே வைத்துக் கொள்வோம். ஆட்சி அமையும் வரை இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் அல்லவா? ஆட்சி தான் இலட்சியம் என்று ஆன பின் அதற்கான ஆதராவைப் பெருக்கிக் கொள்வதற்காக வளைந்து கொடுப்பது மட்டுமே இவர்களின் ஒரே கொள்கையாகிப் போது.

இஸ்லாமிய ஆட்சி இல்லாத போதும் நமது சக்திக்கு உட்பட்ட எத்தனையோ விஷயங்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியும். இஸ்லாமிய ஆட்சி இருந்தால் தான் அல்லாஹ்வை வணங்க முடியும் என்ற நிலை தற்போது இலலை.

தன் சக்திக்கு உட்பட்டு அல்லாஹ்வை முறைப்படி வணங்குவதற்கு வாய்ப்பிருந்தும் அந்த வாய்ப்பை ஜமாஅத்தே இஸ்லாமீ இயக்கத்தினர் பயன்படுத்துவதில்லை. பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்களை உண்மை முஸ்லிம்களாக மாற்ற முயற்சிப்பதல்லை. இந்நிலையில்  இஸ்லாமிய ஆட்சியை இவர்கள் கொண்டு வரப் போகிறார்களாம்.

இப்படிப்பட்ட கொள்கையற்ற கூட்டத்தால் உருவாக்கப்படும் இஸ்லாமிய ஆட்சி எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை நாம் யோசிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

குர்ஆன் ஹதீஸில் சொல்லப்படும் அனைத்தையும் வளைந்து கொடுக்காமல் வீரியமாக யார் பிரச்சாரம் செய்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றார்களோ அவர்களாலேயே உண்மையான இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முடியும்.

ஸபூர் வேதத்தில் அறிவுரைக்குப் பின் “பூமியை எனது நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள்” என்று எழுதியிருந்தோம்.

(அல்குர்ஆன்: 21:105)

ஏகத்துவக் கொள்கை உள்ளவர்களால் மட்டுமே இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில்  அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

(அல்குர்ஆன்: 24:55)

நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை வீரியத்துடன் மக்களுக்குப் போதனை செய்தார்கள். குர்ஆனுக்குக் கட்டுப்பட்டு வாழும் உண்ணதமிக்க சமுதாயத்தை உருவாக்கினார்கள். இதன் விளைவாக மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தனர். தானாக இஸ்லாமிய ஆட்சி அமைந்தது.

நபி (ஸல்) அவர்கள் சென்ற அதே வழியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த பாதையில் வீரியத்துடன் முழு முயற்சியையும் செலுத்தி பாடுபடும் போது இறைவன் நாடினால் இஸ்லாமிய ஆட்சி அமையும்.

இந்த வழியை விட்டுவிட்டு இஸ்லாமிய ஆட்சி வேண்டும் என்று வெறுமனே கூக்குரல் இட்டுக்கொண்டிருந்தால் கண்டிப்பாக இஸ்லாமிய ஆட்சி அமையாது. சமுதாயம் சீரழிந்து நாசமாகி விடும். இந்த தவறான பாதையிலே ஜமாஅத்தே இஸ்லாமீ பயணித்துக்கொண்டிருக்கன்றது.

ஜமாஅதே இஸ்லாமியை எதிர்ப்பது ஏன்?

ஜமாஅதே இஸ்லாமி இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் நம்மை விமர்சனம் செய்வதில்லை அந்த வகையில் அவர்களின் தலைவர்களை நாம் விமர்சனம் செய்வதில்லை. ஆனால் அவர்களின் கொள்கையில் நாம் முரண்படுகிறோம். இஸ்லாமிய அரசை நிறுவுவது தான் இஸ்லாத்தின் இலட்சியம் என்ற கொள்கையின் மீது இந்த இயக்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை முற்றிலும் தவறாகும்.

நாம் சத்திய இஸ்லாத்தைச் சொல்ல வேண்டும். அதன் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு பெரும்பான்மை பெற்றால் அப்போது இஸ்லாமிய அரசு உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றால் அதில் நமக்கு மறுப்பு இல்லை. ஆனால் ஆட்சியை உருவாக்குவது தான் இஸ்லாத்தின் ஒரே கொள்கை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நான் இஸ்லாமிய அரசை உருவாக்கப் போகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்ததில்லை.

மேலும் மறுமையை முன்னிறுத்தி இஸ்லாத்தின் பால் அழைத்தால் தான் மக்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவார்கள். இஸ்லாமிய் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று பிரகடணம் செய்து விட்டு அழைத்தால் ஆட்சி அமைப்பது தான் இவர்களின் திட்டமா? நம்மை ஆள்வதற்குத் தான் இஸ்லாத்துக்கு அழைக்கிறார்களா என்று கருதி அனேகமானோர் இஸ்லாத்துக்கு வருவதற்கு இது தடையாகி விடும் என்ற சாதாரண விஷயம் கூட இவர்களுக்குப் புரியவில்லை.

மேலும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அபத்தமான கொள்கையைக் கையில் எடுத்ததால் எந்தப் பிரச்சனையை அதிகமான மக்கள் ஏற்க மாட்டார்களோ அந்த விஷயங்களைச் சொல்லக் கூடாது என்று அடுத்த நிலைபாட்டை எடுத்தனர்.

சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசக் கூடாது; சின்ன விஷயங்களைப் பேசக் கூடாது அப்போது மக்கள் (பாவங்கள் செய்வதில்) ஒற்றுமையாக இருப்பார்கள் என்ற அபத்தமான கருத்தை வைத்தனர். அப்போது தான் அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியும் என்பது இவர்களின் கணக்கு.

(நம்மைத் தவிர அனைவருடனும் இவர்கள் சமரசம் செய்து கொண்ட போதும் அவர்களின் திட்டம் பயனளிக்கவில்லை. தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எந்த அளவு மக்கள் ஆதரவு உள்ளதோ அதில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு கூட தமிழகத்தில்ஆதரவு இல்லை என்பது தான் ரிஸல்ட். பாகிஸ்தானில் கூட இவர்கள் மக்கள் ஆதரவைப் பெற முடியவில்லை.

இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதாக கூறும் இவர்கள் இஸ்லாமிய ஆட்சி அமையும் போது எந்த அடிப்படையில் ஆட்சி அமைப்பார்கள்? மத்ஹபு அடிப்படையலா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலா? பரேலவிக் கொள்கை அடிப்படையிலா? இவர்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்று ஆட்சி அமைக்கும் போது எந்த முறையில் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று கூறுவார்களானால் அந்த வினாடியே சுக்கு நூறாகச் சிதறிப் போய் விடுவார்கள.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் ஆட்சி என்று அவர்கள் கூறினால் மதஹப் தரீக்கா வாதிகள் உடனே கைகழுவி விடுவார்கள். வணக்க வழிபாடுகளையே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைத்துக் கொள்ளாதவர்கள் எப்படி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆட்சி செய்வார்கள் என்பதும் கவனிக்க வேண்டியதாகும்.

நடக்காத ஒன்றைக் கூறி மக்களை மதி மயக்கத்தில் நாளை மறு நாள் இஸ்லாமிய ஆட்சி மலர்ந்து விடும் என்ற போதையில் வைத்திருப்பது தான் இவர்களின் திட்டம் என்பது தெரிகிது.

மேலும் இவர்களின் தலைவர் மவ்தூதி அவர்கள் மதஹபை நியாயப்படுத்தியதை மாலை அமர்வுகளில் என்ற இவர்களின் வெளியீட்டிலும், இது தான் இஸ்லாம் இரண்டாம் பாகத்திலும் எடுத்துக் காட்டியுள்ளனர். சாதாரண அறிவு படைத்தவனுக்கே மத்ஹப் என்பது அபத்தம் என்பது விளங்குகிறது. ஆனல் இவர்கள் அப்பட்டமாக மதஹபை ஆதரிக்கின்றனர்.

ஜனநாயகம் ஷிர்க், மனிதனுக்குக் கட்டுப்படக் கூடாது, ஆட்சியமைப்பதற்காக முஸ்லிம்களைக் கொல்லலாம் என்பதெல்லாம் இவர்களின் கொள்கையாக இருந்தது. இவர்களைப் பற்றி இலங்கையில் ஆற்றிய உரையில் நான் விரிவாக விளக்கியுள்ளேன்.  மேலும் 72 கூட்டம் என்ற தொடரிலும் இதை விளக்கியுள்ளேன்.

இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் கொள்கை என்ன?

எகிப்தில் ஹசனுல் பன்னா என்பவர் இக்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தை உருவாக்கினார்.  “இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்று இவர்கள் கூறிக் கொள்கிறார்கள்.

ஆனால் இவர்களின் பிரச்சாரத்தையும் செயல்பாட்டையும் கவனித்தால் இவர்கள் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் பாடுபடவில்லை. தங்களை ஆட்சியாளர்களாக ஆக்கிக்கொள்ள மார்க்கத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் என்பதை அறியலாம்.

குர்ஆன் ஹதீஸில் ஆட்சி அதிகாரம் பற்றி வரும் வசனங்களை மட்டும் படிப்பார்கள். இதைத் தங்களுடைய கொள்கைக்கு ஆதாரங்களாகக் கூறிக் கொள்வார்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், கடமைகள், வணக்க வழிபாடுகள், இஸ்லாம் வன்மையாக கண்டித்த பாவங்கள் ஆகியவற்றைப் பற்றி குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் நிறைய கூறப்பட்டிருக்கும்.

இவர்கள் அதைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள். சிந்திக்க மாட்டார்கள். மக்கள் இஸ்லாத்துக்கு மாற்றமாக வாழ்ந்துகொண்டிருந்தாலும் உண்மையான இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல மாட்டார்கள். மாறாக வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் மக்களிடத்தில் கூட இஸ்லாமிய ஆட்சியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.

இந்த இயக்கத்தில் இருப்பவர்களிடம் கூட இஸ்லாமிய ஒழுங்கு முறைகளையும், நெறிமுறைகளையும் பார்க்க முடியாது. இஸ்லாமியப் போதனைகளில் பிடிப்பில்லாத இவர்கள் இஸ்லாமிய ஆட்சியை எப்படி உருவாக்க முடியும்? அப்படி உருவாக்கினால் அந்த ஆட்சி இஸ்லாமிய ஆட்சியாக இருக்குமா? என்று சிந்திக்க வேண்டும். இவர்கள் மக்களிடம் இஸ்லாத்தைக் காட்டி ஓட்டுக் கேட்பதால் கேவலத்தில் மற்ற அரசியல்வாதிகளை மிஞ்சிவிட்டனர்.

இவர்கள் தங்கள் இயக்கத்துக்கு இக்வானுல் முஸ்லிமீன் இஸ்லாமிய சகோதர இயக்கம் என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் இந்தப் பெயருக்கு ஏற்ப இவர்கள் நடப்பதில்லை. இவர்களின் அறியாமையை யாராவது ஒரு முஸ்லிம் சகோதரன் தெளிவுபடுத்தினால் அவனைக் கொல்லக் கூட தயங்க மாட்டார்கள். ஜிஹாத் என்ற பெயரால் இவர்கள் கொன்று குவித்த இஸ்லாமியர்களின் பட்டியல் ஏராளம்.

ஆட்சி அதிகாரத்தைப் பற்றி பேசும் இவர்கள் இஸ்லாம் ஆட்சி அதிகாரத்தை எந்த இடத்தில் வைத்திருக்கின்றது? எந்தச் சூழ்நிலையில் அதற்காக பாடுபடச் சொல்கிறது? என்பதைச் சிந்திக்க மாட்டார்கள். இது பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறிய நெறிமுறைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

இந்த இயக்கத்தின் அசத்தியக் கொள்கையை அச்சுப் பிசகாமல் பின்பற்றக் கூடியவர்கள் வேறு பெயர்களில் நம் நாட்டில் இருக்கின்றார்கள். மார்க்கத்தை துஷ்பிரயோகம் செய்யும் இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இப்போது கூட மனிதச் சட்ட்த்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதற்காக எகிப்து தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளனர். இத்துடன் இஸ்லாமிய ஆட்சி கோஷத்தை சவப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விட்டார்கள். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தினரைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கொள்கை இல்லாக் கூட்டம்

பொதுவாக எந்த ஒரு இயக்கமானாலும் அவர்களுக்கென்று ஒரு கொள்கை கோட்பாடு இலட்சியம் இருக்க வேண்டும். ஒவ்வொரு இயக்கத்துக்கும் கொள்கை என்பது உயிர் மூச்சைப் போன்று அவசியமானதாகும். கொள்கை இல்லாத இயக்கம் செத்த உடலைப் போன்றது. அந்தக் கொள்கை சரியா? தவறா? என்பது ஒரு புறம் இருந்தாலும் கொள்கை என ஒன்று இருக்க வேண்டும்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தன்னை ஒரு இயக்கம் என்று கூறி வருகின்றது. ஆனால் இவர்களுக்கென்று நிலையான எந்தக் கொள்கையும் கிடையாது. கொள்கையற்ற கூட்டத்துக்கு மிகப் பொருத்தமான உதாரணமாக இவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஃபாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்பது சமீபத்தில் இவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பு. இவர்கள் பல்வேறு பெயர்களில் பல இயக்கங்களாக இயங்கி வருகின்றனர்.

