Tamil Bayan Points

2. முன்கதிவு المنقطع (தொடர்பு அறுந்தது)

நூல்கள்: சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

Last Updated on May 13, 2019 by Trichy Farook

2. முன்கதிவு المنقطع  (தொடர்பு அறுந்தது)

நபித்தோழர் தான் விடுபட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் இருந்தால் அதை முர்ஸல் என்கிறோம். இடையில் வேறு அறிவிப்பாளர்கள் விடுபட்டிருப்பார்கள் என்றால் அல்லது விடுபட்டிருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால் அத்தகைய ஹதீஸ்களை முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்று கூறுவார்கள்.

உதாரணத்திற்கு நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம்.

ஹன்னாத்,

 வகீவு,

 இஸ்ராயீல்,

 ஸிமாக்,

முஸ்அப்,

இப்னு உமர்,

நபிகள் நாயகம்.

இதில் உதாரணமாக ஸிமாக் என்பவர் குறிப்பிடப்படாமல் ஹன்னாத்,  வகீவு,  இஸ்ராயீல்,  முஸ்அப்,  இப்னு உமர்,  நபிகள் நாயகம் என்று குறிப்பிட்டால் முன்கதிவு (தொடர்பு அறுந்தது) என்று ஆகிவிடும்.

இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

2004 வது ஆண்டில் 40 வயதில் உள்ள ஒருவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைக் கூறுகின்றார். அவர் பொய் சொல்லாதவராகவும், நம்பிக்கைக் குறியவராகவும் இருக்கின்றார். இவர் பிறந்தது 1964 ஆம் ஆண்டு. காந்தி கொல்லப்பட்டது 1948 ஆம் ஆண்டு. காந்தி கொல்லப்படும் போது பிறக்காத இவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைத் தெரிவித்தால் யாரோ இவருக்கு அதைச் சொல்லியிருக்க வேண்டும்.

இது போன்ற தன்மைகளில் அமைந்தவை முன்கதிவு எனப்படும். இதைக் கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன.

அ என்ற அறிவிப்பாளர் ஹிஜ்ரி 120 ல் மரணித்து விட்டார்.

ஆ என்ற அறிவிப்பாளர் 120 ல் தான் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம்.

அ என்பவர் ஆ என்பவர் வழியாக ஒரு செய்தியை அறிவித்தால் நிச்சயம் இடையில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

ஆ என்பவர் மக்காவில் வாழ்ந்தார்.

அ என்பவர் எகிப்தில் வாழ்ந்தார்.

ஆ என்பவர் ஒரு போதும் எகிப்து செல்லவில்லை.

அ என்பவர் ஒரு போதும் மக்கா செல்லவில்லை.

வேறு பொது இடத்தில் இருவரும் சந்தித்ததாகவும் வரலாற்றுக் குறிப்பு இல்லை.

ஆயினும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் ஆ என்பார் அ என்பார் வழியாக ஒன்றை அறிவித்தால் அவரிடம் நேரில் கேட்டு அறிவித்திருக்க முடியாது. யார் மூலமாகவோ தான் அதை அறிந்திருக்க முடியும். நிச்சயம் இடையில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

அ என்பவர் 120 ஆம் ஆண்டு இறந்தார்

ஆ என்பவர் 115 ல் பிறந்தார்

இப்போது அ என்பவரிடமிருந்து ஆ என்பவர் அறிவித்தாலும் இடையில் யாரோ விடுபட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அ என்பவர் மரணிக்கும் போது ஆ என்பவரின் வயது ஐந்து தான். ஐந்து வயதில் ஹதீஸ்களைக் கேட்டு அறிவிக்க முடியாது.

அ என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஆ என்பவர், தான் அவரைப் பார்த்ததே இல்லை என்று வாக்குமூலம் தருகின்றார். அப்போதும் யாரோ விடுபட்டதைக் கண்டுபிடித்து விடலாம்.

இத்தகைய தன்மைகளில் அமைந்த ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதை ஏற்று அமல் செய்ய முடியாது. ஏனெனில் விடுபட்டவர் பொய்யராக இருக்கக் கூடும்; அல்லது நினைவாற்றல் இல்லாதவராக இருக்கக் கூடும்.