5) அமீரின் அதிகாரங்கள்
அமீரின் அதிகாரங்கள்
حدثنا أبو عاصم الضحاك بن مخلد عن زكرياء بن إسحاق عن يحيى بن عبد الله بن صيفي عن أبي معبد عن ابن عباس رضي الله عنهما
நபியவர்கள் ஏமனுக்கு (ஆளுனராக) முஆதை அனுப்பி வைக்கும் போது வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று ஒப்புக் கொள்வதற்கு அம்மக்களை அழையுங்கள். அதற்கு அவர்கள் கட்டுப்பட்டு விட்டால், அல்லாஹ் ஒவ்வொரு இரவு, பகலிலும் ஐந்து நேரத் தொழுகையை அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் அறிவித்து விடுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டு விட்டால், அவர்களுடைய பொருளில் அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான்; அந்த ஸக்காத்தை அவர்களிடம் உள்ள செல்வந்தர்களிடமிருந்து எடுத்து அவர்களிலுள்ள ஏழைகளுக்கு வழங்குங்கள் என்று அவர்களிடம் தெரிவித்து விடுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),(புகாரி: 1395) ➚
இந்த ஹதீஸில் ஸகாத்தை எடுத்து என்ற வாசகம் இடம் பெறுகின்றது. ஸக்காத்தை எடுப்பதை அதிகாரம் இல்லாமல் செய்ய முடியாது. எனவே அமீராக இருப்பவர் ஒரு பகுதிக்காக நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர் ஸக்காத்தை வசூலிக்கும் அதிகாரத்தை உடையவராக இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரனித்து அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சி வந்ததும் அரபிகளில் சிலர் (ஸக்காத்தை மறுத்ததின் மூலம்) காஃபிர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் செய்ய அபூ பக்ர் தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள் “லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் தனது உயிரையும், உடைமையையும் என்னிடம் இருந்து காத்துக் கொண்டார். தண்டனைக்குரிய குற்றங்களைப் புரிந்தவரைத் தவிர! அவரது விசாரனை அல்லாஹ்விடமே உள்ளது” என நபியவர்கள் கூறியிருக்கும் போது நீங்கள் இந்த மக்கள் மீது எப்படிப் போர் தொடுக்க முடியும்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் உமரை நோக்கி “அல்லாஹ்வின் மீது ஆணையாக தொழுகையையும், ஸக்காத்தையும் பிரித்துப் பார்ப்பவர்களுடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸக்காத் செல்வந்தர்களுக்குரிய கடமையாகும். அல்லாஹ் மீது ஆணையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஒரு ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதைத் தர மறுத்ததற்காக நான் அவர்களுடன் போர் தொடுப்பேன்” என்று கூறினார்கள். இது பற்றி உமர் அவர்கள் கூறும் போது “அல்லாஹ் மீது ஆணையாக அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமானதாக ஆக்கி இருப்பதால் தான் அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரி என்பதை நான் விளங்கிக் கொண்டேன்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி),(புகாரி: 1400) ➚
ஸக்காத்தை எடுக்க வேண்டும் என்ற முந்தைய ஹதீஸூக்கு இந்த ஹதீஸ் விளக்கமாக அமைந்துள்ளது. மேலும் ஸக்காத்தைத் தர மறுப்பவர்களிடம் போர் செய்து, ஸக்காத்தை வசூலிக்கும் அதிகாரம் ஆட்சியாளருக்கு இருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது. இந்த அதிகாரம் இமாமுக்கும் இமாமால் நியமிக்கப்படும் அமீருக்கும் இருக்க வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது..
حدثنا أبو اليمان أخبرنا شعيب عن الزهري قال حدثني عروة بن الزبير عن المسور بن مخرمة أنه أخبره أن عمرو بن عوف الأنصاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் அல் ஜாராஹை பஹ்ரைனில் ஜிஸ்யா (வரி) வசூலித்து வர அனுப்பினார்கள். நபியவர்கள் பஹ்ரைன் நாட்டவரிடம் உடன்படிக்கை செய்து அவர்களுக்கு அலா பின் அல்ஹழ்ரமியை அமீராக நியமித்தார்கள். அபூ உபைதா பஹ்ரைனிலிருந்து அந்தப் பொருளுடன் வந்தார். அபூ உபைதா பொருளுடன் வந்திருக்கிறார் என அன்ஸாரிகள் கேள்விப்பட்டனர்….. அறிவிப்பவர்: அம்ர் பின் அவ்ஃப் (ரலி),(புகாரி: 3158) ➚