இவர்கள் மற்றவர்களைப் போல் ஒரு குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தான் முதலில் இயக்கத்தைத் துவங்கினார்கள். ஜனநாயகம் என்பது ஷிர்க் (இணைவைப்பு) கொடிபிடிப்பதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் ஓட்டுப் போடுவதும் கூடாது. மொத்தத்தில் இந்திய அரசாங்கத்திற்குக் கீழ் வாழ்வது மார்க்கத்திற்கு விரோதமானது என்று பிரச்சாரம் செய்து வந்தனர். இந்தக் கொள்கையை நோக்கி மக்களை அழைத்தனர்.

குஜராத் கலவரம் போன்ற நாட்டில் நடந்த கலவரங்களை எடுத்துக் கூறி மக்களிடையே இனவெறியை ஏற்படுத்த முயற்சித்தனர். தங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்கு இந்தக் கலவரங்களை ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

ஆனால் உண்மையில் இந்தக் கொள்கையில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. ஜிஹாத் என்று கூறியது ஆள் பிடிப்பதற்குத் தானே தவிர செயல்படுத்துவதற்கு அல்ல என்பதை இவர்கள் தங்கள் நடவடிக்கை மூலம் நிரூபித்து விட்டனர்.

பைஅத் என்ற பெயரில் தாங்கள் என்ன சொன்னாலும் கேட்கக் கூடிய ஏமாளிகள் உருவான பின், தாங்கள் இது வரை கூறி வந்ததை அப்படியே மாற்றி விட்டனர்.

இப்போது ஜனநாயகம் கூடும் என்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கொடி தூக்கக்கூடாது என்று சொன்னவர்கள் இன்றைக்கு கொடிக்கு சல்யூட் அடிக்கின்றார்கள். ஓட்டுப் போடுவது கூடாது என்று சொன்னவர்கள் இன்றைக்கு எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஓட்டுப் பொறுக்க ஆரம்பித்து விட்டனர்.

தனது கொள்கை தவறு என்பதை உணர்ந்து பிறகு கொள்கையை மாற்றும் நிலை ஒரு இயக்கத்துக்கு ஏற்படலாம். சரியான கொள்கைக்காக கொள்கை மாற்றம் செய்வது தவறல்ல. இந்த மாற்றம் அவசியமானது.

ஆனால் இவ்வாறு தனது கொள்கையை ஒரு இயக்கம் மாற்றும் போது அதை முறையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். தங்களது பழைய நிலைபாடு தவறானது என்று மக்களுக்கு முன்னால் ஒப்புக் கொள்ள வேண்டும். கொள்கை மாற்றத்துக்கான நியாயமான காரணங்களை மக்கள் மன்றத்தில் விவரிக்க வேண்டும்.

ஆனால் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையையே மாற்றிய இவர்கள் இவற்றில் எதையும் செய்யவில்லை. மாறாக கள்ளத் தனமாக கொள்கையை மாற்றிக் கொண்டனர். இஸ்லாமிய மார்க்க நெறிகளுக்காக உண்டாக்கப்பட்ட இயக்கங்களும் சமுதாயத்தில் உள்ளன. மார்க்க விஷயத்தில் எந்த தலையீடும் இல்லாமல் அரசியல் நடவடிக்கையில் மட்டும் இறங்கும் இயக்கங்களும் உள்ளன.

அரசியல் நடவடிக்கையில் மட்டும் ஈடுபடும் இயக்கங்கள் மார்க்க விஷயமாக எந்தக் கொள்கைப் பிரச்சாரமும் செய்வதில்லை. பாப்புலர் பிரண்ட் இயக்கம் மார்க்க இயக்கம் அல்ல என்று தெளிவாக அறிவித்துள்ளனர். அப்படியானால் மார்க்க சம்மந்தமான சர்ச்சைகளில் ஒதுங்கி இருக்க வேண்டும். இவர்கள் சரியான மார்க்கத்தை உள்ளது உள்ள படி சொல்லும் தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக கிறுக்குத் தனமான வாதங்களை எடுத்து வைத்து சமூக சீர்திருத்தத்துக்கு வேட்டு வைக்கிறார்கள்.

சுன்னத்தான காரியங்களை மக்களிடம் சொல்லி ஒற்றுமையைக் குலைக்கக் கூடாது; ஏனெனில் ஒற்றுமை கடமையாகும். கடமையை பாதிக்கும் வகையில் சுன்னத்தை செய்யக் கூடாது என்ற புது கண்டு பிடிப்பை இவர்கள் கூறி அல்லாஹ்வின் தூதரின் நடைமுறைகளை சாகடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஒற்றுமை கடமை என்று மார்க்க அறிவற்ற மடையர்கள் தான் சொல்ல முடியும்.

அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்ற கலிமாவே ஒற்றுமையைத் தகர்த்து எறியும் வகையில் தான் உள்ளது. செத்துப் போனவர்களை வணங்கக் கூடாது என்று நாம் கூறும் போது அந்த விநாடியே ஒற்றுமை காணாமல் போய் விடும்.

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது முக்கியமான கடமையாகும். தீமைகளைத் தடுத்தால் அந்த விநாடியே ஒற்றுமை காணாமல் போய்விடும்.

தொழகையை நபியவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் தொழுவது அவசியமில்லை. அவரவர் இஷ்டப்படி குருட்டாம் போக்கில் எப்படி வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். இதைத் தவறு என்று விமர்சனம் செய்யக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

மக்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தி நபிவழியை ஓரங்கட்டுவதற்கு இப்படி கேடுகேட்ட வாதங்களை முன்வைக்க இவர்களின் நாவுகள் கூசுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்தை அழிவில் தள்ளுபவர்களே தவிர நன்மை செய்பவர்கள் அல்ல.

நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல

வீதிவீதியாக இறங்கி பல்வேறு நலப்பணிகள் செய்வதாகக் கூறி மக்களிடம் வசூல் செய்கின்றனர். மக்களிடம் கணக்கில்லாமல் வசூல் செய்யும் இவர்கள் இதற்கான கணக்கு வழக்குகளை மக்களிடம் தெரிவிப்பதில்லை.

வசூலிக்கப்பட்ட பணத்தை இவர்களில் ஒருவர் கையாடல் செய்தால் இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வராமல் மூடி மறைப்பதற்கு இது வழிகோலும். மக்கள் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மக்கள் பணம் தனி நபர்களின் சுயலாபத்திற்காகச் சூரையாடப்படும். எனவே இவர்களைப் போன்று மக்களிடம் வசூலித்துவிட்டு கணக்கு காட்டாதவர்களை மக்கள் நம்பக் கூடாது.

வசூல் வேட்டையில் இறங்கும் இவர்கள் மார்க்க நெறிமுறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் காசு பணத்தைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

நோன்புப் பெருநாளுக்கு முன் ஏழை எளியவர்களின் நலனுக்காக ஃபித்ரா என்ற நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒவ்வொருவரின் மீதும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. இந்தத் தர்மம் இரண்டரை கிலோ தானியம் அல்லது அதன் மதிப்புக்கு நிகரான கிரயமாக இருக்க வேண்டும் என இஸ்லாம் நிர்ணயம் செய்துள்ளது.

ஆனால் ஃபித்ராவை நாங்களும் வசூலிக்கிறோம் என்று கூறி களத்தில் இறங்கும் இவர்கள் இஸ்லாம் நிர்ணயித்த அளவைக் கவனத்தில் கொள்ளாமல் கைக்குக் கிடைப்பதை வாங்கிக் கொள்கிறார்கள். ஒருவர் நோன்புப் பெருநாள் தர்மமாக 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் கொடுத்தால் இது ஃபித்ரா கிடையாது என்று அவருக்கு விளக்கிக் கூறி அவர் முறையாக கொடுக்க வேண்டிய தொகையை வாங்க வேண்டும்.

ஆனால் இவர்கள் அந்த 5 ரூபாயையும் 10 ரூபாயையும் வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றனர். இந்த அற்பத்தொகையைக் கொடுத்தவன் தான் ஃபித்ரா என்ற நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றிவிட்டதாக தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறான். இப்படி காசு பணத்துக்காக மக்களின் மார்க்கத்துடன் விளையாடுகிறார்கள்.

மற்ற வசூல்களில் இருந்து பித்ரா என்பது வேறுபட்ட தர்மமாகும். இது பெருநாள் தினத்தில் ஏழைகள் மகிழ்வோடு தரமான உணவு உண்ண வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காக தான் கடமையாக்கப்பட்டது. ஆனால் இவர்கள் பித்ரா என்ற பெயரில் பணத்தை திரட்டுகிறார்களே தவிர ஊர்கள் தோறும் அந்தப் பணத்தை விநியோகிப்பது இல்லை. வசூலித்தது இவ்வளவு ரூபாய்கள். அதை இன்னின்ன ஊர்களில் இவ்வளவு தொகை என விநியோகித்து விட்டோம் என்று இவர்கள் ஒரு நாளும் கணக்கு காட்டியதில்லை.

அப்படியானால் அந்தப் பணம் என்னவானது? தலைமைக்கு அனுப்பட்டட்டதா? அல்லது உள்ளூரில் உள்ளவர்கள் சம்பாதித்துக் கொள்ளட்டும் என்பதற்காக அவர்களின் தலைமை அனுமதி கொடுத்து உள்ளூரில் உள்ளவர்களும் வெளிநாட்டில் வசூலிப்பவர்களும் பங்கு போட்டுக் கொள்கிறார்களா? இதற்கு எந்த பதிலும் அவர்களால் சொல்லப்படவில்லை.

பாலஸ்தீனர்களுக்காக உதவுகிறோம் என்று பள்ளிவாசல் தோறும் நிதி திரட்டினார்கள். ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு வசூலானது? யாருக்கும் தெரியாது. மொத்த வசூல் எவ்வளவு? யாருக்கும் தெரியாது. பாலஸ்தீனத்தில் இதை எப்படி யாரிடம் விநியோகித்தார்கள்? யாருக்கும் தெரியாது.

சிறைவாசிகளுக்கு உதவப் போகிறோம் என்று பீலி என்ற அமைப்பை உருவாக்கி பெரிய அளவில் வசூலித்தார்கள். தங்களின் அன்றைய அதிகாரப்பூர்வ பத்திரிகை மூலம் அப்பீல் போட்டு வந்தார்கள். ஆனால் ஊர்கள் தோறும் இவர்கள் வசூலித்த்து எவ்வளவு? எந்த சிறைவாசிகளிடம் கொடுத்தார்கள்? எந்த விபரமும் யாருக்கும் தெரியாது.

குர்பானித் தோல்களை ஏழை எளியவர்களுக்கு தர்மமாக கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. ஆனால் இவர்கள் குர்பானித் தோல்களைத் திரட்டி அந்தந்த் ஊர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகம் செய்ததில்லை. என்ன செய்கிறார்கள்? தங்கள் இயக்கத்துக்காக வைத்துக் கொள்கிறார்களா? அல்லது அந்தந்த ஊரில் உள்ளவர்கள் போட்டுக் கொள்கிறார்களா? ஒருவருக்கும் தெரியாது.

குர்பானி மட்டுமின்றி ஸகாத்தாக தர்மமாக வழங்கப்படும் பொருட்களையும் குறிப்பிட்ட சிலருக்கே வழங்க வேண்டும் என்று மார்க்கம் விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. மார்க்க சட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதைப் பேணக் கூடியவர்கள் தான் மக்களிடம் வசூலிக்கும் பொருட்களை அதற்குரியவர்களிடம் முறையாக ஒப்படைப்பார்கள்.

