Tamil Bayan Points

11) 11 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

11 வது வசனம்

11. இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு மற்றும் மரியாதைக்குரிய கூலி பற்றி நற்செய்தி கூறுவீராக!

இவ்வசனத்தில் ” அறிவுரையைப் பின்பற்றி தனிமையில் அளவற்ற அருளாளனை அஞ்சுவோரைத் தான் நீர் எச்சரிப்பீர்” என்று உள்ளது. அனைவரையும் எச்சரிப்பீர் என்று இல்லை. ஆனால் நபி ஸல் அவர்கள் அனைவரையும் எச்சரிப்பவர் என்று பின்வரும் வசனம் குறிப்பிடுகிறது.

(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்காகவுமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்:34:28.)

இவ்வசனத்தில் “நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம்.” என்று கூறுகிறான்.

இதன்படி நபியவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை செய்பவர் என்று ஆகிறது. ஆனால் யாசீன் அத்தியாயத்தின் 11 வது வசனத்தில் இதற்கு முரணான கருத்து உள்ளது போன்று தோன்றலாம். உண்மையில் முரண்பாடல்ல.

34 வது அத்தியாத்தில் அனைத்து மக்களுக்கும் எச்சரிக்கை செய்பவராக நபியவர்களை அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான். எனவே உலகில் உள்ள அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்வார்கள். ஆனால் உலகில் உள்ள அனைவருக்கும் எச்சரிக்கை பயன்தராது. மாறாக இறைவனை அஞ்சுவோர்க்கே எச்சரிக்கை பயன்தரும். யாசீன் அத்தியாயத்தின் 11 வது வசனம் அதையே குறிப்பிடுகிறது. இக்கருத்தை மேலும் சில வசனங்கள் உறுதிபடுத்துகிறது.

நற்செய்தி கூறக் கூடியதாகவும், எச்சரிக்கை செய்யக் கூடியதாகவும் (இது இருக்கிறது) அவர்களில் பெரும்பாலோர் புறக்கணித்தனர். எனவே அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.

(அத்தியாயம்:41 : 4.)

அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக! (இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான்.

(அத்தியாயம்:87 : 9,10.)

மேற்கண்ட வசனங்களில் இறைவனை அஞ்சுபவர்களுக்கே அறிவுரை பயன்தரும் என அல்லாஹ் கூறுகிறான்.

34வது அத்தியாயம் எச்சரிக்கை செய்யப்பட வேண்டியவர்களை கூறுகிறது. (அதாவது அனைவரையும் எச்சரிக்கை செய்யவேண்டும் என கூறுகிறது.) ஆனால் யாசீன் அத்தியாயம் அந்த எச்சரிக்கை யாருக்கு பயன் தரும் என்பதை பற்றி கூறுகிறது.

அனைவரையும் எச்சரிக்கை செய்தாலும் இறைவனை அஞ்சுவோர்க்கே அது பயன்தரும். இவ்வாறு பிரித்து, தெளிவாக விளங்கிக்கொண்டால் எவ்வித முரண்பாடும் இல்லை.

“திக்ர்” என்பதன் பொருள்.

இந்த அறிவுரையைப் பின்பற்றி தனிமையில் அளவற்ற அருளாளனை அஞ்சுவோரைத் தான் நீர் எச்சரிப்பீர். எனும் 11 வது வசனத்தில் அறிவுரை என்பதை குறிக்க அரபியில் “திக்ர்” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

“திக்ர்” என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்ட வஹீ எனும் இறைச்செய்தியை குறிக்கிறது.

“அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்” என்று அவர்கள் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்:15 : 6.)

இறைமறுப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களை “அறிவுரை அருளப்பட்டவரே!” என்று அழைத்துள்ளனர். நபியவர்களுக்கு குர்ஆன் அருளப்பட்டதால் அறிவுரை அருளப்பட்டவரே என கூறினர்.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

(அல்குர்ஆன்:15 : 9.)

இதில் அல்லாஹ் குர்ஆனையே (திக்ர்) அறிவுரை என்று கூறுகிறான்.

