10) குழந்தையின் சாட்சி
நூல்கள்: வரதட்சணை ஒரு பெண் கொடுமைLast Updated on February 2, 2023 by
குழந்தையின் சாட்சி
வரதட்சணைக்கு பயந்து பெற்றோர்களால் கொல்லப்படும் குழந்தைகளிடம் அல்லாஹ் மறுமை நாளில் நீ எதற்காக கொல்லப்பட்டாய்? என்று கேட்பான். அந்தக் குழந்தை வரதட்சணை கொடுமைக்காக என்னை கொன்றார்கள் என்று கூறும். வரதட்சணை வாங்கியவர்கள் கொடுத்தவர்கள் துணை நின்றவர்கள் கொலை செய்தவர்கள் என அனைவருக்கு எதிராகவும் அந்தக் குழந்தை இறைவனிடம் முறையிடும். இறைவன் இவர்களை நரகில் தள்ளி இந்தக் குழந்தைக்கு சரியான நீதியை வழங்குவான்.
என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது,
அல்குர்ஆன் (81 : 8)
பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை
சமுதாயத்தில் வரதட்சணையால் ஏற்படும் பாதிப்புகளையும் கொடுமைகளையும் அன்றாடம் செய்தித்தாள்களில் தினந்தோறும் பார்க்கின்றோம். இது வன்கொடுமை என்பதால் அரசாங்கம் மற்ற குற்றத்தைக் காட்டிலும் இந்தக் குற்றத்தை தடுப்பதற்காக கடுமையான சட்டங்களை வகுத்துள்ளது.
வரதட்சணை வாங்குவோருக்கு எதிராக அவர்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் அல்லாஹ்விடம் கையேந்திவிட்டால் பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். இறைவன் நினைத்தால் இந்த உலகத்திலேயே அவர்களுக்கு இழிவை கொடுப்பான்.
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள்.
ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி)
நூல் : புகாரி-2448
இறைவன் கருணைகாட்ட மாட்டான்
மக்களிடம் கருணையுடன் நடந்தால் தான் இறைவனின் கருணை நமக்கு கிடைக்கும். வரதட்சணை வாங்கி பெண் வீட்டாரை கொடுமைபடுத்தினால் இறைவன் நமக்கு கருணை காட்ட மாட்டான். நாம் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தில் தான் இறைவன் நம்மிடம் நடந்துகொள்கிறான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.
அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)
நூல் : புகாரி-7376