இவர்களுக்கு கொள்கையோ கோட்பாடோ சட்டதிட்டங்களோ எதுவும் கிடையாது. இப்படிப்பட்டவர்கள் மக்களிடம் வாங்கும் பொருட்களை அதற்குரிய பணிகளுக்கு எப்படி முறையாகச் செலவிடுவார்கள்? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயக்கத் தலைவர் ஒரு ஊருக்கு வந்தால் அவரை வரவேற்பதற்காக போஸ்டர்கள் அடித்து தனிமனித வழிபாட்டை அரங்கேற்றுகின்றனர்.

மேலும் இவர்களின் இயக்க நிர்வாகிககள் ஜனநாயக முறையில்  தேர்வு செய்யப்படுவதில்லை. இயக்கத் தொண்டர்களின் அங்கீகாரம் இல்லாமல் ஒரு கதம்பமான முறையிலேயே நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

நிர்வாகத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் அதைத் தட்டிக்கேட்கும் உரிமையோ அவர்களைப் பொறுப்பிலிருந்து நீக்கும் உரிமையோ இயக்க உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.  தனி மனிதருடைய சொத்தைப் போன்றே இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றது.

மேலும் பதவிக்காக தேர்தலில் போட்டியிடுகின்றனர். தனக்காக மக்களிடம் ஓட்டுக் கேட்கின்றனர். இதனால் சமுதாயத்துக்கு எந்த நன்மையும் இல்லை. குறிப்பிட்ட சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு தங்கள் இயக்கத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் இதைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

அரசியல் சாக்கடையில் இறங்கிய இவர்கள் மார்க்க நெறிமுறைகளை மீறத் தொடங்கியுள்ளனர். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தங்களது தேர்தல் பிரச்சாரங்களிலும் நிகழ்ச்சிகளிலும் இசையுடன் கூடிய பாடல்களைப் பாடவிடுகின்றனர். பெரும் பெரும் டிரம்ஸ்களைக் கொண்டு வந்து ஒலி எழுப்புகின்றனர்.

அனைத்து தரப்பு மக்களின் ஓட்டைப் பொறுக்குவதற்காக விநாயகர் சதுத்தி கிறிஸ்துமஸ் பொங்கல் போன்ற மாற்று மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து பேனர்கள் வைத்து அவற்றை ஆதரிக்கும் கேவலமான நிலைக்குச் சென்றுள்ளனர்.

கொடி வணக்கம் என்ற இணைவைப்பு

கொடிக்கு சல்யூட் அடிக்கும் மாற்று மதக் கலாச்சாரத்தை இவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் புதிதாகக் கொண்டு வந்துள்ளனர். கொடிக்கு சல்யூட் அடிப்பது கொடி வணக்கம் என்று நடைமுறையில் கூறப்படுகின்றது. வணக்கமாகக் கருதப்படும் இந்தக் காரியத்தை ஒரு முஸ்லிம் எப்படிச் செய்ய முடியும்?

கொடி என்பது சாதாரணத் துணி. அதை மனிதன் தான் தயாரித்தான். தன் இயக்கத்துக்கு அடையாளமாக அதைப் பயன்படுத்தினால் அதில் தவறு ஏதுமில்லை. ஆனால் அதை இவர்கள் மனிதனை விட உயர்ந்த மதிக்கத்தக்க பொருளாகப் பார்க்கின்றார்கள். எனவே தான் அதற்கு சல்யூட் அடிக்கின்றனர்.

கொடியை கொடியுடைய அந்தஸ்தில் வைக்காமல் மனிதனை விட உயர்ந்த நிலையில் வைக்கின்றனர். மனிதர்களை விட சிறப்புப் பெறுவதற்கு அந்தக் கொடியில் அப்படி என்ன இருக்கின்றது? என்று பகுத்தறிவுடன் சிந்திக்கும் எவரும் இந்தக் காரியத்தைச் செய்ய மாட்டார்.

கல்லை கல்லாகப் பார்க்காமல் தன்னை விட மேம்பட்டதாகப் பார்த்த காரணத்தால் தான் சிலை வழிபாடு வந்தது. இணைவைப்பும் மூட நம்பிக்கையும் பெருகுவதற்கு இதுவே காரணம். இஸ்லாம் எதை அழித்து ஒழிப்பதற்காக வந்ததோ அந்த அனாச்சாரங்களை முஸ்லிம் சமூகத்தில் அரங்கேற்றுகிறார்கள். முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜிஹாத் கோஷம்

சரியான இஸ்லாமியக் கொள்கையைக் கூறி இயக்கம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்குக் கிடையாது. மாறாக எந்த வழியில் சென்றால் இலகுவாக மக்களை இயக்கத்தில் சேர்க்க முடியுமோ அந்த வழி மார்க்கம் தடைசெய்த வழியாக இருந்தாலும் அறிவார்ந்த வழியாக இல்லாவிட்டாலும் அதில் செல்லத் தயங்க மாட்டார்கள்.

ஒரு இஸ்லாமிய அரசாங்கம் நீதிக்காக நடத்தும் அறப்போருக்கு ஜிஹாத் என்று இஸ்லாம் கூறுகிறது. போர் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது இஸ்லாமிய அரசின் கீழ் வாழ்பவர்கள் பின்வாங்காமல் போரில் கலந்து கொண்டு இஸ்லாமிய அரசுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது. குர்ஆனும் ஹதீஸ்களும் இதைத் தான் ஜிஹாத் என்று கூறுகின்றது.

ஆனால் இவர்கள் தங்கள் இயக்கத்தை வளப்பதற்காக ஜிஹாதிற்கு புதுமையான விளக்கத்தைக் கொடுத்து மார்க்கத்துடன் விளையாடுகின்றனர். இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தை தற்போது இந்தியாவில் கொண்டுவர வேண்டும். இதற்காக இவர்களுடைய இயக்கத்தில் சேர்வது தான் ஜிஹாத். இந்த ஜிஹாதைத் தான் குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன என்று இறைவனுடைய பயம் இல்லாமல் கூறி வருகின்றனர்.

பொதுவாக போராடுவது எதிர்ப்பது போன்ற குணங்கள் இயற்கையாகவே இளைஞர்களிடம் மிகைத்திருக்கும். இந்தப் பருவம் அறிவுப்பூர்வமாக சிந்திப்பதை விட உணர்வுப்பூர்வமாகவே சிந்திக்கத் தூண்டும். இளைஞர்களிடம் உள்ள இந்தப் பலவீனத்தையும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இளைஞர்களிடையே இன வெறியை ஏற்படுத்துகின்றனர்.