நஜ்தை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு குதிரைப் படையை அனுப்பினார்கள். அந்தப் படையினர், பனூ ஹனீப் கூட்டத்தைச் சேர்ந்த சுமாமா பின் அஸால் என்பவரைக் கைது செய்து அழைத்து வந்தனர். பள்ளியின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டிருந்தனர். அவரை நோக்கி நபியவர்கள் வந்து சுமாமாவை அவிழ்த்து விடுங்கள் என்றார்கள். பள்ளிக்குப் பக்கத்திலுள்ள பேரீச்சைத் தோப்பை நோக்கிப் போய் அவர் குளித்து விட்டு பள்ளிக்கு வந்தார். “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் யாருமில்லை. நிச்சயமாக முஹம்மதவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்’ என்று சான்று கூறினார். அறிவிப்பவர: அபூ ஹூரைரா (ரலி),(புகாரி: 462) ➚
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தீமையில் இருந்தோம். நாங்கள் எந்த நன்மையில் இருக்கிறோமோ (இஸ்லாம்) அந்த நன்மையில் அல்லாஹ் எங்களைக் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை உண்டா எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். அது எப்படி இருக்கும் என்று வினவினேன். அதற்கு அவர்கள் எனது நேர்வழியைக் கொண்டு திருந்தாத, எனது நடைமுறையைப் பின்பற்றாத தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்களில் மனித உடல்களையும், ஷைத்தானின் உள்ளங்களையும் கொண்ட மனிதர்கள் ஆட்சி செலுத்துவார்கள் எனப் பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே அந்த நிலையை நான் அடைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் அந்த அமீர் உன்னுடைய முதுகில் அடித்துத் தாக்கி உன் பொருளைப் பறித்துக் கொண்டாலும் நீ அவருக்குச் செவி சாய்த்துக் கட்டுப்படு என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஹூதைஃபா (ரலி),(முஸ்லிம்: 3764) ➚
இந்த ஹதீஸ் அமீருக்குக் கட்டுப்படுவதைச் சொன்னாலும் அந்த அமீரின் தன்மைகளைப் பற்றி நபியவர்கள் கூறும் செய்தி குறிப்பிடத்தக்கது. உன்னுடைய முதுகில் அடித்துத் தாக்கி உன் பொருளைப் பறித்துக் கொண்டாலும் சரியே என்ற வாசகத்தில் இருந்து அமீர் என்றால் எந்தளவுக்கு அதிகாரம் படைத்தவர் என்பது தெளிவாகின்றது.
ஸலமா பின் யஸீத் அல் ஜஃபி என்பவர் நபியவர்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார். அப்போது அவர் தங்கள் உரிமைகளை (வரிகளை) பெற்று விட்டு எங்களுக்குரிய உரிமைகளை (குடிமக்களுக்குச் செய்ய வேண்டிய வசதிகளை) மறுக்கின்ற அமீர்கள் எங்களை ஆளுகின்ற நிலை வரும் போது நீங்கள் எங்களுக்கு என்ன உத்தரவிட நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கேள்வியை அலட்சியம் செய்தார்கள். மீண்டும் அவர் கேட்கவே நபியவர்கள் அவரை அலட்சியம் செய்தார்கள். இரண்டாவதோ, அல்லது மூன்றாவதோ அவர் கேட்டதும் அவரை அஷ்அஸ் பின் கைஸ் அவர்கள் இழுத்துச் சென்று செவிசாயுங்கள், கட்டுப்படுங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டது அவர்களுக்கு. உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களுக்கு என்று அவரிடம் கூறினார்கள். இவ்வார்த்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அந்த மனிதரிடம் கூறியதாக மற்றொரு அறிவிப்பில் உள்ளது அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹழ்ரமி (ரலி),(முஸ்லிம்: 3762) ➚
இந்த ஹதீஸ் வரி விதித்துவிட்டு வசதிகள் செய்யாத அமீரைப் பற்றியதாகும். வரிகள் விதிப்பதும், வசதிகள் செய்து கொடுப்பதும் அமீரின் அதிகாரங்களில் உள்ளதாகும். அதே நேரம் வரியை மட்டும் வாங்கி விட்டு வசதிகளை மறுப்பதும் குற்றம் என்றாலும் அதைச் செய்யும் அதிகாரம் அமீரிடம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
حدثنا محمد بن خالد الذهلي حدثنا الأنصاري محمد بن عبد الله قال حدثني أبي عن ثمامة عن أنس بن مالك قال
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கைஸ் பின் ஸஅத் (ரலி) அவர்கள் ஓர் அமீரிடம் பணியாற்றும் இரானுவ அமைச்சரின் பதவியை வகித்தார்கள். அதாவது நபியவர்களின் கட்டளைகளில் கவனம் மேற்கொண்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 7155) ➚
மேற்கண்ட ஹதீஸ் ஒரு இமாமோ அல்லது அமீரோ தேவையான பதவிகளை உருவாக்கி அதற்கென அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றது.