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச்செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

(அல்குர்ஆன்:16 : 43,44.)

மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும் “திக்ர்” அறிவுரை என்ற வார்த்தை கூறப்பட்டுள்ளது. அவையனைத்தும் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வஹீயையே குறிக்கின்றது.

எனவே யாசீன் அத்தியாத்தின் 11 வது வசனத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரை என்பது குர்ஆன், குர்ஆனுக்கு முரண்படாத ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஆகியவற்றையே குறிக்கும். இவற்றை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி நடப்போரே அறிவுரையின் மூலம் பயன்பெறுவர்.

யார் தீய சக்திகளை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அல்லாஹ்வை நோக்கித் திரும்புகிறாரோ அவர்களுக்கு நற்செய்தி உள்ளது. எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர் வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள்.

(அல்குர்ஆன் 39 : 17,18.)

குர்ஆனுடைய அறிவுரையை நாம் புறக்கணித்து வாழ்ந்தால் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை எவ்விதத்திலும் பயன்தராது. அவ்வாறு புறக்கணித்து வாழ்பவர்களை கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

குர்ஆனின் போதனைகளை புறக்கணிப்பவர்களை எச்சரித்தல்

நெருக்கடியான வாழ்க்கை உண்டு

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக் கடியான வாழ்க்கை உ ண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.

(அல்குர்ஆன்20 : 124.)

இதில் அல்லாஹ்வின் போதனையை புறக்கணிப்பவர்களுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு என அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இது போன்று நடக்கின்ற பல நபர்களுக்கு நெருக்கடியான வாழ்க்கை இல்லையே. அவர்கள் நன்றாக சுகபோகமாகத்தானே வாழ்கிறார்கள் என நமக்கு தோன்றலாம். ஆனால் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுவது மறுமையை பற்றியதாகும். மறுமையில் அவர்களுக்குரிய நெருக்கடியாக வாழ்க்கையை பற்றிதான் கூறுகிறான். இதை நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

அவனுடைய (இறைபோதனையை புறக்கணித்தவனுடைய) மண்ணறை அவனை நெருக்கும். இதனால் அவனுடைய விலா எழும்பு (ஒன்றோடொன்று) இடம் மாறும். இதுதான் நெருக்கடியான வாழ்க்கையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.” எனும் 20 வது அத்தியாயத்தின் 124 வது வசனத்தை ஓதினார்கள்.

நூல் இப்னு ஹிப்பான் 3113

எனவே நெருக்கடியா வாழ்ககை என்பது மண்ணறை குறித்ததுதான். உலகம் குறித்தது அல்ல என்பதை இந்த ஹதீஸ் விளக்கி விடுகிறது.

ஷைத்தான் சாட்டப்படுதல்

மேலும் அல்லாஹ்வின் போதனையை புறக்கணித்து வாழ்பவர்களுக்கு தண்டனையாக நெருக்கடியான வாழ்க்கையை வழங்கிவிட்டு ஷைத்தானையும் சாட்டிவிடுவதாக அல்லாஹ் கூறுகிறான்.

எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவருக்கு ஒரு ஷைத்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான்.

(அல்குர் ஆன்:43 : 36.)

பொதுவாக ஷைத்தானுடைய இலக்கு என்பது நம் அனைவரையும் நரகில் தள்ளுவதுதான். அத்தகையவனை ஒருவன் மீது சாட்டிவிட்டால் அவனுடைய வணக்கவழிபாடுகள் நன்மைகள் அனைத்தையும் கெடுத்துவிட்டு மறுமையில் அவனை நரகில் தள்ளும் வேலையை கனகச்சிதமாக பார்ப்பான். இதனால் அம்மனிதன் கைசேதப்படுவான். இறைவனின் அறிவுரையை புறக்கணிப்பதால் இத்தகைய நாசம் ஏற்படுகிறது.

ஷைத்தான் யாரிடம் உள்ளான்?

மேற்கண்ட வசனத்தை படிக்கும்போது “அல்லாஹ்வின் அறிவுரையை புறக்கணிப்பவர்களுக்கு ஷைத்தான் சாட்டப்படுவான் என்றால் மற்றவர்களிடம் ஷைத்தான் இல்லையா? என்ற சந்தேகம் நமக்கு தோன்றலாம். இதற்குரிய பதிலை நபி (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பி யனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள்.

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்” என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட அவ்விருவரும், “அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)’ என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான். அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான். என்று நான் அஞ்சினேன்” என்று சொன்னார்கள்.

நூல் புகாரி-3281

மேற்கண்ட சம்பவத்தில் அனைவரிடத்திலும் ஷைத்தான் உள்ளதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள்மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட்டாயா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர்மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்றார்கள்.

“ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்” என்றார்கள். நான், “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும்,என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்” என்று சொன்னார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்-5422.

இச்செய்தியில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஷைத்தான் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் . ஆனால் 43 வது அத்தியாயத்தின் 36 வது வசனம் அல்லாஹ்வின் அறிவுரையை புறக்கணிப்பவர்களுக்கு ஷைத்தான் சாட்டப்பட்டுள்ளதாக கூறுகிறது. இவ்விரண்டிற்குமிடையில் எவ்வித முரண்பாடுமில்லை.

பொதுவாக நல்லவர்கள் தீயவர்கள் என அனைவரிடமும் ஷைத்தான் உள்ளான்.

ஆனால் அல்லாஹ்வின் அறிவுரையை புறக்கணிப்பவர்களுக்கு ஷைத்தான் சாட்டப்படுவான் என்பதன் நோக்கம் அவர்கள் அதிகமாக ஷைத்தானால் பாதிக்கப்படுவார்கள். அதிகமாக தீய செயல்களை செய்வார்கள்.

ஆனால் நல்லவர்களிடம் ஷைத்தான் இருந்தாலும் அவர்களை அதிகமாக ஆதிக்கம் செய்யமாட்டான். அதனால்தான் மேற்கண்ட செய்தியில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் “உன் ஷைத்தான் உன்னிடம் வந்துவிட்டானா?” என கேட்கிறார்கள்.

மறுமையில் தலை நசுக்கப்படுதல்

குர்ஆனுடைய போதனையை புறக்கணிப்பவர்களுக்கு மறுமையிலும் தண்டனை இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகையில் “அவர் குர்ஆனைக் கற்று அ(தன்படி செயல்படுவ)தை விட்டுவிட்டவர்; கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்” என்று கூறினார்கள்.

நூல் புகாரி-1143

குர்ஆனுடைய போதனையை புறக்கணிப்பவர்களுக்கு மறுமையில் நெருக்கடியான வாழ்ககை மற்றும் இவ்வுலகில் ஷைத்தான் சாட்டப்படுதல் போன்ற தண்டனைகளுடன் சேர்த்து மறுமையில் கல்லால் தலை நசுக்கப்படும் தண்டனையும் உள்ளது.

மேலும் யாசீன் அத்தியாயத்தின் 11 வது வசனத்தின் பிற்பகுதியில் “தனிமையில் அளவற்ற அருளாளனை அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர்.” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இவ்வசனம் சிறிய கேள்வியை எழுப்பும்.

ஒருவரைபற்றி மற்றவருக்கு அச்சமூட்டும்போது அவருடைய கோபமான பண்புகளைத்தான் கூறுவோம். உதாரணமாக ஒரு குழந்தைக்கு தந்தையை பற்றி அச்சமூட்டினால் அவர் அடிப்பார், கண்டிப்பார் என்று அவருடைய கடுங்குணத்தை கூறி எச்சரிப்போம். மாறாக இரக்கமானவர், பண்பானவர் என்று அவருடைய இரக்க குணத்தை கூறமாட்டோம்.

இதன்படி 11 வது வசனத்தில் “கடுமையாக தண்டிப்பவனை அஞ்சுங்கள்” என அல்லாஹ்வின் கடுமையை கூறி அச்சமூட்டாமல் “அளவற்ற அருளாளனை அஞ்சுவோரை” என்று அல்லாஹ்வின் அருளைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த வாசக அமைப்பு பொருத்தமானது தானா? என்று சந்தேகம் எழலாம். இதை இரண்டு விதங்களில் தெளிவுப்படுத்தலாம்.

1 அளவற்ற அருளாளன் என்பதன் மூலம் அல்லாஹ் அருள் மட்டுமே புரிவான். தண்டிக்கமாட்டான் என யாரும் அல்லாஹ்வின் மீது பயமில்லாமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அதே பண்பை கூறி அருளோடு சேர்த்து அச்சத்தையும் ஏற்படுத்துகிறான்.

அதாவது அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் என்பதை நம்புவதோடு அவன் தண்டிப்பவனாக இருக்கிறான் என்பதையும் சேர்த்து எண்ணி அச்சம் கொள்ள வேண்டும்.

2 நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இறைமறுப்பாளர்கள் அல்லாஹ் என்ற வார்த்தையை ஏற்றுக்கொண்டாலும் அருளாளன் என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால்தான் ஹூதைபிய்யா உடன்படிக்கையில் “அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன் என்பதை எழுதும்போது ஏற்க மறுத்தார்கள். மேலும் “அளவற்ற அருளாளன் என்பதை கூறினால் ஸஜ்தா செய்யவும் மறுத்தார்கள். இதை அல்லாஹ் கூறுகிறான்.

“அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படும் போது “அது என்ன அளவற்ற அருளாளன்? நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?” என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகமாக்கியது.

(அத்தியாயம்:25 : 60.)

எனவே இறைமறுப்பளர்கள் “(அர்ரஹ்மான்) அளவற்ற அருளாளன் என்பதை மறுத்தபோது அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அதே வார்த்தையை கூறி இறைமறுப்பாளர்கள் மறுத்தாலும் நான் அளவற்ற அருளாளர் தான் என்பதை அல்லாஹ் உறுதிபடுத்துகிறான்.

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவதன் முக்கியத்துவம்

மேலும் தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குதான் எச்சரிக்கை பயன்தரும் என்று கூறுகிறான்.

ஒருவன் மக்களுக்கு மத்தியில் கூட்டமாக இருக்கும்போது அல்லாஹ்வை அஞ்சி நல்லவனாக இருப்பான். அதே போன்று தனிமையிலும் அஞ்சுகிறானா என்பதை சோதிப்பதற்காகத்தான் இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான். மக்களுக்கு மத்தியில் அஞ்சி நடப்பது போன்று தனிமையிலும் தன்னை அஞ்சி நடக்கவேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.

இக்கருத்தை அல்லாஹ் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளான்.

இஹ்ராமின் போது

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வேட்டையாடி உண்ணக்கூடிய பழக்கம் இருந்தது. எனினும் இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில்தான் வேட்டை பிராணிகளை கண் முன்னே அனுப்பி சோதிப்பேன் என கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! “தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?’ என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின ்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன்:5:94.) 

சாதாரண நேரங்களில் கண்ணில் தென்படாத பிராணிகளை இஹ்ராமின்போது வேட்டையாடும் வகையில் கொண்டுவருவான். இதன் மூலமும் தனிமையில் தன்னை அஞ்சுபவர் யார்? என சோதிக்கிறான்.

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவதன் சிறப்புகள்

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு பல சிறப்பம்சங்களும் உண்டு. தனது மன்னிப்பையும் வழங்கி மிகப்பெரிய கூலியாகிய சொர்கத்தையும் அல்லாஹ் வழங்குகிறான்.

மன்னிப்பும் பெரிய கூலியும்.

தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.

(அல்குர்ஆன்:67 : 12.)

சொர்க்கம் அருகில் கொண்டுவரப்படும்.

(இறைவனை) அஞ்சியோருக்கு சொர்க்கம் தொலைவின்றி நெருக்கத்தில் கொண்டு வரப்படும்.

திருந்தி, பேணி நடந்து, மறைவில் அளவற்ற அருளாளனுக்கு அஞ்சி, தூய உள்ளத்துடன் வந்த ஒவ்வொரு வருக்கும் வாக்களிக்கப்பட்டது இதுவே.

(அத்தியாயம்:50 : 31,32,33.)

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சினால் நாம் அடைய நினைக்கும் சொர்க்கம் நம்மை விட்டும் தூரமாகாமல் சிரமம் அளிக்காத வகையில் நமக்கு அருகில் கொண்டுவரப்படும்.

இவைமட்டுமின்றி நபி (ஸல்) அவர்களும் பல சிறப்புகளை கூறுகிறார்கள்.

மறுமையில் அர்ஷின் நிழலை பெறுபவர்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:

  1. நீதி மிக்க ஆட்சியாளர்.
  2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
  3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
  4. அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலை யிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர்.
  5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும் “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” என்று கூறியவர்.
  6. தமது வலக்கரம் செய்த தர்மத்தை இடக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.
  7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் புகாரி-660

இச்செய்தியில் “தன்னை அழகும் சமுதாய அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தவறான பாதைக்கு அழைக்கும்போது “நான் அல்லாஹ்வை அஞ்சுபவன்” என்று கூறி விலகியவருக்கு அர்ஷின் நிழல் உண்டு என கூறப்பட்டுள்ளது. ஏனெனில் சாதாரணமான நேரங்களில் “நான் அல்லாஹ்வை அஞ்சுபவன்” என்று கூறுவது எளிதாகும். ஆனால் இத்தகைய நேரங்களில் அல்லாஹ்வின் அச்சமிருந்தால் மட்டும்தான் இவர் போன்று கூறமுடியும். இதுபோன்று நடக்கும் நபர்களுக்கு பரிசாக மகத்தான அர்ஷின் நிழலை அல்லாஹ் வழங்குவான்.

மேலும் மற்றொரு நபரை பற்றி கூறும்போது “தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.” என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் மக்களுக்கு மத்தியில் ஒருவர் கண்ணீர் விட்டு அழுது பிரார்தித்தால் பிறர் அவரை குறை கூறுவதற்கும், பரிகாசம் செய்வதற்கும் வாய்ப்புள்ளது. அல்லது அழுபவருக்கு அது முகஸ்துதியை ஏற்படுத்திவிடும். ஆனால் தனிமையில் அழும்போது அது அல்லாஹ்வின் அச்சத்தால் மட்டுமே இருக்கும். இக்கண்ணீர் அல்லாஹ்வுக்காக மட்டுமே வடித்ததாக அதனால்தான் அர்ஷின் நிழலை அல்லாஹ் வழங்குகிறான்.

இது போன்ற செயல்களை எவ்வித செலவுகளும் சிரமமுமில்லாமல் செய்யலாம். எனவே தனிமையில் அல்லாஹ்வை அஞ்சக்கூடிய இத்தகைய பண்புகளை நமக்குள் வளர்த்து கொண்டு மறுமையில் அர்ஷுடைய நிழலை நாமும் பெற முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ்வை அஞ்சிய குகைவாசிகள்

அல்லாஹ்வை அஞ்சி நடந்த மேலும் சிலரையும் நபி (ஸல்) அவர்கள் கூறிகிறார்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர்.

அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது.

இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது. மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன்.

அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு’ எனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.

மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார்.

இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்கு’ எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி-2215.

தனிமையில் அல்லாஹ்வை அஞ்சி நடந்தால் மறுமையில் மட்டுமின்றி இவ்வுலகிலும் அல்லாஹ் நாடினால் நமக்கு உதவி செய்வான் என்பதற்கு இக்குகைவாசிகளின் சம்பவம் சான்றாக உள்ளது.

சிறிய விஷயங்களிலும் அல்லாஹ்வை அஞ்சுதல்

மேலும் நபி (ஸல்) அவர்களும் தனிமையில் அல்லாஹ்வை அஞ்சி நடந்துள்ளார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கீழே கிடந்த பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, “இது தர்மப் பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்றார்கள்.

