Tamil Bayan Points

செயல்கள் யாவும் இறைவனுக்கே..!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 27, 2023 by Trichy Farook

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

“செயல்கள் யாவும் இறைவனுக்கே”குறித்து திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமான அறிவுரைகள் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசிலவற்றை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்!

செயல்கள் யாவும் இறைவனுக்கே.!

இறைவனும், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் நமக்கு வழிகாட்டிய அடிப்படையில், எவர்கள் இந்த உலகில் அவர்களின் வாழ்கையை அமைதுக்கொள்கிரர்களோ, அவர்கள் மட்டுமே மறுமையில் வெற்றி பெற முடியும் என்று அல்லாஹ் வேதத்தில் பல்வேறு இடங்களில் சொல்கிறான். மறுமை நாளில் மனிதன் வெற்றி பெற வேண்டும் என்றால், அவன் செய்யும் ஓவ்வொரு செயலும் மனத்தூய்மையோடு, செய்திருக்க வேண்டும். அவன் செய்கிற செயல் எப்படிப்பட்ட செயலாக இருந்தாலும் அந்த செயல் முழுவதும் படைத்த அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்திருக்க வேண்டும்.

நாம் செய்கின்ற ஓவ்வொரு செயலும் மனத்தூய்மை இல்லாமல் ஏனோ, தானோ என்று இருக்குமானால் அந்த செயலை அல்லாஹ் விரும்பவும் மாட்டன். அது மறுமையில் ஏற்றுக் கொள்ளவும் படாது. அதற்குத்தான் இஸ்லாம் மனத்தூய்மையை அதிகமாக வலியுறுத்துகிறது. இதோ ஷைத்தான் அல்லாஹ்விடத்தில் வாக்குறுதி அளிக்கும் போது கூட என்ன சொல்லி வாக்குறுதி அளித்தான்.

ஷைத்தானால் வழிகெடுக்க முடியாது.

قَالَ رَبِّ فَاَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ

“என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான்.

قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَۙ‏

“நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்;

 اِلٰى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ

“குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்” என்று அல்லாஹ் கூறினான்.

.قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ

(அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்‏.

 اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ‏

“அவர்களில் அந்தரங்க – சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர” என்று கூறினான்.

(அல்குர்ஆன்: 15:36-40)

ஷைத்தான் பூமியில் வாழக்கூடிய அணைத்து மனிதர்களையும் வழிகெடுப்பதற்காக அல்லாஹ்விடத்தில் அவகாசம் கேட்டான். அதற்கு அல்லாஹ் அவகசாம் அளித்தான். அதற்கு மறுபடியும் ஷைத்தான் சொன்னான். உன்னை உள்ளத் தூய்மையோடு வணங்கி வழிபடக்கூடிய அடியார்களைத் தவிர, மற்றவர்களை நான் வழிகெடுப்பேன்.

ஆக அல்லாஹ்வை உள்ளத்தூய்மையோடு வணங்குகின்ற அடியார்களை, ஷைத்தானால் வழிகெடுக்கவே முடியாது என்பதை ஷைத்தானே ஒப்புக்கொள்கிறான். ஆக நாம் செய்யும் ஒவ்வொன்றும் மனதூய்மையோடு அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்தால் அது மறுமையில் நமக்கு வெற்றியை பெற்றுத்தரும்.

தீமை செய்ய நாடி அல்லாஹ்விற்காக அந்த தீமையை                                                                                      விட்டால்  அதற்கும் கூலியே! 

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
((يَقُولُ اللَّهُ إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً فَلاَ تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلَهَا، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي فَاكْتُبُوهَا لَهُ
حَسَنَةً وَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةٍ)).

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.

