வெளியில் செல்லும் பெண்கள் நறுமணம் இடலாமா?
நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன.
தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு. ஆட்களை தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு. முதல் வகையான நறுமணம் அருகில் நெருங்கி வருவோருக்கும் மட்டுமே உணர முடியும். இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும்.
பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் கொள்ளலாம். ஆனால் வெளியே செல்லும் போது முதல் வகையான நறுமணப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரண்டு வகையான நறுமணப்பொருட்கள் இருந்துள்ளன.
வெள்ளிக்கிழமை குளிப்பதும் பல் துலக்குவதும் பருவமடைந்த அனைவர் மீதும் கடமையாகும். மேலும் தன்னால் இயன்ற நறுமணத்தையும் பூசிக் கொள்ள வேண்டும். (நறுமணப் பொருள் இல்லாத பட்சத்தில்) பெண்களுக்கான நறுமணப் பொருளையாவது பூசிக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆண்களின் நறுமணமும் பெண்களின் நறுமணமும் அன்று தனித்தனியாக இருந்துள்ளன என்பதையும் அதை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கண்கள் விபச்சாரம் செய்கிறது எனக் கூறி விட்டு பெண்கள் நறுமணம் பூசுவது பற்றி நபிகள் நாயகம் கூறுவதால் ஆண்கள் சபைக்குச் சென்று அவர்கள் அப்பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கும் நிலையை ஏற்படுத்துவதால் அவளும் விபச்சாரி எனக் கூறியுள்ளனர்.
மற்றொரு ஹதீஸில்
தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் விபச்சாரி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.
அன்னிய ஆண்களைக் கவரும் நோக்கத்தில் நறுமணம் பூசி செல்வதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதையும்
அவ்வாறு இல்லாமல் நறுமணம் பூசிக் கொண்டு செல்ல தடை இல்லை என்பதையும் இதில் இருந்து ஊகம் செய்யலாம். இன்னும் சொல்லப் போனால் தெளிவாக அனுமதிக்கும் ஹதீஸ்களும் உள்ளன.
உங்களில் ஒருத்தி பள்ளிவாசலுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக(முஸ்லிம்: 674) ➚வது ஹதீஸ் கூறுவதைப் பொதுவான தடைக்கு ஆதாரமாக சிலர் காட்டுவது ஏற்க முடியாததாகும்.
ஏனெனில் இது இஷாத் தொழுகைக்கு அதாவது இரவுக்கு மட்டும் உள்ள தடை என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் விளக்குகின்றன.
உங்களில் ஒருத்தி இஷாவுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
இந்த ஹதீஸையும் முந்திய ஹதீஸையும் ஸைனப் என்ற சஹாபி தான் அறிவிக்கிறார். எனவே அவர் பொதுவாக அறிவிப்பதை விட குறிப்பாக அறிவிப்பதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த அறிவிப்பை அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பும் உறுதி செய்கின்றது. அது வருமாறு:
எந்தப் பெண்ணாவது நறு மணப் புகை பூசிக் கொண்டால் அவள் நம்மோடு இஷா தொழுகைக்கு வர வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 675) ➚
எனவே இஷா தொழுகைக்குப் போகும் போது நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது என்றால் அது இஷாவுக்கு மட்டும் உரியது என்று புரிந்து கொள்ளலாம். அது இரவில் நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது என்ற கருத்தையும் தரும் என்றும் புரிந்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் பெண்கள் ஆண்களைச் சுண்டி இழுக்கும் வகையிலான நறுமணமாக இல்லாமல் சாதாரண நறுமணம் பூசி வெளியே செல்ல
அனுமதி உண்டு என்பதை இந்த ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.