பெண்கள் உயரமான கொண்டை போடலாமா?
உயரமான கொண்டை போடும் பெண்கள் சொர்க்கத்தின் வாடையை நுகர முடியாது என்று கூறும் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? அப்படி எனில் இதில் தலை முடி பற்றி வரும் செய்தி பர்தா அணிந்து தனது ஹிஜாப் உள்ளே கொண்டையை உயர்த்தியவர்களுக்கும் பொருந்துமா ?
நான் குவைத்தில் உள்ளதால் இங்கு அனேக பெண்கள் பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்து தனது கொண்டையை உயரமாக வைக்கும் பெண்களைக் காண முடிகிறது. அப்படியானால் அவர்களின் நிலை என்ன ?
நீங்கள் குறிப்பிடும் செய்தி சஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரிலோ அல்லது இதன் கருத்திலோ எந்தக் குறையுமில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) அவர்கள் உடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள், தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பர்தாவைக் கடைபிடிக்காத பெண்களையே குறிப்பிடுகிறார்கள். ஆடை அணிந்தும் நிர்ணவானமாக இருப்பார்கள் என்றால் உடலின் சில பாகங்களை ஆடையால் மறைத்துவிட்டு மறைக்க வேண்டிய பல பாகங்களை வெளிப்படுத்துவார்கள். அல்லது உடல் பாகங்களை வெளிப்படுத்திக் காட்டும் மெல்லிய ஆடைகளை அணிவார்கள் என்று பொருள்.
இந்தப் பெண்கள் பிறரைக் கவரும் வேலையில் ஈடுபடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே தான் மறைக்க வேண்டிய உடலையும் தலை முடியையும் வெளிப்படுத்துகின்றனர்.
இன்றைய காலத்தில் இதுபோன்ற ஆடைகளைப் பெண்கள் சர்வ சாதாரணமாக அணிந்து வருவதைப் பார்க்கின்றோம். இதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.
பெண்களின் தலைமுடி மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். பர்தாவுடைய ஒழுங்கு முறைகளில் இதுவும் ஒன்று. இந்த நெறிமுறைக்கு மாற்றமாக நடக்கும் பெண்களையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.
பெண்கள் தங்களுடைய அலங்காரத்தை அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இதை மீறாத வகையில் ஒரு பெண் தன்னை எப்படி வேண்டுமானாலும் அலங்கரித்துக் கொள்ளலாம். எனவே மேற்கண்ட செய்தி பர்தா அணியாத பெண்களையே குறிக்கின்றது.