தாங்கள் மட்டுமே வீரமாக மிகப் பெரிய இலட்சியத்திற்காக  பாடுவதைப் போன்று ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த போலித் தோற்றத்தின் மூலம் தங்கள் இயக்கத்தை வளர்க்கலாம் என்று நினைக்கின்றனர்.

இவர்கள் பல வருடங்களாக ஜிஹாத் செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுகின்றனர். ஆண்டுகள் பல கடந்துவிட்டது. இவர்கள் எப்போது எங்கே யாருடன் ஜிஹாத் செய்தார்கள்? தாங்கள் செய்த ஜிஹாதுடைய பட்டியலைத் தர வேண்டும் என்று நாம் இவர்களை நோக்கி கேட்டுக்கொண்டே இருக்கின்றோம். ஆனால் இதைப் பற்றி இவர்கள் வாய் திறப்பதே இல்லை.

தங்களுடைய திட்டங்கள் லட்சியங்கள் நோக்கங்கள் ஆகியவற்றைப் பகிரங்கமாக இவர்கள் மேடைபோட்டு மக்களுக்கு விவரிக்க தைரியமற்றவர்கள். எனவே இரகசியமாகக் கூடி கூடிப் பேசிக் கொள்வார்கள். ஆனால் இது வரை இந்த இரகசியப் பேச்சின் மூலம் இளைஞர்களை ஏமாத்தியதைத் தவிர இவர்கள் சாதித்தது ஒன்றுமில்லை.

நாட்டில் நடந்த குஜராத் போன்ற கலவரங்களைப் பற்றி வாய் கிழியப் பேசியவர்கள் அந்தக் கலவரங்களை அடுத்து இவர்கள் செய்த சாதனைப் பட்டியலை இவர்களால் வெளியிட முடியுமா? இயக்க்தை வளர்ப்பதை மட்டுமே முழு நோக்காகக் கொண்டு பொய்யாகப் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றியது தான் இவர்கள் செய்த சாதனை.

இஸ்லாம் தீவரவாதச் செயலைத் தான் ஜிஹாத் எனக் குறிப்பிடுகின்றது என ஊடகங்களும் பத்திரிக்கைளும் தவறாகச் சித்தரித்து வருகின்றன. மாற்று மதக் கொள்கையில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஜிஹாத் என்றால் தீவிரவாதச் செயல் என்றே புரிந்து வைத்துள்ளனர். இந்தத் தவறான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இவர்களின் ஜிஹாத் கோஷம் அமைந்துள்ளது.

ஒரு மனிதன் தொழுகை நோன்பு ஸகாத் போன்ற வணக்கங்களைப் புரிவதும் பாவங்களைப் புரியாமல் ஒழுக்கமாக வாழ்வதும் அவனுக்கும் அவனைப் படைத்த இறைவனுக்கும் இடையே உள்ள பிரச்சனை. எனவே இந்த ஆண்மீக விஷயங்களில் ஒருவர் நான் முறையாக நடப்பேன் என அல்லாஹ்விடம் மட்டுமே உறுதிமொழி அளிக்க முடியும். இதற்கு பைஅத் என்று இஸ்லாம் கூறுகின்றது.

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற ஒரே காரணத்துக்காக அல்லாஹ்விடம் செய்ய வேண்டிய இந்த உடன்படிக்கையை அவர்களிடம் செய்யலாம் என அல்லாஹ் அனுமதியளிக்கிறான். காரணம் நபி (ஸல்) அவர்களிடம் இவ்வாறு உறுதிமொழி கொடுப்பது தன்னிடம் உறுதிமொழி அளிப்பதற்குச் சமமானது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக  அல்லாஹ் வழங்கிய இந்த அதிகாரத்தை இந்த இயக்கத்தினர் தங்கள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆண்மீக விஷயங்களில் முறையாக நடக்க வேண்டும் என அப்பாவி இளைகஞர்களிடம் வாக்குறுதி வாங்குகின்றனர். இவ்வாறு வாக்குறுதி வாங்குவதற்கு இவர்கள் என்ன நம்மைப் படைத்த இறைவனா? அல்லது அந்த இறைவனாôல் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களா?

தங்களிடம் பைஅத் செய்ய வேண்டும் என இவர்கள் கூறுவதற்குக் காரணம் தங்கள் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் தங்ளை விட்டும் விலகி சென்று விடக் கூடாது என்பதற்காகத் தான். அதாவது நீ வாக்குறுதி தந்திருக்கின்றாய். இந்த வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்தால் இறைவனிடம் நீ பாவியாகி விடுவாய் என்று அப்பாவிகளைப் பயமுறுத்தி தங்கள் இயக்கத்திலேயே காலகாலத்துக்கும் நீடிப்பதற்காக இந்த மாபாதகச் செயலைச் செய்கின்றனர்.

இயக்கத்தை வளர்ப்பதற்காக மார்க்கத்துடன் விளையாடுவதற்கும் இறைவனுடைய அதிகாரத்தில் தலையிடுவதற்கும் இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்கள்.

ஒற்றுமை கோஷம்

நன்மையான விஷயத்தில் ஒன்றுபட வேண்டும். பாவமான காரியங்களில் ஒன்றுபடக் கூடாது என்று இஸ்லாம் ஒற்றுமையை வேறுபடுத்துகின்றது.

சமுதாயத் தீமைகளை நாம் கண்டிக்கும் போது அத்தீமைகளை ஆதரிப்பவர்கள் நம்மை எதிர்ப்பார்கள். தீமைகளை ஆதரிப்பவர்களும் அதை எதிர்ப்பவர்களும் தனித்தனியே பிரிவார்கள். இந்தப் பிரிவை இஸ்லாம் வரவேற்கின்றது. இதற்கு மாற்றமாக தீமையில் அனைவரும் ஒன்றுபட்டு இருப்பதைத் தான் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஆனால் இவர்கள் ஒற்றுமை விஷயத்தில் இஸ்லாம் கூறும் இந்த வித்தியாசத்தைக் கண்டுகொள்ளாமல் ஒற்றுமை வேண்டும் ஒற்றுமை வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர். இந்த வாதத்தின் மூலம் சமூகத் தீமைகள் அழியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இவர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் இந்த கோஷத்தின் மூலம் மார்க்கத்திற்கு எதிராக செயல்பட்டதைத் தவிர எந்த நன்மையையும் சமூகத்தில் ஏற்படுத்தவில்லை.