நூல் : புகாரி-7501 

ஒருவன் தீமையை செய்ய நாடுகிறான். அந்த தீமையை அவன் செய்யும் நேரத்தில் அல்லாஹ்வின் பயத்தினால் அந்த தீமையிலிருந்து விலகிக்கொள்கிறான். அல்லாஹ்விற்காகவே அந்த  தீமையிலிருந்து  விலகிக்கொள்கிறான். அதற்காக அல்லாஹ் அவனுக்கு ஒரு முழு நன்மையை தருகிறான். தீமையை விட்டதற்கு  அல்லாஹ் நன்மையை கொடுக்கிறான் என்றால் எதற்காக அந்த தீமையை அவன் விட்டான். அல்லாஹ்வுக்காக.! அதைத்தான் அல்லாஹ் பார்க்கிறான்.

அதேப்போன்று இன்னோறு செய்தியை பாருங்கள்…

انْطَلَقَ ثَلاَثَةُ رَهْطٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ حَتَّى أَوَوْا المَبِيتَ إِلَى غَارٍ، فَدَخَلُوهُ فَانْحَدَرَتْ صَخْرَةٌ مِنَ الجَبَلِ، فَسَدَّتْ عَلَيْهِمُ الغَارَ، فَقَالُوا: إِنَّهُ لاَ يُنْجِيكُمْ مِنْ هَذِهِ الصَّخْرَةِ إِلَّا أَنْ تَدْعُوا اللَّهَ بِصَالِحِ أَعْمَالِكُمْ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ: اللَّهُمَّ كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَكُنْتُ لاَ أَغْبِقُ قَبْلَهُمَا أَهْلًا، وَلاَ مَالًا فَنَأَى بِي فِي طَلَبِ شَيْءٍ يَوْمًا، فَلَمْ أُرِحْ عَلَيْهِمَا حَتَّى نَامَا، فَحَلَبْتُ لَهُمَا غَبُوقَهُمَا، فَوَجَدْتُهُمَا نَائِمَيْنِ وَكَرِهْتُ أَنْ أَغْبِقَ قَبْلَهُمَا أَهْلًا أَوْ مَالًا، فَلَبِثْتُ وَالقَدَحُ عَلَى يَدَيَّ، أَنْتَظِرُ اسْتِيقَاظَهُمَا حَتَّى بَرَقَ الفَجْرُ، فَاسْتَيْقَظَا، فَشَرِبَا غَبُوقَهُمَا، اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ مِنْ هَذِهِ الصَّخْرَةِ، فَانْفَرَجَتْ شَيْئًا لاَ يَسْتَطِيعُونَ الخُرُوجَ “

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் ‘நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!’ என்று தமக்குள் கூறினர்.

அவர்களில் ஒருவர்

‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன்.

ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!

وَقَالَ الآخَرُ: اللَّهُمَّ كَانَتْ لِي بِنْتُ عَمٍّ، كَانَتْ أَحَبَّ النَّاسِ إِلَيَّ، فَأَرَدْتُهَا عَنْ نَفْسِهَا، فَامْتَنَعَتْ مِنِّي حَتَّى أَلَمَّتْ بِهَا سَنَةٌ مِنَ السِّنِينَ، فَجَاءَتْنِي، فَأَعْطَيْتُهَا عِشْرِينَ وَمِائَةَ دِينَارٍ عَلَى أَنْ تُخَلِّيَ بَيْنِي وَبَيْنَ نَفْسِهَا، فَفَعَلَتْ حَتَّى إِذَا قَدَرْتُ عَلَيْهَا، قَالَتْ: لاَ أُحِلُّ لَكَ أَنْ تَفُضَّ الخَاتَمَ إِلَّا بِحَقِّهِ، فَتَحَرَّجْتُ مِنَ الوُقُوعِ عَلَيْهَا، فَانْصَرَفْتُ عَنْهَا وَهِيَ أَحَبُّ النَّاسِ إِلَيَّ، وَتَرَكْتُ الذَّهَبَ الَّذِي أَعْطَيْتُهَا، اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ غَيْرَ أَنَّهُمْ لاَ يَسْتَطِيعُونَ الخُرُوجَ مِنْهَا

மற்றொருவர், ‘இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, ‘முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!’ என்று அவள் கூறினாள்.

உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமே விட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.