حدثنا خالد بن مخلد حدثنا سليمان قال حدثني عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله عنهما قال
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு படையை அனுப்பினார்கள். அந்தப் படைக்கு உஸாமா பின் ஸைதை அமீராக நியமித்தார்கள். உஸாமாவை அமீராக ஆக்கியதை சிலர் குறை கண்டனர். (இதைக் கேள்விப்பட்ட) நபியவர்கள் இவருடைய தலைமைப் பதவியில் நீங்கள் குறை கண்டீர்கள் என்றால், இதற்கு முன் இவருடைய தந்தையுடைய தலைமையிலும் நீங்கள் குறை கண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவராக இருந்தார். மக்களிலேயே எனக்கு மிக விருப்பமானவராக இருந்தார். அவருக்குப் பின் இவர் (உஸாமா) எனக்கு மிக நேசத்திற்குரியவராக இருக்கிறார் என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),(புகாரி: 3730) ➚
இமாம் என்பவர் ஒரு கேடயமாவார்! அவருக்குப் பின் நின்று மக்கள் போராடுவார்கள். அவரையே மக்கள் அரணாக ஆக்கிக் கொள்வார்கள். அவர் அல்லாஹ்வின் அச்சத்தை ஏவி நீதமாக நடந்தால் அதற்குரிய கூலி அவருக்குக் கிடைத்து விடும். அதற்கு மாறானதை அவர் சொன்னால் அந்தப் பாவத்திலிருந்து அவருக்குப் பங்கு கிடைக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி),(புகாரி: 2957) ➚
حدثنا علي بن عبد الله حدثنا سفيان قال الذي حفظناه من عمرو بن دينار قال سمعت جابر بن عبد الله يقول
குரைஷிகளுக்குரிய ஒட்டகக் கூட்டத்தை எதிர்பார்த்துத் தாக்குவதற்கு எங்களை நபியவர்கள் அனுப்பினார்கள். எங்களின் படையில் 300 குதிரை வீரர்கள் இருந்தார்கள். எங்களுடைய அமீராக அபூ உபைதா பின் ஜர்ராஹ் இருந்தார். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),(புகாரி: 4361) ➚
மேற்கண்ட ஹதீஸ்களின் படி ஒரு இமாம் அல்லது அமீர் என்பவர் போர்ப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தையும், போருக்குப் படையை அனுப்பும் அதிகாரத்தையும் பெற்றவராக இருக்க வேண்டும். இன்னும் படையை நடத்திச் சென்று போரிடும் அதிகாரத்தையும், சக்தியையும் பெற்றிருக்க வேண்டும். அது மட்டுமன்றி களத்தில் இறங்கி முன்னின்று போரிட்டு மக்களைக் காக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் நமக்கு உணர்த்துகின்றன.
حدثنا قتيبة بن سعيد حدثنا ليث عن ابن شهاب عن عروة عن عائشة رضي الله عنها
மக்ஸூமி குலத்துப் பெண்னொருத்தி (பாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாகினர். அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் பேசுவது யார்? என்று தமக்குள் பேசிக் கொண்டார்கள். அவர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் அவர்களைத் தவிர இதற்கு வேறு யாருக்குத் துணிவு வரும் என்று கூறினார்கள். உஸாமா அவர்கள் அவள் விஷயமாக நபியிடம் பேசினார்கள். அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனை விஷயத்திலா நீ பரிந்துரை செய்கிறாய் என்று (கோபத்துடன்) கேட்டு விட்டு பிறகு எழுந்து உரை நிகழ்த்தினார்கள். பிறகு உங்களுக்கு முன் சென்றவர்கள் அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடி விட்டால் அவனை (தண்டிக்காமல்) விட்டு விடுவார்கள். அவர்களில் பலவீனமான(பிரிவைச் சேர்ந்த)வன் திருடினால் அவனுக்குத் தண்டனை அளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக முஹம்மதின் மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 3475) ➚
இந்த ஹதீஸில் ஆட்சியாளர் என்பவர் எந்த அளவுக்கு நேர்மையாளராக இருக்க வேண்டும் என்று உணர்த்துகின்ற அதே வேளையில் தீர்ப்பு சொல்லக் கூடிய அதிகாரமும் அவருக்கு இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.
و حدثني محمد بن العلاء الهمداني حدثنا يحيى بن يعلى وهو ابن الحارث المحاربي عن غيلان وهو ابن جامع المحاربي عن علقمة بن مرثد عن سليمان بن بريدة
மாயிஸ் பின் மாலிக் என்ற அஸ்லம் கிளையைச் சார்ந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து நான் விபச்சாரம் செய்து விட்டேன்; எனக்குத் தண்டனை வழங்குங்கள் என்று கூறினார். நபியவர்கள் அவரைப் பல தடவை திருப்பி அனுப்பினார்கள். பிறகு மக்களிடத்தில் அவர்கள் விசாரித்தார்கள். அவர் மீது நாங்கள் எந்தத் தவறையும் காணவில்லை; எனினும் தன் மீது தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தவிர வேறு எதுவும் ஈடாகாது என்று கருதும் அளவுக்கு அவர் தப்பைச் செய்திருக்கிறார் என்று நபித் தோழர்கள் பதிலளித்தார்கள். மீண்டும் அவர் நபியவர்களிடம் வந்தார். அவரைக் கல்லால் எறிந்து கொல்லுமாறு நபியவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா பின் அல்ஹசீப் (ரலி)(முஸ்லிம்: 3500) ➚
இது வரை அமீர் என்றால் யார்? அவருக்குரிய அதிகாரங்கள் என்ன? என்பதைப் பார்த்தோம்.
அடுத்து இன்றைக்கு தமக்குத் தாமே அமீர் பட்டம் சூட்டி மக்களை ஏமாற்றி வருவோர் அமீர்கள் என்ற பட்டத்துக்கு உரியவர்களா என்பதைப் பார்ப்போம்.