Tamil Bayan Points

44) 53, 54 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

53, 54 வது வசனம்

53. ஒரே ஒரு பெரும் சப்தம் தவிர வேறு எதுவும் இல்லை. உடனே அவர்கள் அனைவரும் நம்மிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.

54. இன்று எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

(அல்குர் ஆன் : 36 : 53,54.) 

இதில் 53 வது வசனத்தில் மறுமையில் ஒன்று திரட்டப்படுவது பற்றி கூறப்படுகிறது. இதை யாசீன் அத்தியாயத்தின் 32 வது வசனத்தின் விளக்கத்திலேயே நாம் கூறியிருந்தோம். அந்த விளக்கமே இதற்கு போதுமானதாகும்.

சிறந்த நீதியாளன் அல்லாஹ்

அடுத்ததாக 54 வது வசனத்தில் மனிதர்கள் செய்த அமல்களுக்கு கூலி வழங்கப்படும் என்பதையும் யாருக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது என்பதையும் அல்லாஹ் கூறுகிறான். இவ்வசனத்தில் இன்றைய தினம் அல்லாஹ் எவருக்கும் அநீதி இழைக்கமாட்டான் என்று கூறப்படுகிறது. பொதுவாக அல்லாஹ் யாருக்கும் அநீதி இழைக்கமாட்டான்.

அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.

(அல்குர் ஆன் : 4 : 40.) 

எனினும் இன்றைய தினம் என்று யாசீன் அத்தியாயத்தின் 54 வது வசனத்தில் மறுமையை குறிப்பிட்டு கூறுவதற்கு சில காரணங்கள் உள்ளது.

மறுமைநாளில் முழு அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியதாகும்

அவர்கள் வெளிப்பட்டு வரும் நாளில் அவர்களைப் பற்றிய எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது. இன்றைய தினம் ஆட்சி யாருக்கு? அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே.

(அல்குர்ஆன் : 40 : 16.) 

மேலும் நபி (ஸல்) அவர்களும் இதை தெளிவு படுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) அல்லாஹ் பூமியை தனது கைப்பிடிக்குள் அடக்கிக்கொள்வான்; வானங்களை தனது வலக்கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு, “நானே அரசன்! எங்கே பூமியின் அரசர்கள்?” என்று கேட்பான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் புகாரி-4812

பொதுவாக முழு அதிகாரமும் ஒரு நபரிடம் இருந்தால் அங்கே அநியாயங்கள் அதிகமாக நடக்கும். யாரும் அவரை தடுக்க இயலாது, உதாரணமாக ஒரு மனிதரிடம் முழு அதிகாரமும் இருந்தால் அவர் அதை தவறாக பயன்படுத்துவார். மற்றவர்களுக்கு அநீதி இழைப்பார். இதற்கு உலகிலேயே பல சான்றுகளை நாம் பார்க்கிறோம். ஆனால் மறுமை நாளில் முழு அதிகாரமும் தனக்கு இருந்தும் அல்லாஹ் யாருக்கும் அநீதி இழைக்கமாட்டான். சிறிதளவு நன்மை செய்திருந்தாலும் அதையும் வழங்கிவிடுவான்.

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.

(அல்குர்ஆன் : 9 : 7,8.) 

தன்னிடம் அதிகாரக் குவியல் இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்தாமல் அணு அளவு நன்மை செய்திருந்தாலும் அதன் கூலியையும் நான் வழங்கிவிடுவேன் என்று தன்னுடைய நீதியை அல்லாஹ் நிலைநாட்டுகிறான்.