24) உயிருள்ளவனும் உயிரற்றவனும்
நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்Last Updated on July 12, 2023 by
உயிருள்ளவனும் உயிரற்றவனும்
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரி – 6407
விளக்கம்:
மனிதனைப் படைத்த இறைவன் இவ்வுலகத்தில் ஏராளமான வசதி வாய்ப்புகளையும் அள்ளிக் கொடுத்திருக்கின்றான், அவன் கொடுத்த அருட்கொடைகளை கணக்கிட்டுப் பார்க்க முயன்றால் நாம் தோல்வியையே அடைவோம்.
நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன், நன்றி கெட்டவன்.
(அல்குர்ஆன்:14:34)
இந்த இறை வசனம், மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ள அருட்கொடையின் எண்ணிக்கையை அழகுற விளக்குகிறது. இவ்வளவு அருட்கொடைகளையும் அனுபவிக்கும் மனிதன், படைத்தவனை மறந்து வாழ்கிறான். படைத்தவனைப் பற்றி சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை.
இவ்வாறு பெரும் அருட்கொடைகளை அனுபவித்து, படைத்தவனை மறந்திருப்பவன் இறந்தவனுக்குச் சமம் என்று நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள், யார் படைத்தவனை எண்ணிப் பார்த்து அவனுக்கு அடிபணியவில்லையோ அவர்கள். இருந்தும் இல்லாதவர்களைப் போன்றவர்கள். எனவே படைத்தவன நினைத்துப் பார்த்து அவன் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்.