Tamil Bayan Points

11) தூக்கிச் சுமந்த துயரங்கள்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

Last Updated on October 29, 2023 by

11) தூக்கிச் சுமந்த துயரங்கள்

நான்கு மாதத்திற்குப் பின் பல நவீன ஆயுதங்களோடு பறங்கியர்கள், மீண்டும் படைக் களத்திற்கு வந்தார்கள். நடந்து முடிந்த நிகழ்வுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு வந்தார்கள்.

திட்டமிட்ட ஏற்பாடு, கச்சிதமான அணி வகுப்பு, மரத்தின் கிளைகளுக்கிடையில் தன் இரையை மட்டுமே குறி வைக்கும் வேடனைப் போல முஸ்லிம்கள் மீது மட்டுமே கண் வைத்தார்கள்.

புரட்சியை ஆய்வு செய்த இராணுவக் குழுத் தலைவர் மேஜர் எஃப்.ஜே. ஹரியட், அரசுக்கு வழங்கிய அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

புரட்சியின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் முஸ்லிம்களின் சூழ்ச்சி ரேகைகளே தென்பட்டன, இந்துக்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாகவோ பிராமணர்களும் கோவில் குருக்களும் கிறிஸ்தவர்களுக்கெதிரான சமயப்போர் நடத்தியதாகவோ எந்தச் சான்றும் கிடைக்கவில்லை.

பாரசீகம், துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகளிடம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உதவி கேட்டு ஆளனுப் பியவர்களும், ஆங்கிலேயரை வீழ்த்திய பின் ஆட்சி நடத்தக் காத்திருப்பவர்களும் முஸ்லிம்களே.

புரட்சியின் எந்தக் கட்டத்திலும் சமய ரீதியில் இந்துக்கள் ஒன்றிணையவே இல்லை. ஒன்றிணைந்ததாகவும் சம்பந்தப்பட்டதாகவும் கூறப்படுகிற இடங்கள்கூடமுஸ்லிம்களின் தூண்டுதலின் பேரில் முஸ்லிம்களை அடிப்படையாகக் கொண்டே நடந்துள்ளது என்றார். (Proceedings of The Trial Bahadhur Sha Calcutta, 1895 p.160 )இ.சு.பெ..இ.ப. பக் 985,986

அதனால்தான் ஆங்கிலேயர்கள் தமது இலக்கு முழுவதையும் இஸ்லாமியர்களாகக் கொண்டு தலைநகர்டெல்லியையே தலைகீழாகப்புரட்டினார்கள். காளையர் முதல் கர்ப்பிணிகள் வரை, மாளிகை முதல் மண்மேடு வரை எந்தவித வித்தியாசமுமின்றி அனைத்தையும் வேரறுத்தார்கள்…

தலைநகர் டில்லியை மனித இரத்தத்தால் மாசுபடுத்தினார்கள். டெல்லியில் மட்டும் 27,000 பேரை தூக்கிலிட்டுக் கொன்றார்கள், கொல்லப்பட்டசடலத்தைக் கூட கோரமாகச் சிதைத்தார்கள்.((இ.சு.பெ.இ.ப) பக். 713 – (வி.போ.மு)வி.என். சாமி பக் 219)

பகதூருக்குப் பக்கபலமாக படைய னுப்பினார்கள் என்று காரணம் கூறி பக்கத்து அரசின் நவாபுகள் பலரைக் காலி செய்தார்கள். டில்லியை ஒட்டியிருந்த ஜஜ்ஜார், பகதூர்கர், வல்லப்கர், லோஹாரு, பரூக் நகர், துஜானா, பட்டோடி ஆகிய ஏழு சமஸ்தான சிற்றரசர்களை முதலில் சிறை பிடித்தார்கள், பின்னர் சிரசையும் எடுத்தார்கள்.(குல்லியத் இ காலிப் லக்னோ 1872 பக் 403-404)

பரூக் நகரின் சிற்றரசர் அஹமது அலீகானைக் கைது செய்து ஒரு கயவனைப் போல கைகளில் விலங்கு மாட்டி அழைத்து வந்தார்கள். குரூரமான முறையில் அவரைக் கொலையும் செய்தார்கள். உயிரற்ற அவரது உடலைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல் உரிய முறையில் அடக்கமும் செய்யாமல் செங்கோட்டையின் அகழியில் வீசியெறிந்தார்கள்.

(எப்போதாவது எண்ணிப் பாருங்கள் தியாகச் செம்மல்களின் கடிதங்கள் மொழியாக்கம் சரோஜ் நாராயண சாமி புது டில்லி, 1998 பக். 18-20 (இ.சு.பெ.இ.ப) பக். 978)

மொகல் குடும்பத்து இளவரசர்கள் இருபத்தி ஆறு பேரை அவசர அவசரமாகத் தூக்கிலிட்டார்கள். (Memo of The Siege of the Delhi, by E.Hare, kaye manuscripts The India Office Library (Common Wealth Office) Home Miscellaneous No.726 pp. 1377-1457

மீர்ஜா நாதிர் பக்த் மீர்ஜா மெல பக்‌ஷ் மீர்ஜா அபூ அப்பாஸ் முஹம்மது ஷேக்கோ மீர்ஜா ஹுசைன் பக்‌ஷ் மீர்ஜா அஹமது பக்‌ஷ் மீர்ஜா அபுயுத்தீன் அப்பாஸ் மீர்ஜா மொகருத்தீன் மீர்ஜா மொயினுத்தீன் மீர்ஜா காதிர் பக்‌ஷ் மீர்ஜா குதுப்தீன் மீர்ஜா நூருத்தீன் மொய்சுத்தீன் மீர்ஜா இனாயத் ஹுஸைன் மீர்ஜா முஹம்மது பக்‌ஷ் குலாம் முஹம்மதி மீர்ஜா குலாம் பக்ருத்தீன் மீர்கா குலாம் அப்பாஸ் மீர்ஜா கபருத்தீன் மீர்ஜா பகதுர் மீர்ஜா வாலா ஷேக்கோ மீர்ஜா நாக்ஹி மீர்ஜா முபாரக் மீர்ஜா முபாரக் மீர்ஜா புல்லாண்டி மீர்ஜா கலி)

கூட்டம் கூட்டமாக பெண்கள் மீது விழுந்து பாய்ந்து பிராண்டினார்கள்.(சுதந்திரப் போரளிகள் நடத்திய தாக்குதலில் ஒரேயொரு மகளிர் கூட மானபங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. புரட்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில் போராளிகள் ஐரோப்பியப் பெண்களை கற்பழித்ததாக ஒரு வதந்தி கிளம்பியது.

பின்னால் அது குறித்து விசாரித்த சாண்டர்ஸ் குழு அப்படி எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்கவில்லை என அறிக்கை தந்தது. Oriental And India Office Collections British Library London Eur Mss e 185 Saunder papers No 104 Muir to Saundres Agra 2-12-1857 (இ.சு.பெ.இ.ப) பக். 905) அரச குடும்பத்துப் பெண்களை அளவுக்கு அதிகமாகவே அவமானப் படுத்தினார்கள்.

அப்போது டில்லி தலைநகரமாக அல்ல, சாவு நகரமாகக் காட்சி தந்தது என்கிறார் ஆங்கிலப் பெண்மணி ஹேரியட் டைலர்.(Harriet Tyher An English woman in India The Memories of Harriet Tyher 1828 Edited Anthony Sattin, Oxford, 1986)…