Tamil Bayan Points

1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்

நூல்கள்: சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

Last Updated on May 13, 2019 by Trichy Farook

இப்படி ஹதீஸ்களை இட்டுக்கட்டியவர்கள் பல தரப்பட்டவர்களாக இருந்தனர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நோக்கங்கள் இருந்தன.

அது குறித்து நாம் அறிந்து கொண்டால் தான் சரியானவை, தவறானவை என்று ஹதீஸ்களப் பிரிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதைத் தெளிவாக அறியலாம்.

1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்கு இந்த வளர்ச்சி பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய் தங்கள் தலைமை பறிபோய் வருமானம் தடைப்பட்டு விடுமோ என்று கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர்.

இஸ்லாத்தின் பெரு வளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும், எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டி விட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே திருக்குர்ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. ஆனால் ஹதீஸ்கள் எழுத்து வடிவில் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் வாய்மொழி அறிவிப்புகளாகவே மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்ததால் ஹதீஸ் என்ற பெயரில் இட்டுக்கட்டி பரப்பினால் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெறலாம் என்று எண்ணி இட்டுக் கட்டினார்கள்.

நம்ப முடியாத உளறல்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பரப்பலானார்கள்.

இவற்றைக் கேட்பவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்.

من قَالَ: لَا إِلَه إِلَّا الله خلق الله من كل كلمة طائرا، لَهُ سَبْعُونَ لِسَانا، فِي كل لِسَان ألف لُغَة، وَيَسْتَغْفِرُونَ الله لَهُ – كشف الخفاء

யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதாயிரம் பாஷைகளைப் பேசும். அவனுக்காக அவை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடும்.

நூல் : கஷ்ஃபுல் ஃகஃபா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

والباذنجان شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ-الأسرار المرفوعة في الأخبار الموضوعة – 

கத்தரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.

நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூவா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

 الْبَاذِنْجَانُ لِمَا أُكِلَ لَهُ – نقد المنقول

எந்த நோக்கத்திற்காக கத்தரிக்காய் சாப்பிடுகிறோமோ அந்த நோக்கம் நிறைவேறும்.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

عَلَيْكُم بالعدس؛ فَإِنَّهُ مبارك، يرق الْقلب، وَيكثر الدمعة، قد بَارك فِيهِ سَبْعُونَ نَبيا، مِنْهُم عِيسَى ابْن مَرْيَم – تلخيص كتاب الموضوعات

பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்தை மென்மையாக்கும். ஈஸா நபி உள்ளிட்ட எழுபது நபிமார்கள் அதன் மூலம் பரகத் எனும் அருள் பெற்றனர்.

நூல் : தல்கீஸ் கிதாபுல் மவ்லூஆத்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

لَوْ كَانَ الْأَرُزُّ رَجُلًا لَكَانَ حَلِيمًا مَا أَكَلَهُ جَائِعٌ إِلَّا أَشْبَعَهُ – الأسرار المرفوعة في الأخبار الموضوعة

நெல், ஒரு மனிதனாக இருந்தால் அது மிகவும் சகிப்புத் தன்மையுடையதாக இருந்திருக்கும். அதை யார் சாப்பிட்டாலும் பசியைப் போக்கும்.

நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

أَحْضِرُوا مَوَائِدَكُمُ الْبَقْلَ فَإِنَّهُ مَطْرَدَةٌ لِلشَّيْطَانِ مَعَ التَّسْمِيَةِ -الموضوعات لابن الجوزي

உங்கள் உணவில் பிஸ்மில்லாஹ் கூறி கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது ஷைத்தானை விரட்டியடிக்கும்.

நூல் : அல்மவ்லூஆத் இப்னுல்ஜவ்ஸி

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

سَخَّنْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاءً فِي الشَّمْسِ يَغْتَسِلُ بِهِ ، فَقَالَ : لَا تَفْعَلِي يَا حُمَيْرَاءُ فَإِنَّهُ يُورِثُ الْبَرَصَ -نصب الراية في تخريج أحاديث الهداية

ஆயிஷாவே! சூரிய வெளிச்சத்தால் சூடாக்கப்பட்ட தண்ணீரில் குளிக்காதே! அது வெண் குஷ்டத்தை ஏற்படுத்தும்.

நூல் : நஸ்புர் ராயா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

مَنْ لَمْ يَكُنْ لَهُ مَالٌ يَتَصَدَّقُ بِهِ فَلْيَلْعَنِ الْيَهُودَ وَالنَّصَارَى -الأسرار المرفوعة في الأخبار الموضوعة

தர்மம் செய்ய ஏதும் கிடைக்கா விட்டால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும்.

நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

ثَلَاثَةٌ تَزِيدُ فِي الْبَصَرِ النَّظَرُ إِلَى الْخُضْرَةِ وَالْمَاءِ الْجَارِي وَالْوَجْهِ الْحَسَنِ -الأسرار المرفوعة في الأخبار الموضوعة

பசுமையான பொருட்கள், ஓடுகின்ற தண்ணீர், அழகிய முகம் ஆகியவற்றைப் பார்ப்பது, பார்க்கும் திறனை அதிகரிக்கும்.

நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

النَّظَرُ إِلَى الْوَجْهِ الْجَمِيلِ عبَادَةٌ – نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

அழகான முகத்தைப் பார்ப்பது ஒரு வணக்கமாகும்.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

 

الزُّرْقَةُ فِي الْعَيْنِ يُمْنٌ –   نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

கண்கள் நீல நிறமாக இருப்பது ஒரு பாக்கியமாகும்.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

أكل السمك يوهن الجسد –  نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும்.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

من أَخذ لقْمَة من مجْرى الْغَائِط وَالْبَوْل، فغسلها ثمَّ أكلهَا؛ غفر لَهُ – نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

عَلَيْكُم بالملح؛ فَإِنَّهُ شِفَاء من سبعين دَاء — نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

உப்பை விட்டு விடாதீர்கள். உப்பில் எழுபது நோய்களுக்கு நிவாரணம் உள்ளது.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

مَا من رمان إِلَّا ويلقح بِحَبَّة من رمان الْجنَّة — نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

எந்த ஒரு மாதுளம் பழத்திலும் அதன் ஏதோ ஒரு விதையில் சொர்க்கத்தின் தண்ணீர் இருக்கும்.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

عَنْ مُعَاذَ بْنِ جَبَلٍ قَالَ: ” لَمَّا بَعَثَنِي رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ، قَالَ: إِنَّكَ تَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ فَإِنْ سَأَلُوكَ عَنِ الْمَجَرَّةِ فَأَخْبِرْهُمْ أَنَّهَا مِنْ عِرْقِ الأَفْعَى الَّتِي تَحْتَ الْعَرْشِ ” —الموضوعات لابن الجوزي

ஆகாயத்தில் உள்ள பால்வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது.

நூல் : அல் மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸி

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

عَنِ ابْنِ عُمَرَ قَالَ: ” جَاءَ رَجُلٌ إِلَى النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَكَى إِلَيْهِ قِلَّةَ الْوَلَدِ فَأَمَرَهُ أَنْ يَأْكُلَ الْبَيْضَ وَالْبَصَلَ – الموضوعات لابن الجوزي

முட்டையும், பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும்.

நூல் : அல் மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸி

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

شَاوِرُوهُنَّ وَخَالِفُوهُنَّ ” – يَعْنِي النِّسَاءَ –الفوائد الموضوعة في الأحاديث الموضوعة

பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள்! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்!

நூல் : அல்ஃபவாயிதுல் மவ்லூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

الدَّجَاجُ غَنَمُ فُقَرَاءِ أُمَّتِي –الموضوعات لابن الجوزي

கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும்.

நூல் : அல் மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸி

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

لَوْ يُرَبِّي أَحَدُكُمْ بَعْدَ السِّتِّينَ وَمِائَةِ جَرْوَ كَلْبٍ خَيْرٌ لَهُ من أَن يُربي ولدا –الأسرار المرفوعة في الأخبار الموضوعة

160 ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தை பெற்று வளர்ப்பதை விட நாய் வளர்ப்பது மேலாகும்.

நூல் : அல் அஸ்ராருல் மர்பூஆ

இப்படி ஏராளமான பொய்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டினார்கள்.

இவை யாவும் பொய் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது.

கத்தரிக்காய் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இல்லை.

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தவும் இல்லை.

பருப்பு சாப்பிடுவதற்கும், இதயம் இளகுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

கீரைக்கும், ஷைத்தானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

அர்ஷுக்குக் கீழே பாம்பும் கிடையாது. அதிலிருந்து பால்வெளி படைக்கப்படவும் இல்லை.

சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட சிறிய குளம் குட்டைகளில் குளிக்கும் இலட்சக்கணக்கான மக்களில் யாருக்கும் குஷ்டம் வரவில்லை.

ஓடுகின்ற தண்ணீருக்குப் பக்கத்தில் வசிப்பவர்களும், ஊட்டியில் பசுமையான இடங்களை அன்றாடம் பார்ப்பவர்களும், அழகான முகம் படைத்த மனைவியைப் பெற்றவர்களும் மற்றவர்களைப் போல் பார்வைக் குறைவுக்கு ஆளாகின்றனர்.

நீல நிறக் கண்கள் படைத்தவர்களிலும் தரித்திரம் பிடித்தவர்கள் இருக்கின்றார்கள்.

இவ்வாறு கூறியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீது சந்தேகம் ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் மேற்கொண்ட செய்திகளைப் புனைந்தனர் என்பது தெளிவாகும்.