Tamil Bayan Points

5) நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா?

நூல்கள்: அற்புதங்கள் ஓர் ஆய்வு

Last Updated on December 27, 2019 by

5) நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா?

நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு சில அற்புதங்களைச் செய்து காட்டியதற்கு ஆதாரம் உள்ளது. இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அல்லாஹ்வின் அனுமதியுடன் சில அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. இப்படி யாருக்கு அல்லாஹ் அனுமதி அளித்ததாக ஆதாரம் உள்ளதோ அவர்களைத் தவிர மற்ற யாரும் அற்புதங்கள் செய்ய முடியாது.

நபித்தோழர்களோ, மற்ற நல்லடியார்களோ தாம் வாழும் காலத்தில் செய்தததாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அற்புதங்கள் அனைத்தும் கட்டுக் கதைகளாகும். ஏனெனில் ஒருவர் அற்புதம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் அவரிடம் நேருக்கு நேராகப் பேசி அனுமதி அளிக்கும் போது மட்டுமே அற்புதம் செய்ய முடியும். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(திருக்குர்ஆன்:13:38)

அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை.

(திருக்குர்ஆன்:40:78)

அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

(திருக்குர்ஆன்:14:11)

அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நபிமார்கள் அற்புதம் செய்ய முடியும் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்தால் தான் நபிமார்கள் அற்புதம் செய்ய முடியும் என்பதையும், நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதத்தை மற்றொரு முறை செய்வதாக இருந்தால் அதற்கும் அல்லாஹ்வின் அனுமதி வரவேண்டும் என்பதையும், தமக்கு வழங்கப்பட்ட அற்புதம் தவிர வேறு எதையும் நபிமார்களால் செய்ய முடியாது என்பதையும் தக்க ஆதாரங்களுடன் முன்னர் விளக்கியுள்ளோம்.

இதில் இருந்து தெரிய வருவது என்ன? ஒருவர் அற்புதம் செய்வது என்றால் அவர் இறைவனின் வஹீ தொடர்பில் இருக்க வேண்டும். அல்லது வழிகெடுப்பதற்காக இன்ன மனிதன் இன்ன காரியங்களைச் செய்வான் என்று வஹீ மூலம் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துடன் வஹீ முடிந்து விட்டது. அவர்களுக்குப் பின் யாருக்கும் வஹீ வராது. யாருடனும் அல்லாஹ் பேச மாட்டான்; நபிமார்கள் அல்லாத மற்றவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி பெறும் வாய்ப்பு பெற மாட்டார்கள் என்பதால் அவர்களால் அற்புதம் செய்ய இயலாது என்று இதிலிருந்து உறுதிபட அறிகிறோம்.

மகான்கள் அற்புதம் செய்தார்கள் என்று யாரேனும் வாதிட்டால் அந்த மகான்கள் அல்லாஹ்விடம் பேசினார்களா? அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி அளித்தானா? அப்படியானால் அவர்கள் இறைத்தூதர்களா? இனியும் நபிமார்கள் வர முடியுமா?

இறைத்தூதர்கள் தம்மை இறைத்தூதர் என்று நிரூபிக்கும் ஆதாரத்துடன் மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதால் அவர்களுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு இந்த அவசியம் எதுவும் இல்லை.

நபித்தோழர்களோ, நன்மக்களோ அற்புதம் செய்ததாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அது கட்டுக்கதை என்பதில் சந்தேகம் இல்லை. அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது பொய் என்பதில் சந்தேகம் இல்லை.

உதாரணமாக ஒரு செய்தியை இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப் போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே சாரியாவே! அந்த மலைக்குள் செல். சாரியாவே அந்த மலைக்குள் செல் எனக் கூறினார்கள். போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கும், உமர் (ரலி) அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையே ஒரு மாத காலம் பயணம் செய்யத் தக்க தொலைவு இருந்தது. உமர் (ரலி) அவர்கள் இங்கிருந்து எழுப்பிய சப்தத்தை படைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று மலைக்குள் சென்றார். இதன் பிறகு வெற்றி கிடைத்தது. இவ்வாறு மேற்கண்ட செய்தி கூறுகின்றது.

இது அபூ நுஐமின் தலாயிலுன் நுபுவ்வா, பைஹகியின் அல்இஃதிகாத், இன்னும் பல நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் கருத்து குர்ஆனுடன் மோதும் வகையில் அமைந்துள்ளது.

மனிதப் பார்வை அடையாத வெகு தொலைவில் நடந்த நிகழ்வை உமர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள் என இந்தக் கதை கூறுகின்றது. இறைவனுக்கு மட்டும் உரிய மறைவான ஞானம் என்ற அம்சம் உமர் (ரலி) அவர்களிடமும் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கின்றது. இது இணை வைப்பாகும்.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.

