ஒருவர் வாய் வைத்ததை மற்றவர் பருகலாமா?
ஒருவர் வாய் வைத்ததை மற்றவர் பருகலாமா?
ஒருவர் குடித்து விட்டு அல்லது சாப்பிட்டு விட்டு மீதம் வைத்ததை மற்றவர்கள் சாப்பிடுவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.
நபியவர்கள் தாம் சாப்பிட்டு விட்டு மீதமானதைப் பிற நபித்தோழர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. (அதிலிருந்த பாலை) நான் (தாகம் தீர) அருந்தினேன். இறுதியில் எனது நகக்கண்கள் ஊடே (பால்) பொங்கிவரக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த) மிச்சத்தை உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் இதற்கு (இந்தப் பாலுக்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, அதற்கு அவர்கள் அறிவு என்று பதிலளித்தார்கள்.
இது நபியவர்களின் கனவில் நடந்த சம்பவமாக இருந்தாலும் இதில் கூறப்பட்டவை மார்க்கமாகும்.
நபிமார்களின் கனவுகள் இறைச் செய்தியாகும். அதுமட்டுமல்ல நடைமுறையில் எது ஆகுமானதோ அதைத்தான் நபிமார்கள் கனவிலும் காண்பார்கள்.
நபியவர்கள் தாம் அருந்தி போக இருந்த மிச்சத்தை இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதிலிருந்து ஒருவர் மீதம் வைத்த உணவை மற்றொருவர் சாப்பிடுவதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் நபியவர்களில் தாம் அருந்தி மீதமிருந்ததை நபித்தோழர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களுடைய வலப் பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்து விட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (அந்தப் பால்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்து விட்டார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.
மேற்கண்ட நபியவர்களின் செயல்பாடுகளிலிருந்து ஒருவர் மீதம் வைத்ததை மற்றொருவர் சாப்பிடுவதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இது மனம் ஒப்புவது சம்மந்தமான பிரச்சனையாகும். ஒருவரது மனம் ஒப்பினால் இவ்வாறு செய்து கொள்ளலாம். ஒப்பாவிட்டால் விட்டு விடலாம். சமுதாயத்தில் கணவன் மனைவியரிடையே இந்த விஷயத்தில் அனைவருக்கும் மனம் ஒப்புவதை நாம் கான்கிறோம். மற்றவர்கள் விஷயத்தில் அவ்வளவாக மனம் ஒப்புவதில்லை.
ஒருவரிடம் உள்ள அசுத்தம் மற்றும் பொருத்தமான ஏனைய காரணங்களினால் ஒருவர் மீதம் வைத்ததை மற்றொருவர் வெறுத்தால் அதைக் குறை கூற மார்க்கத்தில் ஆதாரம் இல்லை.