Tamil Bayan Points

10) 8, 9, 10 ஆகிய வசனங்களின் விளக்கம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

8, 9, 10 ஆகிய வசனங்களின் விளக்கம்

8. அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை நாம் போட்டுள்ளோம். அவை (அவர்களின்) கீழ்த்தாடை வரை உள்ளன. எனவே அவர்களின் தலைகள் மேல் நோக்கியுள்ளன.

9. அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னேயும் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களை மூடி விட்டோம். எனவே அவர்கள் பார்க்க முடியாது.

10. அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

இந்த மூன்று வசனங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமான கருத்தை தரக்கூடிய வசனங்களாகும். இவற்றின் விளக்கங்களை பார்ப்பதற்கு முன்பு இவ்வசனங்கள் இறங்கியதற்கு குர்ஆன் விளக்கவுரை நூல்களில் கூறப்பட்டுள்ள காரணத்தை பார்ப்போம்.

கட்டுக்கதைகள்

(இஸ்லாத்தின் எதிரியாக இருந்த) அபூஜஹ்ல் “முஹம்மத் தொழுவதை நான் பார்த்தால் அவருடைய தலையை கல்லால் நசுக்கிவிடுவேன்” என சத்தியம் செய்தான். பிறகு அவர் தொழுவதை கண்டபோது எறிவதற்காக கல்லை உயர்த்தி, அவர் பக்கம் கொண்டு சென்றபோது அவனுடைய கை கழுத்தை நோக்கி திரும்பி, கல் கையோடு இணைந்துகொண்டது.

தன் தோழர்களிடம் திரும்பி சென்று தான் பார்த்ததை கூறியபோது இரண்டாவது மனிதனாகிய வலீத் பின் முகீரா “நான் அவருடைய தலையை நசுக்குவேன்” என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் தொழும் நிலையில் கல்லை எறிவதற்காக வந்தான். அப்போது அல்லாஹ் அவனுடைய கண்பார்வையை பறித்துவிட்டான். எனவே நபியவர்களை அவனால் பார்க்கமுடியவில்லை. சப்தத்தை மட்டும்தான் கேட்டான்.

பிறகு தன் தோழர்களிடம் வந்து “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை பார்க்கவில்லை. சப்தத்தை மட்டும்தான் கேட்டேன்” என்றான். அப்போது மூன்றாமவன் “அல்லாஹ்வின் மீதாணையாக! அவரது தலையை நான் உடைப்பேன்” என்று கூறிவிட்டு, பிறகு கல்லை எடுத்து (எறிவதற்காக) நடந்து சென்றான். அப்போது பின்னோக்கி திரும்பி வந்து பிடரி கீழேபடுமாறு மயக்கமுற்று விழுந்துவிட்டான். அப்போது “உனக்கு என்ன ஆனது?” என்று அவனிடம் கேட்கப்பட்டது. அவன் “அது மிகப்பெரிய விஷயம். நான் ஒருவரை பார்த்தேன்.

அவரை நெருங்கியபோது ஒரு ஒட்டகம் தான் வாலால் கீறியது. இதைவிட பெரிய ஒட்டகத்தை நான் பார்த்ததேயில்லை அது எனக்கும் அவருக்கும் மத்தியில் தடுத்தது. லாத் உஜ் ஜாவின் மீதாணையாக! நான் அதை நெருங்கினால் என்னை தின்றுவிடும்” என்று கூறினான். அப்போது “அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை நாம் போட்டுள்ளோம். அது (அவர்களின்) கீழ்த்தாடை வரை உள்ளது. எனவே அவர்களின் தலை மேல் நோக்கியுள்ளது.” எனும் 36 வது (யாசீன்) அத்தியாயத்தின் 8 வது வசனத்தை அல்லாஹ் அருளினான்.

நூல் தப்சீருல் குர்துபீ பாகம் 15 பக்கம் 7

இச்சம்பவம் மேற்கண்ட வசனம் இறங்குவதற்கு காரணமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இது ஒருகட்டுக்கதையாகும். இதற்கு அடிப்படையான எந்த சான்றும் இல்லை. குர்ஆன் விளக்கவுரை நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர ஹதீஸ் நூல்களில் எவ்வித சான்றுகளும் இதற்கு இல்லை. இப்படி ஒரு தவறான, அடிப்படை ஆதாரமற்ற செய்தி இவ்வசனத்தின் பிண்ணனியில் சொல்லப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இதை குறிப்பிடுகிறோம்.

இப்போது மேற்படி வசனத்தின் விளக்கத்திற்கு வருவோம்.

வழிகேட்டில் உள்ளவர்களுக்கு உதாரணம்

யாசீன் அத்தியாயத்தின் 7 வது வசனத்தில் “அவர்களில் அதிகமானோருக்கு எதிராக கட்டளை உறுதியாகி விட்டது எனவே அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.” என்று அல்லாஹ் கூறுகிறான். இவ்வசனம் விதியை பற்றியது என்று முன்னர் அறிந்து கொண்டோம். 7 வது வசனத்தில் கூறப்பட்டுள்ள, விதிப்படி நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கான உதாரணத்தை 8.9,10 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

கழுத்தில் சங்கிலி மாட்டப்பட்டு அவன் தலை மேல்நோக்கி இருந்தால் கீழே உள்ளதை எவ்வாறு பார்த்து விளங்க முடியாதோ அது போலதான் வழிகேட்டில் உள்ளவர்களால் சத்தியத்தை விளங்கமுடியாது என்பதை உதாரணம் கூறி அல்லாஹ் விளக்குகிறான். ஏனெனில் அவர்கள் சத்திய கருத்துக்கள் காதில் விழுந்தாலும் அதை செவிமடுத்து கேட்கமாட்டார்கள். கண்ணால் அவற்றை பார்த்தாலும் சிந்திக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனோ இச்சைப்படி செயல்படுகிறார்கள்.

