கணவனை இழந்த பெண்கள் ஆபரணங்களை அணியலாமா?
கணவனை இழந்த பெண்கள் காலமெல்லாம் வெள்ளை ஆடையுடனும் ஆபரணங்கள் அணியாமலும் காலத்தைக் கழிக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை இஸ்லாத்தில் இல்லை. ஆயினும் நான்கு மாதமும் பத்து நாட்களும் மட்டும் அவர்கள் அலங்காரத்தைத் தவிர்க்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளை இடுகிறது. அந்தக் கெடு முடிந்த பின் அவர்கள் மற்ற பெண்களைப் போல் நடந்து கொள்ளலாம்.
கணவனை இழந்த பெண்கள் தமது இத்தா காலம் முடியும் வரை அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்திப் பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. ஆபரணங்கள் அணிவதும் இதில் அடங்கும்.
உம்மு அத்திய்யா நுஸைபா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறந்ததவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப் பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடை விதிக்கப்பட்டோம். ஆனால் (கணவன் இறந்த பின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைப்பிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்களில்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்ட (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்து கொள்ளலாம்.) எங்களில் ஒரு பெண் மாதவிடாயிலிருந்து நீங்குவதற்காகக் குளிக்கும் போது ளிஃபார்’ நகரத்து குஸ்த் (கோஷ்டம் அல்லது அகில்) கட்டைத் துண்டைப் பயன்படுத்திக் கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் நாங்கள் ஜனாஸாவைத் தொடர்ந்து செல்ல வேண்டாம் என்றும் தடை விதிக்கப்பட்டிருந்தோம்.
இந்த ஹதீஸ் பொதுவாக அலங்காரங்கள் கூடாது என்று கூறினாலும் அபூதாவூதில் இடம் பெறும் மற்றொரு ஹதீஸில் நகை அணியக் கூடாது என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
‘கணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிகப்புச் சாயம் பூசப்பட்ட ஆடைகள், நகை ஆகியவற்றை அணியக் கூடாது; தலைக்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), (அபூதாவூத்: 1960) ➚
இத்தா எனும் கால கட்டத்தில் இதைத் தவிப்பதற்கான காரணங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா என்ற நூலை இங்கே கிளிக் செய்து வாசிக்கவும்.