”எனது படுக்கையில் விழுந்து கிடக்கும் பேரீச்சம் பழத்தை நான் பார்க்கிறேன்….” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நூல் புகாரி-2055

சிறிதளவு பேரிச்சம்பழமாக இருந்தாலும் நபியவர்கள் அதை உண்ணவில்லை. ஏனெனில் நபிக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் “ஸதகா” எனும் தர்மப்பொருட்கள் தடைசெய்யப்பட்டதாகும். எனினும் தனிமையிலிருக்கும்போது அதை உண்டால் யாரும் பார்க்கமுடியாது.

வெளி உலகுக்கு தெரியாது என்றிருந்தாலும் நபியவர்கள் அல்லாஹ்வை அஞ்சி அதை உண்ணாமல் விட்டுவிட்டார்கள். இதுபோன்ற சிறிய சம்பவங்களிலும் அல்லாஹ்வின் அச்சம் உள்ளடங்கியிருப்பதை காணமுடிகிறது.

தனிமையில் அல்லாஹ்வை வணங்கி கண்ணீர் வடித்தல்

ஒருமுறை நபியவர்கள் என்னிடம் “ஆயிஷாவே! இன்று இரவு அல்லாஹ்வை வணங்குவதற்காக என்னைவிட்டுவிடு” என்று கேட்டார்கள். நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் நெருக்கத்தையே நான் விரும்புகிறேன். உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதையே விரும்புகிறேன். (நீங்கள் செல்லுங்கள்)” என்றேன்.

பிறகு அவர்கள் எழுந்து உளூ செய்துவிட்டு தொழுகைக்கு தயாரானார்கள். பிறகு (துஆவின்போது) தன் கண்ணங்கள் நனையுமளவிற்கு அழுதுகொண்டே இருந்தார்கள். பிறகு தன் தாடி நனையுமளவிற்கு அழுதுகொண்டே இருந்தார்கள். பிறகு தரை நனையுமளவிற்கு அழுதுகொண்டே இருந்தார்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் இப்னு ஹிப்பான்-620

இச்சம்பவத்தை அறிவிக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் இது என் வாழ்வில் நடந்த உன்னதமான சம்பவம் என்று கூறுகிறார்கள். அந்தளவிற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை வணங்கி கண்ணீர் வடித்துள்ளார்கள்.

அடக்கத்தலங்களை சந்தித்தல்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதிநாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும்(மதீனாவிலுள்ள) “பகீஉல் ஃகர்கத்” பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.

(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது சாந்தி பொழியட்டும்! நீங்கள் நாளை சந்திக்கப்போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பளிப்பாயாக!)

ஸஹீஹ் முஸ்லிம்-1773.

இறைவனுடைய அச்சத்தை அதிகப்படுத்துவதற்காக அடக்கத்தலங்களை நபி (ஸல்) அவர்கள் அதிகமாக சந்தித்துள்ளார்கள். இதை நாமும் கடைபிடிக்கவேண்டும்.

மறைவிடத்தை மறைத்தல்

முஆவியா இப்னு ஹைய்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் மறைவிடங்களை எப்போது மறைக்கவேண்டும். எப்போது வெளிப்படுத்த வேண்டும்” (என்று கூறுங்கள்) எனக்கேட்டேன். அதற்கவர்கள் “உன் மனைவியிடமும் அடிமை பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் (வெளிப்படுத்தாமல்) பாதுகாத்துக்கொள்” என்றார்கள். அப்போது நான் “ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் இருந்தால் (மறைக்கவேண்டுமா?) எனக் கேட்டேன்.

அதற்கவர்கள் “எவரும் பார்க்காதவாறு (உம்மால் மறைக்க) இயன்றால் அவ்வாறு செய்துக்கொள்” என்றார்கள். நான் “ஒருவர் தனிமையில் இருக்கிறார் (இப்போது மறைக்கவேண்டுமா?) எனக்கேட்டேன். அதற்கவர்கள் “அவரிடம் வெட்கம் கொள்வதற்கு அல்லாஹ் மிகத்தகுதியானவன் (எனவே மறைத்துக் கொள்ளட்டும்) என்றார்கள்.