(திருக்குர்ஆன்: 6:59)

இறைவன் சில நேரங்களில் சில மறைவான விஷயங்களைத் தன் தூதர்களுக்கே கற்றுக் கொடுப்பான். இவ்வாறு இறைவன் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது கூட அதை அவர்கள் மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இறைவன் மறைமுகமான விஷயங்களை கற்றுக் கொடுக்க மாட்டான்.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.

(திருக்குர்ஆன்:72:26)

உமர் (ரலி) இறைத்தூதர் அல்ல என்பதால் மறைவான இந்த விஷயத்தை அல்லாஹ் அவருக்குக் காட்டித் தந்திருக்க மாட்டான். அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருப்பதுடன் குர்ஆனுடன் மோதுவதால் இது கட்டுக்கதைகளின் ஒன்றாக ஆகிவிடுகிறது.

ஷியாக்கள் தங்களின் இமாம்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக பல கட்டுக்கதைகளை உருவாக்கியுள்ளனர். இது கட்டுக்கதை எனக் கூறி ஆதாரங்களைக் கொண்டு முறியடிக்க கடமைப்பட்டவர்கள் அதைச் செய்யாமல் அதற்குப் போட்டியாக எங்கள் இமாம்களுக்கும் இதுபோல் ஏற்பட்டுள்ளது எனக் கருதி கராமத் கதைகளை இட்டுக்கட்டி இருக்க வேண்டும்.

இப்போது இந்த அற்புதம் செய்யப்போகிறோம் என்ற ஞானத்துடன் நபிமார்கள் செய்வது போல் மற்ற யாரும் அற்புதம் செய்ய முடியாது. அப்படிச் சொல்லப்படும் செய்திகள் கட்டுக்கதைகளாகும். ஆனால் யாரிடம் அற்புதம் நிகழ்கிறதோ அவருக்கும், மற்ற எவருக்கும் தெரியாமல் யாரும் எதிர்பாராமல் ஒருவரிடம் ஒரு அற்புதம் நிகழ்ந்தது என்று சொல்லப்பட்டால் அது நம்பகமானவர்களால் சொல்லப்பட்டால் அதை நாம் நம்பலாம்.

இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். முஸ்லிமல்லாதவருக்கும், முஸ்லிம்களில் கெட்டவர்களுக்கும் கூட நடக்கும். உலகில் வழங்கப்படும் பாக்கியங்கள் எப்படி நல்லவன் கெட்டவன் என்று பார்த்து வழங்கப்படுவதில்லையோ அது போலவே இத்தகைய அற்புதங்கள் அமைந்துள்ளன. இப்படி ஒருவருக்கு நடந்தால் அவர் நல்லடியார் என்பதற்கு அது ஆதாரமாக ஆகாது.

நபிமார்கள் வழியாக நிகழ்த்தப்படும் அற்புதம் முஃஜிசாத் என்றும், மகான்களுக்கு நடக்கும் அற்புதங்கள் கராமத் என்றும் வகைப்படுத்தி இவ்வாறு நம்புவது தான் சுன்னத் ஜமாஅத் கொள்கை என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். இப்படி வகைப்படுத்த குர்ஆனிலும் ஆதாரம் இல்லை. நபிவழியிலும் ஆதாரம் இல்லை.

இவர்கள் கூறுகின்ற கருத்தில் கராமத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு குர்ஆனில் இருந்தோ, நபிமொழிகளில் இருந்தோ ஆதாரத்தை எடுத்துக் காட்டாமல் மனோ இச்சைப்படி பெயர் சூட்டிக் கொண்டது மார்க்கத்தில் உள்ளதாக ஆகாது.

தர்காக்களில் அற்புதம் நடக்கவில்லையா?

கராமத் எனும் கட்டுக்கதையை நம்பக்கூடியவர்கள் ஏற்கத்தக்க எந்த ஆதாரத்தையும் காட்டாமல் தர்காக்களில் எத்தனையோ பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றன என்ற பொய்யான தத்துவத்தைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

எந்த மகானாக இருந்தாலும் உயிருடன் இருக்கும் போது கூட எந்த அற்புதத்தையும் செய்ய முடியாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடாக இருக்க மரணித்த பின் அவர்கள் அற்புதம் நிகழ்த்தினார்கள் என்று எப்படி முடிவு செய்தனர்?

صحيح مسلم 14 – (1631) حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ يَعْنِي ابْنَ سَعِيدٍ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ هُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ “

மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3358

மனிதன் மரணித்த பின் அவருக்கும், இவ்வுலகுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படுகிறது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(திருக்குர்ஆன்:23:99,100)

மரணித்தவருக்கு இவ்வுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றை மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா என்ற நமது நூலில் காணலாம். மேலும் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன எனக் கூறுவதில் உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் செல்வந்தராக ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர்.

