அல்லாஹ்வின் பரக்கத்தை யார் பெறமுடியும் ?
பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3Last Updated on September 27, 2023 by Trichy Farook
அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!
பரக்கத் என்பதற்கு மறைமுகமான அருள் என்பது பொருள். முதலில் ஒரு மனிதன் அல்லாஹ்வுடைய பரக்கத்தை நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்போது தான் அல்லாஹ் அந்த அருளை தன் புறத்திலிருந்து வழங்குவான். அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ள வேண்டும். அல்லாஹ் கொடுத்ததில் நிராசை அடையக் கூடாது. அல்லாஹ் கொடுத்ததை பொருந்தி கொள்ள வேண்டும். அவர்களுக்கு தான் அல்லாஹ் பரக்கத் எனும் மறைமுகமான அருளை வழங்குவான். பரக்கத்தை பற்றி இஸ்லாம் கூறும் வழிமுறைகளை பற்றி இந்த உரையில் காண்போம்..
அல்லாஹ் கொடுத்ததை பொருந்தி கொண்டால் பரக்கத் கிடைக்கும்
அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு கொடுத்த பொருளில் சோதனை செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததை பொருந்தி கொள்கிறாரோ அவருக்கு அதில் பரக்கத் செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ளவில்லையோ அதில் அல்லாஹ் பரக்கத் செய்வதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : பனூ ஸுலைம் கூட்டத்தை சார்ந்த ஒருவர் (ரலி)
நூல் : அஹ்மத்-20279 (19398)
அல்லாஹ்வின் அருள் எப்போது தெரியும்
உங்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களை நீங்கள் பாருங்கள்; உங்களுக்கு மேல் நிலையில் உள்ளவர்களை நீங்கள் பார்க்காதீர்கள்; அல்லாஹ்வுடைய அருட்கொடையை குறைத்து மதிப்பிடாமல் இருப்பதற்கு ஏற்ற முறையாகும்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம்-5671 )
போதும் என்ற மனமே நிலையான செல்வம்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
நூல் : புகாரி-6446 , 6447
உயர்ந்த கை தாழ்ந்த கையை விட சிறந்தது
நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ‘ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும்.
இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது’ எனக் கூறினார்கள்.
நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.
அபூபக்கர் (ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி), ‘முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப் பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!’ எனக் கூறினார்.
ஹகீம் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார்.
அறிவிப்பவர் : ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி)
நூல் : புகாரி-1472
அனைத்திற்கும் உணவளிப்பவன் அல்லாஹ்
பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.
அனைத்திற்கும் அல்லாஹ்வே உணவளிக்கிறான்
நீங்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாக பொறுப்பை சாட்டுபவர்களாக இருந்திருந்தால், பறவைக்கு உணவளிக்கப்பட்டிருப்பதை போன்று நீங்கள் உணவளிக்கப்பட்டிருப்பீர்கள். காலையில் வெறு வயிற்றோடும் மாலையில் வயிறு நிரம்பியதாக வருகிறது.
நூல் : திர்மிதீ-2344 (2266)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தில் சில கூட்டத்தினர் வெள்ளை நிறமான திஹாமா என்ற மலைத் தொடரை போன்று நன்மைகளை கொண்டு வருவதை நான் உறுதியாக அறிவேன். மகத்துவமிக்க, கண்ணியமிக்க அல்லாஹ் அவைகளை (அமல்களை) பரப்பப்பட்ட தூசிகளாக ஆக்கிவிடுவான். அல்லாஹ்வின் தூதரே! அவர்களை எங்களுக்கு வர்ணித்து சொல்லுங்கள்; அவர்களுடைய தன்மைகளையும் சொல்லுங்கள்; நாங்கள் அவர்களை (பற்றி) அறியாதவர்களாக இருக்கிறோம். நாங்கள் அவர்களில் உள்ளவர்களாக இல்லாமல் இருப்பதற்கு.
(அல்லாஹ்வின் தூதர்) கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்; அவர்கள் உங்களின் சகோதர்கள்; உங்கள் இனத்தவர்கள்; நீங்கள் இரவில் செயல்படுவதை (அமல்கள்) போன்று அவர்களும் செய்வார்கள். ஆனால், அவர்கள் தனிமையில் இருக்கும் போது அல்லாஹ் தடுத்தவற்றை பாழாக்க கூடிய கூட்டத்தினராக இருப்பார்கள்.
நூல் : இப்னு மாஜா-4245
அனைத்தும் அல்லாஹ்வால் முடியும் என நம்புவது
அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்றபோதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார். “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்” என்று (மர்யம்) கூறினார்.
அப்போது தான் ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார்.
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَـبْدَهٗ زَكَرِيَّا
اِذْ نَادٰى رَبَّهٗ نِدَآءً خَفِيًّا
قَالَ رَبِّ اِنِّىْ وَهَنَ الْعَظْمُ مِنِّىْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْۢ بِدُعَآٮِٕكَ رَبِّ شَقِيًّا
وَاِنِّىْ خِفْتُ الْمَوَالِىَ مِنْ وَّرَآءِىْ وَكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا فَهَبْ لِىْ مِنْ لَّدُنْكَ وَلِيًّا
يَّرِثُنِىْ وَيَرِثُ مِنْ اٰلِ يَعْقُوْبَ ۖ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا
يٰزَكَرِيَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰم اۨسْمُهٗ يَحْيٰى ۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِيًّا
(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல்! . அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார்.
எனவே ஒரு உதவியாளனை உன் புறத்திலிருந்து நீ எனக்கு வழங்குவாயாக!. அவர் எனக்கும், யாகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக! (என்றார்) . “ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை” (என இறைவன் கூறினான்)
வியாபாரத்தில் பரக்கத் பெறுவது எப்படி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள் வளம் (பரக்கத்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!
அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி),
நூல்: புகாரி-2079 )
ஆட்டு மந்தையை வளர்ப்பிற்காக எடுத்து கொள். அதில் பரக்கத் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : இப்னு மாஜா-2304
உணவில் பரகத் பெறுவது எப்படி
நாம் உண்ணும் உணவின் நடுவில்தான் பரக்கத் இறங்குகிறது. எனவே அதன் ஓரத்திலிருந்து உண்ணுங்கள். நடுவிலிருந்து உண்ணாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : திர்மிதீ-1805 , முஸ்லிம்-4136
எனவே இவ்வனைத்து வழிமுறைகளை பின்பற்றி அல்லாஹ்வின் பரக்கத்தை பெருகின்ற நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.