இக்கருத்தை பிற வசனங்களிலும் இறைவன் தெரிவித்துள்ளான்.

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழிகெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழிகாட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன்:45 : 23.)

அபூலஹப் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறான்.

அவன் நம்பிக்கை கொள்ளமாட்டான். மாறாக நரகம் தான் செல்வான் என்று அல்லாஹ் அவன் உயிரோடு வாழும் போதே திருக்குர்ஆனில் அறிவித்தான்.

(பார்க்க அல்குர்ஆன் அத்தியாயம் 111 வசனம் 1,2,3)

முஹம்மது கூறுகிற இறைவனின் வசனத்தை பொய்யாக்குவோம் என்ற சிந்தனையேற்பட்டாவது தான் நம்பிக்கை கொண்டு விட்டேன் என்று அவன் பொய்யாக கூறியிருக்கலாம். ஆனால் அவன் அவ்வாறு கூறவில்லை திருக்குர்ஆனின் வசனத்திற்கேற்ப அவன் இறுதிவரை ஓரிறை நம்பிக்கை இல்லாமலேயே மரணத்தை தழுவினான்.

அல்லாஹ் யாருக்கு உள்ளத்தில் முத்திரையிட்டு விட்டானே அதாவது கழுத்தில் சங்கிலியை போட்டு, மேல் நோக்கி தலையை திருப்பி, திருக்குர் ஆனை விட்டும் – நேர்வழியை விட்டும் திசைதிருப்பி விட்டானோ அவர்களுக்கு யாராலும், நேர்வழி காட்ட முடியாது.

இதைத்தான் மேற்கண்ட வசனம் தெரிவிக்கின்றது.

அபூலஹபின் வாரிசுகள்

அபூலஹபை போன்ற சிந்தனையற்ற மக்கள் இன்னும் நிறைய இருக்கிறார்கள்.

கப்ரு வணக்கம் கூடாது, கப்ரை கட்டக்கூடாது, அங்கு சென்று பிரார்த்தனை செய்வது யூதர்களுடைய கலாச்சாரம், அதனால்தான் யூதர்கள் சபிக்கப்பட்டார்கள் என்று எண்ணற்ற இறைசான்றுகள் கூறுகிறது.

(பார்க்க அல்குர் ஆன் 6:63,64, 10:18, முஸ்லிம் 1610 புகாரி 436)

ஆனால் சிலர் இதை சிந்திப்பதில்லை. காரணம் அவர்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான் என்பதேயாகும்.

தாயத்து கட்டுதல்,

“தாயத்தை தொங்க விடுகிறாரோ அவர் இணைவைத்துவிட்டார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் உக்பா பின் ஆமிர் அல்ஜீஹனீ

நூல் அஹ்மத்-16781

இச்செய்தி தாயத்து அணிபவர்கள் மறுமையில் நரகம் செல்வார்கள் என தெளிவாக கூறுகிறது. ஆனாலும் சில முஸ்லிம்கள் தாயத்தை அணிகிறார்கள். இதுபோன்ற தெளிவான ஹதீஸ்கள் இருந்தபோதும் இத்தகைய தவறான செயல்களை செய்வதற்கு அத்தகைய மக்களின் உள்ளங்களில் சிந்திக்காதவாறு அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் என்பது தான் காரணமாகும்.

சிந்தனையில் அல்லாஹ் பூட்டை போட்டு விட்டால் என்னவாகும் என்பதற்கு இவற்றை சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

(ஏக இறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.

அத்தியாயம் 2 வசனம் 6,7

உதாரணம் கூறி விளக்குதல்

மேலும் இவ்வசனத்தில் மற்றொரு கோணமும் உள்ளது. குர்ஆனில் அதிகமான இடங்களில் அல்லாஹ் தான் கூறுவதை உதாரணம் கூறி விளக்குவான். அதேபோன்றுதான் இவ்வசனத்திலும் விளக்கியுள்ளான்.

8. அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை நாம் போட்டுள்ளோம். அது (அவர்களின்) கீழ்த்தாடை வரை உள்ளது. எனவே அவர்களின் தலை மேல் நோக்கியுள்ளது.

9. அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னேயும் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் மூடி விட்டோம் எனவே அவர்கள் பார்க்க முடியாது.

10. அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

ஆகிய மூன்று வசனங்களிலும் சத்தியத்தை விளங்காதவர்களுக்கு உதாரணம் கூறுகிறான்.

ஒருவனுடைய கழுத்துக்களில் விலங்குகளை போட்டு அவனுடைய தலை மேல்நோக்கியிருந்தால் பாதையில் நடந்து செல்லும்போது தரையில் கிடப்பதை அவனால் பார்க்கமுடியாது. இதே போன்றுதான் சத்தியக் கருத்து தனக்கு அருகில் இருந்தாலும் சிலரால் அதை விளங்கமுடியாது என்பதை இவ்வுதாரணத்தின் மூலம் விளக்குகிறான்.

குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இது போன்று உதாரணம் கூறி விளக்குவதை அதிகமாக காணலாம். ஏனெனில் புரியவைப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். எனவேதான் யாசீன் அத்தியாயத்தின் 10 வது வசனத்தில் உதாரணம் கூறி அல்லாஹ் விளக்குகிறான்.