செல்வந்தராகி விட்ட அந்த இரண்டு பேர், 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கைகூடாத 998 பேர் “இவர் ஒரு மகானா” என்று கூறிவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.

இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் உள்ளதையும், மற்றும் குழந்தையில்லாமலேயே மரணித்து விடுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை. கோவில்களில் நடக்கின்றன. சர்ச்சுகளில் நடக்கின்றன. இன்னும் பல வழிபாட்டுத் தலங்களில் நடக்கின்றன. இவ்வாறு நடப்பதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாகக் காணிக்கைகள் குவிகின்றன. தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு தான் காணிக்கைகள் செலுத்துவர் என்பதை அனைவரும் அறிவோம்.

இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பது குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் ஆதாரமாக இருக்கிறது. ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.

ஒவ்வொரு காரியமும் நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும்போது தானாக அந்தக் காரியம் நிறைவேறிவிடும். அந்த நேரம் வரும்போது தர்காவில் இருப்பவர்கள், தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த நேரம் வரும்போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர். அந்த நேரம் வரும்போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேரியின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர். இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும், பிந்தவும் செய்யாது.

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

(திருக்குர்ஆன்:7:34)

‘அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ, நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

(திருக்குர்ஆன்:10:49)

மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

(திருக்குர்ஆன்:16:61)

ஒவ்வொரு காரியம் நிகழ்வதற்கும் அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயித்து வைத்துள்ளான். அந்த நேரம் வந்ததும் அது நிகழ்கிறது. தர்கா வழிபாடு பாவம்; அது அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்று தவ்ஹீத் ஜமாஅத்தினரும், இன்னும் பலரும் கருதுகின்றனர். இவர்களுக்கும் காரியங்கள் கைகூடுகின்றன.

தர்கா வழிபாடு செய்பவர்களுக்கு குழந்தை பிறப்பது போல் அதை எதிர்ப்பவர்களுக்கும் குழந்தை பிறக்கிறது. தர்கா வழிபாடு செய்யும் சிலர் செல்வந்தர்களாக ஆவது போல் அதை எதிர்ப்பவர்களிலும் சிலர் செல்வந்தர்களாக ஆகின்றனர். காரணம் அதற்கான நேரம் வந்து விட்டது தான். தர்கா வழிபாடு செய்வோர் இதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே மகான்கள் உலகில் உயிரோடு வாழும் போதும் அவர்களால் அற்புதம் செய்ய முடியாது. மரணித்து விட்டால் சாதாரண காரியங்களைக் கூட அவர்கள் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

அவ்லியாக்களின் ஆற்றல் குறித்த ஹதீஸ்

மகான்கள் அற்புதம் செய்ய வல்லவர்கள் என்றும், நினைத்ததைச் செய்து முடிப்பவர்கள் என்றும் கருதக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

صحيح البخاري

6502 – حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللَّهَ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ المُؤْمِنِ، يَكْرَهُ المَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ “

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன்.

அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6502

இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு, பார்த்தீர்களா! நபிமார்களுக்கு இல்லாத அற்புதத்தை அல்லாஹ் அவ்லியாக்களுக்கு வழங்கியிருக்கிறான். அவ்லியாவுடைய கண் என்பது அல்லாஹ்வுடைய கண்ணாகும். அப்படியென்றால் அல்லாஹ் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்ப்பதைப் போன்று அவ்லியா பார்ப்பார். அவ்லியாவுடைய காது என்பது அல்லாஹ்வுடைய காதாகும். அப்படியானால் அல்லாஹ் ஒரே நேரத்தில் அத்தனை பேச்சையும் கேட்பதைப் போன்று அவ்லியாவும் கேட்பார் என்று சொல்கிறார்கள்.

அப்துல் காதர் ஜீலானி, சாகுல் ஹமீது உட்பட அத்தனை அவ்லியாக்களுமே அல்லாஹ் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள். அல்லாஹ் கேட்பதைப் போன்று கேட்பார்கள். அவர்கள் பிடித்தால் அது அவ்லியாக்களுடைய கை கிடையாது. அல்லாஹ்வுடைய கையாகும் என்றும் சொல்கின்றனர். நாம் இதற்கு முன் வைத்த எந்த ஆதாரத்தையும் கவனிக்க மாட்டார்கள். இந்த ஒரு ஹதீஸை மட்டும் வைத்து வாதித்துக் கொண்டிருப்பார்கள்.

