Tamil Bayan Points

1. முதவா(த்)திர் المتواتر (ஒருமித்து அறிவிக்கப்படுவது)

நூல்கள்: சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

Last Updated on May 13, 2019 by Trichy Farook

அறிவிப்பவரின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்துதல்

எத்தனை நபர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1. முதவா(த்)திர் المتواتر  (ஒருமித்து அறிவிக்கப்படுவது)

ஒரு செய்தியை ஒருவர்; இருவர் அல்ல; ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறு ஏராளமானவர்கள் அறிவித்துள்ளனர் என்றால் இத்தகைய செய்திகளை முதவா(த்)திர் என்று கூறுவர்.

மக்கா என்றொரு நகரம் உள்ளது என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் எண்ணற்றவர்கள் அறிவித்துள்ளனர். பத்ருப் போர் என்றொரு போர் நடந்தது என்பது இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் ஹதீஸ்களிலேயே மிகவும் பலமானவை. எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட முடியாதவை.

நம்பகமான ஒருவர் மூலம் உங்களுக்கு ஒரு ஹதீஸ் கிடைக்கின்றது. அதை நீங்கள் ஒரு லட்சம் பேருக்கு அறிவிக்கின்றீர்கள். அந்த ஒரு லட்சம் பேரும் அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது முதவா(த்)திர் என்று கருதப்படாது. ஏனெனில் அந்த ஒரு லட்சம் பேரும் உங்களில் ஒருவர் வழியாகத் தான் அறிந்தனர். நீங்கள் ஒரே ஒருவர் மூலமாகத் தான் அதை அறிந்தீர்கள். எல்லா மட்டத்திலும் ஏராளமான பேர் அறிவித்தால் மட்டுமே அதை முதவா(த்)திர் எனலாம்.

குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வந்தது என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்தனர். அவர்களிடம் கேட்ட ஏராளமான தாபியீன்கள் ஏராளமான தபவுத் தாபியீன்களுக்கு அறிவித்தனர். இப்படியே தொடர்ந்து இந்தச் செய்தி நம்மை வந்தடைந்துள்ளது. இன்றைக்கு 150 கோடி முஸ்லிம்களும் இந்தச் செய்தியை அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள். இது தான் முதவா(த்)திர் எனப்படும்.

குர்ஆனை அல்லாஹ்வுடைய வேதம் என்று முதவா(த்)திரான ஹதீஸ்களின் துணையுடன் நம்புகிறோம்.

இப்படி அமைந்த ஹதீஸ்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அதற்கு உதாரணம் காட்டும் அறிஞர்கள் அனைவரும். யார் என் பெயரால் ஒரு செய்தியை இட்டுக் கட்டிக் கொள்ளட்டும் என்ற ஹதீஸைத் தான் உதாரணம் காட்டுகின்றனர்.

இதை அறுபதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். இப்படியே தலைமுறைதோறும் எண்ணற்றவர்கள் வழியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.