தர்காக்கள் சமுதாயத்தில் நுழைந்தது எப்படி?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தினர் நபிமார்களையும், நல்லவர்களையும் மதிக்கிறோம் என்று கூறிக் கொண்டு அவர்களின் அடக்கத்தலங்களில் தர்காக்கள் கட்டியது தான் அவர்கள் இணைகற்பித்த்தற்குக் காரணம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக எச்சரித்ததைப் பார்த்தோம்.
தனது அடக்கத்தலத்தில் தர்கா கட்டக் கூடாது என்று அவர்கள் எச்சரித்ததையும் பார்த்தோம். தர்காக்கள் கட்டப்பட்டு இருந்தால் அதை இடிக்க வேண்டும் என்று கடுமையான நிலைபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்து இருந்ததையும் இதுவரை பார்த்தோம்.
அவர்கள் கடுமையாக எச்சரித்த ஒரு காரியம் எப்படி இந்தச் சமுதாயத்தில் புனிதமாக ஆக்கப்பட்டது என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. திருக்குர்ஆன் போதனையையும், நபிகள் நாயகத்தில் அறிவுரைகளையும் புறக்கணித்து முந்தைய வேதக்காரர்களின் வழியில் சென்றால் இப்படித்தான் நடக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தைக் கடந்து சென்றனர். அம்மரம் இணைகற்பிக்கும் மக்களுக்கு உரியது. ‘தாத்து அன்வாத்’ என்று அழைக்கப்படும் அம்மரத்தில் இணைகற்பிப்பவர்கள் தமது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். இதைக் கண்ட சில நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவர்களுக்கு ‘தாத்து அன்வாத்’ எனும் புனித மரம் இருப்பதுபோல் எங்களுக்கும் புனித மரம் ஒன்றை ஏற்படுத்துங்கள்” என்று கேட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் தூயவன். அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக என்று மூஸா நபியின் சமுதாயத்தினர் கேட்டது போல் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது. எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக, உங்களுக்கு முன்சென்றோரின் வழிமுறையை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள்” என்று கூறினார்கள். (திர்மிதீ: 2106) ➚
மூஸா நபியவர்களையும், அவர்களது சமுதாயத்தையும் கடலில் மூழ்காமல் இறைவன் காப்பாற்றிக் கரை சேர்த்தான். இதன் பின்னர் சிலைகளை வழிபடும் ஒரு கூட்டத்தினரை மூஸா நபியின் சமுதாயத்தினர் கண்டார்கள். அப்போது “மூஸாவே! இவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக” என்று கேட்டனர். இதை 7:138➚ வசனம் கூறுகிறது. அதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கு சுட்டிக்காட்டுகிறார்கள்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால்கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)? என்று கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வேறு யாரை? என்று (திருப்பிக்) கேட்டார்கள். (புகாரி: 7320) ➚
இஸ்லாத்தில் நல்லவை அனைத்துமே இருக்கும்போது, இஸ்லாம் அல்லாத மதங்களின் சடங்குகள் இஸ்லாத்திலும் இருக்க வேண்டும் என்று கருதும் மூடர்களும் இந்தச் சமுதாயத்தில் இருப்பார்கள் என்று இந்த ஹதீஸ் முன்னறிவிப்பு செய்கிறது.
கந்தூரி விழாக்கள், பஞ்சா, சந்தனக்கூடு, மீலாது விழா, புத்தாண்டு கொண்டாடுதல், தாலி, பால்கிதாபு, இறந்தோருக்கு 3, 7, 40 ஆம் நாட்களில் சடங்குகள் செய்தல், மதகுருமார்களின் காலில் விழுதல் போன்றவற்றைச் செய்பவர்கள், மூஸா நபியிடம் பல கடவுள்களைக் கேட்ட இஸ்ரவேலர்களுக்கு ஒப்பானவர்கள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
தர்காக்கள் கட்டுவது யூதர்களின் வழிமுறை என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சிறுபிள்ளைக்கும் புரியும் விதத்தில் எடுத்துச் சொல்லி விட்டார்கள். அந்த வழிமுறை ஆதாரப்பூர்வமாக நம்மை வந்து அடைந்து விட்டது.
இதன் பின்னரும் தர்காக்கள் கட்டினால், அல்லது அதை ஆதரித்தால், அல்லது தர்காக்களுக்குச் சென்று அதை அங்கீகரித்தால் நாம் செல்வது நபி வழி அல்ல; யூதர்களின் வழியாகும். இதை உணர்ந்து தர்காக்களைப் புறக்கணித்து அதை நஞ்சென வெறுக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக!