Tamil Bayan Points

65) 78, 79, 80, 81 வது வசனங்கள்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

78, 79, 80, 81 வது வசனங்கள்

78. அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான்.

79. “முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று கூறுவீராக!

80. அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.

81. வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் : 36 – 78, 79, 80, 81

மரணத்திற்கு பிறகு மீண்டும் எழுப்புவதை நம்பாதவர்கள் கேட்ட கேள்வியை 78 வது வசனத்தில் அல்லாஹ் கூறிவிட்டு, 79 வது வசனத்தில் அதற்கு மறுப்பை தெரிவிக்கிறான். முதலில் படைத்தவனுக்கு மீண்டும் படைப்பது எளிது என்று விளக்குகிறான்.

மேலும் இதற்கு உதாரணமாக 80 வது வசனத்தில் பச்சை மரத்திலிருந்து நெருப்பு மூட்டுவதை கூறுகிறான். ஏனெனில் பச்சை மரத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். பொதுவாக நீர் சத்துள்ள பொருட்களில் நெருப்பு பற்றாது. இந்த பொது விதிக்கு மாற்றமாக பச்சை மரத்தில் மட்டும் பற்றிக் கொள்ளும். மழை நேரத்தில் மின்னல் தாக்கி பச்சை மரங்கள் தீப்பற்றுகிறது. இத்தகைய இயற்கைக்கு மாற்றமான காரியத்தை செய்யும் எனக்கு இறந்த பிறகு மனிதனை உயிர்பிப்பது எளிதுதான் என உதாரணத்துடன் அல்லாஹ் நிரூபிக்கிறான்.

மேலும் 80 வது வசனத்தில் “அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.” என்று கூறுகிறான். இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளது. அனைத்து பொருட்களுக்கும் மனிதனுடைய முதன்மையான கண்டுபிடிப்பாக நெருப்பு உள்ளது.

நாம் சாப்பிடும் உணவுகள் பல நெருப்பின்றி உருவாகாது. மிகவும் வீசக்கூடிய மீன் நெருப்பில் சமைத்தவுடன் மனம் கமழுகிறது. உணவு மட்டுமின்றி பல தேவைகளுக்காக நெருப்பு பயன்படுகிறது. இதை குறிப்பதற்குதான் இவ்வசனத்தில் நெருப்பு நினைவூட்டப்படுகிறது.

81 வது வசனம்

81. வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப்பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.

இறந்த பிறகு உயிர்பிப்பதை ஏற்காதவர்களுக்கு இவ்வசனத்தில் மறுப்பு உள்ளது. வானம் பூமியுடன் ஒப்பிடும் போது மனிதன் மிகவும் அற்பமான படைப்பினமாவான்.

வானம், பூமி பிரம்மாண்டமானதாகும். பிரம்மாண்டத்தை படைத்தவனுக்கு அற்பமானதை படைப்ப்பது மிகமிக எளிதுதான் என யாரும் மறுக்கமுடியாத வகையில் அறிவுப்பூர்வமாக இவ்வசனத்தின் மூலம் தெளிவுப்படுத்துகிறான்.