Tamil Bayan Points

46) 56 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

56 வது வசனம்

56. அவர்களும், அவர்களது துணைகளும் கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள்.

(அல்குர்ஆன் : 36 : 56.)

சொர்க்கத்தில் துணைகளும் இருப்பார்கள். இவர்கள் “ஹூருல் ஈன்” என்றழைக்கப்படுவர். அவர்களுடைய அழகை பின்வரும் வசனம் விளக்குகிறது.

ஹூருல் ஈன்களும் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.

(அல்குர்ஆன் : 56 : 22,23.) 

அவர்களுடைய அழகின் மகத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும். உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில் ஒரு வில் அளவுக்கு, அல்லது ஒரு பாதம் வைக்கும் அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும்.

சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விட மேலானதாகும்.

நூல் புகாரி-6568

இவ்வுலகில் உள்ள ஆண்களோ அல்லது பெண்களோ புறச்சாதனங்கள் மூலம் தங்களை அழகுபடுத்தி கொண்டால் மட்டும்தான் பார்ப்பதற்கு அழகாக தோன்றுவார்கள். இல்லையேல் சாதாரணமாகதான் தோன்றுவார்கள்.

உலக அழகி என பட்டம் சூட்டப்படுபவர்களும் புற அலங்காரத்தின் மூலம்தான் அழகாக தோன்றுகிறார்கள். அது இயற்கை அழகல்ல. ஆனால் “ஹூருல் ஈன்கள்” எட்டிப்பார்த்தாலே இவ்வுலகம் முழுவதும் ஒளிரும் அளவிற்கு அழகானவர்கள்.

மேலும் சொர்க்கத்தில் கடை வீதிகளும் உண்டு. அதற்கு சென்று திரும்பும்போது மென்மேலும் அழகுற்றவர்களாக திரும்புவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.

அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்-5448.

மனித கற்பனைக்கெட்டாத இந்த இன்பங்களை கடந்து இன்னும் சில இன்பங்களும் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கின்றது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர், (அதில்) நூறாண்டுகள் சென்று கொண்டேயிருப்பார். (ஆயினும், அது முடிவடையாமல் நீண்டு கொண்டே செல்லும்.) நீங்கள் விரும்பினால், “(சொர்க்கவாசிகள்) நீண்ட நிழலில் இருப்பார்கள்” என்னும் (56:30) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் புகாரி-3252

இது போன்ற மரத்தை உலகில் எங்குமே காணமுடியாது. அத்தகைய பிரம்மாண்டமான மரத்தை சொர்க்கத்து இன்பமாக அல்லாஹ் வைத்துள்ளான்.

மேற்கண்ட ஹதீஸில் அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் என்றுதான் இடம் பெற்றுள்ளது. புகாரியின் 6553வது ஹதீஸில் உயர் ரக குதிரையில் நூறாண்டுகள் பயணம் செய்தாலும் அதன் நிழலை அடைய முடியாது என்று உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது.

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் புகாரி-6553