Tamil Bayan Points

67) 83 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

83 வது வசனம்

83. எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

அல்குர்ஆன் : 36 : 83

இறுதியாக மறுமையை பற்றிய சிந்தனை

இவ்வசனத்தின் துவக்கத்தில் தன்னை தூயவன் என்று அல்லாஹ் புகழுகிறான். பிறகு “ அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!” என்று கூறி மறுமையை நினைவூட்டுகிறான்.

உலகில் எத்தகைய சுக போகத்தோடு வாழ்ந்தாலும் இறுதியில் அல்லாஹ்விடம் திரும்பி விடுவோம் என்பதை நாம் நினைவு கூறவேண்டும். மறுமை வாழ்வுக்காக நாம் நன்மைகளை தயாரித்து வைத்துள்ளோமா? என்று சிந்திக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நினைவூட்டுகிறார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “மறுமை நாள் எப்போது வரும்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அதற்காக என்ன முன் முயற்சி செய்துள்ளாய்?” என்று கேட்டார்கள். அவர், “அதற்காக நான் அதிகமான தொழுகையையோ, நோன்பையோ தானதர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “நீ யாரை நேசிக்கின்றாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்” என்று கூறினார்கள்.

நூல் புகாரி-6171

மறுமை நாளை பற்றி கேட்கும்போது அதற்கு என்ன தயாரித்துள்ளாய்” என்றுதான் முதலில் நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். எனவே மறுமைக்கான தயாரிப்புகளை செய்துகொண்டு, நபி (ஸல்) அவர்களையும் நேசித்து அவர்களுடன் சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை அடைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

அல்லாஹ் அருள் புரிவானாக.!