Tamil Bayan Points

42) 50 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

50 வது வசனம்

50. அப்போது அவர்களுக்கு மரண சாசனம் கூற இயலாது. தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள்.

மறுமை நாள் எப்போது நிகழும் என கேலியாக கேட்ட இறைமறுப்பாளர்களுக்கு மரண சாசனம் கூட செய்ய இயலாதளவிற்கு மறுமைநாள் விரைவாக நிகழ்ந்துவிடும் என்று இவ்வசனம் பதிலளிக்கின்றது.

மரண சாசனம் என்பது ஒருவர் தன் மரணத்தருவாயில் கூறும் விஷயங்களாகும். ஒருவர் தன் மரண வேளையில் தனது சொத்துக்கள் மற்றும் இதர விஷயங்கள் தொடர்பாக கூறுவதை மரண சாசனம் என்கிறோம். மரண சாசனம் தொடர்பாக சற்று விரிவாக காண்போம்.

மரண சாசனத்தை பற்றி இஸ்லாம்

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பெற்றோருக்கும் உறவினருக்கும் மரண சாசனம் செய்வது கட்டாய கடமையாக இருந்தது.

உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

(அல்குர்ஆன் : 2:180.) 

இவ்வசனம் வாரிசு உரிமை தொடர்பான பின்வரும் வசனத்திற்கு முன்பே இறங்கியதாகும். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அருளப்பட்ட மேற்கண்ட வசனத்தில் உள்ள சட்டம் பிற்காலத்தில் மாற்றப்பட்டு விட்டது.

“இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு’ என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது.

அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லா விட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு.

உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனத்துக்கும், கடனுக்கும் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

(அல்குர் ஆன் : 4:11, 12.)

வாரிசுரிமை பற்றிய வசனத்தில் பெற்றோருக்கும் உறவினர்களான பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் சொத்தில் கிடைக்க வேண்டிய பங்குகள் விகிதாச்சார அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.

இது போன்று விகிதாச்சார அடிப்படையில் கூறப்பட்டவர்களுக்கு தானாகவே சொத்து சேர்ந்துவிடும். எனவே இவர்களுக்கு மரண சாசனம் செய்ய இயலாது. விகிதாச்சார அடிப்படையில் சொத்து சேராத நபர்களுக்கு மட்டும்தான் மரண சாசனம் செய்யவேண்டும். அவர்களுக்கு நம் சொத்தில் ஏதேனும் கொடுக்க விரும்பினால் அதை மரண சாசனமாக செய்துவிட வேண்டும். மரணசாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பிறகே விகிதாச்சார அடிப்படையில் கூறப்பட்டவர்களுக்கு சொத்தை பங்கிட வேண்டும் என்பதையும் 4 வது அத்தியாயம் 12 வது வசனத்திலிருந்து அறியலாம்.

மரண சாசனத்தின் அதிகபட்ச அளவு என்ன?

மரண சாசனம் செய்வதற்கு மார்க்கம் அனுமதி அளித்திருந்தாலும் அதன் அதிகபட்ச அளவாக மூன்றில் பகுதியை நிர்ணயித்துள்ளது. இதைவிட அதிகமாகி விடக்கூடாது.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘விடை பெறும்’ ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை (நலம்) விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டிருந்தேன். (நபி-ஸல்) அவர்களைக் கண்டதும்) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஒரு செல்வந்தன்’ எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசு) எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கிற வேதனை என்னை வந்தடைந்துவிட்டது. எனவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன்.

நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள். நான், ‘அப்படியென்றால் அதில் பாதியை தர்மம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘மூன்றிலொரு பங்கு (போதும்) சஅதே! மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வதே சிறந்ததாகும்.

நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான்; உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவளம் உணவாயினும் சரியே’ என்று கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி-3936.

உதாரணமாக மூன்று இலட்சம் ரூபாயளவிற்கு சொத்து வைத்தள்ள ஒருவர் இதில் மூன்றில் ஒரு பகுதியாகிய ஒரு இலட்சம் ரூபாய் வரைதான் மரண சாசனம் செய்யமுடியும். அதற்கு அதிகமாக செய்ய முடியாது.