01) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-1
நூல்கள்: எச்சரிக்கையூட்டும் நபிமொழிLast Updated on October 13, 2023 by
01) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-1
நபிமொழி-1
அறியாமைக் காலத்துச்செயல்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
துன்பத்தினால் தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.’ என
அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரி-1294
நபிமொழி-2
நமக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவன்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-164.
நபிமொழி-3
நம்மை சார்ந்தவரில்லை
ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌட்டீகம் என்னும் அறியாமையின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இனவெறியில் கோபப்படுகிறார். அல்லது இனவெறிக்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இனவெறிக்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும்.
யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்-3766
நபிமொழி-4
தந்தை அல்லாத(ஒரு)வரை தந்தை என்று கூறுவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் தந்தை அல்லாத(ஒரு)வரை, அவர் தன் தந்தையல்ல என்று விவரம் அறிந்துகொண்டே “அவர்தாம் என் தந்தை” என்று கூறும் ஒரு மனிதன் நன்றி கெட்டவன் (காஃபிர்) ஆகிவிட்டான். தனக்குச் சொந்தமில்லாத ஒன்றைக் குறித்து “அது தனக்குரியதுதான்” என்று கூறிக்கொள்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.
ஒருவர் மற்றொரு (முஸ்லிமான) மனிதரை “இறைமறுப்பாளர்” என்றோ “அல்லாஹ்வின் எதிரியே!” என்றோ அழைத்தால் -அவர் (உண்மையில்) அவ்வாறு (இறை மறுப்பாளராக) இல்லையாயின்- சொன்னவரை நோக்கியே அச்சொல் திரும்பிவிடுகின்றது.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
நூல் : முஸ்லிம்-112, புகாரி-3508
நபிமொழி-5
என் வழிமுறையை பின்பற்றாதவர்
அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.
அறிவப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி-5063