இகாமத் சொன்ன பிறகு சுன்னத் தொழலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

கேள்வி: இகாமத் சொன்ன பிறகு சுன்னத் தொழலாமா?

இகாமத் சொன்ன பிறகு எந்தத் தொழுகையும் தொழக்கூடாது என்று தடை உள்ளது.(முஸ்லிம்: 615) ஆவது ஹதீஸில் இகாமத் சொல்லப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் சுப்ஹு தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது முன் சுன்னத்தைத் தொழுது விட்டு ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளலாமா?


பதில்: தொழக்கூடாது.

நீங்கள் சுட்டிக்காட்டும் இரு ஹதீஸ்கள் இவைதான்.

وحَدَّثَنَي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَرْقَاءَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ»

(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(முஸ்லிம்: 1281)

கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகை தொழக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது.

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:

«أُقِيمَتِ الصَّلاَةُ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَاجِي رَجُلًا فِي جَانِبِ المَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلاَةِ حَتَّى نَامَ القَوْمُ

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் தோழர்கள் தூங்கும் வரை அந்த மனிதருடன் பேசிக் கொண்டு இருந்தார்கள். பின்னர் வந்து மக்களுக்குத் தொழுவித்தார்கள்.

நூல்கள்:(புகாரி: 642) ,(முஸ்லிம்: 615)

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்.

இகாமத் சொல்லப்பட்ட பின் வேறு தொழுகையைத் தொழுவதற்கு எந்த ஆதாரமும் இந்த ஹதீஸில் இல்லை.

இகாமத் சொல்லப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததாக இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. பேசிக் கொண்டு இருப்பதற்கு அனுமதி இருக்கும் போது சுன்னத் தொழுதால் என்ன தவறு என்று கேட்பது தவறாகும்.

இகாமத் சொல்லப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தொழுகை நடைபெறவில்லை. பேசி முடித்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று தான் தொழுவித்துள்ளார்கள். இகாமத் சொன்ன பிறகு தவிர்க்க முடியாத காரணங்களால் தொழுகையைத் தாமதப்படுத்துவதற்கு இமாமிற்கு அனுமதி உண்டு என்பதற்குத் தான் இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

இகாமத் சொல்லப்பட்ட பின் வேறு தொழுகையைத் தொழக் கூடாது என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. இதற்கு மாற்றமாகக் கூறினால் அதற்கு நேரடி ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அவ்வாறு எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதித்த தடையைப் பேணுவது தான் முஃமின்களின் கடமையாகும்.