இரண்டு தொழுகைகளை முற்படுத்தி ஜம்வு செய்ய ஆதாரம் உண்டா
கேள்வி-பதில்: தொழுகைLast Updated on February 28, 2021 by Trichy Farook
இரண்டு தொழுகைகளை முற்படுத்தி ஜம்வு செய்ய ஆதாரம் உண்டா?
முஹம்மத் ஸபீர்
பதில்
பயணத்தில் இருப்பவர்கள் இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். இரண்டு தொழுகைகளை இரண்டில் இரண்டாவது தொழுகை நேரத்தில் தொழுவதற்கு ஆதாரம் இருப்பது போல் முதல் தொழுகை நேரத்தில் முற்படுத்தி தொழுவதற்கும் ஆதாரம் உள்ளது.
அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நண்பகல் வேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது உளூ (அங்கசுத்தி) செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வரப் பட்டது. அவர்கள் உளூ செய்துவிட்டு எங்களுக்கு லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து- ஜம்உ செய்து) தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்று (தடுப்பாக) இருந்தது. பெண்மணிகள், கழுதைகள் அந்த கைத்தடிக்கு அப்பால் சென்று கொண்டிருந்தனர். புகாரி 499
நண்பகல் என்பது லுஹர் நேரமாகும். அஸர் நேரம் வருவதற்கு முன்பே லுஹரையும் அஸ்ரையும் தொழுதுள்ளார்கள் என்பதற்கு இது ஆதாரமாகும்.