66) 82 வது வசனம்
நூல்கள்: யாஸீன் விளக்கவுரைLast Updated on October 28, 2023 by
82 வது வசனம்
82. ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது “ஆகு’ என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.
அல்குர்ஆன் 36 : 82
எந்த மூலக்கூறுமின்றி “ஆகு” என்ற வார்த்தையை மட்டும் கொண்டு பொருளை படைப்பது அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் சாத்தியமானதல்ல. மனிதன் எத்தகைய அறிவியல் வளர்ச்சியடைந்திருந்தாலும் மூலக்கூறின்றி ஒரு பொருளை உருவாக்க இயலாது. இதையே இவ்வசனம் குறிக்கிறது.
இவ்வாறு எந்த மூலக்கூறுமின்றி பொருளை படைப்பதும் அல்லாஹ்வின் வல்லமையாகும். மேலும் “ஆகு” என்றவுடன் ஆக்கும் ஆற்றல் அல்லாஹ்விற்கு மட்டும் உள்ளதாகும். சிலர் மனிதர்களுக்கும் இந்த ஆற்றல் உண்டு என்று நினைக்கின்றனர்.
உதாரணமாக சூனியக்காரன் இது போன்று கட்டளையின் மூலம் அவன் விரும்பியதை செய்வான் என்று நம்புகின்றனர். இது தவறாகும். இவ்வாறு நம்புதல் கூடாது.
“பெற்றோரை நோவினை செய்பவனும் சூனியத்தை உண்மையென்று நம்புபவனும் நிரந்தரமாக மது குடிப்பவனும் விதியை பொய்யென கருதுபவனும் சொர்க்கம் செல்லமாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூ தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் அஹ்மத்-26212
எனவே ஆகு என்ற கட்டளை மூலம் செயல்படுத்தும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் உள்ளது என்று நம்பினால் சூனியம் போன்ற பல தவறான நம்பிக்கைகளிலிருந்து நாம் தவிர்ந்து கொள்ளலாம்.
வானம் பூமியை படைக்க ஆறு நாட்கள் ஏன்?
வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.
(அல்குர்ஆன் : 50 : 38.)
“ஆகு” என்ற ஒரு கட்டளையின் மூலம் அனைத்தையும் படைக்க சக்தி பெற்ற இறைவன் வானம் பூமியை படைப்பதற்கு ஆறு நாட்களை ஏன் எடுத்து கொள்ளவேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இவர்கள் சில தெளிவை பெற்றுக் கொள்ளவேண்டும்.
“ஆகு” என்பதன் மூலம் உருவாக்கும் ஆற்றல் அல்லாஹ்விற்கு உள்ளதால் அனைத்தையும் அதே வழியில்தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையில்லை. வேறு வழிகளிலும் செய்யலாம்.
உதாரணமாக விமானத்தில் செல்வதற்கு சக்தி பெற்ற ஒருவர் பேருந்தில் செல்வதை அவருடைய இயலாமையாக கருதமாட்டோம். மாறாக அவருடைய விருப்பத்தின்படி செல்கிறார் என்றே கருதுவோம்.
அது போன்றே உடனடியாக படைப்பதற்கு ஆற்றலிருந்தும் தன் விருப்பப்படியே ஆறு நாட்களை அல்லாஹ் எடுத்துக்கொண்டான் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
மேலும் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக களைப்பின்றி பிரம்மாண்டமான பொருட்களை உருவாக்க வேலை செய்வது எந்த மனிதனுக்கு இயலாது. எனினும் அல்லாஹ்வுக்கு இயன்றுள்ளது. இதை 50 வது அத்தியாயம் 38 வது வசனத்தின் இறுதியில் “நமக்கு எந்த களைப்பும் ஏற்படவில்லை.” என்றும் கூறுவதிலிருந்து அறியலாம்.