 وَقَالَ الثَّالِثُ: اللَّهُمَّ إِنِّي اسْتَأْجَرْتُ أُجَرَاءَ، فَأَعْطَيْتُهُمْ أَجْرَهُمْ غَيْرَ رَجُلٍ وَاحِدٍ تَرَكَ الَّذِي لَهُ وَذَهَبَ، فَثَمَّرْتُ أَجْرَهُ حَتَّى كَثُرَتْ مِنْهُ الأَمْوَالُ، فَجَاءَنِي بَعْدَ حِينٍ فَقَالَ: يَا عَبْدَ اللَّهِ أَدِّ إِلَيَّ أَجْرِي، فَقُلْتُ لَهُ: كُلُّ مَا تَرَى مِنْ أَجْرِكَ مِنَ الإِبِلِ وَالبَقَرِ وَالغَنَمِ وَالرَّقِيقِ، فَقَالَ: يَا عَبْدَ اللَّهِ لاَ تَسْتَهْزِئُ بِي، فَقُلْتُ: إِنِّي لاَ أَسْتَهْزِئُ بِكَ، فَأَخَذَهُ كُلَّهُ، فَاسْتَاقَهُ، فَلَمْ يَتْرُكْ مِنْهُ شَيْئًا، اللَّهُمَّ فَإِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ، فَخَرَجُوا يَمْشُونَ

மூன்றாமவர்,

‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியை விட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!’ என்று கூறினார். ‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!’ என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!’ என்றார்.

‘நான் உம்மை கேலி செய்யவில்லை!’ என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். ‘இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!’  என அப்துல்லாஹ்வின் உமர் (ரலி) அறிவித்தார்.

நூல் : புகாரி-2272 

இதில் மூன்றாமாவரைப் பாருங்கள். அவர் சொல்கிறார். என்னிடம் ஒரு தொழிலாளி வேலை செய்தார். அவர் செய்த வேலைக்கு அவர் கூலி வாங்காமல் போய்விட்டார். நான் அவருடைய சம்பளப்பணத்தின் மூலம் சில ஆடுகளை வாங்கினேன். சில நாட்களில் அது ஆட்டுப்பண்ணையாக மாறியது. பிறகு அதிலிருந்து மாடுகளை வாங்கினேன். அதுவும் சில நாட்களில் பண்ணையாக மாறுகிறது. பிறகு  ஒட்டகங்களை வாங்கினேன். அதுவும் பண்ணையாக மாறிவிடுகிறது.

சில காலங்களுக்கு பிறகு அந்த தொழிலாளி அவருடைய சம்பளத்தை வாங்குவதற்காக வந்தார் . அவர் கேட்டார். என்னுடைய முதலாளியே! அல்லாஹ்வின் அடியானே! நான் சில நாட்களுக்கு முன்னால் உங்களிடம் வேலை பார்த்தேன். அதற்கு சம்பளம் வாங்காமல் போய்விட்டேன். அந்த சம்பளத்தை எனக்கு தாருங்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த முதலாளி சொல்கிறார். இதோ இந்த ஆட்டுப்பண்ணை மாட்டுப்பண்ணை ஒட்டகப்பண்ணை எல்லாம் உங்களுடையது. எடுத்துக்கொள்ளுங்கள்.

நினைத்துப்பருங்கள். அவர் செய்த வேலைக்கு மட்டும் அவர் கூலியைத் தந்தால் போதுமானது தான். நம்முடைய அறிவும் அதைத்தான் சொல்லும். ஆனால் அவர் அனைத்தையும் கொடுத்தார். யாருக்காக அதை செய்தார்? படைத்த அல்லாஹ்வுக்காகவே மட்டுமே செய்தார். அதை முன்மொழிந்து அவர் அல்லாஹ்விடத்தில் கேட்டார். இறைவா உனக்காக மட்டும் இதை செய்தேன் என்று நீ நினைத்தால் இங்கிருந்து என்னை காப்பாற்று என்று அவர் பிரார்த்தித்தார். அல்லாஹ்வும் அந்த பிரார்த்தனை ஏற்றுகொண்டு அங்கிருந்து அவர்களை காப்பாற்றினான்.

