சிறிய ஆண் குழந்தைகளுக்கும் தங்கம் ஏன் அணியக் கூடாது?
ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள் பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை.
أخبرنا يعقوب بن إبراهيم قال حدثنا عبد الرحمن بن مهدي قال حدثنا حماد بن سلمة عن حماد عن إبراهيم عن الأسود عن عائشة عن النبي صلى الله عليه وسلم قال رفع القلم عن ثلاث عن النائم حتى يستيقظ وعن الصغير حتى يكبر وعن المجنون حتى يعقل أو يفيق
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.
1. தூங்குபவர் விழிக்கின்ற வரை
2. சிறுவன் பெரியவராகும் வரை
3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
(நஸாயீ: 3378) ➚,(அபூதாவூத்: 3822) ➚,(இப்னு மாஜா: 2031) ➚
சிறுவர்கள் இரு வகைப்படுவார்கள். எதையுமே புரிந்து கொள்ளாத தத்தி தவழும் பருவத்தில் உள்ளவர்கள் ஒருவகை. இவர்கள் நிர்வாணமாக இருந்தால் கூட அது தவறாகாது. இத்தகைய பருவத்தில் உள்ளவர்களுக்கு தடை செய்யப்பட்ட தங்க நகை அணிவித்தல் தவறாகாது.
ஆனால் புரிந்து கொள்ளும் பருவத்தை அடைந்து விட்டால் அவர்களுக்கு சட்ட திட்டங்களையும் கடமைகளையும் புரியவைத்து பயிற்சி அளிக்க வேண்டும்.
ஜகாத் பேரீச்சம் பழத்தை தமது பேரர் எடுத்து சாப்பிட்டதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் துப்பிவிடச் சொன்னார்கள். முஹம்மதின் குடும்பத்துக்கு இது ஹலால் இல்லை என்று தெளிவுபடுத்தினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),
அது போல் விபரம் தெரிந்த சிறுவரான அபூ ஸலாமாவின் மகன் உமர் சாப்பிடும் போது உணவுத் தட்டின் நாலாபுறங்களிலும் கைகளை அலைய விட்ட போது சிறுவரே! அல்லாஹ்வின் பெயர் கூறு! உன் அருகில் உள்ளதை உண் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.