64) 77வது வசனம்
நூல்கள்: யாஸீன் விளக்கவுரைLast Updated on October 28, 2023 by
77வது வசனம்
77. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான்.
அல்குர்ஆன் 36 : 77
மனிதன் குரங்கிலிருந்து படைக்கப்பட்டானா?
மனித படைப்பை பற்றி இவ்வசனம் பேசுகிறது. விந்து துளியிலிருந்து மனிதனை படைத்ததாக கூறுகிறான். மற்ற சில வசனங்கள் இதை விளக்குகிறது.
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத்துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
அல்குர்ஆன் 76 : 2
யாசீன் அத்தியாயத்தில் விந்துத் துளி என்று மட்டும் உள்ளது. 76 வது அத்தியாயத்தில் கலப்பு விந்துத்துளி என்று கூடுதலாக உள்ளது. இதன் மூலம் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பே குர்ஆன் அறிவியல் பூர்வமாக பேசுவதை அறியலாம்.
முஸ்லிமல்லாதவர்கள் இதை படிக்கும் போது ஆச்சரியப்படுவார்கள். ஏனெனில் விந்துத் துளி என்று மட்டும் கூறாமல் கலப்பு விந்துத் துளி என்று கூறுவதில் அறிவியல் பொதிந்துள்ளது.
கருவில் உயிர் உருவாவதற்கு ஆணுடைய விந்துத் துளி மட்டும் போதாது. பெண்ணுடைய சினைமுட்டையும் வேண்டும். இரண்டும் கலக்கும் போதுதான் கரு உண்டாகும் என்று அறிவியல் கூறுகிறது. இதை குறிப்பதற்கே கலப்பு விந்துத் துளி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இஸ்லாத்தை விமர்சிக்கும் சிலர் மேற்கண்ட கருத்தை குறைகூறுகின்றனர். ஒரு வசனத்தில் களிமண்ணிலிருந்து மனிதனை படைத்தோம் என்றும் மற்றொரு வசனத்தில் விந்துத்துளியிலிருந்து என்றும் மற்றொரு வசனத்தில் கலப்பு விந்துத்துளியிலிருந்து என்றும் முரண்பட்டு அல்லாஹ் பேசுகிறான் என்று கூறுகின்றனர். இது முரண்பாடல்ல. வெவ்வேறு முறைகளில் கூறப்பட்ட தகவலாகும்.
உதாரணமாக நாம் சாப்பிடும் இடியாப்பத்தை பற்றி கூறும்போது நெல் மணியிலிருந்து வந்தது என்றும் அரிசியிலிருந்து வந்தது என்றும் அரிசி மாவிலிருந்து வந்தது என்றும் பல வகைகளில் கூறுவோம். இது அனைத்தும் முரண்பாடல்ல. வெவ்வேறு தகவல்கள்தான். எனினும் மூலக்கூறு ஒன்றுதான். இது போன்றே இவ்வசனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் மனிதன் குரங்கிலிருந்து படைக்கப்பட்டான் என்ற டார்வினிஸ்ட்களின் தத்துவத்திற்கு இவ்வசனம் மறுப்பாக அமைந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் டார்வின் என்பவர் மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்துள்ளான். எனவே மனிதனின் துவக்கம் குரங்குதான் என்று கூறினார். இது தவறாகும். வெற்று அனுமானமாகும்.
ஆப்பிரிக்காவை சேர்ந்த தாய், தந்தையிலிருந்துதான் மனிதர்கள் தோன்றினர் என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதிலிருந்து டார்வினின் கற்பனையான தத்துவம் தவறு என்பதை அறியலாம்.