மனத்தூய்மையோடு அல்லாஹ்விற்காக மட்டும் நாம் எதைச் செய்தாலும் அதற்கான பிரதிபலனை அல்லாஹ் இந்த உலகத்திலே நமக்கு காண்பிப்பான் என்பதை மேலுள்ள சம்பவத்தின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.

நாம் செய்வதை சொல்லிக்காட்டுவது: 

 عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ
« ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ » قَالَ فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ثَلاَثَ مِرَارٍ. قَالَ أَبُو ذَرٍّ خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ « الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் “மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்;
அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு” என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

நான், “(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன்.

அதற்கு, “தமது ஆடையை (தரையில் படுமாறு) கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி),
நூல் : முஸ்லிம்-171 

அல்லாஹ் மறுமையில் பார்க்காத பேசாத அந்த மூவரில் ஒருவர்  செய்ததை சொல்லிக்காட்டக்கூடியவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறரிடம் சொல்லிக்காட்டக்கூடிய நோக்கத்தில் நாம் எதைச் செய்தாலும் அதன் மூலம் மறுமையில் நமக்கு எந்த நன்மையையும் கிடையாது. அல்லாஹ்வை பார்க்கும் பாக்கியத்தையும் இழந்து விடுவோம்.

மேலும் அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ‌ؕ لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;

அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.

(அல்குர்ஆன்: 2:264)

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ

ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.
நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்’ என்று கூறியதைக் கேட்டேன்.

நூல்: புகாரி-6499 

மறுமையில் அல்லாஹ்விடத்தில் சஜ்தா செய்ய முடியாது.

يَكْشِفُ رَبُّنَا عَنْ سَاقِهِ، فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ، فَيَبْقَى كُلُّ مَنْ كَانَ يَسْجُدُ فِي الدُّنْيَا رِيَاءً وَسُمْعَةً، فَيَذْهَبُ لِيَسْجُدَ، فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்.

முகஸ்துதிக்காவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும். 

நூல்: புகாரி-4919 

இன்றைக்கு நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பிறர் பார்ப்பதற்காக விளம்பரத்திற்காக பிறர் புகழ்வதற்காக செய்கிறோம். இது மறுமையில் நமக்கு வெற்றியை ஏற்படுத்தாது. நம்முடைய மறுமை வாழ்கையையே அது பாழாக்கிவிடும். எனவே நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும் மறுமையில் நமக்கு வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என்றால்.. இறைதிருப்தியை நோக்கமாக கொண்டு செயல்படவேண்டும்…

அல்லாஹ்வின் பார்வையில் ஷஹீத் யார் ?

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ الرَّجُلُ: يُقَاتِلُ حَمِيَّةً، وَيُقَاتِلُ شَجَاعَةً، وَيُقَاتِلُ رِيَاءً، فَأَيُّ ذَلِكَ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ العُلْيَا، فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ

அபூ மூஸா (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார். ஒருவர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகிறார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகப் போரிடுகிறார். இவர்களில் இறைவழியில் போரிடுகிறவர் யார்?’ என்று கேட்டார்.

நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி-7458 

ஒரு மனிதன் அதிகமாக நேசிப்பது அவரின் உயிரைத்தான். ஒருவன் அந்த உயிரையும் கூட அல்லாஹ்விற்காக மட்டுமே கொடுத்தால் தான் அவர் ஷஹீத் ஆவார். மற்ற மற்ற காரணங்களுக்காக இருந்தால், அந்த உயிர்தியாகத்தைக் கூட அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். ஆகவே ஷஹீத்துக்கே இந்த நிலை என்றால்..! நம்முடைய நிலையை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும். நாம் இன்றைக்கு எவ்வளவோ செய்கிறோம்.

அதை அல்லாஹ்விற்காக செய்கிறோமா? என்பதை சிந்தித்துப்பார்த்து, நம்முடைய செயல்கள் யாவும் மறுமைக்காக, அல்லாஹ்விற்காக மட்டுமே செய்யகூடிய நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக..!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.