தீன்குலப் பெண்களே! உங்களைத்தான்!
அன்பிற்குரிய தாய்மார்களே! சகோதரிகளே! பெண்கள் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு தொகுத்துள்ளோம். இதனைக் கடைப்பிடித்து வாழக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நாம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!
‘இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும். இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் சிறந்நது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள்’. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்: 2668) ➚
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன்: 24:31)➚
அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன்: 24:31)➚
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது” என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 33:59)➚
தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக, அரை குறை ஆடை அணிந்து, பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். (ஐம்பது ஆண்டுகள் அல்லது) எவ்வளவு ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால், இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்: 3971) ➚
அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன்: 24:31)➚
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பெண்களாகிய நீங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது நறுமணம் பூசாதீர்கள். அறிவிப்பவர்: ஸைனப் பின்த் முஆவியா (ரலி),(முஸ்லிம்: 759) ➚
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பெண்களே) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள். அறிவிப்பவர்: ஸைனப் பின்த் முஆவியா (ரலி),(முஸ்லிம்: 758) ➚
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்குர்ஆன்: 33:32-33)➚
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன்: 33:32-33)➚
ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),(முஸ்லிம்: 2611) ➚
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றிக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன்பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் ஆகியோரின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அல்கமா இப்னு கைஸ் (ரஹ்),(புகாரி: 4886) ➚
ஒட்டு (முடியாலான சவுரி) வைத்துக் கொள்ளும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள் அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி),(புகாரி: 4887) ➚
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஒரு இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),(புகாரி: 1088) ➚
நபி (ஸல்) அவர்கள் பெண்கள் சமூகமே தான தர்மம் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள்தான் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே ஏன்? என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு நீங்கள் அதிகமாக சாபமிடுகிறீர்கள். கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள். மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றிவிடக் கூடியவர்களாக உங்களை விட வேறுயாரையும் நான் காணவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரி (ரலி),(புகாரி: 304) ➚
நபி (ஸல்) அவர்கள் கூறியது போல பெண்களை அதிகமாக நரகில் காணப்பட்டனர். ஒரு பெண் தன கணவன் இடத்தில் தான் சுவர்க்கம் இருக்கின்றது. தன கணவன் இடத்தில் தான் நரகம் இருக்கின்றதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆக, பெண்கள் தங்களை நரகில் தள்ளாதபடி அதிகமதிகம் நன்மைகளை சம்பாதித்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறியது போல ஒரு பேரிச்சை பழத்தின் ஒரு பகுதி துண்டை கொடுத்தேனும் நரகில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும்.