08) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-8
நூல்கள்: எச்சரிக்கையூட்டும் நபிமொழிLast Updated on October 13, 2023 by
08) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-8
நபிமொழி-36
அழகிய நடைமுறை
யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன் படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் உண்டு அவர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறைந்துவிடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம்-1848
நபிமொழி-37
சமநீதி
உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் அழிந்து போனதற்குக் காரணம், அவர்களில் உயர் குலத்தவர் திருடிவிட்டால் அவரை விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள எளியவர்கள் திருடிவிட்டால் அவர்களை தண்டிப்பார்கள். எனது உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! முஹம்மது (ஆகிய எனது) மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் வெட்டி இருப்பேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி-4304, முஸ்லிம்-3486
நபிமொழி-38
சந்தேகமானதை விடுவோம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அனுமதிக்கப்பட்டதும் தெளிவாக உள்ளது. தடுக்கப்பட்டதும் தெளிவாக உள்ளது இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்குரியவை (சில) இருக்கின்றன. மக்களில் அதிகமானோர் அதை அறிய மாட்டார்கள். எவர் சந்தேகத்திற்குரியதை தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும், மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்: சந்தேகத்திற்குரியவற்றில் நுழைபவர் வேலி ஓரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவர் அவர் (பிறரது) வேலிக்குள்ளே நுழைந்துவிட நேரும்.
எச்சரிக்கை ஒவ்வொரு அரசனுக்கும் ஓர் எல்லை உண்டு, அல்லாஹ்வின் எல்லை அவனது பூமியில் அவன் தடை செய்தவையாகும் அறிந்து கொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது அது சீராக இருந்தால் உடல் முழுவதும் சீராக இருக்கும் அது சீர்கெட்டுவிட்டால் முழு உடலும் சீர்கெட்டுவிடும் அறிந்துகொள்ளுங்கள்! அதுதான் இதயம் உள்ளது.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி-52
நபிமொழி-39
அல்லாஹ் அலட்சியப்படுத்திய நபர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளியில் மக்களுடன் அமர்ந்திருந்த போது மூன்று பேர் வந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர் மற்றொருவர் திரும்பிச் சென்று விட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னால் வந்த அவ்விருவரில் ஒருவர் அந்த அவையில் ஒரு இடைவெளியைக் கண்டு அதில் அமர்ந்து கொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடித்ததும் இம்மூவரைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு (பின்னால் உட்கார்ந்து) விட்டார். அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக் கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப் படுத்தினார். அல்லாஹ்வும் அவரை அலட்சியப் படுத்தி விட்டான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ வாக்கித் (ரலி)
நூல்: புகாரி-66
நபிமொழி-40
உங்களை எச்சரிக்கிறேன்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறுதிக் காலத்தில் எனது சமுதாயத்தில் சிலர் தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் முன்னோர்களோ கேள்விப் படாத செய்திகளை உங்களிடம் கூறுவார்கள். அவர்களை குறித்து உங்களை எச்சரிக்கிறேன்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-7