நூல் திர்மிதீ-2693

வெளிப்படையில் நாம் மறைவிடங்களை பாதுகாப்பது போன்று தனிமையிலும் பாதுகாக்கவேண்டும். ஏனெனில் மனிதர்களுக்காக வெளியில் மறைக்கக்கூடிய நாம் தனிமையில் மனிதர்கள் இல்லாவிட்டாலும் அல்லாஹ் பார்க்கிறான் என அஞ்சி மறைக்கவேண்டும். அனைத்து நேரங்களிலும் அல்லாஹ் நம்மை கண்காணிக்கிறான் என நினைக்கவேண்டும். தனிமையில் நம்முடைய பேச்சுக்கள் நடவடிக்கைகள் என அனைத்தையும் சரியாக அமைத்துக் கொள்ளவேண்டும்.

பிறருக்காக நம்முடைய ஆடை, நடை, உடை போன்றவற்றை செம்மையாக செய்கின்ற நாம் தனிமையில் அல்லாஹ்வை அஞ் சவில்லையென்றால் பிறருக்கு அளித்த மதிப்பை அல்லாஹ்வுக்கு அளிக்காததாக பொருள்படும். தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவதுதான் உண்மையான இறையச்சமாகும். அதுதான் சிறப்பான தகுதியும் தூய்மையானதுமாகும். அதைத்தான் அல்லாஹ் ஒவ்வொரு வசனங்களிலும் நினைவூட்டுகிறான்.

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

(அல்குர்ஆன்:40 : 19.) 

நாம் கண்களில் செய்கின்ற ஜாடைகளை மனிதர்கள் அறியாவிட்டாலும் அல்லாஹ் அதை அறிகிறான். மூவர் பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் மற்றவரை பார்த்து கண்ணில் ஏதெனும் ஜாடை செய்தால் அது மூன்றாமவருக்கு தெரியாவிட்டாலும் அல்லாஹ் அதை அறிகிறான்.

19. நீங்கள் மறைப்பதையும், வெளிப் படுத்துவதையும் அல்லாஹ் அறிவான்.

அத்தியாயம் 16

நாம் மறைப்பதை மனிதர்கள் அறியாவிட்டாலும் அல்லாஹ் அதை அறிவான்.

இதைவிட தெளிவாக மற்றொரு வசனத்தில் கூறுகிறான்.

உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை. நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள்.

இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது எண்ணம். அது உங்களை அழித்து விட்டது. எனவே நஷ்டமடைந்தோரில் ஆகி விட்டீர்கள்.

(அல்குர் ஆன்:41: 22,23.)

நாம் செய்யும் செயல்களை யாரும் பார்க்காவிட்டாலும் நம் காது, கண், தோல் போன்றவை அவற்றை பதிவு செய்து மறுமையில் நமக்கெதிராக சாட்சி சொல்லும். தனிமையில் அல்லாஹ் நம்மை கண்காணிக்கவில்லை என நாம் நினைத்தால் அதனால் மிகப்பெரும் தீமைகளை செய்து நாம் நஷ்டமடைந்துவிடுவோம் என அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான்.

குர்ஆனின் அறிவுரையை பின்பற்றி வாழ்ந்து, தனிமையில் அல்லாஹ்வை அஞ்சினால்தான் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை நமக்கு பயன்தரும் என யாசீன் அத்தியாயத்தின் 11 வது வசனம் கூறுகிறது. மேலும் குர்ஆனின் போதனைகளை ஒருவன் பின்பற்றினாலே தானாக அல்லாஹ்வை அஞ்சிவிடுவான் என்பதால்தான் குர்ஆனுடைய போதனையை பின்பற்றுவதை தொடர்ந்து அல்லாஹ்வை அஞ்சுவதை பற்றி இவ்வசனம் கூறுகிறது.