Tamil Bayan Points

குளவிக்கு சொல்லிக் கொடுத்தவன் யார்?

பயான் குறிப்புகள்: குர்ஆன் கூறும் அறிவியல்

Last Updated on September 17, 2020 by Trichy Farook

குளவிகளின் இனப் பெருக்கம்

இந்த உலகில் எத்தனையோ வித விதமான படைப்புகள் காணப்படுகின்றன. அந்தப் படைப்புகள் பல்வேறு வடிவங்களில் சிறந்த உள்ளுணர்வையும், அறிவுத் திறத்தையும் அல்லது நமக்கே புரியாத ஒரு தகுதியையும் புலப்படுத்துபவையாகத் திகழ்கின்றன.

உதாரணமாக குளவிகளுக்கு இனப் பெருக்கக் காலம் வந்ததும் ஆண் குளவி ஒரு வெட்டுக்கிளியைப் பிடித்து, அதில் எந்த இடத்தில் குத்தினால் அது உணர்விழந்து விடும் என்பதைத் தெரிந்து, அந்தப் பொருத்தமான இடத்தில் ஒரு குத்து குத்தி அதை உணர்விழக்கச் செய்கின்றது.

உணர்விழந்த அந்த வெட்டுக்கிளி பாதுகாப்பாக வைக்கப்பட்ட மாமிசத்தைப் போல் உயிருடன் பத்திரமாக இருக்கின்றது. பிறகு ஒரு குழி தோண்டி அதில் அந்த வெட்டுக்கிளியைப் போட்டு விடுகின்றது.

இப்போது பெண் குளவி வந்து மிக நுட்பமாக அந்த வெட்டுக் கிளியின் உடலில் எங்கே துளையிடப்பட்டுள்ளதோ அந்தப் பொருத்தமான இடத்தில் முட்டையிட்டுப் பின்னர் குழியை மூடிவிட்டுப் பறந்து போய் விடுகின்றது.

புழு, பூச்சியினங்களை உணவாக உட்கொண்டு தான் குளவிகள் உயிர் வாழ்கின்றன. ஆனால் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் புழு, பூச்சிகளைக் கொன்று அதைத் தின்று தான் உயிர் வாழ வேண்டும் என்றால் அதன் பாடு ஆபத்தாக முடிந்து விடும். அதற்கு அவசியமில்லாமல் தனது குஞ்சுகள் இந்த வெட்டுக்கிளியின் மாமிசத்தையே உணவாக உட்கொள்ளட்டும் என்றெல்லாம் சிந்திக்காமல் தன்னிச்சையாகக் கூட அந்தக் குளவி இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை தனது குஞ்சு உயிர் வாழ்வதற்காக இம்முறையைத் தான் குளவிகள் பின்பற்றி வருகின்றன.

அவ்வாறு அந்தக் குஞ்சுகளின் உணவுக்கான முன்னேற்பாடுகளை அது செய்து வைக்கவில்லை என்றால் இம்மண்ணில் குளவி இனமே இல்லாது அழிந்து போயிருக்கும். மேலோட்டமாகத் தெரியும் இந்த ரகசியத்திற்கு இது வரை எந்த விளக்கமும் தெரியவில்லை. ஆயினும் இதை ஒரு தற்செயலான செயல் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியவில்லை.

முட்டையிட்டு முடிந்ததும் பெண் குளவி குழியை மூடி விட்டு மகிழ்ச்சியாகப் பறந்து போய், பிறகு மடிந்து விடுகின்றது. அதுவோ அதன் முன்னோர்களோ இந்தச் செயலைப் பற்றி ஒரு நாளும் சிந்தித்ததில்லை. தமது குஞ்சுகளுக்கு அடுத்து என்ன நேரிடப் போகின்றது என்ற அறிவும் அவற்றுக்கு இல்லை. அந்தக் குழிக்குள் குஞ்சு என்கின்ற ஒன்று வரப் போகின்றது என்பதோ அதுவும் நம்மைப் போன்றே வாழ்ந்து நம்மைப் போன்றே தனது இனத்தின் விருத்திக்காகப் பாடுபட்டுப் பிறகு மடியும் என்பதோ அவற்றுக்குத் தெரியாது.