11) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-11
நூல்கள்: எச்சரிக்கையூட்டும் நபிமொழிLast Updated on October 13, 2023 by
11) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-11
நபிமொழி-51
ஸஜ்தாவில் விரும்பிய துஆக்களைக் கேட்கலாம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களே, அறிந்து கொள்ளுங்கள்! ருகூவு அல்லது சஜ்தாவில் குர்ஆன் ஒத வேண்டாமென்று நான் தடை செய்யப் பட்டுள்ளேன். ருகூவில் வல்லமையும் மாண்பும் உடைய இறைவனை மகிமைப் படுத்துங்கள் சஜ்தாவில் அதிகம் பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்” என்று (தம் இறுதி நாட்களில்) கூறினார்கள்
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்-824
நபிமொழி-52
மோசடி செய்பவனின் மறுமை நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் மறுமையில் ஒரு கொடி இருக்கும். அவனது மோசடியின் அளவுக்கு உயரமாக இருக்கும். அறிந்துகொள்ளுங்கள் மக்களுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மோசடி செய்தவனை விட மாபெரும் மோசடிக்காரன் வேறெவருமில்லை
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம்-3579
நபிமொழி-53
வீடுகளில் நஃபிலான தொழுகைகளை நிறைவேற்றுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்க வீடுகளில் சில (நஃபிலான) தொழுகைகளை தொழுங்கள். வீடுகளை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள்
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம்-426, புகாரி 432
நபிமொழி-54
இரவில் தங்குதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவனத்தில் வையுங்கள்! கணவனில்லாத பெண்ணுடன் எந்த ஆணும் இரவில் தங்க வேண்டாம்; அவர் அவளை மணைந்து கொண்டவராகவோ மணக்க முடியாத) நெருங்கிய உறவினராகவோ இருந்தால் தவிர.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம்-4382
நபிமொழி-55
மறுமையில் மோசமான தகுதியுடையவன்
நபி (ஸல்) அவர்கள் “எவனது அருவருப்பான பேச்சுக்களுக்கு பயந்து மக்கள் பதுங்குகிறார்களோ அவனே மறுமையில் அல்லாஹ்விடம் மோசமான தகுதியுடையவன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்-5051, புகாரி-6054