ஒற்றுமை கோஷம் என்பது கேட்பதற்கு நன்றாகவும், பாமர மக்களை விரைவாக கவரக் கூடியதாகவும் இருப்பதால் இதையும் தங்களுடைய இயக்க வளர்ச்சிக்குச் சாதமாக எடுத்துக்கொண்டுள்ளனர்.

வாயளவில் தான் இவர்கள் ஒற்றுமையைப் பேசி வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் இதற்கு மாற்றமாகவே செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒற்றுமை கோஷத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மற்ற இயக்கத்தினர் ஒரு விஷயத்திற்காகப் போராட்டம் நடத்தும் போது அதில் தான் இவர்கள் பங்கெடுக்க வேண்டுமே தவிர இவர்கள் தனியாக தன் இயக்கத்தின் பெயரில் போராட்டம் நடத்துவது கூடாது.

தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிப்பது? என்ற பிரச்சனை வரும் போது இவர்கள் தனியொரு முடிவை எடுப்பது கூடாது. மாறாக மற்ற அமைப்பினர் எந்த முடிவை எடுக்கிறார்களோ அதற்குக் கட்டுப்பட்டு ஒற்றுமையாக நடக்க வேண்டும்.

மொத்தத்தில் இவர்கள் தனியே இயக்கம் நடத்துவது கூடாது. தன் இயக்கத்தைக் களைத்துவிட்டு மற்ற ஏதாவது ஒரு இயக்கத்தின் கீழ் செயல்பட வேண்டும்.

ஆனால் இவர்கள் அவ்வாறு செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இயக்கத்தை ஆரம்பித்து சமுதாயத்தில் பல இயக்கங்களைத் தோற்றுவித்து சாதனை படைத்து வருகின்றனர்.

பிரிவினை கூடாது என்று பேசிய இவர்கள் தற்போது இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு இரு கூறாக பிரிந்து கிடக்கின்றனர். இந்த வாதத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் எந்த ஒரு நிலையிலும் இவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறுவதும் பிறரை வெளியேற்றுவதும் கூடாது.

ஆனால் இதை இவர்கள் பேணவில்லை. இயக்கத்தை விட்டு வெளியேறியும் பிறரை வெளியேற்றியும் இருக்கின்றனர். எதைக் கூடாது என்று கூறினார்களோ அதைத் தாங்களே செய்து தங்களுக்குத் தானே முரண்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்து விஷயங்களிலும் நமது ஜமாஅத் மற்ற இயக்கங்களை விட்டு வேறுபட்டு தனக்குரிய தூய்மையுடன் தனியே நிற்கின்றது. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிற இயக்கங்கள் செய்யக்கூடிய தவறுகளைத் தயவுதாட்சணையின்றி மக்களிடம் அம்பலப்படுத்தி வருகின்றது.

எனவே இவர்களுக்கு நாம் தான் சிம்ம சொப்பணமாக பெரும் தலைவலியாக இருக்கின்றோம். நம்மை ஒழித்துவிட்டால் இவர்களின் திட்டங்கள் நிறைவேறிவிடும் என்று நினைக்கின்றனர்.

சமீபத்தில் திருவிடைச்சேரியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எள்ளளவு கூட சம்பந்தம் இல்லை. இதை மக்களும் அசாங்கமும் தெளிவாக உணர்ந்துள்ளது. இது தான் உண்மை என்பதை இவர்களும் அறிந்தே வைத்துள்ளனர்.

ஆனால் எப்படியாவது தவ்ஹீத் ஜமாஅத்தை மக்களை விட்டும் அந்நியப்படுத்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த இவர்கள் இந்தப் பிரச்சனை பெரிய ஆயுதமாகக் கருதினர். தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் துப்பாக்கி சூடு நடத்தினர் என்று மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் தவ்ஹீத் ஜமாஅத் அழிந்துவிடும். இதன் பிறகு நாம் மக்களை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று நினைத்தனர்.

தமிழகத்தில் பல பகுதிகளில் 19 அமைப்புகள் சேர்ந்து திருவிடைச்சேரி சம்பவத்தில் நமக்குச் சம்பந்தம் இருப்பதாகவும் நம்மை அரசாங்கம் கைது செய்ய வேண்டும் எனவும் கோரி நீண்ட போஸ்டர்களை ஒட்டினர்.

இந்த 19 அமைப்புகளில் ஓரிரு அமைப்புகளைத் தவிர மீதமுள்ளவை அனைத்தும் இது நாள் வரை மக்களுக்கு அறிமுகமில்லாத லைட்டர் பேடு அமைப்புகளாகும்.

இந்தக் காரியத்தை பாப்புலர் ஃபிரண் ஆஃப் இந்தியா இயக்கத்தினர் தான் முன் நின்று முழு முயற்சியுடன் செய்தனர். ஆனால் இறைவன் இவர்களுக்கு இந்த முயற்சியில் படு தோல்வியையும் கேவலத்தையும் வழங்கினான். இந்த போஸ்டர்கள் மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஒற்றுமை கோஷம் போடும் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதில் மட்டும் தான் ஒற்றுமையைக் கடைபிடிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

 

கோழைத்தனம்

ஒரு காரியத்தில் ஈடுபடும் இவர்கள் இதன் பிறகு வரும் விளைவுகைள எதிர்கொள்ளும் திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ பிரச்சனை வரும் போது ஓடி ஒழியும் கோழைகளாகி விடுகின்றனர்.

ஒருவனை அடிக்க வேண்டியது. அவன் காவல் துறையிடம் சென்று புகார் கொடுத்து காவல் துறை வந்தால் ஊரைவிட்டும் ஓடிவிடுவது. காவல் துறையினர் பிரச்சனையில் சம்பந்தப்படாத முஸ்லிம்களை இழுத்துச் செல்வார்கள். அல்லது தரக்குறைவாகப் பேசுவார்கள். இப்படி இவர்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பலர் இருக்கின்றனர்.

இவர்கள் தான் சமுதாயப் பாதுகாவலர்களாம். இந்தக் கோழைகள் தங்களுக்கு ஜிஹாதிகள் என்று வேறு வெட்கமில்லாம் கூறிக் கொள்கின்றனர்.  ஒரு பிரச்சனை ஏற்படும் போது சமுதாயத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பின் விளைவுகளை யோசித்து ஆக்கப்பூர்வமான முறையில் எதிர் கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பிரச்சனைகளை அனுகுகின்றனர்.

