தடை செய்யப்பட்டவைகளை விற்கலாமா?
தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வாறு தடுக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே அவற்றை விற்பனை செய்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, ‘நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘கூடாது! அது ஹராம்!’ எனக் கூறினார்கள். மேலும் தொடர்ந்து, ‘அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), (புகாரி: 2236) ➚
حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي طَاوُسٌ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ:
ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி), ‘அவரை அல்லாஹ் சபிப்பானாக! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அவர்கள் அறியவில்லையா?’ என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), (புகாரி: 2223) ➚
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளனவோ அவற்றை விற்பனை செய்வதும் கூடாது.
தடை என்று வந்து விட்டால் மாற்று மதத்தவர்களுக்கோ அல்லது வேறு காரணங்களைக் கூறியோ விற்பதற்கும் அனுமதியில்லை.
ஆனாலும் இது பொதுவான சட்டம் அல்ல. இதில் விதிவிலக்குகளும் உள்ளன.
மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவை இரு வகைகளில் இருக்கும். ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் தடை செய்யப்பட்டவை ஒரு வகை. அனைவருக்கும் இல்லாமல் சிலருக்கு மட்டும் தடுக்கப்பட்டவை இன்னொரு வகை.
அனைவருக்கும் தடுக்கப்பட்டவற்றை அறவே விற்கக் கூடாது. ஆனால் அனைவருக்கும் தடுக்கப்படாமல் சிலருக்கு மட்டும் தடுக்கப்பட்டவற்றை நாம் விற்கலாம்.
உதாரணமாக பட்டாடை, தங்க மோதிரம் போன்றவை பொதுவாகத் தடை செய்யப்பட்டவை அல்ல! அவற்றை ஆண்கள் பயன்படுத்துவதற்கு மட்டுமே தடை உள்ளது. பெண்களுக்கு இவை தடுக்கப்படவில்லை.
இது போன்று பொதுவாகத் தடை செய்யப்படாமல் குறிப்பிட்ட சாராருக்கும் மட்டும் தடுக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யலாம். இதற்கு மார்க்கத்தில் தெளிவான அனுமதி உள்ளது.
உமர் (ரலி) அவர்கள் கடை வீதியில் விற்பனை செய்யப்பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலை பேச முற்பட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி, பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் (அணிந்து) அலங்கரித்துக் கொள்ளலாமே!’ என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடையாகும்’ என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் நாடிய நாட்கள் வரை (இது பற்றி ஏதும் கேட்காமல்) பொறுமையாக இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீளங்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை என்னிடம் கொடுத்தனுப்பி உள்ளீர்களே’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இதை நீங்கள் விற்று விடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்)’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), (புகாரி: 948, 886, 2612, 2619, 3054, 5841, 5981, 6081) ➚
அது போல் சில பொருட்கள் உண்பது மட்டும் தடுக்கப்பட்டு அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் தடுக்கப்பட்டு மற்றொரு வகை அனுமதிக்கப்பட்டிருக்கலாம். இப்படி ஒரு வகைப் பயன்பாடு தடுக்கப்பட்டு வேறு வகைப் பயன்பாடு அனுமதிக்கப்பட்டிருந்தால் அவற்றை நாம் விற்கலாம்.
உதாரணமாக, உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு பிராணி தானாகச் செத்து விட்டால் அதை நாம் உண்ணக் கூடாது. ஆனால் அதன் தோல் உட்பட எதையும் நாம் உண்ணக் கூடாது. ஆனாலும் அதன் தோல்கள் உண்பதற்கு தடுக்கப்பட்டாலும் அதற்கு வேறு பயன்பாடுகள் உள்ளன. அதைப் பாடம் செய்து தோல் பாத்திரமாக செருப்பாக, கைப்பைகளாக இன்ன பிற பொருட்களாகப் பயன் படுத்த அனுமதி உள்ளது.
இறந்த ஆட்டை நபித்தோழர்கள் பயன்படுத்தாமல் இருந்த போது, ‘இந்த ஆட்டின் தோலை நீங்கள் பயன்படுத்தலாமே’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மைமூனா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண் ஒருவருக்கு ஓர் ஆடு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அது செத்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கடந்து சென்ற போது, ‘அதனுடைய தோலை எடுத்து, அதைப் பதப்படுத்தி அதிலிருந்து நீங்கள் பயன் பெற்றிருக்கலாமே?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘அது செத்தது’ என்று (தோழர்கள்) பதிலளித்தனர். ‘அதைச் சாப்பிடுவது தான் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), (புகாரி: 1492, 2221, 5531, 5532) ➚
பொதுவாக எல்லா தோல்களும் பாடம் செய்யப்பட்டால் சுத்தமாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), (முஸ்லிம்: 596) ➚
எனவே உண்பதற்குத் தடை செய்யப்பட்ட பிராணிகளின் தோல்கள், அனுமதிக்கப்பட்ட பிராணிகளில் தாமாக செத்துப்போனவைகளின் தோல்கள் ஆகியவற்றை நாம் வாங்கலாம் விற்கலாம். ஏனெனில் இவை உண்பது மட்டுமே தடை செய்யப்பட்டவை என்பதற்கு ஆதாரம் உள்ளது.