முதல் வரிசையில் சிறுவர்கள் நிற்கலாமா?
கேள்வி: முதல் வரிசையில் சிறுவர்கள் நிற்கலாமா?
சிறுவர்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் போது முதல் வரிசையில் நிற்க பெரியவர்கள் அனுமதிப்பதில்லை. முன் வரிசையில் இடம் இருந்தாலும் கூட அதைத் தடுக்கின்றனர். இது சரியா?
ரஸ்மின்
பதில்:
பருவமடைந்தவர்கள் எனக்கு அடுத்து நிற்கட்டும். அதற்கடுத்த வயதினர் அடுத்து நிற்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி),
(முஸ்லிம்: 739) ➚
எனவே பருவமடைந்தவர்கள் தான் முன் வரிசையில் நிற்க வேண்டும்.
பருவமடைந்தவர்களே வரிசையை நிரப்பும் அளவுக்கு இருந்தால் தான் இந்த நிலை. பருவமடைந்தவர்கள் வரிசையில் நின்ற பின்னர் இடம் இருந்தால் அல்லது சிறுவர்கள் மட்டுமே இருந்தால் அவர்கள் முதல் வரிசையில் தான் நிற்க வேண்டும். காலதாமதமாக வருபவருக்காக இடத்தை முன்பதிவு செய்து வைத்தல் இஸ்லாத்தில் இல்லை.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் சுவர் (போன்ற தடுப்பு) எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில் மக்களுக்குத்) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி அவர்களை நோக்கிச் சென்றேன்.-அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன்.- (தொழுது கொண்டிருந்தவர்களின்) வரிசையில் ஒரு பகுதியை நான் கடந்துசென்று கழுதையை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே கடந்து சென்று (ஒரு வரிசையில்) நானும் நின்று கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை வரிசையை கடந்துசென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்கவில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பருவமடையாதவராக இருந்த போதும் முன் வரிசையில் காலியாக இருந்த இடத்தில் நின்றுள்ளனர் என்பதை இதில் இருந்து அறியலாம்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் எழுங்கள்! உங்களுக்காக நான் (உபரியானத் தொழுகையை) தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயை நோக்கி எழுந்தேன். அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்து இருந்தது. ஆகவே அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.
பெரியவர்கள் யாரும் இல்லாத போது சிறுவர்களே முதல் வரிசையாக நின்றுள்ளனர் என்பதற்கு இது சான்றாக உள்ளது. எனவே இடம் காலியாக இருந்தால் சிறுவர்களை முன் வரிசையில் நிற்பதை யாரும் தடை செய்யக் கூடாது.