எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா?
“மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்” (என்றும் கூறினோம்.)
அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.
சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரை நினைப்பதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் இறைவன் ஒரே இறைவனே. அவனுக்கே கட்டுப்படுங்கள்! பணிந்தோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன்: 22:34)➚
மேற்கண்ட இரண்டு வசனங்களும் ஹஜ்ஜூப் பெருநாளில் ஹஜ் செய்பவர்களும், ஹஜ்ஜூப் பெருநாளின் போது குர்பானி கொடுப்பதற்கு தகுதியான ஏனைய முஸ்லிம்களும் ”சாதுவான கால்நடைகளை” அறுத்துப்பலியிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. மேற்கண்ட இரண்டு வசனங்களிலும் ஹஜ்ஜூப் பெருநாளின் போது அறுத்துப் பலியிட வேண்டிய கால்நடைகள் ”அன்ஆம்” என்ற வார்த்தையால் குறிப்பிடப்பட்டுள்ளது.
”அன்ஆம்” என்பதற்கு ”கால்நடைகள்” என்று மொழிபெயர்ப்பு செய்தாலும் இவை எந்தெந்த பிராணிகளைக் குறிக்கும் என்பதை திருமறைக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
”அன்ஆம்” என்பது எட்டு ஜோடிகள்தான் என திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
(பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான்.(அல்குர்ஆன்: 39:6)➚
அந்த எட்டு ஜோடிகள் எவை? எவை? என்பதை(அல்குர்ஆன்: 6:143-144)➚வசனங்களில் அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான்.
“(பலியிடும் பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன.
“ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. (அல்குர்ஆன்: 6:144)➚
மேற்கண்ட வசனங்களிலிருந்து ஹஜ்ஜூப் பெருநாளின் போது ஹாஜிகளும், ஹாஜிகள் அல்லாதவர்களும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் ஏதேனும் ஒன்றைத்தான் அறுத்துப் பலியிட வேண்டும் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இது அல்லாத வேறு எந்த பிராணிகளையும் ஹஜ்ஜூப் பெருநாளின் போது குர்பானி கொடுப்பது கூடாது.
”அன்ஆம்” என்பதின் ஒரு பகுதியாக ”பகர்” என்பதைக் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த ”பகர்” என்ற வார்த்தை குறிப்பிட்ட ஒருவகையான மாட்டைக் குறிப்பதற்கான வார்த்தை அல்ல. அனைத்து மாட்டு இனத்திற்குரிய பொதுவான வார்த்தையாகும்.
உலகத்தில் உள்ள அனைத்து மாட்டு வகைகளையும் இந்த ”பகர்” என்ற வார்த்தை உள்ளடக்கும்.
”எருமை” என்பது மாட்டு இனத்தின் ஒரு பகுதியாகும்.
எருமை, மாட்டு இனத்தில் அடங்கும் என்பதற்கு பல்வேறு சான்றுகள் திருக்குர்ஆனில் உள்ளது.
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாதுவான கால்நடைகளிலிருந்து அவர்களுக்கு வழங்கியவற்றில் அல்லாஹ்வின் பெயரை கூறுவதற்காக ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தி உள்ளோம்.
மேற்கண்ட வசனம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் சாதுவான கால்நடைகளை வழங்கியதாகக் குறிப்பிடுகின்றான். அதாவது ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய சாதுவான கால் நடைகள் இன்னொரு சமுதாயத்திற்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு சமுதாயத்தினரும் தமக்கு வழங்கப்பட்ட சாதுவான கால்நடைகளை அறுத்துப் பலியிட வேண்டும் என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அதுதான் இறைவனின் கட்டளையும் கூட.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அம்மக்களிடம் எருமை மாடு அறியப்படாததாக இருந்தாலும் ஒவ்வொரு சமூகமும் இறைவன் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை பெருநாளின் போது அறுத்துப் பலியிட வேண்டும் என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து எருமையை அறுத்துப் பலியிடலாம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
”எருமை” கருப்பு நிறமாக உள்ளதால் அது மாட்டு இனத்தைச் சார்ந்தது இல்லை என்று யாரும் வாதிக்க முடியாது. ஏனென்றால் ”அன்ஆம்களில்” பல்வேறு நிறம் உடையவை இருப்பதாக திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால்நடைகளிலும் மாறுபட்ட நிறங்களைக் கொண்டவை உள்ளன.(அல்குர்ஆன்: 35:28)➚
எனவே நிறத்தினை அடிப்படையாக வைத்து எருமை, மாட்டு இனத்தைச் சார்ந்ததல்ல என வாதிக்க இயலாது.மேலும் அன்ஆம்களின் மூலம் கிடைக்கும் பல்வேறு பயன்களை திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது,
அதிலிருந்தும் எருமை, மாட்டு இனத்தைச் சார்ந்ததுதான் என்பது நிரூபணமாகிறது.
கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் ஏறிப் பயணம் செய்வதையும் உங்களுக்காக ஏற்படுத்தினான்.(அல்குர்ஆன்: 43:12)➚
. நீங்கள் ஏறிச் செல்வதற்காக உங்களுக்குக் கால்நடைகளை அல்லாஹ்வே உருவாக்கினான். அவற்றிலிருந்து உண்ணுகிறீர்கள். அவற்றில் உங்களுக்கு (வேறு) பயன்களும் உள்ளன. உங்கள் உள்ளங்களில் உள்ள தேவையை அவற்றின் மீது (ஏறிச் சென்று) அடைந்து கொள்கிறீர்கள். அவற்றின் மீதும், கப்பல்கள் மீதும் சுமக்கப்படுகிறீர்கள்.
நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம் என்பதையும், அவர்கள் அதற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதையும் அவர்கள் காணவில்லையா? அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உள்ளன. அவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர். அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் அவற்றில் உள்ளன. நன்றி செலுத்த மாட்டார்களா?
கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள சானத்துக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையானது. (அல்குர்ஆன்: 16:66)➚
உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின்போதும், ஊரில் நீங்கள் தங்கியிருக்கும்போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மறி ஆட்டு ரோமங்கள், வெள்ளாட்டின் ரோமங்கள், ஒட்டகத்தின் ரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும், குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்) வசதிகளையும் ஏற்படுத்தினான். (அல்குர்ஆன்: 16:80)➚
மேலும் திருமறைக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் அன்ஆம்கள் உண்பதற்காக புற்பூண்டுகளையும், தாவரங்களையும், செடி கொடிகளையும் முளைக்கச் செய்திருப்பதாகவும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
மேற்கண்ட வசனங்களில் ”அன்ஆம்கள்” எனும் ஆடு, மாடு, ஒட்டகங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் பல்வேறு பயன்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
அவைகளின் மூலம் நாம் பால் என்ற உணவைப் பெற்றுக் கொள்கிறோம்,
அவைகளின் இறைச்சியை உணவாக உட்கொள்கிறோம்,
அவற்றில் தோல்கள் பயன்தருகின்றன.
மாடு ஒட்டகம் போன்றைவை சுமைகளை சுமக்கின்றன.
மனிதர்கள் அதில் ஏறிச் செல்கின்றனர்.
அல்லாஹ் அன்ஆம்களில் என்னென்ன பயன்கள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றானோ அந்த அனைத்துப் பயன்களும் எருமை மாட்டிலும் உள்ளன.
எருமை பால் தருகிறது.
எருமையை வண்டியிழுப்பதற்கும்,
ஏறிச் செல்வதற்கும் பயன்படுத்தும் மக்களும் உள்ளனர்.
எருமைத் தோலிலிருந்தும் மக்கள் பயன்பெறும் விசயங்கள் தயாரிக்கப்படுகிறது.
அனைத்து மாடுகளும் உண்ணும் உணவைத்தான் எருமையும் உண்கிறது.
எனவே திருமறைக்குர்ஆன் அடிப்படையில் ”எருமை” என்பது தெளிவாக மாட்டு இனத்தினைச் சார்ந்தது என்பதை நாம் சந்தேகமின்றி புரிந்து கொள்ளலாம்.
மேலும் அறிவு ரீதியாகவும் எருமை மாடு இனத்தைச் சார்ந்ததுதான் என்பது நிரூபணமான ஒன்றாகும்.
பசு, எருமை கலப்பினமாடுகள் ஏராளம் உள்ளன. இதிலிருந்தும் எருமை மாட்டின் ஒரு வகை என்பதை புரிந்து கொள்ளலாம்.
மேலும் லிஸானுல் அரப், முஃஜமுல் வஸீத் போன்ற பல அரபி அகராதி நூற்களிலும் எருமை என்பது மாட்டின் ஒரு வகையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
المعجم الوسيط (1/ 65)
( البقر ) جنس من فصيلة البقريات يشمل الثور والجاموس ويطلق على الذكر والأنثى ومنه المستأنس الذي يتخذ للبن
لسان العرب (6/ 42)
والجامُوسُ نوع من البَقر دَخيلٌ وجمعه جَوامِيسُ فارسي معرّب وهو بالعجمية كَوامِيشُ
எனவே மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் எருமை மாட்டைக் குர்பானி கொடுக்கலாம் என்பதே தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.