12) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-12
நூல்கள்: அலட்சியம் செய்யப்படும் நபிமொழிLast Updated on October 24, 2023 by
12) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-12
நபிமொழி-56
ஜும்ஆவின் சிறப்பு
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.’
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)
நூல் : புகாரி-881
நபிமொழி-57
வேலைப்பாடு மிக்க ஆடை
கோடுகள் போடப் பட்ட ஒரு மேலாடை அணிந்து நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். ‘இதன் கோடுகள் என் கவனத்தைத் திருப்பிவிட்டன. இதை அபூ ஜஹ்மிடம் கொடுத்துவிட்டு மற்றோர் ஆடையைக் கொண்டு வாருங்கள்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி-752
நபிமொழி-58
அடுத்தவர் இடத்தில் அமரக்கூடாது
ஒரு மனிதர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, “நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி-6270,
நபிமொழி-59
தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால்
ஓடிச்செல்லாதீர்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்கு ஓடிச்செல்லாதீர்கள்; நடந்தே செல்லுங்கள்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுங்கள்; தவறிப்போனதை (பின்னர் எழுந்து) நிறைவு செய்துகொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-1053
நபிமொழி-60
வரிசையில் பிந்தியவர்கள் மறுமையிலும்
பிந்தியவர்களே!
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் (தொழுகையில் முன் வரிசையில் சேராமல்) பின்னால் விலகி நிற்பதைக் கண்டார்கள். அப்போது முன் வரிசைக்கு வந்து என்னைப் பின்பற்றித் தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றித் தொழட்டும். மக்களில் சிலர் எப்போதும் (தொழுகை வரிசையில்) பின்தங்கிக்கொண்டே இருப்பார்கள். முடிவில் அவர்களை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) பின்தங்கச் செய்துவிடுவான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம்-747