Tamil Bayan Points

06) மூன்றாவது, மற்றும் நான்காவது வசனங்களின் விளக்கம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

மூன்றாவது, மற்றும் நான்காவது வசனங்களின் விளக்கம்

3. (முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர்.

4. நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.

இவ்வசனங்களில் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் அவர்கள் நேர்வழியில் இருப்பதாகவும்
அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகத்தை நேர்வழியில் இருப்பதாக இறைவன் குறிப்பிடுவதற்கு காரணம் அவர்கள் வஹீயின் அடிப்படையில் செயல்படுவதுதான் என்பதை பின்வரும் வசனங்களில் அல்லாஹ் விளக்குகிறான்.

வஹீ மட்டும்தான் நேர்வழி!

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக ! நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.

(அல்குர்ஆன்:43:43.)

இறைவனின் புறத்திலிருந்து அறிவிக்கப்படும் வஹீயை கடைபிடிப்பதால் நபி நேர்வழியில் நேர்வழியில் உள்ளார் என்பதை இவ்வசனம் சந்தேகமற விளக்குகிறது.

எனவே வஹீ மட்டுமே நேர்வழி என்பதை இதிலிருந்து விளங்கலாம். இன்னும் பல வசனங்கள் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றன.

அல்லாஹ்வின் கயிறை பற்றிப்பிடிப்பதுதான் நேர்வழி!

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவு படுத்துகிறான்.

(திருக்குர்ஆன்:3:103.) 

அல்லாஹ்வின் கயிறு எனும் வஹீயை பற்றிப்பிடித்தால் தான் நேர்வழி கிடைக்கும் என்பதை இவ்வசனம் விளக்குகிறது.

அல்லாஹ்வின் வஹியே நேர்வழி

இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர்வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாருக்கு உரியனவோ அந்த அல்லாஹ்வின் வழியில் (அழைக்கிறீர்) கவனத்தில் கொள்க! அல்லாஹ்விடமே காரியங்கள் மீள்கின்றன.

(திருக்குர்ஆன்:42:52, 53.)

பல வழிகளை பின்பற்றினால் வழிகேடு!

வஹி எனும் இறைவனின் வழியல்லாத பிற வழிகளை பின்பற்றுவது வழிகேடாகும் என்பதை பின்வரும் வசனம் விளக்குகிறது.

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

(திருக்குர்ஆன்: 6:153.)

வஹியின் அடிப்படையில் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கின்ற வழிதான் நேர்வழி என்பதை இதைவிட தெளிவாக யாரும் விளக்கமுடியாது.

எனினும் சில முஸ்லிம்களிடத்தில் ஷாஃபி, ஹனஃபி போன்ற மத்ஹப்கள் இருக்கிறது. அந்த மத்ஹபையே பின்பற்றுவோம் அதுவே
நேர்வழி என்கின்றனர்.

மேலும் சிலர் இமாம்களை பின்பற்றலாம் என்றும், சிலர் காதிரிய்யா, ஷாதுலிய்யா, நகூஷபந்திய்யா, சுக்ரவர்திய்யா என்று பலவகை தரீக்காக்களை உருவாக்கி அதை நேர்வழி என்று கூறுகின்றனர். இதுபோன்ற அனைத்து தவறான கொள்கைகளும் உருவாகக்காரணம் யாசீன் சூராவின் மேற்கண்ட விளக்கத்தை அறியாதுதான்.

எத்தனை புதிதான கொள்கைகள், வழிகள் உலகில் தோன்றினாலும் அல்லாஹ்வின் வழி மட்டும்தான் நேர்வழியாகும். எனும் கருத்தை ஆலிம்கள் மக்களுக்கு கூறியிருந்தால்
இதுபோன்ற வழிகேடுகள் உருவாகியிருக்காது.

வஹீயல்லாததை பின்பற்றினால் மறுமைநிலை?

இத்தனை சான்றுகளை அல்லாஹ் வழங்கிய பிறகும் வஹீயல்லாததை பின்பற்றுவோரின் மறுமைநிலையை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் விளக்குகிறான்.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” (எனவும் கூறுவார்கள்.)

(திருக்குர்ஆன்:33:66,67,68.)

எனவே மறுமையில் நாம் அனைவரும் வெற்றிபெற வேண்டுமானால் இமாம்கள், பெரியார்கள் மீதுள்ள பக்தியினால் அவர்களை பின்பற்றுவதிலிருந்து விலகி நபி (ஸல்) அவர்களின் நேரான
வழியாகிய வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும்.