அவ்லியாக்களுக்கு அதிகாரத்தையும், அற்புத சக்தியையும் அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதற்கு இதைப் பெரிய ஆதாரமாக சமாதி வழிபாடு செய்வோர் எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும்போது அப்படித் தெரியலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக குர்ஆனைப் பார்க்கும் அதன் உயிர்நாடியான ஏகத்துவக் கொள்கைக்கு ஏற்ப வேறு விளக்கம் தான் இதற்குக் கொடுக்க வேண்டும். இதற்கு நேரடிப் பொருள் கொள்ளலாமா? மற்ற ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் பொருள் கொள்ள வேண்டுமா? நேரடிப் பொருள் கொண்டால் ஏற்படும் விபரீதங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறைநேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று இவர்கள் சிந்தித்தித்தால் இதன் சரியான பொருள் தெரியவரும்.

பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான். “இவர் எனது வலக்கரமாக இருக்கிறார்” என்று கூறினால் நேரடிப் பொருளில் இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். “ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்” என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம். இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

صحيح مسلم

43 – (2569) حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي “

“நான் பசியாக இருந்தபோது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்தபோது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்தபோது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?” என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் “நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது?” என்று கேட்பான், அதற்கு இறைவன் “ஒரு ஏழை பசி என்று கேட்டபோது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்” என்று கூறுவான்.

பார்க்க: முஸ்லிம் 5021

அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லோரும் அல்லாஹ்வா? அவர்களிடம் பிரார்த்தனை செய்வார்களா? பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டுவார்களா? நம்முடைய கை அல்லாஹ்வுடைய கையாக மாறுமா? நம்முடைய காது அல்லாஹ்வுடைய காதாக மாறுமா? நம்முடைய பார்வையாக அல்லாஹ் ஆகுவானா? அப்படி ஆகியிருந்தால் அவ்லியாக்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கு மரணம் வந்திருக்குமா? அப்படியானால் இறந்த பிறகு புதைக்கப்பட்டது அல்லாஹ்வா?

இவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள் என்று சொல்கிறார்களோ அத்தனை பேரையும் அல்லாஹ்வின் நேசர்கள் என்றும், அல்லாஹ்வின் தன்மை பெற்றவர்கள் என்றும் தானே சொல்கிறார்கள். அப்படியானால் அவர்கள் ஏன் மரணித்தார்கள்? இப்போதும் அவர்கள் உயிருடன் பூமியில் சுற்றித் திரிய வேண்டியது தானே! ஏன் அத்தனை அவ்லியாக்களும் சாதாரண ஒரு மனிதன் இறந்த பிறகு அடக்கம் செய்யப்படுவதைப் போன்று மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்?

மனிதனுடைய பேச்சாக இருந்தாலும், அல்லாஹ்வுடைய பேச்சாக இருந்தாலும் இலக்கியமாக – உவமையாகச் சொல்லப்பட்டவைகளும் உள்ளன. நேரடியாகப் பொருள் கொள்ளத்தக்கவைகளும் உள்ளன. எது நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை நேரடியாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். எது உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை உவமையாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மனித வழக்கில், ஒருவரை இவன் சிங்கம் என்று சொல்கிறோம் என்றால் உண்மையிலேயே அவன் சிங்கம் என்று எடுத்துக் கொள்வோமா? கிடையாது. அவன் சிங்கத்தைப் போன்ற வீரம் – வலிமை உடையவன். சுறுசுறுப்பு உடையவன் என்றுதான் நாம் விளங்கிக் கொள்வோம். இதை நாம் நேரடியாக விளங்கிக் கொள்ளக்கூடாது. உவமையாகத் தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதே போன்று, நாம் நம்முடைய மனைவியை என் கண்ணே, கண்மணியே என்று கொஞ்சுவோம். அதற்காக அவளுடைய கண்ணாக நம் கண் ஆகிவிடுமா? இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வோம்? என்னுடைய கண்ணை நான் எவ்வாறு முக்கியமாகக் கருதுகின்றேனோ? அதைப் போன்று நீயும் எனக்கு முக்கியம் என்று தான் புரிந்து கொள்வோம்.

இதே மாதிரியான வார்த்தைப் பிரயோகத்தைத் தான் அல்லாஹ்வும் பயன்படுத்துகின்றான். அவ்வாறுதான் மேற்கண்ட ஹதீஸையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மேற்கண்ட ஹதீசின் இறுதிப் பகுதியே இதன் பொருளைத் தெளிவாக்கி விடுகிறது.

அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் என்பது தான் இறுதி வாசகம். அவர்கள் நினைத்ததெல்லாம் நடக்காது; அவர்களிடம் அற்புதம் ஏதும் நிகழாது; அவர்கள் என்னிடம் துஆச் செய்தால் நான் ஏற்றுக் கொள்வேன் என்பது தான் இதன் பொருளாகும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் அனுமதி பெறாமல் யாரும் அற்புதம் செய்ய முடியாது என்ற வசனங்களுக்கு முரணாக இதன் நேரடிப் பொருள் அமைந்துள்ளது.