இவர்களின் அவசர புத்தியால் ஒரு சிறிய பிரச்சனை பூதாகரமாகி பெரும் கலவரமாக உருவெடுக்கின்றது. இதன் மூலம் சமுதாயத்துக்கு ஏற்படும் இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் இவர்களே காரணமாக இருக்கின்றனர்.

சத்தியவாதிகள் தங்களுக்கு எதிராகக் கூறப்படும் கருத்துக்களை வரவேற்று அவற்றுக்கு சரியான விளக்கத்தை அளிப்பார்கள். கருத்தை கருத்தால் வெல்வார்கள். அசத்தியவாதிகள் தங்களது வழிகேட்டை நியாயப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்பார்கள். இவர்களைப் பற்றி பிறர் விமர்சனம் செய்யும் போது அதை எதிர்கொள்ள அடிதடியில் இறங்குவதைத் தவிர வேறு எந்த வழியும் இவர்களுக்கு இல்லை. எனவே அடிதடியில் இறங்குவார்கள். தோல்வியைத் தழுவார்கள்.

நமது மார்க்க அழைப்பாளர்கள் இவர்களின் சறுகல்களையும் வழிகேடுகளையும் மக்களுக்கு விளக்கும் போது இவர்கள் அந்த விமர்சனங்களுக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு நமது அழைப்பாளர்கள் தாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இந்தத் தாக்குதலில் கூட இவர்கள் கோழைகள் என்பதையே வெளிப்படுத்துகின்றனர். மார்க்க சம்பந்தமாக கேள்வி கேட்பதாக நமது அழைப்பாளரை அழைத்துச் சென்று கூட்டாக பலர் சேர்ந்து கொண்டு தனி நபரை ஆயுதங்களால் தாக்குகிறார்கள் என்றால் இவர்களின் கோழைத் தனத்தை எப்படி வர்ணிப்பது என்று நமக்குத் தெரியவில்லை.

இவர்களின் தகிடுதத்தங்களைப் புரிந்து கொண்டு இவர்களின் இயக்கத்திலிருந்து சிலர் வெளியேறியுள்ளனர். இவ்வாறு வெளியேறியவர்களை இவர்கள் விட்டு விடுவதில்லை. மீண்டும் தங்களது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுக்கின்றனர். இதற்குக் கட்டுப்பட மறுப்பவரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்வதாக மிரட்டுகின்றனர்.

ஜிஹாத் செய்ய வேண்டும் என்று பேசும் இந்த வாய் வீரர்கள் யாருடன் சண்டையிடுகிறார்கள் என்று பார்த்தால் முஸ்லிம்களைத் தான் இவர்கள் குறிவைக்கிறார்கள் என்பதை புரிய முடிகின்றது. தங்களுக்கு எதிராகச் செயல்படுவன் முஸ்லிமாக இருந்தால் அவனை அழிக்க தயாராக இருப்பார்கள். குஜராத்தில் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது அங்கே போய் ஜிஹாத் செய்ய மாட்டார்கள்.

இவர்களின் இதே சிந்தனையில் ஊறிப்போனவர்கள் இன்றைக்கு பாகிஸ்தானிலும் இன்னும் பிற நாடுகளிலும் தாங்கள் ஜிஹாத் செய்வதாக எண்ணிக் கொண்டு முஸ்லிம்களையே கொன்று குவித்து வருகின்றனர்.

இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு மார்க்கத்தை இவர்கள் ஆதாரமாகக் காட்டுவதால் மார்க்கம் அவ்வாறு கூறவில்லை. இது பற்றி உண்மையை மக்களுக்கு விளக்க விவாதத்திற்கு வாருங்கள் என நாம் இவர்களுக்கு அழைப்பு விட்டால் அதிலும் தாங்கள் கோழைகள் என்பதை வெளிப்படுத்துகின்றனர்.

விவாதம் செய்யக் கூடாது என இஸ்லாம் கூறுகிறது என்றும் நபி (ஸல்) அவர்களே காஃபிர்கள் விடுத்த விவாதத்துக்குப் பதிலளிக்கவில்லை என்றும் பொய் கூறி விவாதத்துக்கு வர மறுக்கின்றனர்.

மனித குலத்துக்கு நேர்வழிகாட்டியாக வழங்கப்பட்ட குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டை கொள்கையாகக் கொண்டவர்கள் மட்டுமே ஈருலகத்திலும் வெற்றி பெற முடியும்.

ஆனால் இவர்களோ இவ்விரண்டில் எந்த அம்சம் இயக்கத்தை வளர்க்க உதவுமோ அவற்றை மட்டும் பேசுவார்கள். உதாரணமாக ஜிஹாத் பைஅத் ஒற்றுமை கோஷங்கள். இந்த ஓரிரு விஷயங்களைக் கூட இவர்கள் முறையாக சமுதாயத்துக்குக் கூறவில்லை. மாறாக இவற்றுக்குத் தவறான விளக்கங்களைக் கொடுத்து இஸ்லாத்தை களங்கப்டுத்த முயற்சிக்கின்றனர்.

குர்ஆன்  ஹதீஸ் ஆகிய இரண்டும் ஒவ்வொரு மனிதனும் சமுதாயததுக்கு ஆற்ற வேண்டிய ஏராளமான கடமைகளைக் கற்றுத் தருகின்றது. இவற்றில் எந்தக் கடமையை ஆற்றினால் மக்களிடம் எதிர்ப்பு வருமோ ஆதவு கிடைக்காதோ அது மாதிரியான விஷயங்களை இவர்கள் புறக்கணித்து விடுவார்கள்.

எனவே அறிவுச் சிந்தனை உள்ள யாரும் இந்த சந்தர்பப்பவாதிகளின் இயக்கத்தில் அங்கம் வகிக்க மாட்டார்கள். பலர் சிந்திக்கத் தொடங்கி இவர்களை விட்டு வெளியேறி தங்களை காத்துக் கொண்டுள்ளனர். எனவே சமுதாயத்துக்குப் பலனில்லாத சமூகத்திற்கு தீங்கிழைக்கக்கூடிய இந்த இயக்கத்தினரை இஸ்லாமிய சமூதாயம் முற்றிலுமாக புறக்கணிப்பது அவசியம்.